search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பை"

    • கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

    இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன.
    • நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் குப்பைக் கொட்டும் வளாகம் உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 66 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குவிந்து கிடக்கின்றன. அவ்வப்போது தீப்பிடித்து எரியும் குப்பைகளால் அப்பகுதியில் வாழும் 20 லட்சத்திற்கும் அதிக மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு வகையான தீமைகள் ஏற்படுகின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் திட்டத்தின் மூலம் அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ரூ.640 கோடியில் சென்னை மாநகராட்சி செயல்படுத்தப்படவுள்ளது.

    அதேநேரத்தில், அதே குப்பைக் கொட்டும் வளாகத்தில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ரூ.1026 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி அப்பகுதியில் இனி புதிதாக சேரும் குப்பைகளை எரிப்பதற்கான எரிஉலை நிறுவப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் உற்பத்து செய்யப்படும். உயிரி அகழாய்வு திட்டம் சுற்றுச் சூழலை காக்கக் கூடிய திட்டம் என்றால், எரிஉலை திட்டம் அதற்கு நேர் எதிரான கேடுத்திட்டம் ஆகும். எனவே, கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முற்றிலுமாக கைவிட வேண்டும். இதற்கு மாற்றாக, சுழியக் குப்பை எனப்படும் குப்பையில்லா சென்னை கோட்பாட்டை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுதியிலேயே அமைந்துள்ளது.
    • சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை குன்றத்தூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலையோரம் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குறிப்பாக வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் சர்வீஸ் சாலை அருகே அதிக அளவில் குப்பைகள் மலை போல் குவிந்து காணப்படுகிறது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி காணப்படுவதோடு, அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் அந்த வழியே சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலையே உள்ளது. மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குப்பை கொட்டும் இடத்தின் அருகிலேயே பிரபல தனியார் பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால் இந்த குப்பைகளால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    அத்துடன் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சுடுகாடும் அந்த பகுத்யிலேயே அமைந்துள்ளது. இதுபோன்று மலை போல் குப்பைகள் குவிந்து தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் அந்த பகுதியில் கொடிய தொற்று நோய்கள் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் அலட்சியமாக குப்பைகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், அங்கு மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 'மிச்சாங்' புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

    பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் மற்றும் அரசு உயர்அலுவலர்கள் மேற்பார்வையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், மழைக் காலங்களில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகள், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகள், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொள்ள திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 3449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்கள் வர வழைக்கப்பட்டனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 22,075 தூய்மைப் பணியாளர்களும், தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மிச்சாங் மற்றும் கனமழையின் காரணமாக 46,727.66 மெட்ரிக் டன் குப்பை மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

    கனமழையால் ஏற்பட்ட குப்பைகள் மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றிட தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், பொன்னேரி, திருநின்றவூர், மாங்காடு, பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு பகுதிகளில் 841 தூய்மைப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு, குப்பைகள் மற்றும் தோட்டக்கழிவுகள் அகற்றப்பட்டன.

    கடினமான இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குப்பைகளை அகற்றிடும் பணிகளை மேற்கொண்ட 3,449 தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டி ஊக்கத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் என மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் அடையாளமாக 15 தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், ஜோசப் சாமுவேல், மூர்த்தி, எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
    • குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட புயல் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் பொருட்கள் சேதம் அடைந்தன. கார், இரு சக்கர வாகனங்கள், மின் சாதனங்கள், சேர், டேபிள், படுக்கைகள் சேதம் அடைந்தன. கீழ் தளத்தில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர்.

    வெள்ளம் வடிந்த நிலையில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தாலும் பாதிப் பில் இருந்து விடுபடவில்லை.

    வெள்ளத்தில் இருந்து மீண்ட மக்கள் வீடுகளை சுத்தம் செய்து வருகின்றனர். சாக்கடை கழிவு நீர் வீட்டிற்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. ஆனால் சுத்தம் செய்வது பெரிய சுமையாக உள்ளது.

