என் மலர்
நீங்கள் தேடியது "கிருஷ்ணகிரி அணை"
- தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
- தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை:
கர்நாடகா மாநிலம், மைசூரு மாண்டியா உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 2 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
மேலும் ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1275 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வெள்ளம் சீறிப் பாய்ந்து வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி நேற்று வினாடிக்கு 1449 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து ரசாயன நுரையுடன் தண்ணீர் வெளியேறியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசியது. இந்த நுரை அந்த பகுதியில் உள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு மூடியது. இதனால் அப்பகுதி வழியாக கிராம பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இதனால் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 51 அடியாக எட்டி உள்ளது.
இன்று காலை அணையில் இருந்து பாசன கால்வாய்கள், ஆற்றிலும் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையில் இருந்து சீறிப்பாய்ந்த வெள்ளம் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அணைக்கு செல்லும் பாதை தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
இதனால் பூங்கா, அணையை சுற்றிப் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்பெண்ணை ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை வழியாக சாத்தனூர் அணையில் பாய்ந்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து சாத்தனூர் அணை வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
பெரியமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டிணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுட்டஹள்ளி, தளிஹள்ளி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீப்பத்துறை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
119 கனஅடி கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 87 அடி தண்ணீர் உள்ளது. இதனால் இந்த அணையில் இருந்து நீர் திறக்கவில்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தெரிவித்துள்ளனர்.
- தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் அணைக்கு, 374 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 921 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 50.55 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகமாகும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை, 8 மணி நிலவரப்படி நெடுங்கல்லில், 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. அதே போல், போச்சம்பள்ளி 32.10, பாரூர் 29, பாம்பாறு அணை 28, ஊத்தங்கரை 25.40, கே.ஆர்.பி. அணை 24.20, பெனுகொண்டாபுரம் 5.20 என மொத்தம் 208.90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
- பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது.
- கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு இந்த ஆண்டில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல், மார்ச் 25-ந் தேதி வரை இரண்டு முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. மூன்றாவது முறையாக கடந்த மார்ச் 31-ந் தேதி முதல் மே 6-ந் தேதி வரை, 37 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், மே 7-ந் தேதி முதல் 9&ந் தேதி வரை மூன்று நாட்கள் அணைக்கு நீர்வரத்து இருந்த நிலையில் பின்னர் மழையின்றி நான்காவது முறையாக மே 10 முதல் நேற்று வரை 5 நாட்கள் நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து 560 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் நேற்று காலை 1,126 கன அடியாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்தடைந்தது. கடும் துர்நாற்றத்துடன் கழிவுநீர் கலந்து அணைக்கு நீர் வந்ததால், அணையின் மேல் பகுதியில் ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ எடை வரையில் வளர்ந்திருந்த மீன்கள் செத்து மிதந்தன. கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த அசுத்தமான நீரால், 3 டன் அளவிற்கு மீன்கள் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மீன்களை பிடித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற வாய்க்காலில் 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 40.20 அடியாக இருந்தது.
- முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது.
- பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கனஅடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரமடம் வழியாக நெடுங்கல் தடுப்பணைக்கு செல்கிறது.
இந்த தடுப்பணையில் இருந்து கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பாரூர் ஏரியை பொறுத்தவரை ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் தற்போது 9.50 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விடப்பட்ட பின்பு தான், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் முதல்போக சாகுபடிக்காக பாரூர் ஏரியில் இருந்து திறக்க வேண்டிய உள்ளதால், அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், நீர்நிலைகளில் வறண்டு வரும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணைக்கு ஒரு மாதத்திற்கு மேலாக நீர்வரத்து ஜீரோ நிலையில் காணப்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 38 அடிக்கும், பாரூர் ஏரியின் நீர்மட்டம் 3.60 அடிக்கு கீழே சரிந்தது.
இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டது. இவ்வாறான நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால், அணைகள், ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 44.85 அடி, பாரூர் பெரிய ஏரியின் நீர்மட்டம் 9.50 அடியாக உயர்ந்ததுள்ளது குறிப்பிடதக்கது. பாரூர் ஏரிக்கு அணையின் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், பாரூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் நெல் நடவிற்காக நிலங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
- அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
- வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 905 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 635 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 44.65 அடியாக உள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு ஆற்றிலும், ஊற்றுக்கால்வாய்களிலும் 111 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பாரூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அணைக்கு வரும் நீர் முழுவதும் சேமிக்கப்படுவதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மில்லி மீட்டரில், தேன்கனிக்கோட்டை 41, கிருஷ்ணகிரி 22.30, அஞ்செட்டி 15, சூளகிரி 12, சின்னாறு அணை 10, தளி 5, கிருஷ்ணகிரி அணை 1 பதிவாகி இருந்தது.
- கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
- பாரூர் ஏரிக்கு நீர்வரத்து நேற்று காலை 140 கனஅடியாக சரிந்தது.
கிருஷ்ணகிரி:
தென்பெண்ணை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை நேற்று முன்தினம் 680 கன அடியாக வந்த நீர்வரத்து நேற்று 495 கனஅடியாக சரிந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 41.16 அடியாக உள்ளதால், நீர்வரத்து முழுவதும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து, கிருஷ்ணகிரி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று 2வது நாளாக விநாடிக்கு 1644 கனஅடியாக நீடித்தது. கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருவதால், பாசனத்திற்காக கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அணையில் இருந்து மணல் போக்கி மதகுகள் வழியாக விநாடிக்கு 1644 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், பாரூர் ஏரிக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 185 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 140 கனஅடியாக சரிந்தது. ஏரியின் முழு கொள்ளளவான 15.60 அடிக்கு தண்ணீர் நிரம்பிய உள்ளதால், நீர்வரத்து முழுவதும் கால்வாய்கள் வழியாக இணைப்பு ஏரிகளுக்கு செல்கிறது.
ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2400 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 1726 கனஅடியாக சரிந்தது.
அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் நீர்மட்டம் 17.78 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பை கருதி, நீர்வரத்து முழுவதும் 5 மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டது.
தேன்கனிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மில்லிமீட்டர் மழை பெய்தது.






