search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint"

    • ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
    • விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,300 கடைகள் மூலமாக விதவிதமான மது வகைகள் விற்பனை செய்ய 23 ஆயிரம் விற்பனையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    பண்டிகை காலங்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதனை 46 ஆயிரம் கோடியாக ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு மது விற்பனை சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.

    10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.

    இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு விலை பட்டியல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் உள்ளனர். விற்பனையாளர்கள் வழக்கம் போல 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால் அதற்கு பதிலாக இரண்டு குவார்ட்டர் பாட்டி லை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 குவார்ட்டர் மது பாட்டிலை கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு பத்து வீதம் 20 ரூபாய் வசூலிக்கலாம். ஆனால் அரை பாட்டில் மதுபானத்தை கொடுத்தால் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாகவே குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மது பிரியர்கள் சிலர் கூறும் போது:-

    டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான நேரங்களில் அரை பாட்டில் மதுபானங்களை விற்பனையாளர்கள் தருவதில்லை. 2 குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 20 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது,

    "மது பாட்டில்களை கூடு தல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

    எனவே மது வாங்கும் குடிமகன்கள் விலை பட்டியலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.

    கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக அளவில் சப்ளை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன்.
    • மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக காங்கிரஸ் எம்.பி. டி.கே.சிவக்குமார் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும்போது தென் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வட இந்தியாவுக்கு திருப்பி விடுவதால் தென் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வளர்ச்சி நிதி சமமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டால் தென் மாநிலங்கள் தனி நாடு தேட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜனதா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் மீது புகார் செய்தனர். அதில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை நிலைநாட்டுவதாக சத்தியபிரமாணம் செய்துள்ள எம்.பி. பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே அவர்மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இதற்கிடையே பெங்களூரு பன்னார்கட்டாவில் காவிரி குழாய் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டி.கே.சுரேஷ் கூறியதாவது:-

    மத்திய அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்து குரல் எழுப்பினேன். மத்திய அரசின் பாரபட்சமான கொள்கைக்கு எதிராக தமிழகம் உள்பட தென் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் குரல் எழுப்பி உள்ளன. மத்திய அரசிடம் மாற்றான் தாய் மனப்பான்மையை கைவிட சொன்னேனே தவிர நாடு பிரிவினை பற்றி பேசவில்லை.

    மத்திய அரசு வழங்கும் மானியத்தில் கர்நாடகா மற்றும் கன்னடர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. கன்னடர்களின் குரலாக இதை பேசினேன். ஆனால் எனது அறிக்கை நாட்டை பிரிப்பது போல் திருத்தி வெளியிடப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வரிப்பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ரூ.50ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. மாநில வருமானத்தில் 17 சதவீதம் கிடைக்கிறது. வரி வருவாயில் 337 சதவீதம் உத்தர பிரதேசத்திற்கும், 430 சதவீதம் பீகார் மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது. இந்த அநீதியை சரிசெய்து சட்டப்படி அரசுக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    நாட்டை பிரிக்க வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை. போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் கன்னடர்களின் சுய மரியாதைக்காக சிறை செல்லவும் தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து கோட்டுச்சேரி மேட்டை சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் மாவட்ட மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விசைப்படகை பறிமுதல் செய்து மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 14 பேரும் நேற்று முன் தினம் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

    விடுவிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் விடுதலைக்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

    மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கவர்னரிடம் கூறும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தங்களையும் தமிழக மீனவர்களையும் இலங்கை கடலோர காவல் படையினர் கடுமையாக தாக்கினர். பல மணி நேரம் பூட்ஸ் காலால் மிதித்து நடுக்கடலில் தள்ளி 8 மணி நேரம் தத்தளிக்க வைத்து சித்ரவதை செய்ததாக புகார் கூறினார்கள்.

    இது பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கவர்னர் தமிழிசை உறுதியளித்தார்.

    இந்த சந்திப்பின்போது விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த விசைப்படகு உரிமையாளர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்ந்த 188 படகுகள் இலங்கையில் சிறைப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு படகின் விலை ரூ.1½ கோடியாகும்.

    அனைவரும் கடன் வாங்கி தான் படகுகளை வைத்துள்ளோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிப்ப தாக கூறி அடிக்கடி மீனவர்களை கைது செய்வதை தடுக்க இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    கைது செய்தவர்களை சித்ரவதை செய்தது குறித்து கவர்னரிடம் புகார் கூறியுள்ளோம். சித்ரவதையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். 

    • பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
    • வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.

    குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
    • இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டை சேர்ந்தவர் ஜெகன்(30).பெயிண்டர். இவரது மனைவி அபிராமி. இவர் தனது கணவர் ஜெகனிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 30 -ந் தேதி ஜெகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அபிராமி வரமறுத்தார். இதன் காரணமாக அசிங்கமாக திட்டி வீட்டை கொளுத்திவிடுவதாக கூறி கூரை வீட்டிற்கு தீவைத்து கொளுத்தினர். இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மனைவி அபிராமி கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். 

    • 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 80) இவர் தனது மகன்களான ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இந்நிலையில் மற்ற 2 மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று ராயர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்களை அவரது மகன் லோகநாதன் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் தந்தையை முறையாக பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தை வீட்டில் இருந்து பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை கைது செய்தனர்.

    • இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதியியல் மற்றும் கணிதவியல் துறை மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டு இருந்தனர். அவர்கள் வராண்டாவில் தங்களது பையில் 8 செல்போன்களை வைத்து சென்றனர். தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×