search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather Center"

    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும். இந்த பருவ மழை காலத்தில் தென் மாநிலங்களில் அதிக மழை பொழிவு கிடைக்கும்.

    தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் மழை செப்டம்பர் மாதம் வரை பரவலாக மழை பெய்யும்.

    தென்மேற்கு பருவ மழை தொடங்குவது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அறிவிக்கவில்லை.

    ஆனால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வேகமாக வீசுவதால் இன்று அல்லது நாளை பருவ மழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல்-தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் நாளை (30-ந்தேதி) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டுக்கு அதிக மழையை தரும் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரம் பெய்ய தொடங்கும்.

    இந்த ஆண்டு கடந்த மாதம் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்ய தொடங்கியது.

    வழக்கமாக வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 449.7 மி.மீ. பெய்வது இயல்பான மழை அளவாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இயல்பைவிட 6 சதவீதம் அதிகம் மழை பெய்து இருந்தது. இந்த ஆண்டும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

    அதை உறுதிப்படுத்துவது போல கடந்த 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளிலும் மழை நீடித்தது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்து இருந்தது. சென்னை புறநகரில் உள்ள குடிநீர் ஏரிகளும் 85 சதவீதத்துக்கும் மேல் நிரம்பி இருந்தன. இந்தநிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வந்தது.

    நேற்று இரவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்ய ஆரம்பித்தது. விடிய விடிய இந்த மழை நீடித்தது. இன்று காலையிலும் 10 மணி வரை மழை பெய்து கொண்டே வந்தது. இந்த மழை 3 மணி நேரத்திற்கு சென்னையில் நீடிக்கும் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

     

    வீடுகளுக்குள் தண்ணீர்

    10 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேளச்சேரி உள்பட சில பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

    சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் சென்னையில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக வாகன ஓட்டிகள் கடுமையாக திணற நேரிட்டது.

    வேளச்சேரி, வடபழனி, கோடம்பாக்கம், முகப்பேர், நொளம்பூர், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி உள்பட பல பகுதிகளில் மழை நீடித்துக் கொண்டே இருந்தததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஈக்காட்டுதாங்கலில் அனைத்து தெருக்களிலும் தண்ணீர் நிறைந்து இருந்தது. இதனால் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதப்பது போல காட்சி அளித்தது.

    சென்னையில் பல இடங்களில் கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் வீடுகளுக்குள்ளும், கடைகளுக்குள்ளும் புகுந்த தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற முடியாதபடி மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    விருகம்பாக்கம் மார்க்கெட், அம்பத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், வளசரவாக்கம், கோயம்பேடு பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மழை தண்ணீரால் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    வடசென்னையிலும் சாலைகளில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலைகள் மிக கடுமையான சேதத்தை சந்தித்து உள்ளன. இது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் கடும் சவாலாக மாறி உள்ளது.

     

    மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து

    வியாசர்பாடி, மாதவரம், மடிப்பாக்கம் பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. புறநகர் பகுதிகளில் அய்யப்பாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், பாடி போன்ற இடங்களில் வெள்ளப் பாதிப்பு காணப்படுகிறது.

    அம்பத்தூர் அம்மா உணவகத்தில் தண்ணீர் புகுந்தது. அது மூடப்பட்டு உள்ளது. தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அங்கு அம்மா உணவகம் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே முக்கிய சாலைகளில் சுமார் 2 ஆயிரம் இடங்களில் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. அவற்றை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் விடிய விடிய பெய்த மழை அந்த பணிகளை முடக்கி உள்ளது.

    அதோடு மட்டுமின்றி மேலும் பல சாலைகளில் பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மழைநீர் கால்வாய் மூடிகள் திறந்து கிடக்கின்றன. எனவே சாலையோரங்களில் நடந்து செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கடுமையான மழை காரணமாக சில தெருக்களில் மரங்களும் வேறோடு சாய்ந்து விழுந்தன. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர இயலாதபடி மழை அவர்களை முடக்கி போட்டது.

    சிறிய சந்தைகள், தெருவோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. அவர்கள் வாழ்வாதாரத்தில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்திலும், அம்பத்தூரிலும் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.

