search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பீர் வகைகளை விரும்புகிறார்கள்.
    • மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பெரும்பாலானோர் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள குளிர்ந்த பீர் வகைகளை விரும்புகிறார்கள். `பீர்' என்பது முன்பெல்லாம் பலரது வாழ்க்கையில் ஓய்வுடன் தொடர்புடையதாக இருந்து வந்தது.

    ஓய்வில் இருப்பவர்கள் மனதை ரிலாக்சாக வைத்துக்கொள்ள `பீர்' பருகினார்கள். சமீப காலமாக `பீர்' மதுபானமாக மாறி விட்டது.

    மேலும் அக்னி வெயில் நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் நிலையில் மதுக்கடைகளில் பீர் பாட்டில்களே அதிகம் விற்று தீர்கிறது.

    இதனால் பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கோடைகாலத்தில் பீர் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.

    இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பீர் விற்பனை ரூ.38,360 கோடியை தொட்டது. வரும் 2028-ம் ஆண்டில் இந்தியாவில் பீர் விற்பனை ரூ.62,240 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப ஆண்டுக்கு ஆண்டு பீர் விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கோடை வெயில் அதிகரிக்கும் போது பீர்களின் தேவை அதிகரிப்பதால் மதுபான கடைகளும் அதற்கு ஏற்ப பீர் பாட்டில்களை தயாராக வைத்து விற்பனையை அதிகரித்து வருகின்றன.

    பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக பீர்களை கிடைக்க செய்யும் வகையில் பல நிறுவனங்களுடன் கூட்டாண்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பீர் விற்பனை 40 முதல் 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    மதுக்கடைகளில் உள்ள மதுபானங்களில் பீர் வகைகளே அதிகம் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் அவ்வப்போது மழை பெய்ததால் பீர் விற்பனை சரிந்தது. ஆனால் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாத நிலையில் வெயிலும் உக்கிரம் காட்டுவதால் பீர் விற்பனை அதிகரித்து உள்ளது.

    மேலும் இந்த கோடை வெயிலுக்காக பல நிறுவனங்கள் புதிய ரகங்களில் பீர் வகைகளை அறிமுகப்படுதி உள்ளன. மதுப்பிரியர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

    • ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர்.
    • முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார்.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் அபார சாதனை படைத்துள்ளனர்.

    4998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 4355 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 87.13 சதவீதமாகும். கடந்த ஆண்டைவிட 0.27 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

    சென்னை மாநகராட்சி சார்பாக செயல்படும் 35 மேல்நிலைப் பள்ளிகளில் நுங்கம்பாக்கம் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் தான் மாநகராட்சி பள்ளியில் படிக்கின்றனர். அவர்களிலும் தனித்திறன் மிக்க கற்றல் திறன் உள்ள குழந்தைகள் பலர் உள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

    பல்வேறு பாடங்களிலும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 எடுத்து சாதனை படைத்துள்ளனர். வணிகவியல் பாடத்தில் 16 பேர், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-14, பொருளாதாரம்-12, கணினி அறிவியல்-9, கணக்குப் பதிவியல்-2, புவியியல், கணிதம், விலங்கியல் பாடங்களில் தலா ஒருவர் வீதம் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.

    மாநகராட்சி பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி பூங்கோதை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தவர். இந்த மாணவி 600-க்கு 578 மதிப்பெண் பெற்றார். பள்ளியிலும் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். 2-வது இடத்தில் கொளத்தூர் மாநகராட்சி பள்ளி மாணவர் ஷாரூக் 575 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 3-வதாக பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பள்ளி மாணவிகள் ஹரினி பிரியா, திவ்யா ஸ்ரீ ஆகியோர் 573 மதிப்பெண்ணை பெற்றுள்ளனர்.

    முதலிடம் பெற்ற மாணவி பூங்கோதை ஆட்டோ டிரைவரின் மகள் ஆவார். அவரது தந்தை பார்த்திபன். தாயார் சிவகாமி வீட்டு வேலை செய்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பூங்கோதை சிறு வயது முதலே படிப்பில் சுட்டி.

    மாணவி பூங்கோதை கூறியதாவது:-

    ஏழை குடும்பத்தில் பிறந்தவள் நான். இவ்வளவு மதிப்பெண் பெறுவதற்கு எனது ஆசிரியைகள்தான் காரணம். என்னை ஊக்கப்படுத்தினார்கள். எப்போது சந்தேகம் கேட்டாலும் மனம் கோணாமல் சொல்லித் தருவார்கள். வீட்டில் அதிகமாக படிக்க மாட்டேன். இரவு 10 முதல் 11 மணி வரை மட்டுமே வீட்டில் படிப்பேன். பள்ளியில்தான் முழுமையாக படிப்பேன். சிறப்பு வகுப்பு எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. படிப்பிற்காக 6 மாதமாக டி.வி. பார்க்கவில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து படிப்பேன்.

    பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க ஆசைப்படுகிறேன். அம்மா வீட்டு வேலை செய்தும் அப்பா ஆட்டோ ஓட்டியும் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி பெற்ற மதிப்பெண் விவரம் தமிழ்-94, ஆங்கிலம்-89, பொருளாதாரம்-100, வணிகவியல்-100, கணக்குப் பதிவியல்-96, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-99.

    கொளத்தூர் பள்ளி மாணவர் ஷாரூக் தமிழ்-97, ஆங்கிலம்-88, இயற்பியல்-93, வேதியியல்-98, கணினி அறிவியல்-100, கணிதம்-99, இவரது தந்தை ஷானவாஸ் எலக்ட்ரிஷன் ஆவார். 3-வது இடம் பிடித்த திவ்யாஸ்ரீ தந்தை காவலாளியாக வேலை பார்க்கிறார். அவர் பி.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதே ஆசை என்று தெரிவித்தார். சாதனை படைத்த மாணவிகளை பெரம்பூர் தலைமை ஆசிரியர் செல்வகுமாரி பாராட்டினார்.

    • நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
    • தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.

    இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.

    இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.

    தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.

    முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.

    மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

     இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு

    பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார்.
    • நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283. தமிழகத்தில் தேர்வு எழுதியதும் அவர் ஒருவர்தான்.

    பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வையும் நிவேதா எழுதி இருக்கிறார். எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையும். அவர் படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்துள்ளார். மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.

    • ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
    • கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

    மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

    அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

    அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

    • வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    • இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல் காற்றுடன் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 1 முதல் மே 6 வரையிலான காலகட்டத்தில் 19.8 மி மீ மழை பதிவாகியுள்ளது. அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 71.4 மி மீ ஆகும். ஆகவே கோடை மழை இதுவரை இயல்பை விட 72% குறைவாக பெய்துள்ளது.

    • எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.
    • வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை:

    சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்:

    * சென்னையில் நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும். சிறுமியின் மருத்துவ செலவை சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும்.

    * எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் நாயை உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார்.

    * நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது.

    * நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, மனைவி வரலட்சுமி, மகன் வெங்கேடசன் ஆகிய 3 பேர் மீதும் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    * வீட்டில் செல்லப்பிராணிகளான நாய், பூனை, பறவைகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    * சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகள் வளர்த்து வரும் நிலையில் வெறும் 1,200 பேர் மட்டுமே மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர்.

    * செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும் என வீடுதோறும் சென்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்படும் என்று கூறினார்.

    • ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.
    • முகவா்களின் பெயா், கையொப்பம், இரண்டு புகைப்படங்களையும் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    தோ்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை பணிக்காக அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளா்கள் சார்பில் இருக்க வேண்டிய முகவா்களின் எண்ணிக்கை குறித்து தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனா்.

    பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முகவா்களை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 முகவா்களையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் ஆறு மேஜைக்கு ஆறு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    தபால் வாக்குச் சீட்டு எண்ணுமிடத்தில் ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பார். அவருடன் ஒரு முகவரையும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.

    ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்ட மன்ற தொகுதிகள் இருந்தால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 நபா்கள் வீதம் 90 முகவா்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறை ஆகிய இடங்களில் எட்டு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.

    மொத்தமாக ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.

    வேட்பாளா்களின் சார்பில் நியமிக்கப்படும் முகவா்கள் ஒவ்வொருவரும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கென வரையறுக்கப்பட்ட படிவம் 18-ல் முகவா்களின் பெயா்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    அதேபோல, முகவா்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.

    அதன்படி, மத்திய மற்றும் மாநில அமைச்சா்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், நகா்மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறு வனங்களின் தலைவா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறு வனங்களின் பகுதி நேர உறுப்பினா்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரை முகவா்களாக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது.
    • ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.

    இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.

    அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

    வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 75 சதவீதமும் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 சதவீதம்தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

    இதனால் ரெயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

    குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் நிம்மதியை தொலைக்கிறார்கள்.

    இந்த பிரச்சினை பற்றி ரெயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஒரு சில நீண்ட தூர ரெயில்களுக்கு வேறு ரெயில் நிலையங்களில் நீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெயில் பெட்டிகளை கழுவுதல், சுத்தப் படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.

    ஒரு ரெயில் தொலை தூரத்திற்கு சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரெயில் பெட்டிகளின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை.

