என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்ஜெட்"

    • மத்திய அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமில்லை.
    • டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை தந்து ஏமாற்றுகிறது பாஜக அரசு

    பாஜகவிற்கு சித்தாந்த ரீதியாக சிம்ம சொப்பனமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழர்கள் மீது பாஜக கொண்டுள்ள வன்மம் தீராது என்பதை இந்த ஒன்றிய பட்ஜெட் நிரூபித்து விட்டது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

    பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேர்தல் நடக்கும் மாநிலங்களைக் கவர பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறார்கள்!

    எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்

    ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்!

    வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை. பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.

    தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டிற்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

    கடந்த காலத்தில் பீகார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக 'பீகார் பட்ஜெட்டா!' என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க 26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு 21 ஆயிரம் கோடி எனச் சுமார் 70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.

    விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.

    பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா? ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பீகாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?

    பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.

    தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கைவிடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி.

    அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று தெரிவித்தார். 

    • வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.
    • ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2026-27-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியவதாவது:-

    * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உள்ளது.

    * இளைஞர் சக்தியை முன்னிறுத்தி 2026- 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.

    * 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் 350 சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது.

    * அனைவருக்குமான வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது ஆகிய மூன்றும் முக்கிய கடமை.

    * மிக முக்கியமாக ஜிஎஸ்டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
    • கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாற்றி உள்ளனர்.

    * ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

    * எதிரிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் வீரம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது.

    * ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

    * இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.

    * இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

    * 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.

    * இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

    * கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

    * 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்க வேலை கிடைத்துள்ளது.

    * உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.
    • செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்தாண்டில் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்து சாதனை படைத்துள்ளது.

    * உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    * தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.

    * கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகன பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * உலகிலேயே அதிவேகத்தில் வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.

    * உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.

    * உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது.

    * கடந்தாண்டில் மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    * சூரிய மின் திட்டத்திற்கான அரசின் நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளோம்.

    * AI துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.

    * நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள மக்களையும் முன்னேற்றும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * ரெயில் சேவையால் இணைக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    * அசாமில் உற்பத்தி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    * மீன் வளத்தை பெருக்குவதில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

    * நாட்டில் கிட்டத்தட்ட 95 கோடி குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள் இப்போது கிடைக்கிறது.

    * நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது.

    * வளர்ச்சி ஒன்றே தாரக மந்திரம் என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.
    • கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

    * 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    * எல்லோருக்கும் எல்லாமுமான வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * பல்வேறு துறைகளில் நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • வருகிற 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் தொடங்குகிறது.

    முதல் நாளான இன்று, பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

    வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • ஒரே பிரதமரின் கீழ் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
    • மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    இந்திய நாடாளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் இதுவாகும். மேலும், தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்ய இருக்கிறார். இதன்மூலம் ஒரே பிரதமர் கீழ் தொடர்ச்சியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்க இருக்கிறார்.

    இதற்கு முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலக்கட்டத்தில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இதுதான் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு அமைச்சர் அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்ததாகும். மொரார்ஜி தேசாய் 1959 முதல் 196 வரை நிதியமைச்சராக இருந்தபோது 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 1967 முதல் 1969 வரை 4 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் பி. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

    நிர்மலா சீதாராமன் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி 2-வது முறையாக வெற்றி பெற்றதும், முழு நேர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2024-ல் பிரதமர் மோடி 3-வது முறையாக வெற்றி பெற்றதும் தொடர்ந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றார்.

    இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 1947-ம் ஆண்டு நவமபர் 26-ந்தேதி ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார்.

    மன்மோகன் சிங் 1991 முதல் 1995 வரை தொடர்ந்து 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார்.

    • இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.
    • நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.

    இந்தியாவுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு 2025-26 நிதியாண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டில் 20% அதிகரிப்பை அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இராணுவ செலவினங்களுக்கு 2.55 லட்சம் கோடி பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 9 பில்லியன் டாலர்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 2.12 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம்.

    நிதியமைச்சர் ஔரங்கசீப், தேசிய பாதுகாப்புக்கு அரசு முதலிடம் அளிக்கும் என்று கூறினார். அதே சமயம், மொத்த பொதுச் செலவினத்தில் 7% குறைப்பு, பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

    கல்வி, விவசாயம் ஆகியவற்றை விட பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதற்காக பாகிஸ்தான் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து, இது நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், முக்கியமான சிவில் துறைகளுக்கு நிதி கிடைக்காமல் போகும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன.

    • 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.
    • தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

    சொந்த வீடு வாங்குவது பலரின் கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவுக்காக ஒருவர் எந்த எல்லையையும் கடக்கலாம் என்பதற்கு உதாரணமாக சீன பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.

    சீனாவில் யாங் என்ற 18 வயது பெண் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சேமிக்க தான் பணிபுரியும் பர்னிச்சர் கடையில் உள்ள கழிவறையில் வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். அதிகரித்து வரும் வாடகை செலவுகளையும் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    மாதம் ரூ.34,570 சம்பாதிக்கும் யாங் வாடகையாக ரூ.545 மட்டுமே செலுத்துகிறார். குளிப்பது, சமைப்பது, துணிகளை துவைப்பது, உறங்குவது என அனைத்து வேலைகளையும் அந்த சிறிய இடத்திலேயே அவர் செய்து கொள்கிறார்.