    மேலும் வீட்டில் சேதம் அடைந்த பொருட்களை வெளியேற்றி வருகிறார்கள். வீட்டு உபயோக பொருட்கள், இரு சக்கர வாகன பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை பெருமளவில் சேதம் அடைந்துள்ளன.

    இதனால் குப்பை கழிவுகள் வழக்கத்தை விட அதிகமாக தெருக்களிலும், சாலைகளிலும் குவிகிறது. சென்னையில் வழக்கமாக தினமும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படும். ஆனால் வெள்ள பாதிப்புக்கு பிறகு 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிக ரித்துள்ளது.

    எங்கு பார்த்தாலும் குப்பைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அள்ள அள்ள மேலும் குவிகிறது.


    மழை வெள்ளத்திற்கு பிறகு 50 சதவீத குப்பை கழிவுகள் தினமும் கூடுதலாக வருகின்றன. இதனை அகற்ற ஊழியர்கள் முழு வீச்சில் இரவு-பகலாக ஈடுபட்டாலும் கூட குப்பைகள் மலை போல் தேங்குகின்றன.

    பிற மாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்களை பயன்படுத்தி விரைவாக எடுத்தாலும் கூட தொடர்ந்து ஒரு புறம் குப்பைகள் குவிகிறது. மேலும் குப்பைகளை கிடங்குகளில் கொட்டுவதற்கு இடம் இல்லை.

    நகரின் முக்கிய குப்பை கிடங்குகள் அனைத்தும் நிரம்பி விட்டன. குப்பைகளை சேகரித்து செல்லும் லாரிகளும் கொட்ட முடியாமல் பல மணி நேரம் காத்து நிற்கின்றன.

    சென்னையில் உள்ள பெரும்பாலான தெருக்கள், சாலைகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சூளைமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, தி.நகர், அரும்பாக்கம் போன்ற பல குடியிருப்பு பகுதிகளில் சாலையில் குப்பை அழுகி கிடக்கிறது. வீடுகளில், தெரு வீதிகளிலும் முறையாக குப்பை எடுக்காததால் கண்ட இடங்களில் குப்பைகளை மக்கள் கொட்டி வருகின்றனர்.

    குப்பைகளை மாற்றம் செய்யக்கூடிய நிலையங்களில் தேங்கி கிடப்பதால் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.

    ஒவ்வொரு பகுதியிலும் குப்பைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தேங்கி வருவதால் அகற்றுவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

    புளியந்தோப்பில் உள்ள குப்பை மாற்றும் மையங்களில் குப்பை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. கொட்டுவதற்கு இடம் இல்லாததால் தாமதம் ஆகிறது.

    மேலும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மால்கள் போன்றவற்றின் இடங்களில் உருவாகும் மொத்த கழிவுகளை சேகரிக்க ஊழியர்கள் பணிக்கு வராததால் அவர்கள் தங்கள் கழிவுகளை சாலைகளில் கொட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "திடக்கழிவுகளை பிரிப்பது அல்லது பதப்படுத்துவது பற்றி மாநகராட்சி தற்போது சிந்திக்கவில்லை. சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் பணியாளர்களை இந்த பணியில் கூடுதலாக நியமித்துள்ளோம். சாலையில் உள்ள அனைத்து கழிவுகளையும் நாங்கள் சேகரித்தவுடன் சில கழிவுகளை மறுசுழற்சிக்காக பொருள் மீட்பு மையத்திற்கு அனுப்புவோம்" என்றார்.

    • கடந்த 4-ந் தேதி முதல் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • ஓரிரு வாரங்களுக்கு வீடு வீடாக குப்பைகளை பெற வரமாட்டோம். அருகில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுங்கள்.

