search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுக்கோட்டை"

    • டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
    • கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது.
    • அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது.

    தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.

    தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
    • மாவட்ட கண்காணிபாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் வீட்டிற்கு அருகில் உள்ள 4 வீடுகளின் பூட்டையும் உடைத்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளன. அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவரின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்கின்றனர்.

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்வதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய ஒரு தனிப்படையும், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும், இலுப்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தனிப்படை போலீசார், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட அணி சாம்பியன்
    • இந்தப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். மாநில தொழில் நுட்பக் குழுத் தலைவர் டி.என்.செழியன் வரவேற்று பேசினார்.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா, புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோசப் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள் வருகிற ஜூலை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    • தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களை புதுக்கோட்டை மாவட்டம் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • திருமயம் வட்ட மருத்துவமனை 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவிப்பு

    புதுக்கோட்டை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை! தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றி.

    இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

    இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாணவ தொழில் முனைவு விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தொழில்நெறி பயிற்சி கையேட்டினை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவர்களிடையே சுய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து படிப்பு முடித்தவுடன், சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

    மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சிகள், கருத்தரங்குகள், ஆலோசனைகள், நிகழ்வுகள், ஆராய்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் படித்து முடித்தவுடன் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து தங்களது பகுதிகளிலேயே தொழில் தொடங்க வேண்டும். இவ்வாறு தொழில் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர முன்வர வேண்டும். மேலும் சுய தொழில் மட்டுமல்லாமல் தங்களது குடும்பம் சார்ந்த தொழில்களையும் மேற்கொள்ளலாம்.

    தமிழக அரசு சுய தொழில் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவினர்களுக்கு மானிய விலையில் கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த முகாமில் கலந்து கொண்டு உள்ள மாணவ, மாணவிகள் முகாமின் மூலம் சுய தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை அறிந்து படித்து முடித்தவுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்கி பலருக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் ஓய்வுபெற்ற தமிழக அரசு கூடுதல் செயலாளர் டேனியல் பிரேம்நாத், மன்னர் கல்லூரி முதல்வர் சுகந்தி, தொழில் மைய மாவட்ட மேலாளர் இளங்கோவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜசேகர், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை அருகே அரசு பஸ்- பைக் மோதியதில் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி பத்மா (45). இவர்கள் இருவரும் கறம்பக்குடியில் இன்று காலை நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் சென்றனர். சுப்பிரமணியன் மொபட்டை ஓட்ட, பத்மா பின்னால் அமர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் கறம்பக்குடி அருகே சடையன்தெரு பகுதியில் செல்லும் போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சும், மொபட்டும் நேருக்கு நேர் மோதின. இதில் சுப்பிரமணியன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பத்மா காயமடைந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு கறம்பக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பத்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகை சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சுப்பிரமணியன்-பத்மா தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் தாய்-தந்தையின் உடல்களை பார்த்து கதறி அழுதது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  

    ×