search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
    • சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது.

    12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.

    ஐதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தர் தனது குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

    அவரது வாயில் கடினமான பொருள் சிக்கியது. பின்னர் வாயில் சிக்கிய பொருளை எடுத்துப் பார்த்தார். அப்போது எலும்பு துண்டு இருந்தது.

    புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்தார். கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது.
    • அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில்


    கடந்த ஆறு வருடங்களாக மூலஸ்தான அமையவிருக்கும் இடத்தில் வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது, தற்போது விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழவை ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால் விசேஷ மஹா ஹோமங்கள் செய்வித்து ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா நடைபெற்றது.


    வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, விசேஷ மஹா பூர்ணாஹுதிக்கு பின் மூலஸ்தான, விக்ரஹதிற்க்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.


    விழாவில் முக்கியஸ்தர்களும், பல்வேறு இடங்களில் உள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்கள் கலந்துகொண்டு, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

    • ரஷிய நாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
    • கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற காளகஸ்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிறந்த ராகு-கேது ஸ்தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் ரஷியநாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று காலையில் அங்கு நடந்த ராகு-கேது பூஜையில் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.


    இக்கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்டது. அப்போது பயபக்தியுடன் அவர்கள் வழிபாடு செய்தனர்.

    பூஜையின் போது ரஷிய பக்தர்கள் பூக்கள், பழங்கள், தீப விளக்குகள் வைத்து வழிபாடு செய்த நிகழ்ச்சியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.

    மேலும் இந்த பூஜையில் பங்கேற்ற ரஷிய பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
    • கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    பவானி:

    பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.

    அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.


    தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.

    இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×