    எம்.ஜி.ஆர். நகரில் 17 செ.மீட்டரும், அண்ணாபல்கலைக் கழகத்தில் 16 செ.மீட்டரும், புழலில் 15 செ.மீட்டரும், தரமணியில் 13 செ.மீ., சென்னை விமான நிலையத்தில் 11 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகள் 10 செ.மீ.க்கும் மேல் மழை பொழிவை பெற்றன. இதனால் சென்னை நகர் முழுமையாக மழை வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டுதான் ஒரே நாளில் 20 செ.மீ. மழைக்கு மேல் பெய்துஇருந்தது. அதன்பிறகு இன்று 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. சென்னையில் தொடர்ந்து அடுத்த வாரம் இறுதிவரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு இருப்பதால் இன்று தாழ்வான பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டனர். வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து ஏற்கனவே மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

    அந்த மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிக்கு சென்று மழை தண்ணீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை முக்கிய சாலை பகுதிகளில் ராட்சத எந்திரம் மூலம் மழை தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடங்கின. என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு திணறலை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

    இதையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளன. தொடர் மழை காரணமாக சீரமைப்பு பணிகளை உடனுக்குடன் செய்து முடிக்க முடியுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    சென்னையில் விடிய விடிய பெய்த மழைக்கு சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தி.நகர் துரைசாமி பாலத்தில் மழை தண்ணீர் நிரம்பி வழிந்தது. இதனால் மேற்கு மாம்பலத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோன்று தென் சென்னை பகுதிகளில் பல இடங்களில் சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

    சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இன்று காலை பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது.

    இதையும் படியுங்கள்... முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணம் செய்ய மொபைல் டிக்கெட் வசதி

    சென்னையில் வெப்பம் 67 டிகிரி ஆக குறைந்ததால் கடும் குளிர் நலவுகிறது. இன்னும் 3 நாட்கள் நீடிக்கும் என்று தனியார் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சென்னையில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. வானம் அடிக்கடி மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இரவில் கடும் குளிர் நிலவுகிறது.

    நேற்று முன்தினம் குறைந்தபட்சமாக 71.24 டிகிரி வெப்பம் நிலவியது. நேற்று வெப்பநிலை 67 டிகிரி ஆக குறைந்தது. இன்னும் 2 நாட்களுக்கு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இன்னும் 2 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என தனியார் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    வட இந்தியாவில் இருந்து கடுமையான குளிர்ந்த காற்று வீசுகிறது. அதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு வெப்பம் குறைந்து கடும் குளிர் நிலவும். பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. #rain #fishermen

    கடலூர்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் கடலூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. காட்டுமன்னார் கோவிலில் அதிக மழை பெய்தது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கள்ளிப்பாடி, காவனூர், தேத்தாம்பட்டு, புதுக்குப்பம், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாக்காரமாரி பகுதியில் குன்னத்து ஏரி முற்றிலும் நிரம்பியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கடலூர் நகரிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    கடலூர் தேவனாம்பட்டிணம், தாழங்குடா உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மாலை கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோ‌ஷத்துடன் பொங்கி எழுந்தன. சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் சீறி பாய்ந்தன.

    இதையடுத்து மீனவர்கள் கரையோரம் நிறுத்திவைத்திருந்த தங்களது பைபர் படகு மற்றும் கட்டுமரம், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை மேடான இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடல் கொந்தளிப்பு மற்றும் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. நள்ளிரவுவரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


    காலை 9 மணி அளவில் மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, பிரம்மதேசம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இன்றும் கடல் பகுதியில் சீற்றமும், கொந்தளிப்பும் அதிக அளவு காணப்பட்டது. இதனால் வசன்குப்பம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.  #rain #fishermen

    வானிலை மையத்தின் சரியான கணிப்பால் புயலில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது என்று அமைச்சர் உதயகுமார் பேட்டியில் கூறியுள்ளார். #TNMinister #Udhayakumar #Gajastorm

    சென்னை:

    கரையை கடந்த கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்கு கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கூறினார்.