    சென்னை பேசின்பிரஜ், பராமரிப்பு நிலையத்தில் 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பராமரிக்கப்படு கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

    சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டரும், எழும்பூர் ரெயில் நிலையத்தற்கு 10 லட்சம் லிட்டரும் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்கள்.

    • தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது.
    • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டாலும் இரு கட்சிகளும் திரைமறைவு நாடகம் நடத்தி வருவதாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    ஆனாலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜனதா எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

    தேர்தலுக்கு பிறகும் அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து பா.ஜனதாவை தாக்கி பேசி வருகின்றனர்.

    வடமாநில தேர்தல் பிரசாரத்தில் முஸ்லிம்கள் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து கண்டனம் தெரிவித்திருந்தார்.

    சமீபத்தில் சேலத்தில் நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதாவை விமர்சனம் செய்ததுடன் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளையும் கடுமையாக சாடினார்.

    தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ்தான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கு தேவையான காவிரி தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது.

    தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப்பெற உதவாத இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருந்து என்ன பயன் என்றும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

    அது மட்டுமின்றி மத்தியில் தப்பித்தவறி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு அதனால் என்ன லாபம்? என்று கேள்வி எழுப்பினார்.

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    காவிரியில் தமிழகத்தின் பங்கை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை கூட தி.மு.க. அரசால் செயல்படுத்த முடியவில்லை. தமிழகத்துக்கான உரிமையை கேட்டுப் பெறவும் முடியவில்லை என்று அவர் தொடர்ந்து சாடி வருகிறார்.

    இதே கருத்தை தான் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும் தொடர்ந்து பேசி வருகிறார். மத்தியில் பா.ஜனதா அல்லது காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. காவிரி தண்ணீருக்காக போராட வேண்டி உள்ளது.

    எனவே மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து தமிழக பிரச்சனைக்காக குரல் எழுப்புவார்கள் என்றார்.

    பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. தாக்கி பேசுவதால் காங்கிரசை ஆதரிப்பதாக மக்கள் நினைக்க வேண்டாம். நாங்கள் இரு கட்சிகளுக்கும் எதிரானவர்கள். இரு தேசிய கட்சிகளிடம் இருந்தும் சமமான இடைவெளியை கடைபிடித்து வருவதாகவும் தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அதை எதிர்த்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறி உள்ளார்.

    • யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி, ஜவளகிரி போன்ற வனப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்குள்ள யானைகள் கோடை காலங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கும், விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் தேன்கனிகோட்டை அருகே சந்தனப்பள்ளி கிராமத்திற்கு அடுத்துள்ள ஏரி பகுதியில் நேற்று இரவு மக்னா யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு கிராமத்திற்கு நுழைந்துள்ளது.

    இதையடுத்து அங்குள்ள ஏரியில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் யானையின் தும்பிக்கை பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.

    தொடர்ந்து இன்று காலை அந்த பகுதிக்கு வந்த கிராம மக்கள் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனச்சரகர் விஜயனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மக்னா யானை உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு அதே இடத்தில் மக்னா யானை உடலை அடக்கம் செய்ய உள்ளனர்.

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் யானைகள் அடிக்கடி மின்சாரம் தாக்கி உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் யானைகள் உயிரிழப்பை தடுப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.
    • தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்று தொடர்ந்து கூறி வரும் சசிகலா சமீபத்தில் தொண்டர்களின் நாடித்துடிப்பை பார்க்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தினார்.

    அ.தி.மு.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ். அணிகளுக்குள் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்து கொள்ளவும், தனது ஆதரவாளர்களை தெரிந்து கொள்ளவும் ஒரு படிவம் மூலம் தூண்டில் வீசினார்.

    அந்த படிவத்தில் 15 கேள்விகள் கேட்டு இருந்தார். பெயர், முகவரி, கட்சியில் வகிக்கும் பதவி, 2017-ல் வகித்த பதவி உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்று இருந்தன.

    படிவம் வெளி வந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தொண்டர்கள் மத்தியில் எந்த சலனமும் இல்லை. மவுனமாகவே இருக்கிறார்கள். சசிகலா எதிர்பார்த்த அளவு படிவங்களை பூர்த்தி செய்து யாரும் அனுப்பவில்லை.

    எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 3 அணிகளிலுமே சசிகலாவின் வேண்டுகோளுக்கு உற்சாகம் காட்டவில்லை.

    இது சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொண்டர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமலும் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க தயங்கியபடியும் சசிகலா உள்ளார்.

    தேர்தல் முடிவு தெரிந்ததும் எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருவதாக கூறப்படுகிறது.

    ×