search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளாம்பாக்கம்"

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்
    • இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

    புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி. நகார்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 605 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும். 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது
    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், " தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளும் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது

    இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    • 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டை.
    • மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், வரும் பிப்.1ம் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 30.12.2023 அன்று புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்பட உள்ளது.

    இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை (மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை) மற்றும் 50% மாணவர் சலுகை பயண அட்டை (ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும்.

    எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.
    • பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.

    இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன. இதில் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நடைமேடை எண் 1:-கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார் தாண்டம்.

    நடைமேடை எண் 2:-உடன்குடி, கருங்கல், குட்டம், கன்னியாகுமரி, குலசேரகம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

    நடைமேடை எண் 3:-ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன், ஒப்பிலன்.

    நடைமேடை எண் 4:-கம்பம், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, பட்டுக்கோட்டை, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, மன்னார்குடி.

    நடைமேடை எண் 5:-அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி, கும்பகோணம்.

    நடைமேடை எண் 6:- ஈரோடு, ஊட்டி, எர்ணாகுளம், கரூர், குருவாயூர், கோவை, சேலம், திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம்.

    நடைமேடை எண் 7:-செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி.

    நடைமேடை எண் 8:-அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், விழுப்புரம், ஜெயங்கொண்டம்.

    நடைமேடை எண் 9:-கடலூர், காட்டுமன்னார் கோல், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, புதுச்சேரி, வடலூர், விருத்தாசலம்.

    • மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
    • நாளை முதல் இடைநிறுத்தமில்லா பாய்ண்ட் டூ பாய்ண்ட் பேருந்துகள் இயக்கம்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகள் 30.12.2023 முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இப்பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளோடு, கூடுதலாக மாநகரப் போக்குவரத்துக் கழகமானது தடம் எண். எம்18-ல் 6 பேருந்துகளை இடைநிறுத்தமில்லா பேருந்துகளாக (பாய்ண்ட் டூ பாய்ண்ட்) 10 நிமிட இடைவெளியில் 25.01.2024 அன்று முதல் அதிகாலை 03 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து இயக்க உள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் அறிவிப்பு.
    • ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.

    சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயங்க கூடாது என அரசு அறிவித்துள்ளது. நேற்றிரவு திடீரென அறிவிப்பு வழங்கி 30ம் தேதிக்குள் காலி செய்யுமாறு கூறினர். தைப்பூசம் உள்ளிட்ட விடுமுறை நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது.

    2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், எப்படி இடத்தை மாற்ற முடியும்.

    தற்போது திடீரென பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என்றால் என்ன செய்வது ?

    அறிவிப்பு செய்த இரு நாட்களுக்குள் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவது இயலாத காரியம்.

    மேலும், அரசு முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கிளாம்பாக்கத்தில் 144 பேருந்துகளை நிறுத்த தான் இடம் உள்ளது. 1400 ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லை.

    நீதிமன்ற ஆணைகளை மதிக்காமல் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு தொடர்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் சங்க நிர்வாகிகள் பங்கேற்க தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திட வேண்டும்.
    • வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயங்க அனுமதி.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    மேலும் இதுகுறித்து போக்குவரத்து துறை கூறியிருப்பதாவது:-

    கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும்.

    இந்த உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி மட்டுமல்லாமல் கிரிமினல் சட்ட நடவடிக்கை பாயும்.

    மேலும், ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திட வேண்டும்.

    பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் தேனையின்றி சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆபரேட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்.

    ஈசிஆர், வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக, சித்தூர், ரெட்ஹில்ஸ் உள்பட வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில் இருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறியுள்ளது.

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×