search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை - விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை - விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
    • கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மேலும் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் அமைந்துள்ள அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நடப்பாண்டில் முதல் முறையாக கடந்த 15ந்தேதி காலை அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. உச்ச அளவாகஆற்றில் வினாடிக்கு, 12 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை துவங்கியதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.உடனடியாக, அணைக்குள் வரும் நீர் அனைத்தும் உபரியாக ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

    அணை நீர்மட்டம் 88.65 அடியாகவும், நீர் இருப்பு, 3,924.72 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த, 15ந் தேதி, அணை நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் அனைத்தும் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்படுவதால், ஆயக்கட்டு நிலங்களில், சாகுபடி பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. வரும் நீர் அனைத்தும், வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றனர்.

    அமராவதி அணையிலிருந்து மழைக்காலத்தில், வெளியேற்றப்படும் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்த, ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.குறிப்பாக கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பணை கட்டினால், முப்போக நெல் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

    கோடை காலத்திலும் பற்றாக்குறை தவிர்க்கப்படும்.இது குறித்து பொதுப்பணித்துறை சார்பில் கருத்துரு தயாரித்து அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு மழை சீசனிலும், அணையிலிருந்து பல டி.எம்.சி., தண்ணீர் ஆற்றில் உபரியாக திறக்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.இதே போல் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு மண் கால்வாய் வழியாகவே பாசன நீர் செல்கிறது.

    இந்த கால்வாய்களை தூர்வாரி கரைகளை உயரப்படுத்தினால், அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக செல்லும்.அனைத்து வகை சாகுபடியும் செழிக்கும். இது குறித்தும் அப்பகுதி விவசாயிகள் சார்பில் தொடர் கோரிக்கை மனுக்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.

    Next Story
    ×