

மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.