    இதுபற்றி அவர் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை துறையை நாங்கள் முன் கூட்டியே உஷார்படுத்தி இருந்தோம்.

    இந்த நிலையில் கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது.

    புயல் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அது காற்றழுத்த தாழ்வு நிலையாக இருக்கும்போதே நாங்கள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினோம்.

    மரங்கள் சாய்ந்தால் அதை அகற்றுவதற்கான எந்திரங்கள், மரம் அறுக்கும் மிஷின், ஜே.சி.பி. எந்திரங்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், தகர கொட்டகையில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள ‘கான்கிரீட்’ கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாய நல கூடங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்குமாறு முன் கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம்.

    கடலோர மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் வருவதற்கு முன்பே அனுப்பி வைத்தார். அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் கஜா புயலின் நகர்வை சிறப்பாக கணித்து எங்களுக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கியது. இந்த தகவல் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.


    இந்த தகவல்கள் மூலம் பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்க முடிந்தது. அதிகளவு உயிரிழப்பு ஏற்படாமல் மக்களை காப்பாற்றியது அரசின் சாதனையாகும்.

    இப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் புயலால் ஏற்பட்டதா? அல்லது சுவர் இடிந்து மின்சாரம் தாக்கிய காரணங்களால் ஏற்பட்டதா? என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளோம்.

    கடலில் புயல் மெதுவாக நகர்ந்து வந்த காரணத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் நாம் வெளியேற்றி விட்டோம். புயலால் சேதம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்ததால் எக்ஸ்பிரஸ் ரெயிலையும் ரத்து செய்தோம்.

    மின்கம்பங்கள் சாய்ந்தால் உடனே அதை சரிசெய்வதற்கு 15 ஆயிரம் மின் கம்பங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    கடந்த காலங்களில் புயலால் ஏற்பட்ட பாடங்களை முன்நிறுத்தி இந்த முறை அதிகளவு முன்எச்சரிக்கை எடுத்தோம். புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்ததால் போதிய கால இடைவெளியுடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிந்தது.

    புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கையிலும் இப்போது முழு வீச்சுடன் இறங்கி உள்ளோம். நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் விரைவில் வீடு திரும்புவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது.

    சேத விவரங்களை தனித் தனியாக கணக்கெடுத்து வருகிறோம். இடிந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் சாய்ந்து முறிந்த தென்னை மரங்கள், மாமரம், பலா, முந்திரி, புளிய மரங்கள், வாழை மற்றும் சேதமான நெற்பயிர்களையும் கணக்கெடுத்து வருகிறோம். பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும். மறுசீரமைப்பு பணிகள் வேகமாக நடக்கிறது.

    இனி எத்தனை புயல் வந்தாலும் அதனை எளிதாக எதிர்கொண்டு விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

    இவ்வாறு உதயகுமார் கூறினார். #TNMinister #Udhayakumar #Gajastorm

    வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகையில் மழை பெய்து வருகிறது. #gajacyclone #rain
    சென்னை:

    கஜா புயல் நாகையின் வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும் சிலநேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகையில் மழை பெய்து வருகிறது.

    திருவாரூரின் ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோன்று காரைக்காலில் கோட்டிச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இதனால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளன. நாகையில் குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #gajacyclone #rain 
    கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் மரக்காணத்தில் தயார் நிலையில் 1800 மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. #gajacyclone #gaja #rain

    மரக்காணம்:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கடல் அலையின் சீற்றம் இன்று அதிகமாக காணப்பட்டது. மேலும் மரக்காணம் பகுதியில் இன்று காலை முதல் லேசான மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து மரக்காணத்தை சுற்றியுள்ள எக்கியார்குப்பம், அனு மந்தை குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மழைகாலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பனிச்சமேடு, செட்டிக்குப்பம், வசந்த்குப்பம் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் 50 பேர் முகாமிட்டுள்ளனர்.


