search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது- ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்
    X

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது- ஆகஸ்டு மாதத்துக்குள் முடிக்க திட்டம்

    • ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும்.

    சென்னை:

    சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தினமும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக பஸ் நிலையத்துடன் மின்சார ரெயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிளாம்பாக்கத்தில் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

    இது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலைய கட்டுமான பணிகளை வருகிற ஆகஸ்டு மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்.

    ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த ரெயில் நிலையம் புறநகர் மின்சார ரெயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகளுடன் அமைய உள்ளது. 12 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில்கள் நிற்கும் வகையில் நடைமேடை இருக்கும். கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே இருப்பதால் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்கள் நிற்கும் வகையில் நீண்ட நடைமேடை அமைக்கவேண்டிய அவசியமில்லை. இந்த ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தி முடிவு செய்யப்படும்.

    மின் தூக்கி, நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம், ரெயில் நிலைய கட்டிடம், நடைமேடையின் மேற்கூரைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்க 450 மீட்டர் நீளத்துக்கு ஆகாய நடை பாலமும் அமைக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×