    சென்னை:

    சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 4-ந் தேதி முதல் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது மழைநீர் வடிந்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக குப்பை அகற்றும் பணி நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக சேர்த்து வைத்திருந்த குப்பையை தெருவோரங்கள், காலி நிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் கொட்டி வருகின்றனர். மாநகரின் பல இடங்களில் குப்பை குவியல் குவியல்களாக காட்சி அளிக்கின்றன.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் குப்பை லாரிகளை இயக்க முடியவில்லை. கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை நிறுத்தும் நிலையங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகே, அவற்றை சீர் செய்து இயக்கமுடியும். இருப்பினும், பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து பணியாளர்கள் வாகனங்களுடன் வந்து உள்ளனர். அவர்கள் உதவியுடன் குப்பையை அகற்றும் பணிகளை தொடங்கி இருக்கிறோம்.

    வெள்ளம் வடிந்த பிறகு, நனைந்த கட்டில், மெத்தை, சோபா, புத்தகங்கள், துணி மணிகள் உள்ளிட்டவை கழிவாக அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. அவற்றை அகற்றவும் பணியாளர்கள் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே எலி, நாய், பூனை போன்றவை உயிரிழந்து உள்ளன. அவற்றையும் அப்புறப்படுத்தி வருகிறோம். அப்பகுதிகளில் குப்பையை அகற்றிவிட்டு, பிளீச்சிங் பவுடர் தூவி வருகிறோம்.

    ஒருசில தினங்களில் நிலைமை சீரடையும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். சில குடியிருப்பு பகுதிகளில், ''ஓரிரு வாரங்களுக்கு வீடு வீடாக குப்பைகளை பெற வரமாட்டோம். அருகில் உள்ள பொது இடங்களில் குப்பைகளை கொட்டுங்கள். மழை பாதிப்புகள் முடிந்த பிறகு, மொத்தமாக அகற்றிக் கொள்கிறோம்'' என்று குடியிருப்புவாசிகளிடம் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினம் தோறும் குப்பைகள் அகற்றுவதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 162 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றுவதற்கு தனியார் நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் தனியார் நிறுவனம் சார்பில் 335 துப்புரவு பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கால்வாய் சுத்தம் செய்தல், அரசு பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், குப்பைகளில் உரம் மாற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பை அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் கடந்த மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாத தனியார் நிறுவன டென்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் மாநகராட்சியில் நடந்த மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டார். அப்போது கவுன்சிலர்கள் மீண்டும் கலெக்டர் அருண் தம்புராஜிடம் குப்பைகள் சரியான முறையில் அகற்றவில்லை என மீண்டும் புகார் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் திடீரென்று நேரடியாக வந்தார். அப்போது அங்கு தனியார் நிறுவனம் சார்பில் குப்பைகள் அகற்றும் துப்புரவு பணியாளர்கள் அணிவகுத்து நின்றனர். அப்போது தனியார் நிறுவனம் சார்பில் பராமரித்து வரும் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். மேலும் எத்தனை நபர்கள் வந்துள்ளனர் என கேட்டபோது 294 நபர்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் 41 தற்காலிக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் பேசுகையில், கடலூர் மாநகராட்சி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவனம் மூலமாக தற்காலிக துப்புரவு பணியாளர்கள் குப்பைகள் அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குப்பைகள் அகற்றாததால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு, சுகாதாரம் சீரழிந்து வருகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.ஆகையால் துப்புரவு பணியாளர்கள் அந்தந்த கவுன்சிலர்களை அணுகி எந்தெந்த பகுதியில் குப்பையில் உள்ளது என்பதனை பார்வையிட்டு அகற்ற வேண்டும். மேலும் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்க வேண்டும். ஆகையால் துப்புரவு பணியாளர்கள் தினந் தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என்பதால் தூய்மை பணியில் சரியான முறையில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் ஒரு மாத காலத்திற்குள் தனியார் நிறுவனம் அனைத்து பணியாளர்களையும் நியமித்து சரியான முறையில் குப்பைகளை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் தனியார் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் காந்தி ராஜ், மாநகர நகர் அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர்கள் அப்துல் ஜாபர், கிருஷ்ணராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், சங்கீதா, பார்வதி, சுபாஷிணி ராஜா, விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், சரவணன், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையால் சேர்ந்த 100 டன் கூடுதல் குப்பைகள்
    • அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம், பொன்மலை, காட்டூர் என 5 கோட்டங்கள் உள்ளன.இங்கு 2 அரை லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு நான் ஒரு முதல் 450 டன் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதால் மாநகரின் அனைத்து தெருக்களிலும் மேலும் 100 டன் பட்டாசு கழிவுகள், புத்தாடை வாங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியது.

