search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதுவரை தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • வேட்பாளா்களின் தோ்தல் செலவினப் பணிகளைப் பாா்வையிட சிறப்பு செலவினப் பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவா் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள், 608 பதாகைகள், 2,050 இதர வகை விளம்பரங்கள் என மொத்தம் 80,377 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    மேலும், தனியாா் இடங்களில் இருந்த 5,643 சுவா் விளம்பரங்கள், 7,974 சுவரொட்டிகள், 612 பதாகைகள் மற்றும் 1,160 இதர வகை விளம்பரங்கள் என 15,389 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இதுவரை தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5.62 கோடி மதிப்பிலான 8,589.16 கிராம் தங்கம், ரூ. 3.63 கோடி ரொக்கம், 12 'ஐ-போன்கள்' (ரூ. 15 லட்சம்), 25 மடிக்கணினிகள் (ரூ.7.50 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரூ.14.16 லட்சம் மதிப்பிலான 131.6 கிலோ போதைப் பொருள்கள், ரூ.28.74 லட்சம் மதிப்பிலான 1,624.28 லிட்டா் மதுபானம் என மொத்தம் ரூ. 9.90 கோடி மதிப்பிலான பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

    இதுவரை, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறல்கள் தொடா்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை 1950 மற்றும் 1800 425 7012 என்ற எண்களிலும், சி-விஜில் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு முழுவதும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினப் பணிகளைப் பாா்வையிட சிறப்பு செலவினப் பாா்வையாளராக பி.ஆா்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரை 93452 98218 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது.
    • புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்துவரி மிக முக்கியமானது. குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர். சொத்து வரி ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.

    கடந்த நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை விட கூடுதலாக ரூ.250 கோடி வசூலித்து மொத்தம் ரூ.1,800 கோடி மாநகராட்சிக்கு கிடைத்து உள்ளது. சொத்துவரி 2-வது அரையாண்டிற்கான காலம் மார்ச் 31-ந்தேதி நேற்றுடன் முடிந்தது.

    நிதியாணடின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்ததால் அந்த நாளை வேலை நாளாக அறிவித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.

    சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது. அதன் விளைவாக ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் மக்கள் சொத்துவரி செலுத்தினர்.

    நள்ளிரவு வரை சொத்து வரி வருவாயை கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் ரூ.1,800 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    சென்னை:

    சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி பாக்கி குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வரி பாக்கி தொகை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    • சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
    • புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை படித்தார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.

    வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.

    வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.

    பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.

    மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.

    255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.

    சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.

    மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.


    புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.

    மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும். மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.

    பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.

    • 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
    • சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    * சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    • சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
    • 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.

    அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.

    சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
    • சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.

    சென்னை:

    மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.

    பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

    இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.

    மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.

    எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    • எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-

    எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.

    எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.

    மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.

    ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

    டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?

    மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.

    மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.

    பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்றும், நாளையும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
    • குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், "மக்களுடன் முதல்வர்" சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்றும், நாளையும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூ, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.

    இம்முகாமில், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
    • பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும்.

    சென்னை:

    கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள், தெருக்களில் தேங்கிய வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு இருந்தது

    இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது.
    • குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை இல்லா தெருக்கள், சாலைகளை மாற்றி அழகுப்படுத்தப்படுகிறது.

    சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இயற்கை உரம், பயோகியாஸ் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் தனியார் நிறுவனங்கள் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஓட்டல்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கின்ற குப்பைகள் இயற்கை உரம், இயற்கை எரிவாயு மற்றும் மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குவியும் குப்பை குறைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

    அந்த வகையில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்குகிறார்கள். மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பெறப்படுகிறது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வகையாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தனித்தனி பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் எளிதாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள பிரதான குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு, பயோகியாஸ் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் தேக்கம் ஆவது இல்லை.

    இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து குப்பைகளை பிரித்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். குப்பைகளை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

    இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

    அதில் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×