தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது

ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது
Published on

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பி.இ. மற்றும் பி.டெக். என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பபதிவு இன்று தொடங்கியது.

மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்தனர். விண்ணப்பங்களை நிரப்பி, அசல் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ந்தேதி ஆகும்.

அன்றே ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் ஜூன் 13-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை சேவை மையம் வாயிலாக இணையதளம் மூலம் சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதையடுத்து ஜூலை 10-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேவை மையம் மூலம் மாணவ-மாணவிகள் தங்களின் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அதன்பிறகு என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

அதன் பிறகு பொது பிரிவில் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினரில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. பொதுக்கல்வி, தொழில்முறை கல்வி, அரசுப் பள்ளிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. அதன் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பின்னர் எஸ்.சி.ஏ. காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com