    திருச்சி என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடைவீதி, சத்திரம் சத்திரம் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் தேங்கி கிடந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணியில் இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் மாநகரம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    • மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன.
    • மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்து உள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற் கொண்டது.

    பட்டாசு கழிவுகள் மிக ஆபத்தானது என்பதால் அதனை மற்ற குப்பைகள் போல் சேகரித்து அகற்றாமல் அதற்காக தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன. 3 நாட்களில் இருந்து 250 டன் மெட்ரிக் பட்டாசு குப்பைகள் அகற்றட்டன.

    இது குறித்து கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5750 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பட்டாசு கழிவுகள் அபாயகரமாக இருப்பதால் அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    பட்டாசு கழிவுகள் அபாய கரம் என்பதால் தனியாக சேரித்து செயல்முறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் உள்ள பட்டாசு கழிவுகள் தனியாகவும், தெருவீதிகளில் உள்ள கழிவுகளை தனியாகவும் பைகளில் சேகரித்து மண்டலத்திற்கு ஒரு இடத்தில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பட்டாசு குப்பைகள் தெரு பகுதிகள், சாலைகளில் தேங்கி கிடப்பதை உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள அக்கறையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    • ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
    • மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சேறும் குப்பைகளை துப்புரவுப் பணியாளர்கள் மணவாளன் நகர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் கொட்டிவந்தனர்.

    ஆனால் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது நிறுத்தப்பட்டு பின்னர் வெங்கத்தூர், கன்னிமாநகர் பகுதியில் பள்ளி அங்கன்வாடி குடியிருப்புகள் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டது.

    இதில் தினம்தோறும் 5 டன் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் மலை போல் சேர்ந்து துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் குப்பையுடன் வந்த டிராக்டர்களை சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் சேரும் குப்பைகளை தற்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து கொட்டப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான டிராக்டர்கள் மூலம் கொட்டப்படும் கழிவுகள் சாலையோரம் குவிந்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனம் மற்றும் பொது மக்கள் சென்று வரும் நிலையில் குப்பை கழிவுகளால் தொற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுகளில் பிளாஸ்டிக், தெர்மாகோல், மெத்தை, முட்டை கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கால் நடைகள், நாய்கள் அதனை இழுத்து சாலையில் போட்டு சென்று விடுகின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் குப்பை கழிவுகளில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழைவெள்ளத்தில் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள நிலங்களில் சேர்ந்ததால் அந்த இடமும் பாழாகும் அபாயம் உள்ளது.

    எனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் குளம், உலக அளந்தார் கோவில் குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    பின்னர் அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சள் நீர்கால் வாயை பார்வையிட்டு அதன் பகுதிகளில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாயிகளில் போட வேண்டாம் என்று பொதுமக்களை கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் திருப்பருத்தி குன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் நீல்முடியான், உதவி பொறியாளர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்.

    • குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களால் குப்பையில்லா இந்தியா தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி வள்ளல் சீதக்காதி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி சேதுபதி நகர் 5-வது தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என 50 கிலோ எடையுள்ள குப்பைகளை மாணவர்கள் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியை குற்ற பிரிவு பொருளாதார காவல் ஆய்வாளர் நந்தக்குமார், சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ×