search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கடிதம் அனுப்பும் இயக்கம்
    X

    திருப்புல்லாணி தபால் அலுவலகத்தில் கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.

    கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கடிதம் அனுப்பும் இயக்கம்

    • கருவூலம் மூலம் ஊதியம் வழங்க கோரி கிராம ஊராட்சி செயலர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.
    • மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதற்கட்டமாக அரசுக்கு 1 லட்சம் கடிதங்கள் அனுப்பும் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 1 லட்சம் கடிதம் அனுப்பும் இயக்கம் தபால் அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் சங்க ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் சேகுஜலாலுதீன் முன்னிலை யில் நடந்தது.

    அனைத்துப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் கஜேந்திரன், செயலாளர் மங்களசாமி, ஊராட்சி செயலர்கள் வாணி, நாகராஜ், பாலகிருஷ்ணன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட துணைத்தலைவர் சேகு ஜலாலுதீன் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுநிலை. சிறப்புநிலை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒய்வு பெற்ற ஊராட்சி செயலருக்கு மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த பணிக்கொடை ரூ.2 லட்சம் மற்றும் மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும்.

    கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்குவதுடன், மாத ஊதியத்தை ஊராட்சி மூலம் நேரடியாக வழங்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி அவர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்கவும், ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலகம் நேரம் தாண்டி பணிகளை செய்ய நிர்ப்பந்தித்தல், இரவு நேரங்கள், விடுமுறை நாட்கள் அவசரப் பணி என்று சொல்லி காலநேரம் வழங்காமல் சாத்தியமற்ற பணிகளை உடனே செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் அளிப்பதையும், பணியில் நெருக்கடி நிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கடிதம் அனுப்பும் இயக்கம் நடந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×