search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்னா யானை"

    • சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது.
    • தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 65), இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் தோட்ட வேலையை பார்த்து விட்டு, வீட்டுக்கு செல்வார். அப்போது தேவையான உணவு பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் இரவு தோட்டத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு ராமு தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் இருந்து வந்த ஒற்றை மக்னா யானை ராமுவை பலமாக தாக்கியது. இதில் அவர் பக்கத்தில் உள்ள முள்வேலியில் சிக்கி பலத்த காயமடைந்தார். வேலிக்குள் விழுத்து கிடந்ததால், மக்னா யானை அப்படியே விட்டுவிட்டு சென்றது. உயிர் தப்பிய ராமுவை இன்று அக்கம் பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

    தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்குள்ள வனப்பகுதியில் தொடர்ந்து அதிர்வேட்டு வெடிக்கப்படுகிறது. இதனால் அங்குள்ள யானைகள் இடம்பெயர்ந்து தேனி விளை நிலங்களுக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் மக்னா யானை தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மீண்டும் மக்னா யானை தொழிலாளியை தாக்கியுள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.
    • யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட எக்கத்தூர் வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் வனக்காப்பாளர் அர்த்த நாரீஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க மக்னா யானை இறந்து கிடப்பதை கண்டு பிடித்தனர்.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பெயரில் கடம்பூர் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) மாரியப்பன், வன குழு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற் கூறு ஆய்வு மேற்கொண்டார்.

    இதன் முடிவில் தான் யானை எவ்வாறு இறந்தது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • யானையானது வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.
    • சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து கோவை டாப்சிலிப்பில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

    ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றி திரிந்தது. கோவை மாநகர பகுதிகளிலும் அந்த யானையானது சுற்றியது. பின்னர் அந்த யானையை பிடித்து வனத்துறையினர் மீண்டும் வனத்தில் விட்டனர்.

    இருப்பினும் அந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தில் முகாமிட்டிருந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.

    கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிவதால் அந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து யானையை கண்காணிக்க வனத்துறையினர் தனிக்குழுவும் அமைத்தனர்.

    மேலும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதனை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    அதன்மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மக்னா யானையை உடனே பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஆனைமலை வனச்சரகர் புகழேந்தி, டாப்சிலிப் வனசரகர் சுந்தர வடிவேல் தலைமையில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் இறங்கியது.

    யானை சுற்றி வரக்கூடிய சரளபதி கிராமத்தில் முகாமிட்ட இந்த குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மக்னா யானை சரளபதி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்ததும் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அப்போது விவசாய நிலங்களில் யானை சுற்றி திரிந்து கொண்டிருந்தது. உடனே கால்நடை டாக்டர்கள் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சில மணி நேரம் அங்கும், மிங்கும் சுற்றிய யானை பின்னர் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஏற்றுவதற்காக லாரியை வரவழைத்தனர். தொடர்ந்து கும்கி யானை சின்னதம்பி உதவியுடன், வனத்துறையினர் மக்னா யானையை லாரிக்குள் ஏற்றினர். பின்னர் பிடிபட்ட மக்னா யானையை வனத்துறையினர் வால்பாறை வனசரகத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

    கடந்த 4 மாதங்களாக சரளபதி பகுதியில் மக்னா யானை சுற்றி வந்ததால் அந்த பகுதி மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டு இருந்தனர். பயிர்களையும் சேதப்படுத்தி வந்ததால் விவசாயமும் பாதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது மக்னா யானை பிடிக்கப்பட்டதும் சரளபதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் சுற்றிய யானை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று தற்போது வனத்துறையினர் பிடித்துள்ளனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் அதன் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.
    • வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சரளப்பதி கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக இரவு நேரத்தில் மக்னா யானை சுற்றி திரிகிறது.

    இந்த யானை அங்குள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது. தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் இந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் தனிக்குழு அமைத்தும், கும்கி யானைகளை நிறுத்தியும் மக்னா யானையை ஊருக்குள் வரவிடாமல் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், அடங்கிய குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை. இதையடுத்து சரளப்பதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வனத்துறையினர், பிரச்சினையின் தீவிரத்தை மேல் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் யானையை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கோழிக முத்தி யானைகள் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் துணையுடன் கடந்த சில நாட்களாக மக்னா யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே நேற்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வன பாதுகாவலர் செல்வம், சேத்துமடை கிராம நிர்வாக அலுவலர் முருகன் உள்ளிட்டோர் சரளப்பதியில் ஆய்வு மேற்கொள்ள வந்தனர். அப்போது கிராம மக்கள் அவர்களை முற்றுகையிட்டு யானையை விரைந்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் பயிருக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மக்னா யானையால் நாங்கள் கடந்த 4 மாதங்களாக நிம்மதி இழந்து தவிக்கிறோம்.

    வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் முடியவில்லை. எனவே மக்னா யானையை பிடித்து முகாம் யானையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளோம். இன்னும் 2 நாட்களில் மக்னா யானையை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தங்களிடம் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.

    வனத்துறையினர் கூறும் போது, மக்னா யானையை பிடிக்க தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து அதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்பதால் யானையின் உடல்நிலை குறித்து வனகால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன்பின்னர் யானையை பிடிப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றனர்.

    • வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது.
    • ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை அருகே விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை சரளப்பதி அருகே கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், அங்குள்ள மக்களை தாக்கவும் முற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். ஆனால் வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.

    தற்போது யானையை பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கிகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளப்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், முரட்டுத்தனமான மக்னா யானைகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் கும்கி யானையான சின்னத்தம்பியும் களமிறக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிப்ரவரி மாதம் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்தது.
    • சின்னதம்பி, சுயம்பு என்ற 2கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    பொள்ளாச்சி,

    தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து கோவையை நோக்கிச் சென்றது.

    இங்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடப்பட்டது. ரேடியோ காலர் கருவி பழுதாகி விட்டதால் யானையின் நகர்வை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    இந்நிலையில், மக்னா யானை சரளபதி கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானைகளான சின்னதம்பி, சுயம்பு ஆகிய இரு யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    யானையின் நடமாட்டம் உள்ள பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மக்னாவை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.
    • பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி அருகே உள்ள கிராமங்களில், மக்னா என்ற காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வனத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் வனத்தில் விடப்பட்டது.

    அங்கு விடப்பட்ட சில நாட்களிலேயே மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை நகருக்குள் வந்தது.

    வனத்துறையினர், மீண்டும் அந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் பகுதியில் விட்டனர்.

    இதற்கிடையே அந்த மக்னா யானை, சுமார் ஒரு வாரத்துக்கு இடம் பெயர்ந்து சுமார் 36 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள டாப்சிலிப் வனத்திற்குள் புகுந்தது.

    அந்த யானை, டாப்சிலிப் வனத்தையொட்டிய பொள்ளாச்சி வனச்சரகத்திற்குள் வந்து, அங்குள்ள கிராமத்திற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக அறிந்த வனத்துறையினர், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, சுமார் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மூலம் கண்காணித்தனர்.

    இந்நிலையில், மக்னா யானை பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட எல்லையில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல், வனச்சரகர் புகழேந்தி தலைமையில், சுமார் 60க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சரளபதி பகுதியில் தனித்தனி குழுவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட துவங்கினர்.

    இதற்கிடையே, வனத்திலிருந்து யானை வெளியேறி அங்குள்ள கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க, கோழிக்கமுகத்தி முகாமிலிருந்து சின்னதம்பி, முத்து, ராஜவர்த்தனா ஆகிய 3 கும்கி யானைகள் சரளபதி பகுதிக்கு நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டது.

    இந்த கும்கிகள் மூலம், மக்னா யானை கிராமத்திற்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வால்பாறையில் இருந்து டாப்சிலிப் வழியாக பொள்ளாச்சி வன பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை கழுத்தில் ஏற்கனவே, ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

    ஆனால், அந்த ரேடியோ காலர் பழுதானதால் யானை எங்கெங்கு செல்கிறது என கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆங்காங்கே அமைக்கப்பட்ட வனத்துறை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணியை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சரள பகுதி அருகே உள்ள ஒரு மாந்தோப்பில் மக்னா யானை புகுந்ததாக வந்த தகவலின் பேரில், வனத்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என ஆவேசமடைந்த மக்னா யானை, வனத்துறையினர் வந்த ஜீப்பை தாக்கி சேதப்படுத்தியது. இதில் டிரைவர் மணிகண்டன், வனவர் மெய்யப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    • யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை வனச்ச ரகத்திற்குட்பட்ட பகு தியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக அடிக்கடி நடமாடி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்து றையினருக்கு தகவல் அளித்த நிலையில் வனத்துறை யினர் வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது. தெரியவந்தது.இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய் பட்டுள்ளது. பின்னர் யானையை வனத்து றையினர் அடர்ந்த வனப்ப குதிக்கு விரட்டி யடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.

    அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை. யானை வாயில் உணவு போட்டால் அது முழுவதுமாக வாயிவலியாகவே வெளியேறுகிறது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ளவில்லை. இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை காளால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால் அனைவரும் ஓடி சென்று தப்பினர். தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது.
    • வனப்பகுதிக்கு சென்ற பிறகே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

    குனியமுத்தூர்:

    தர்மபுரியில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த மக்னா யானையை கடந்த 6-ந் தேதி பிடித்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.

    2 நாட்களுக்கு முன்பு மக்னா யானை வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்தது.

    அதன்பின்னர் வனத்திற்குள் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. கடந்த 21-ந் தேதி வெளியே வந்த யானை, செம்மனாம்பதி, கோவிந்தனூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு பகுதிக்கு வந்ததது.

    பின்னர் அங்கிருந்து நேற்று மதுக்கரை வனப்பகுதியில் நடந்து வந்தது. அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளியை லேசாக உரசி விட்டு, அது தன் போக்கில் நடந்தவாறே சென்றது.

    தொடர்ந்து அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை ஒரு வீட்டில் டிரம்மில் வைத்திருந்த தண்ணீரை பார்த்ததும் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்து, அதனை குடித்து, தன் உடலிலும் பீய்ச்சி அடித்து கொண்டது.

    பின்னர் அங்கிருந்து பிள்ளையார்புரம் நோக்கி சென்ற யானை அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தனது நடைபயணத்தை மீண்டும் தொடங்கியது.

    விடிய விடிய மக்னா யானை நடந்து கொண்டே இருந்தது. வனத்துறையினரும் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பாதுகாப்பாக யானைக்கு முன்னும், பின்னும் ஜீப்பில் சென்றனர்.

    இன்று காலை மக்னா யானையானது குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக மாநகர் பகுதியான செல்வபுரத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்து தெலுங்குபாளையம் நோக்கி நடந்த யானை செல்லும் வழியில் இருந்த தனியார் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளியது.

    இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் யாரையும் யானை அருகே யாரையும் நெருங்க விடாமல் பாதுகாப்பாக நின்று கொண்டனர்.

    யானை யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் நொய்யல் ஆற்றுப்பாதை வழியாக பேரூரை நோக்கி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் நின்றது.

    அங்கிருந்து நடந்து யானை நேராக, மருதமலை வனப்பகுதியை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக பின்னால் செல்கின்றனர். அவர்கள் ஒலி பெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடியே செல்கிறார்கள். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள். யானையை புகைப்படம் எடுக்க வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

    இருப்பினும் சிலர் தங்கள் வீடுகளில் இருந்தபடியும், சாலைகளில் வெகுதூரம் நின்றபடியும் யானையை தங்கள் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

    அந்த காட்சிகளை தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை கிராமங்களுக்குள் சுற்றி திரிந்த யானை இன்று காலை முதல் நகர பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினரும் தொடர்ந்து யானையை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

    டாப்சிலிப்பில் இருந்து இன்று வரை மக்னா யானை 50 கிராமங்களை கடந்து 200 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. யானை எங்கேயும் ஓய்வே எடுக்காமல் நடந்தபடியே உள்ளது.

    கடந்த 2 நாட்களாக யானை ஊருக்குள் சுற்றி திரிந்தாலும் இதுவரை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. யானை நடந்து செல்லும் வழியில் உள்ள சுவர்களை மட்டுமே இடித்துள்ளது. மற்றபடி யாருக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை.

    ஊருக்குள் சுற்றுவதால் யானையை வனத்தை நோக்கி மட்டுமே விரட்டி வருகிறோம். மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி செய்தால் யானை மிரண்டு விடும். இதனால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    இதுவரை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை.

