search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai"

    • 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
    • பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று தொடங்கியது. 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை அதிகாலை நடைபெற்றது. பின்னர், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 50 ரூபாய் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.

    ராஜகோபுரம் வழியாக தரிசனம் செய்ய பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர். தரிசனம் முடிந்ததும், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்கள், தரிசனம் செய்ததாக கோவில் தரப்பில் கூறப்படுகிறது.

    ராஜகோபுரத்தில் இருந்து தேரடி வீதி வழியாக பூத நாராயண கோவில் வரை வெயில் தாக்கத்தில் இருந்து பக்தர்களை பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டது.

    மேலும், பூத நாராயண கோவிலில் இருந்து பெரிய தெரு வரை தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டிருந்தது. பெரிய தெருவில் இருந்து சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். 4 தரிசன மேடைகள் வழியாக அனுமதிக்கப்பட்டு, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்தனர்.

    மேலும் கர்ப்பிணிகள், முதியோர், கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வரிசையில் காத்திருக்காமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், பிஸ்கட், நீர்மோர், குடிநீர், வாழைப்பழம் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன. கோவில் வெளி பகுதியில் காத்திருந்த பக்தர்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

    கடந்த 2 நாட்களில் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கானோர் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வலம் வந்தனர். இதனால் திருவண்ணாமலை நகரமே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. சிறப்பு பஸ் ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
    • சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தலாம், வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவட்ட வாரியாக கருத்து கேட்டு வந்தனர்.

    கடந்த மாதம் 28-ந் தேதி முதல் இந்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தினார்கள்.

    அப்போது மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கூறும்போது யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற வைக்க வேண்டும். கோஷ்டி பிரச்சினைகளை தேர்தலுக்கு பிறகு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், நகர கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க அழைக்கப்படவில்லை. அவர்களிடம் தனியாக கருத்து கேட்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.

    அதன்படி இப்போது வருகிற 14-ந் தேதியும், 15-ந் தேதியும் தி.மு.க. இளைஞரணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெறும் என்று இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பங்கேற்கும் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தாங்கள் பராமரித்து வரும் மினிட் புத்தகம், கழகப்பணிகள் குறித்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    14-ந் தேதி மாலை சென்னை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். இதே போல் மண்டலம் 2-ல் இடம் பெற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அன்றைய தினம் பார்த்து பேசுகிறார்.

    15-ந் தேதி காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்டங்கள் வேலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். மண்டலம் 4-ல் உள்ள மாவட்ட அமைப்பாளர்கள் 15-ந் தேதி பங்கேற்க உள்ளனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து பேசுவதுடன் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

    எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .


    மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவன்-மனைவிக்குள் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை.
    • ஆரம்பம் முதல் மறுவூடல் வரை பார்ப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

    குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் கணவன்-மனைவிக்குள் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள். இதனை 'திருவூடல் விழா' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள். தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது.

    முனிவர் சிவபெருமானை தவிர வேறு பிருங்கி என்ற யாரையும் வழிபட மாட்டார். சிவபெருமானின் மனைவி பார்வதிதேவியை கூட அவர் வழிபடுவதில்லை. ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாய மலைக்கு சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். உடனே வண்டு உருவம் கொண்ட முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

    இதனைப் பார்த்த பார்வதி தேவிக்கு கோபம் உண்டானது. உடனடியாக அவர் பிருங்கி முனிவரிடம், "என்னை வழிபடாத உனக்கு, தண்டனை உண்டு. உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தியை எனக்கே திருப்பி கொடுத்து விடு" என்றார். பிருங்கி முனிவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. உடனடியாக சக்தியை கொடுத்து கொடுத்து விட்டார்.

    அதனால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை. கீழே விழப்போன அவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார். இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. பார்வதி தேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.

    பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை, சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார். பக்தனுக்காக பார்ப்பதா? இல்லையென்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா? என்று யோசித்தார்.

    இருவருமே வேண்டும் என்று தீர்மானித்த அவர் அன்று இரவு தனியாக இருக்கிறார். மறுநாள் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்து விட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார். இதனால் அவர்களது ஊடல் நிறைவுபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

    அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள். அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்மன் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்மன் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார்.

    இதைத்தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலை யார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும்.

    ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் இந்த கிரிவலமும் ஒன்றாகும். அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள், கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார்.

    அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் கோபம் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுவூடல் வரை பார்ப்பவர்களுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும்.

    குறிப்பாக கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும் என்பார்கள். அதனால்தான் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை' என்ற சொல் உருவானது. கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இது போன்ற சிறப்பான திருவிழா தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடப்பது இல்லை.

    திருவண்ணாமலையில் மட்டுமே இது நடக்கிறது. எனவே பொங்கலுக்கு மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கி திருவூடலை கண்டு பலன் பெறுங்கள்.

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து

    வேங்கிக்கால்:

    அதிகாலை முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் என்பதால், கடந்த 3 நாட்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    அதன்படி, அதிகாலை கோவிலில் நடை திறக்கும்போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது.

    நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    அதேபோல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததால் திருவண்ணாமலை நகருக்குள் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மார்கழி பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை சென்னையில் இருந்து வேலூர் கண்டோன் மென்ட் ரெயில் நிலையம் வரும் ரெயில் அங்கிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்திற்கு காலை 5.35 மணிக்கு சென்றடைகின்றது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப் பட்டு செல்கிறது.

    அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகின்றது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணா மலைக்கு இரவு 10.45 மணிக்கு வந்தடையும்.

    பின்னர் அந்த ரெயில் திரு வண்ணாமலையில் இருந்து 27-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 6.07 மணி முதல் புதன்கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.07 மணிக்கு தொடங்கி புதன் கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ் மில் ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த ரைஸ் மில்லில் உள்ள வளாகத்தில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாராவது உள்ளே நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர்.

    இங்குள்ள பூனை, நாயுடன் ஒன்றாக சேர்ந்து கொஞ்சி விளையாடி வருகிறது.

    அந்த நாயும் பாசத்துடன் பூனைக்கு பால் கொடுக்கிறது.

    இதனால் பூனை பால் குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சுற்றி திரிகிறது. சில நாய்கள் தன்னுடைய குட்டிகளுக்கு பால் கொடுக்க மறுக்கிறது. ஆனால் இங்குள்ள நாய் பூனைக்கு பால் கொடுப்பதை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×