    கஜா புயல் கரையை கடக்கும்போது மரக்காணம் பகுதியில் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையொட்டி மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் 1800 மணல் மூட்டைகள் மற்றும் சிமெண்ட் மூட்டைகள், 5 டன் சவுக்கு கட்டைகள், ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், பேரிடர் மேலாண்மை திட்ட இயக்குனர் பழனிசாமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பனிச்சமேடு பகுதிக்கு சென்று அங்கு மேற் கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை பார்வையிட்டு பேரிடர் மீட்பு குழு வினருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

    இதில் தாசில்தார் தன லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி, பேரூராட்சி அலுவலர் ராஜீ மற்றும் மரக்காணம் இன்ஸ்பெக்டர் மைக்கெல் இருதயராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #gajacyclone #gaja #rain

    இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரி கூறியுள்ளார். #Rain

    சென்னை:

    சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழை கடந்த வாரமே முற்றிலும் வாபஸ் ஆன நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கிழக்கு திசை காற்று வீசத் தொடங்கினாலும் அது இன்னும் வலுப்பெறவில்லை. இதனால் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    கடந்த 24 மணிநேரத்தில் குமரி மாவட்டம் தக்கலை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மணமேல்குடி, மயிலாடி, வேதாரண்யம், கன்னியாகுமரியில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு மத்திய மற்றும் வட மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக ஒடிசா கடற்கரை பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #TNRains
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவைக்கான மழை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது:-

    வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    வரும் 20ம் தேதியுட்ன் தெற்மேற்கு பருவமழை முடிகிறது. அதே 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமாக சூழ்நிலை உருவாகும். தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NortheastMonsoon #TNRains
    ஒரே நேரத்தில் வங்க கடலிலும், அரபிக்கடலிலும் 2 காற்றழுத்த பகுதிகள் உருவாகுவதால் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    தென்மேற்கு வங்க கடலில் இலங்கை-தமிழகத்தையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதேபோல் கேரளாவையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு- மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது இன்று பிற்பகல் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி அடுத்த 36 மணிநேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறுகிறது. அது புயலாக தீவிரம் அடைந்து வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து ஓமன் நாட்டு கடற்கரையை அடையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் வருகிற 8-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. ஒரே நேரத்தில் வங்க கடலிலும், அரபிக்கடலிலும் 2 காற்றழுத்த பகுதிகள் உருவாகிறது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 7-ந்தேதி காலை 8.30 மணி முதல் 8-ந்தேதி காலை 8.30 மணி வரை மிகபலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை பெய்யும். 25 செ.மீ-க்கு மேல் கடும் மழைப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 8-ந்தேதி முதல் பலத்த மற்றும் மிக பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. #ChennaiRain
    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. #Rain #IMD
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. நேற்று இரவு ஒன்றிரண்டு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இன்று காலை கடுமையான வெயில் தாக்கம் இருந்து வருகிறது. அதேவேளையில் சில இடங்களில் வானம் மேக மூட்டமும் காணப்பட்டது.

    இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை செய்ய வாய்ப்பு உள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வானிமை மையம் தெரிவித்துள்ள செய்தியில், ‘‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் மழை பெய்யலாம்’’ என்று தெரிவித்துள்ளது.
    குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதன்பின்பு மழை ஓய்ந்திருந்த நிலையில் வங்க கடலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதற்கேற்ப குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலுக்கு மேல் பரவலாக சாரல் மழை பெய்தது.

    குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்கள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மழை கொட்டியது. இது மாவட்டத்தின் உள்புற பகுதிகளிலும் பெய்தது. அதிக பட்சமாக பாலமோரில் 6 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை- 23, பெருஞ்சாணி- 30.2, சிற்றார்- 13.2, திற்பரப்பு- 27.2, முள்ளங்கினாவிளை- 4, புத்தன் அணை- 31, நாகர்கோவில்- 6, பூதப்பாண்டி- 2.4, சுருளோடு- 15.2, கொட்டாரம்-11.6, மயிலாடி- 3.2, இரணியல்- 11, ஆனைகிடங்கு- 5.2, குளச்சல்- 4.6, கோழிப்போர் விளை- 11.

    குமரி மாவட்டம் முழுவதும் பெய்த  மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி  29.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 819 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 905 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 67.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 589 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 233 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
    ×