ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர்.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
Published on

கோவை

கோவை மாவட்டத்தில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகளும் கோவையில் தங்கி படித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல ரெயில் நிர்வாகம சிறப்பு ரெயில்களையும் அறிவித்து இயக்கியது.

வெளியூர்களுக்கு செல்ல வேண்டியவர்கள் நேற்று மாலை பஸ் நிலையங்களிலும், ரெயில் நிலையங்களிலும் திரண்டதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கோவை சிங்கா நல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி போன்ற தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இங்கு தான் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் பஸ் நிலையமே திணறியது.

இதேபோல சூலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி மார்க்கமாக இயக்கப்பட்ட பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அங்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொரு பஸ்கள் வந்தபோதும் பயணிகள் முண்டியடித்து ஏறினர்.

இதுபற்றி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெளியூர் செல்லும் பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து 300 போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வழிப்பறி திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்களின் வீடுகளில் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதமாக போலீசார் ரோந்து பணி செலல உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் மக்களிடம் ஆம்னி பஸ்கள் கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் புகார் தரும் பட்சத்தில் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com