search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடிதம்"

    • துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவை பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • மணீஷ் சிசோடியா திகார் சிறையிலிருந்து தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல் மந்திரியாக இருந்தவர் மணீஷ் சிசோடியா.

    மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இந்நிலையில், திகார் சிறையிலிருந்து மணீஷ் சிசோடியா தனது சட்டசபைத் தொகுதியான பட்பர்கஞ்ச் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    விரைவில் வெளியில் சந்திக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பினர்.

    பல ஆண்டுகள் சிறையிலிருந்த மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் எனக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.

    சுதந்திரத்துக்காக மக்கள் போராடியது போன்று நல்ல கல்வி மற்றும் பள்ளிகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். சிறையில் இருக்கும்போது எனது தொகுதி மக்கள் மீதான அன்பு அதிகரித்துள்ளது. அவர்கள் தான் எனது பலம்.

    வளர்ந்த நாட்டுக்கு நல்ல கல்வி அவசியம். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கல்வி புரட்சி நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என எழுதியுள்ளார்.

    சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.
    • மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் பொறுப்புத் தொகையும் ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.

    டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.

    05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

     

    • சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
    • இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாகவும், ஒப்புதல் அளிக்கும் நடைமுறையை விரைவுபடுத்திட வேண்டுமென்று கோரியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன என்றும், இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு (MOHUA) பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் நிதிஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதற்குப் பிறகு, மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள், 21-11-2020 அன்று சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதாகத் தெரிவித்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான எதிர் நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரும், 17-8-2021 அன்று பொது முதலீட்டு வாரியத்தால் (PIB) பங்கு பகிர்வு மாதிரியின் கீழ் மத்திய துறை திட்டமாக பரிந்துரைக்கப்பட்ட நிலையிலும், ஒன்றிய அரசின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு ஆவலுடன் எதிர்பார்த்ததாக தனது கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், பிரதமர் அவர்களுடனான பல்வேறு சந்திப்புகளின்போது இது தொடர்பாக தான் வலியுறுத்தி வந்தபோதிலும், இதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டம் முடிக்கப்படுவதை உறுதி செய்திட ஏதுவாக, இரண்டாம் கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளதாகவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், ஒன்றிய அரசின் பங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருவதாகவும், இது பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, மாநில அரசுக்குக் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த முடியும் என்றும் தனது கடிதத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, முதல் கட்டப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றிச் செயல்படுத்தியதைப்போல, 50:50 என்ற சமபங்கு வீதத்தில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    சென்னை:

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாமலேயே உள்ளது.

    மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது என்று பலமுறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மத்திய நிதி மந்திரி இதற்கு அவ்வப்போது புள்ளி விவரங்களுடன் பதிலளித்து வருகிறார். இந்த சூழலில் வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கவில்லை என்று மீண்டும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் அவ்வப் போது பதில் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றியும் அதில் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசின் தொகை எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை தொகுப்பு அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடிதம் கவர்னரின் செயலாளர் வழியாக தலைமைச் செயலாளருக்கு கடந்த 8-ந் தேதி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

    இதன்படி விவரங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முழுமையான விவரங்கள் கிடைக்கும் போது மத்திய அரசு நிதி தமிழகத்தில் முழுமையாக செலவழிக்கப் பட்டுள்ளதா? அல்லது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதா? என்கிற விவரம் தெரியவரும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இதற்கு முன்பு பன்வாரிலால் புரோகித் கவர்னராக இருந்த போது கொரோனா காலத்தில் செலவழித்த தொகை பற்றி கணக்கு கேட்டதாகவும் எனவே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை பொறுப்பு கொண்ட ஆட்சி.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைபுபடுத்தினேன்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக மிக கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் அயறாது பணியாற்றிய தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறை, பொறுப்பு கொண்ட ஆட்சி திமுக. விமர்சனம் செய்வதற்கும், வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்கட்சிகள் முனைப்பு காட்டினாலும் மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. புயல் பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிட அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுப்படுத்தினேன். இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.

    பேரிடர்களில் இருந்து மீண்டோம். சேலம் இளைஞரணி மாநாட்டில் சந்திப்போம்.