    வனப்பகுதிக்கு சென்ற பிறகே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். தொடர்ந்து நாங்கள் யானையை கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.
    • யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஈச்சம்பள்ளத்தில் மக்னா யானை விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

    யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கும்கி யானைகள் உதவியுடன் மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

    பின்னர் யானை பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு வனத்தில் விடப்பட்டது. 2 குழுவினர் இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    வனத்தில் விடப்பட்ட மக்னா யானையானது ஒரே இடத்தில் நிற்காமல் தொடர்ந்து சுற்றி திரிந்தது.

    இந்நிலையில் மக்னா யானை நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறி சேத்துமடை பகுதிக்கு வந்தது. தொடர்ந்து மாரப்ப கவுண்டன்புதூர், செம்மேடு, திம்பங்குத்து தப்பட்டை கிளவன்புதூர், ராம நாதபுரம், ராமபட்டினம், தேவம்பாடிவலசு உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

    ஊருக்குள் யானை வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இருப்பினும் வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து வந்ததால் சற்று நிம்மதி அடைந்தனர். மக்னா யானை நேராக கோவிந்தபுரம் கிராமத்தை நோக்கி வந்தது. அப்போது அங்கு யானையை பார்க்க மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். அவர்கள் யானையை புகைப்படம் எடுத்தனர்.

    திடீரென யானை மக்களை நோக்கி சென்றது. இதனை பார்த்ததும் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை யாரையும் ஒன்றும் செய்யாமல் நடந்து சென்றது. பின்னர் யானை அங்கிருந்து பயணமாகியது.

    கோவிந்தாபுரத்தை தாண்டியதும் வரும் வழியில் இருந்த தடுப்பணையை கண்டதும் யானைக்கு உற்சாகம் ஏற்பட்டது.

    உடனே அங்கு ஓடிய யானை தடுப்பணைக்குள் இறங்கி தண்ணீரை குடித்தது.

    களத்தூர் பகுதிக்கு வந்த யானை அங்குள்ள புதருக்குள் சென்று சிறிது நேரம் படுத்து உறங்கியது. பின்னர் மீண்டும் எழுந்து கே.கே.புதூர், பொள்ளாச்சி, ஆத்து பொள்ளாச்சி, புரவி பாளையம் பகுதியை நோக்கி நடந்து வந்தது.

    யானை சில தூரங்கள் வனத்தின் வழியாகவும், சில தூரங்கள் சாலைகள் வழியாகவும் நடந்து வந்தது.

    இதன் காரணமாக யானையை பின் தொடர்ந்து 75 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் கண்காணித்து கொண்டே வந்தனர். அவர்களுக்கு உதவியாக ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 50 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் சாலை வழியாக வந்த போது மக்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டு பாதுகாப்பாக இருக்கும்படி கூறினர்.

    பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை நடக்க தொடங்கிய மக்னா யானை பல கிராமங்களை கடந்து 40 கி.மீ தூரம் பயணித்து இன்று காலை கோவை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்துள்ளது.

    தற்போது யானை போடிபாளையம் பகுதியில் நிற்கிறது. தொடர்ந்து யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் யானையின் நட மாட்டத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

    • கும்கி யானை உதவியுடன் பொதுமக்களை மிரட்டிய யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
    • யானை மிரண்டு பொதுமக்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானை ஒன்று அந்த பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. பொதுமக்கள் புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை கொண்டு பாலக்கோடு கொண்டு செல்லப்பட்டது. கும்கி யானை உதவியுடன் பொதுமக்களை மிரட்டிய யானையை வனத்துறையினர் பிடித்தனர்.

    பின்னர் அந்த யானை பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. அந்த மக்னா யானை, கடந்த சில தினங்களாக வனப்பகுதியிலேயே சுற்றித்திரிந்தது. அதனை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை 5 மணிக்கு திடீரென யானை வனப்பகுதியை விட்டு வெளியேறியது. சேத்துமடை வழியாக வந்த யானை நல்லூத்துக்குழி, காக்காபுதூர் வழியாக சென்றது. அந்த யானை கிராமப்பகுதியிலேயே சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் 4 குழுவாக பிரிந்து மக்னா யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கிராமங்களை யானை கடந்து செல்வதை பொதுமக்கள் அவ்வப்போது பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். யானை மிரண்டு பொதுமக்களை தாக்கும் முன்பு அதனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×