search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "omni bus"

    • கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

    தமிழக பதிவெண்ணாக மாற்றினால் மட்டுமே 547 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசம் வழங்க ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே, ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.
    • சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்.

    சென்னை:

    போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மோட்டாா் வாகன சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) ஆம்னி பஸ்களுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு (ஏ.ஐ.டி.பி.) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பஸ்கள் போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன.

    இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏ.ஐ.டி.பி. வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

    அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும் சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன துறை மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச்சீட்டு பெற்ற ஆம்னி பஸ்களை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டி.என். என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன.

    எனவே வருகிற 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே முறையற்ற வகையில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது.

    இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பஸ் உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று முறையாக சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் அதற்குரிய சான்றுகளை வாகன தணிக்கையின் போது காண்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
    • நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் உள்ளன.

    இந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் பண்டிகை நாட்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    அதிக விலைக்கு கட்டணத்தை உயர்த்தும் பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும், அந்த அறிவிப்புகளை எல்லாம் எந்தப் பஸ் நிறுவனமும் பொருட்படுத்துவது இல்லை.

    பண்டிகை நாட்கள் மட்டுமின்றி தொடர் விடுமுறை நாட்களாக இருந்தாலும், வார இறுதி நாட்களிலும் இது போன்ற கட்டண உயர்வு தொடர் கதையாகவே இருக்கிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

    வழக்கமாக சென்னை பெருநகரத்தில் இருந்து பள்ளி தொடர் விடுமுறை, பண்டிகை காலகட்டங்களின் போது நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி தனியார் பஸ்கள் அதிக கட்டணத்தை வசூல் செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட்டுள்ளனர்.

    பொதுவாக பயணிகளின் முதல் பயணத் தேர்வாக இருப்பது ரெயில் பயணம் தான். ஆனால் அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யாவிட்டால் இடம் கிடைக்காது என்பதால் இறுதி கட்டத்தில் பயணம் செய்பவர்கள் அரசு பஸ்களை நாடுகின்றனர். அதிலும் இடம் கிடைக்காதவர்கள் கடைசி பயணமாக தனியார் ஆம்னி பஸ்களை பயன்படுத்துகின்றனர்.

    இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு தனியார் பஸ் நிறுவனத்தினர் டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

    நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று சென்னை, கோவை நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட கடுமையாக உயர்ந்துள்ளது.

    சாதாரண நாட்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் சாதாரண இருக்கைகளுக்கு ரூ.600 முதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரத்தில் படுக்கை வசதிக்கு ரூ.900 முதல் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏ.சி.படுக்கை வசதிக்கு பஸ்களின் தரத்திற்கு ஏற்ப ரூ.1,200 முதல் 1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

    இந்நிலையில் இன்றும், நாளையும் நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் ரூ.935 முதல் ரூ.3500 வரை என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏ.சி. அல்லாத சில பஸ்களில் இருக்கை கட்டணம் ரூ.900-ல் இருந்து தொடங்குகிறது. மேலும் நேரங்களுக்கு தகுந்தவாறு ஏ.சி. அல்லாத பஸ்களில் சென்னைக்கு செல்ல கட்டணமாக ரூ.1000 என வசூலிக்கப்படுகிறது. இதேபோல ஏ.சி. வசதியுடன் கூடிய பஸ்களில் இருக்கை கட்டணமாக ரூ.1,150,ரூ.1,400, ரூ.1,580 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏ.சி. சிலீப்பர் சீட்டுக்கு ரூ.1,800 முதல் ரூ.2,000, ரூ.2,100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை இதே பஸ்களில் சென்னை செல்வ தற்கு கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது நாளை சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் குறைந்த பட்ச இருக்கை கட்டணமே ரூ.1,100 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில பஸ்களில் ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,300, ரூ.1400, ரூ.1500 என கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    மேலும் ஏ.சி. சிலீப்பர் இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200, ரூ.2,300 ரூ.2,400, ரூ.2500, ரூ.2,800, ரூ.3,000, ரூ.3,400 வரை கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.

    இதேபோல நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவட்டார் பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களிலும் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரண இருக்கைகளுக்கு ரூ.1000-த்தில் இருந்து தொடங்கி ரூ.1250, ரூ.1300, ரூ.1500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    அதேநேரத்தில் ஏ.சி.இருக்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் முதலும், ஏ.சி. படுக்கை வசதிகளுக்கு ரூ.2500 முதல் ரூ.3500 வரை என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல நெல்லையில் இருந்து கோவைக்கு செல்வதற்கு ஏ.சி.அல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.850, ரூ.1000 என உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம் ஏ.சி.சிலீப்பர் சீட்டுகளுக்கு ரூ.1,139 முதல் ரூ.1200, ரூ.1341, ரூ.1500 என கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சாதாரணமான நாட்களில் நெல்லையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்வதற்கு குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் ரூ. 650-ம், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்சில் ரூ.900 முதல் ரூ. 1,200 என்ற நிலையில் டிக்கெட்டுகள் வசூல் செய்யப்படும். ஆனால் இன்று குளிர்சாதன வசதி இல்லாத பஸ்களில் கட்டணம் ரூ.350 வரை உயர்ந்து ஒரு டிக்கெட் ரூ. 1000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை உயர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களின் கட்டணமும் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.

    • பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து விபத்து.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சிக்கி 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.

    அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர்.
    • தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வெளியூர்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் கடந்த சில நாட்களாக சொந்த ஊர்களுக்கு வந்தனர். பினனர் தேர்தல் முடிந்ததால் அவர்கள் நேற்று மீண்டும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு புறப்பட்டனர். இதையொட்டி பஸ் , ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. மேலும் சிலர் தனியார் பஸ்களில் சென்னை, பெங்களூரு, கோவை உள்பட பல முக்கிய நகரங்களுக்கு புறப்பட்டனர். அப்போது தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக தனியார் வாகனங்களை கண்காணித்தனர். மேலும் சேலம் புதிய பஸ்நிலையம், ஓமலூர், வாழப்பாடி, நத்தக்கரை, சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயித்ததை விட அதிக கட்டணம், கூடுதல் நபர்களை ஏற்றி சென்றது உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக கூறி 40 ஆம்னி பஸ்களின் உரிமையாளர்களுக்கு ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
    • ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    போரூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தேர்தலின் போது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை வருவதாலும் அதன்பின்னர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்கள் மற்றும் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்த நிலையில் சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 7 ஆயிரம் சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ரூ.1,200 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் தாறுமாறாக உயர்ந்து உள்ளது.

    திருநெல்வேலிக்கு ஏ.சி. வசதி உள்ள பஸ்களில் ரூ.2500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் உள்ளது. இதேபோல் கோவை, மதுரைக்கு ரூ. 2 ஆயிரம், திருச்சிக்கு ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    ரெயில்களில் டிக்கெட் கிடைக்காத நிலையில் கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பெரும்பாலானவர்கள் விரைவான சொகுசு பயணம் என்பதால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    நாளை(வியாழக்கிழமை) சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு 1500 ஆம்னி பஸ்கள் வரை இயக்கப்பட உள்ளது.

    இதில் 75 சதவீத டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவு மூலம் விற்று தீர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே ஆம்னி பஸ் கட்டண உயர்வு குறித்து ஒருவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் சமூக வலைதள பக்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 7,154 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்கட்டண உயர்வு குறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • விபத்தில் சிக்கிய, 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    தென்காசியில் இருந்து கோவை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தற்காலிக பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இந்த கோர விபத்தில், இருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை.
    • இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 'தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்து, அப்போது ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பாலாஜி சீனிவாசன், 'போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக இத்திட்டம் அமைந்துள்ளது. காலி ஆம்னி பஸ்களை மாநகரத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கும் அதே வேளையில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கவில்லை. பயணிகளுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன' என வாதிட்டார்.

    இதற்கு நீதிபதிகள் 'பயணிகள் யாரும் தங்கள் சங்கடங்கள் குறித்து வழக்கு தாக்கல் செய்யவில்லையே, அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகதான் தோன்றுகிறது' என தெரிவித்தனர்.

    மேலும் இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது
    • பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது என போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், " தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளும் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது

    இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    • சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை.
    • கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    ஆனால், தாங்கள் கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்துகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க கூடாது என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கோயம்பேட்டிற்கு வந்த ஆம்னி பேருந்து பயணிகளை, மாநகர பேருந்துகளில் இலவசமாக கிளாம்பாக்கத்திற்கு போலீசார் ஏற்றி அனுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையே, கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் காலியாகவே கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். 

    மேலும், சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய நபரை, போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். அதில், " கடந்த மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

    முன்னதாக, பொங்கல் கழித்து கிளாம்பாக்கத்திற்கு மாறி விடுவோம் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் என்றும் இதற்கு பின்னால் உள்ள அரசியல் என்னவென்றும் தெரியவில்லை.

    கடந்த 22ம் தேதி நோட்டீஸ் அளித்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    கிளாம்பாக்கத்திற்கு மாறுவது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக பேசப்பட்டு வந்தது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆம்னி பேருந்துகள் நிறுத்த மோதுமான வசதிகள் கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

    நாளை முதல் தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிற்குள் வர அனுமதி இல்லை.

    தென் மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அரசுக்கு இல்லை. அரசு எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×