    இவ்வாறு கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.
    • படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபிரபு (வயது 33). வேதியியல் முதுகலை பட்டதாரி. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசி ரியராக வேலைபார்த்து வந்தார். இதற்காக சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

    தனபிரபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வந்தார். பின்னர் அவர் திடீரென பணியில் இருந்து விலகினார். தொடர்ந்து வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு சிறப்பு வேதியியல் வகுப்புகள் நடத்தினார். இதற்காக அவர் வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.

    இந்நிலையில் தனபிரபு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே அவர் தற்கொலை செய்வது என முடிவெடுத்தார்.

    பின்னர் நைட்ரஜன் வாயு சிலிண்டரை திறந்து விட்டு, அதில் இருந்து வெளிப்பட்ட விஷவாயுவை வலுக்கட்டாயமாக முகர்ந்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அடுத்தநாள் காலையில் பேராசிரியர் தனபிரபு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.

    மேலும் வீட்டில் இருந்து விஷவாயுவின் வாசனை வெளிப்பட்டவண்ணம் இருந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பேராசிரியர் தனபிரபு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் வீட்டின் படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர். தனபிரபு எழுதிய அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பேராசிரியர் தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை. வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருந்தார். மேலும் அவர் ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து வந்து உள்ளார். இதில் அவருக்கு ஏதேனும் பெரியஅளவில் நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 100 நாள்வேலை திட்ட பயனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • தாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.

    விருதுநகர்

    100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை வழங்க நடவ டிக்கை எடுக்கவேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் பிரதம ருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முதல் ஊதியப்பட்டு வாடா செய்யப்படாதநிலையில் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடிதம் எழுதி உள்ளேன். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    100 நாள்வேலை திட்ட பணியாளர்களுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.87.3 கோடி ஊதிய நிலுவை உள்ளது. விருது நகர் நாடாளுமன்ற தொகுதி யில் ஒவ்வொரு பயனாளிக் கும் குறைந்த பட்சம் ரூ.17, 500 ஊதியம் வரவேண்டிய நிலை உள்ளது. இது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.

    ஏற்கனவே இதுகுறித்து மத்திய நிதி மந்திரிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் நான் எதிர்பார்த்த படி இந்த பிரச்சினையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் வாழ் வாதாரம் இழந்து தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.

    எனவே தாங்கள் உடனடி யாக இந்த பிரச்சினையில் தலையிட்டு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக பட்டுவாடா செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இதில் தாங்கள் உடனடி நட வடிக்கை எடுத்தால் அந்த கிராமப்புற ஏழை தொழிலா ளர்கள் பாதிக்கும் நிலை தவிர்க்கப்படும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
    • நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.

    நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

    • பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் ஒரு சதவீதம் அல்லது ரூ.36 கோடியை திருப்பதி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவது என தேவஸ்தானம் முடிவு செய்தது.

    பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்க பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதி ஒதுக்கீடுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கரிகால் வளவன் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 9 வந்தே பாரத் ரெயில்களை திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பயண நேரம் 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், விஜயவாடாவில் இருந்து சென்னைக்கும் என 2 புதிய ரெயில்கள் உள்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரெயில்களை காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்ததற்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் தற்போது 12 மணி நேரமாக இருந்து 8 மணி நேரத்திற்கும் குறைவாக உள்ளதால் தென் தமிழக மக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும் இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தென் தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எனவே வந்தே பாரத் விரைவு ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 34 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளிலும் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் மணல் குவாரி நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தொழில் அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினார்கள். ஆடிட்டர் சண்முகராஜ் என்பவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டது.

    மணல் குவாரிகளில் சி.சி.டி.வி. கேமிரா பதிவு காட்சிகள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மணல் குவாரிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் அளவு மற்றும் விற்பனை செய்யப்பட்ட அளவு ஆகியவற்றை பற்றியும் கணக்கிட்டனர்.

    குவாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் மணலில் போலி பதிவுகள் மூலம் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையை அமலாக்கத் துறையினர் மேற்கொண்டு இருந்தனர். போலி பதிவு மூலம் மணல் விற்பனை நடப்பதை சில ஆவணங்கள் மூலம் அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது.

    குவாரி மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சில ஆவணங்கள் பிணாமி பெயரில் இருப்பதையும் உறுதி செய்தனர்.

    இதையடுத்து மணல் விற்பனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அமலாக்கத்துறை சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடந்து வரும் ஆற்று மணல் விற்பனை மற்றும் மணல் சேமிப்பு ஒப்பந்த விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையால் மணல் விற்பனை விவகாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    ×