search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "municipality"

    • பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.
    • பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21-வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பல பூங்காக்கள் முறையான பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்தும், புதர் மண்டியும், விஷ புச்சிகள் குடியிருக்கும் இடமாகவும் மாறி வருகிறது.

    குறிப்பாக பூந்தமல்லி நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்கா பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    இந்த பூங்காவுக்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் இங்கு ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. இதனை குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏற்கனவே இருந்த குடிநீர், கழிப்பறை வசதிகள் அனைத்தும் இப்போது இல்லை. கழிவறைகள் உடைந்தும், குடிநீர் குழாய் துருபிடித்தும் காணப்படுகிறது. பூங்காவை சுற்றி நடந்து செல்லும் பாதையும் பல இடங்களில் இடிந்து கிடப்பதால் அதில் செல்லும் வயதானவர்கள் அடிக்கடி தடுமாறி விழும் நிலையும் நீடித்து வருகிறது.

    எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நண்பர்கள் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை முறையாக பராமரித்து குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பூந்தமல்லி நகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதே இல்லை. குறிப்பாக நண்பர்கள் நகரில் உள்ள பூங்காவில் குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை கழிவுகள், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் வசிக்கும் இடமாகமாறி வருவதால் பொதுமக்கள் வந்து செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதனால் பூங்காக்களை பயன்படுத்த தயங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் சின்னப்பா நகரில் உள்ள பூங்காவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
    • வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது.

    இந்த கொசுக்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்தும் வகையில் 21 வார்டுகளிலும் கொசு மருந்துகள் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வெள்ளகோவில் பஸ் நிலையம், நகராட்சி பள்ளி, பொதுக்கழிப்பிடம், குடியிருப்பு பகுதி உள்பட பல இடங்களிலும் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காகவும், கொசு ஒழிப்புக்காகவும் மருந்து அடிக்கும் எந்திரம் போதிய அளவிற்கு இல்லாததால், கூடுதலாக 2 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதற்கான தீவிர நடவடிக்கை எடுத்த வெள்ளகோவில் நகராட்சி தலைவர் மு.கனியரசி, நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் முயற்சியை கண்டு நகராட்சி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை.
    • மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பேரூராட்சி 15வார்டுகளை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்குள்ள மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, தேவநேரி, பவழக்காரன் சத்திரம் பகுதிகளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    சர்வதேச சுற்றுலா பகுதியின் முக்கியத்துவம் கருதி தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மாமல்லபுரத்தை நகராட்சியாக மாற்ற முடிவெடுத்து உள்ளது. அதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செய்துவருகிறது.

    இந்நிலையில் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற, பேரூராட்சி ஒப்புதல் தேவை. இதற்கான அவசர கூட்டம் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத் தலைவர் ராகவன், செயல் அலுவலர் கணேஷ், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கினர். மாமல்லபுரம் பேரூராட்சி, நகராட்சியாக மாறுவதால் பொதுசுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, துப்புரவு, கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, குடிநீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றல், தெரு விளக்கு, சாலை வசதி, சாலை அமைத்தல், உள்ளிட்ட கூடுதல் வசதிகள் மாமல்லபுரம் பகுதி மக்களுக்கு கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆவடி:

    பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.

    தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.

    • பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.
    • கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறபபு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி பண்ருட்டி நகராட்சியில் உள்ள 49 வாக்குச்சாவடி மையங்களில் புதியதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று காலை தொடங்கியது.

    பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள சுப்பராயலு செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் ஆனந்தி, நகராட்சி ஆணையாளர் பானுமதி, துப்புரவு அலுவலர் முருகேசன், தேர்தல் துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி ஆகியோர் இருந்தனர்.