    பணிநேரங்களில் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தனது உடைமைகளை வேறு இடத்திற்கு மாற்றி விடுகிறார்.



    ஆரம்பத்தில், யாங் மாதத்திற்கு ரூ. 2,290 வாடகை செலுத்த முன்வந்தார். ஆனால் அவரது முதலாளி அதற்கு மறுத்துவிட்டார். தண்ணீர் மற்றும் மின்சார செலவுகளுக்கு போதுமான தொகையை மட்டுமே அவர் வசூலித்து வருகிறார்.

    கடையில் தங்குவதற்கு அலுவலக இடம் வழங்கப்பட்டாலும், கதவு இல்லாததால் யாங் சங்கடமாக உணர்ந்தார். எனவே தற்போது ஓய்வறையில் வசிக்கும் யாங், கதவில் துணியை  தொங்கவிட்டு, தனது வீடாக அதை பாவிக்கிறார்.

    மேலும் இரவில் மடிப்பு படுக்கையை உபயோகிக்கிறார். தனது ரூ.34,570 மாத சம்பளத்தில் யாங் தனது செலவுகளை வெறும் ரூ. 4,500 ஆகக் குறைத்து கடும் சிக்கனத்துடன் வாழ்ந்து வருகிறார்.

    • டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    26 வருடத்திற்குப் பிறகு டெல்லி சட்டமன்றத்தில் ஒரு கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. முதலமைச்சர் ரேகா குப்தா பெண்களுக்கு அதிகாரமளித்தல், கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பெண் எம்.எல்.ஏ. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார்.

    நிதித்துறையை வைத்திருக்கும் ரேகா குப்தா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கியம்சங்கள்:-

    * டெல்லியின் கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூலதன செலவு 28 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    * டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * யமுனை நதியை சுத்தம் செய்ய 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 40 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை பரவலாக்குவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே ஆற்றில் நுழைவதை உறுதி செய்யப்படும்.

    * பழைய கழிவு நீர் குழாய்களை மாற்றுவதற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * சுத்தமான குடிநீர் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * சுகாதாரத்துறைக்கு 6874 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * போக்குவரத்து துறைக்கு 12952 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் ஊழலை தடுப்பதற்கு பிங்க் கலர் டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கார்டு வழங்கப்படும்.

    * மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்குவதற்காக 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * பெண்கள் பாதுகாப்பிற்காக டெல்லியில் கூடுதலாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

    * 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் 1,200 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். இதற்கான 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    * நரேலா பகுதியில் புதிய கல்வி முனையம் அமைக்கப்படும்.

    * 40 கோடி ரூபாயில் பும்மன்ஹெரா பகுதியில் நவீன கோசாலைகள் அமைக்கப்படும்.

    பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:-

    இந்த பட்ஜெட் நாட்டின் தலைநகரான டெல்லியின் வளர்ச்சிக்கான முதல்படி. கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் டெல்லி பின்தங்கியுள்ளது. முந்தைய அரசாங்கம் தேசிய தலைநகரின் பொருளாதார ஆரோக்கியத்தை கரையான்களைப் போல அழித்துவிட்டது.

    இது வெறும் பட்ஜெட் மட்டுமல்ல. டெல்லியின் எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வை. இந்த பட்ஜெட்டில் சில இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இப்போது டெல்லி வெற்றி வாக்குறுதிகள் கொண்டதாக இல்லாமல் நம்பிக்கையின் நகரமாக இருக்கும் ரேகா குப்தா தெரிவித்தார்.

    இவ்வாறு ரேகா குப்தா தெரிவித்தார்.

    கடந்த முறை ஆம் ஆத்மி தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பை விட இந்த முறை மொத்த பட்ஜெட் மதிப்பு 31.5 சதவீதம் அதிகமாகும்.

    • 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
    • வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.

    ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

    • ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம்.
    • பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

    புதுடெல்லி

    இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது.

    தொடக்க விழாவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    உற்பத்தி துறை மீது இந்தியா கவனம் செலுத்தக்கூடாது, அதற்கு பதிலாக சேவைத்துறையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நமக்கு யோசனை சொல்லப்படுகிறது. ஆனால், சேவை துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதுடன், உற்பத்தி துறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம்.

    அதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் உன்னிப்பாக கவனித்துவர வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய ஆற்றலில் இருந்து தொழில்துறை பலன் அடையலாம்.

    நீண்டகாலமாக நிகழ்ந்து வரும் பொருளாதார மந்தநிலை, மேலைநாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், வேறு நாடுகளுக்கு இடம்பெயர நினைத்துக் கொண்டிருக்கிற முதலீடுகள், உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு இழுக்க தொழில்துறையினர் வியூகம் வகுக்க வேண்டும்.

    உலகம் தூய்மையான எரிசக்தியை நோக்கி இடம்பெயர்ந்து வருவதால், வளர்ந்த நாடுகள் உங்கள் மீது அதிக வரி விதிக்கக்கூடும். ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம்.

    இந்தியாவில், 14 கோடி நடுத்தர வருவாய் குடும்பங்களும், 1 கோடியே 40 லட்சம் உயர் வருவாய் குடும்பங்களும் அதிகரிக்கும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

    வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டுகளின் ஆன்மாவை பின்பற்றியே இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும். 2047-ம் ஆண்டில், மிகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது குழந்தைகள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×