    • குப்பைகளை தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையர் ஹேமலதா, துணை தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் ராஜகணேஷ் மன்ற பொருட்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ராமு (தி.மு.க.):- கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் இருந்து உள்ள கழிவுநீர் கால்வாய் 20 ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் மண்தூர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

    நாகரத்தினம் செந்தில் (அ.தி.மு.க.):- பால சுப்ரமணியன் நகர் பகுதியில் தெரு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும், சாலை அமைத்து தர வேண்டும்.பாஸ்கரன்:- குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. தரம் பிரித்து வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயந்தி பாபு:- 14-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய் பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். முபாரக் (தி.மு.க.):- சீர்காழி நகராட்சி மூலம் 24 வார்டுகளுக்கும் சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்து வந்த நிலையில், அங்கு குடிநீர் மோட்டார் பழுதால் கடந்த சில மாதங்களாக நகராட்சி வளாகத்திலேயே ஆழ்குழாய் அமைத்து நிலத்தடிநீர் அதிகளவு உறிஞ்சப்படுவதால் வரும் காலத்தில் நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதற்கு பதில் அளித்து தலைவர் துர்கா ராஜசேகரன் (தி.மு.க.) பேசுகையில்:-

    9-வது வார்டில் உள்ள குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிக்கு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு குளம் என பெயர் வைக்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழைகாலம் தொடங்கி உள்ளதால் குடியிருப்புகளை மழைநீர் சூழாமல் இருக்க வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் சேகரிக்கப்படுகிறது
    • புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தவும் அறிவுறுத்தல்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் நக ராட்சி அலுவலகத்தை அணுகி இணைப்பை முறைப்படுத்திக்கொள்ளுமாறு மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் நகராட்சி அனுமதி இல்லா மல் இருப்பதாகவும், அதனை கண்டுபிடித்து முறைப்படுத்த வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் இருந்து சிறப்புக்குழு அமைத்து வீடு-வீடாகச்சென்று குடிநீர் இணைப்பு விவரங்கள் விரைவில் சேகரிக்கப்பட இருக்கிறது.

    குழு ஆய்வின் போது கண்டுபிடிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும். அத்துடன் நகராட்சி விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வீடுகளில் யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்று இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து அதற்குரிய கட்டணங்களை செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் கணேஷ்ராம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அவர் பூலாம்பட்டி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அங்கிருந்த ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் உள்ள தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் திடீரென நுழைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த உணவுப் பொருட்களின் தரம், பயன்படுத்தப்படும் காய்கறி அளவு, இருப்பு பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த உதவி இயக்குனர் அங்கிருந்த சமையல் பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவுகளை தயாரித்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் அவர் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த உணவு வகைகளையும் ருசி பார்த்தார். குழந்தைகளுக்காக இந்த உணவினை மிகுந்த கவனத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயார் செய்திட வேண்டுமென உத்தரவிட்டார்.

    இந்த திடீர் ஆய்வின்போது பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பேரூராட்சி தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் முரளி மற்றும் முன்னாள் கவுன்சிலர் பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
    • மீதமுள்ள 2 பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் முயற்சியில் அடிப்படைத் தேவைகள் மற்றும் கட்டுமான பணிகளை மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் பல்வேறு கட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் முருகேசன் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரம் கொடுத்தார்.அதன் ஒரு கட்டமாக பள்ளி வளாகத்தில் தரைத்தளம் (பேவர் பிளாக்) அமைக்க முடிவெடுக்கப்பட்டு நகராட்சி அதிகாரிகளால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.70 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை செய்யப்பட்டது. அதில் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு நிதியினை பள்ளி மேலாண்மை குழு சார்பாக வழங்குவது என்றும், மீதமுள்ள இரண்டு பங்கினை நகராட்சி சார்பில் வழங்கி இந்த பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யாவின் கோரிக்கையை அடுத்து, அந்த வார்டு உறுப்பினர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயபாரதி விஸ்வநாதன், தற்போதைய நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், இந்தப் பணியினை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற பூமி பூஜையின் போது நகராட்சி ஆணையர் முருகன், பொறியாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது.
    • ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை நகர்மன்ற கூட்டம் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.முன்னதாக புதிதாக பதவி ஏற்ற நகராட்சி ஆணையாளருக்கு மன்றத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 28-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ராமதாஸ்க்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து நகர் மன்ற தலைவர் மத்தீன் உரையாற்றினார். இதையடுத்து சாதாரண கூட்டத்தில் 40 தீர்மானங்களும் அவசரக் கூட்டத்தில் 44 தீர்மானங்களும் மன்ற விவாதத்துக்கு வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் மீது விவாதம் தொடங்கியது. அப்போது நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    குப்பை அள்ளும் வாகனங்கள் அதிக செலவில் வழங்கப்பட்டு உள்ளது.நமது ஊருக்கு உகந்த வாகனமாக இல்லை.அதற்கு பதிலாக 33 வார்டுகளில் பணிகள் மேற்கொள்வதற்கு அந்த பணத்தை பிரித்துக் கொடுத்து இருக்கலாம்.இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி அடைந்திருக்கும்.அதே போன்று அண்ணா கலையரங்கம் கலைஞர் பூங்கா அமைக்க வேண்டும்.இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன் அடைவார்கள் என்று நகரச்செயலாளரும் 33 வது வார்டு உறுப்பினருமான சி.வேலுச்சாமி பேசினார்.

    இனி வருகின்ற காலங்களில் சந்தை ஏலம் புதிதாக விட வேண்டும்.அதிக அளவில் ஏலம் எடுப்பதற்கு ஆட்கள் உள்ளனர். அதை தவிர்த்து ஏலத்தை குறைவான அளவில் விடுவதால் இழப்பு ஏற்படுகிறது. ரூ. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணிகளுக்கு முறைப்படி டெண்டர் விட்டு மன்ற அனுமதி பெற வேண்டும். மேலும் 15 வருடங்களுக்கு மேற்பட்ட வணிக ரீதியான நகராட்சி வாகனங்களை உடைப்பதற்கு முன்னதாக அதன் ஆர்.சி., ரத்து செய்யப்பட வேண்டும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது நகராட்சி சார்பில் இழப்பீடு கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.மக்கள் வரி பணமும் மிச்சப்படுத்தப்படும். இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பேசினர்.அதற்கு தீர்வு காணப்படும் என்று மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஆணையாளர் பெர்பெற்றி டெரன்ஸ்லியோன், நகர் மன்ற உறுப்பினர்கள் வின்சென்ட் ஜோசப், ஷாஜா தீ பர்வீன், ஆறுச்சாமி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பூந்தமல்லி:

    தமிழ்நாடு நகராட்சி - மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாக துறையில் இதுவரை இல்லாத அளவிற்கு நிறைய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு தமிழக முதலமைச்சர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கும் மற்றும் உயர் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் அப்பணியிடங்களை விரைந்து நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் நகராட்சி நிர்வாக இயக்குநரிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஒரே துறையில் பணியாற்றிய போதும் நகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும், மாநகராட்சி துப்புரவு அலுவலர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மண்டல அளவில் துப்புரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வேண்டும்.

    நகராட்சிகளில், மாநகராட்சிகளில் பணிபுரியும் நகர்நல மருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பணிகளும், துப்புரவு அலுவலர்களுக்கு பொது சுகாதார பணிகளையும் ஒதுக்கி பணி பகிர்வு செய்திட வேண்டும்.

    பல நகராட்சிகளில் துப்புரவு அலுவலர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் நகர்நல அலுவலர் பணியிடமும் தோற்றுவிக்கப் பட்டுள்ளன. இதனால் பணி பகிர்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகராட்சிகளின் திடக்கழிவு மேலாண் பணிகளை பொது சுகாதாரத் துறை சார்ந்த மருத்துவர்களை கொண்டு கவனிக்கும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சிகளில் ஏற்கெனவே சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனப்படும் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிந்து வரும் போது பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை மூலம் நகர்ப்புற மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு அவற்றில் புதியதாக 500 சுகாதார ஆய்வாளர்களை (ஹெல்த் இன்ஸ்பெக்டர்) நியமித்து உள்ளனர். இதனால் ஒரே நகர்ப்பகுதிகளில் இரு துறைகளின் சுகாதார ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது.

    இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சுகாதார ஆய்வாளர்களான சானிடரி இன்ஸ்பெக்டர்கள் பணிகளில் பொது சுகாதாரத்துறை சார்ந்த சுகாதார ஆய்வாளர்களின் பணி குறுக்கீடு ஏற்படும். துப்புரவு அலுவலருக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்ய, பொது சுகாதார பணிகளைக் கவனிக்க, ஜீப் வாகனம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியாக உள்ள துப்புரவு அலுவலர் பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும் என்றும் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ், செயலாளர், செந்தில்ராம் குமார், பொருளாளர் இளங்கோ, தலைமையிடத்து செயலாளர் கோவிந்த ராஜூ ஆகியோர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர். கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த நகராட்சி நிர்வாக இயக்குநர், கோரிக்கைகள் நிறைவேற்ற படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இச்சந்திப்பின் போது நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் விஜயகுமார் உடனிருந்தார்.

    ×