search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகப்பெருமான்"

    • ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது.
    • உற்சவங்களில் ஆடிக் கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது.

    உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடி கொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழனி, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழா மிகவும் விசேஷமானது. முக்கியத்துவம் வாய்ந்தது.

    கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

    இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 9-ந் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பதவி உயர்வு தானாக வரும்.

    ஆடி கிருத்திகை விரதத்தை நாரதர் 12 ஆண்டுகள் மேற்கொண்டார். இதனால் அவருக்கு முனிவர்களில் முதன்மையான முனிவர் என்ற பதவி உயர்வு கிடைத்தது.

    இந்த நாட்களில் காலையில் நீராடி வழிபட வேண்டும். அப்போது கந்த சஷ்டி கவசம் மற்றும் சண்முக கவசம் பாடுவது நல்லது. முருகனுக்கு அன்று பாலாபிஷேகம் செய்வது கூடுதல் நன்மை தரும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த தீப் பொறிகள். சரவணப் பொய்கையில் 6 குழந்தைகளாக மாற அந்த குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சூரபத்மனை அழித்து தேவர்களையும் மக்களையும் காக்க அவதரித்த ஆறு முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் வகையில் கிருத்திகை விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா என விமரிசையாக நடக்கிறது.

    காவடிப் பிரியனான கந்தனுக்கு அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, செடில் காவடி, சேவல்காவடி, தீர்த்தக்காவடி என பல்வேறு விதமாக காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தியும் ஆனந்த பரவசம் அடைகின்றனர்.

    கோயில்களிலும், வீடுகளிலும் பொங்கலிட்டு அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து கந்த புராணம் பாராயணம் செய்து வணங்குகின்றனர். கந்த சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற பக்தி பாமாலைகள் பக்தி சிரத்தையுடன் பாடிவிரதத்தை முடிக்கின்றனர்.

    அறுபடை வீடுகளில் திருத்தணியில் இவ்விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைகளில் சிறந்த மலையாக திருத்தணிகை மலையை கந்த புராணம் போற்றி புகழ்கிறது. திருத்தணி முருகனை இருந்த இடத்தில் இருந்தே மானசீகமாக வழிபட்டாலும் திருத்தணி என்ற பெயரை சொன்னாலும் நம் தீவினைகள் நீங்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

    முருகப்பெருமான் இத்தலத்தில் ஞானசக்தியாகிய வேலைத் தாங்கி நிற்கிறார். முருகனின் பதினாறு வகையான திருவுருவங்களில் இங்கு ஞானசக்திதரர் என்னும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குருதிசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை தினத்தில் கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லைகள் தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

    • முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.
    • ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    'சட்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் இது அப்படி அல்ல! 'சஷ்டியில் இருந்தால் தான், அகப்பையில் வரும்' என்பது தான் சரியான உச்சரிப்பு ஆகும்.

    அதாவது சஷ்டி திதியில் விரதம் இருப்பவர்களுக்கு கருப்பை நிறையும், குழந்தை பேறு உண்டாகும் என்பது நியதி! இப்படி குழந்தை பாக்கியத்தையும், சொந்த வீடு அமையும் யோகத்தையும் கொடுக்கும் முருகப் பெருமானுக்கு 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

    அறுபடை வீடு கொண்ட முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் ஆறுமுகனின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    முருகனுக்கு செய்யப்படும் எந்த ஒரு விஷயத்தையும் ஆறாக செய்வது, நம் வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வதற்கு ஒரு வழிமுறையாகும்.

    கார்த்திகை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய மகா சஷ்டி விரத நாளில் 6 நாட்கள் தொடர்ந்து விரதத்தை கடைபிடிப்பது வழக்கம்.

    இந்நாட்களில் முருகனின் மந்திரங்களை உச்சரித்து, முருகனை நினைத்து உண்ணாமல் நோன்பு இருந்து குழந்தைக்காக பெண்கள் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

    சஷ்டி நாட்களில் மட்டும் அல்லாமல், பொதுவாக செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு விரதமிருந்து முருகனுடைய திருவிளையாடல்களை படித்து, திருப்புகழ் பாடி, கவசம் பாராயணம் செய்பவர்களுக்கு, முறையாக விரதம் இருப்பவர்களுக்கு அள்ள அள்ள குறையாத செல்வங்களை வாரி வழங்குகிறார்.

    குறிப்பாக குழந்தைப் பேறு உண்டாக வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் முருகன் படத்தை வைத்து அவருக்கு ஆறு விதமான நைவேத்தியங்கள் படைத்து, 6 புதிய அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, மனதார முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் வேண்டிய வரம் வேண்டியபடி கிடைக்கும்.

    சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை உடையவர்களுக்கு செவ்வாய் பகவானுடைய அருள் தேவை. செவ்வாய் காரகத்துவம் பெற்ற வீடு பேறு அமைய, அவருடைய அதிபதியாக விளங்கும் முருகனை வழிபட வேண்டும்.

    முருகப்பெருமானுக்கு ஆறு விளக்குகள் செவ்வாய் தோறும் ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு விரைவிலேயே சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

    சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும், முருகனுடைய படம் நிச்சயம் இருக்கும். அந்த படத்திற்கு தம்பதியராக சேர்ந்து மாலை இட்டு, புதிய 6 அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி, முருகன் மந்திரங்களை உச்சரித்து ஒன்றாக பூஜை செய்தால் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து, மன ஒற்றுமை நிச்சயம் ஏற்படும்.

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், ஒரு முறை செய்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியப்படும் விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு சஷ்டி திதிகளில் முருகனை இவ்வாறு வழிபட்டு வர, எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும். அது மட்டுமல்லாமல் அடிக்கடி முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருபவர்களுக்கும், எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.

    கலியுகத்தில் காக்கும் கடவுளாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் இந்த முருகனுக்கு பழனி என்றால் விருப்பம் தான்! அறுபடை வீடுகளில் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலை இன்றும் விஞ்ஞானிகள் வியக்கும் ஒரு அதிசயம் தான். எனவே வாரந்தோறும் முருகப் பெருமானுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபட்டு வாருங்கள், அனைத்தையும் அடையுங்கள்.

    • சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார்.
    • 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் என்ற ஊரில் வேளாளர் குடியில் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், சண்முக சிகாமணி - சிவகாமசுந்தரி தம்பதியர். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முருகப்பெருமானை பூஜித்து வந்தனர்.

    இதையடுத்து முருகன் அருளால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அகமகிழ்ந்த அந்த தம்பதியர், தங்களின் பிள்ளைக்கு 'குமர குருபரன்' என்று பெயர் சூட்டினர்.

    அந்த தம்பதியின் மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு பேச்சுவரவில்லை என்ற கவலை அவர்களை வாட்டியது. இதனால் அவர்கள் மீண்டும் முருகனின் பாதத்தையே தஞ்சமடைந்தனர்.

    திருச்செந்தூர் திருத்தலம் சென்று விரதம் இருந்தனர். 44 நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தனர். 44-வது நாளில் முருகப்பெருமானே, அர்ச்சகர் வடிவில் வந்து குழந்தையின் நாக்கில் சடாட்ஷரம் (சரவணபவ) எழுதி, "நாளை காலை விஸ்வரூப தரிசனத்தில் என்னை வந்து தரிசனம் செய்" என உத்தரவிட்டார்.

    சிறு பிள்ளையான குமரகுருபரன், மறுநாள் காலை தன் தாய் தந்தையரை எழுப்பி "விஸ்வரூப தரிசனத்திற்கு செல்லலாம்.. அப்பா, அம்மா வாருங்கள், வாருங்கள்" என்றான். தங்கள் பிள்ளை பேசுவதைக் கண்டு, தாயும் தந்தையும் அகமகிழ்ந்து போயினர்.

    குமரகுருபரர், முருகன் அருளால் பல அற்புதங்களை செய்து, பின் காசி யாத்திரை சென்றார். அங்கு விஸ்வநாதரை தரிசித்தார். 'காசியில் ஒரு மடம் கட்ட வேண்டும்' என எண்ணினார். அதற்கான இடத்தை முகலாய மன்னர்களிடம் இருந்து பெற வேண்டி டெல்லி சென்றார்.

    இந்துஸ்தானிய மொழி தெரியாததால் அவர்களிடம் எப்படி பேசுவது, எப்படி அனுமதி வாங்குவது என்று யோசித்தார். பின்னர் சரஸ்வதி தேவியை நோக்கி 'சகலகலாவல்லி மாலை' என்னும் பாடலை பாடி துதி செய்தார். இதனால் இந்துஸ்தானிய மொழி பேசும் ஆற்றலையும் பெற்றார். டெல்லி பாதுஷாவிடம் நேரம் ஒதுக்க இந்துஸ்தானி மொழியில் அனுமதியும் கேட்டார். பாதுஷாவும் அவருக்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்.

    ஆனால் குமரகுருபரர் அரண்மனைக்கு வந்துசேர பல்லக்கோ, வாகனமோ அனுப்பவில்லை. குமரகுருபரர் மீண்டும் முருகனை தியானிக்க, சிங்கம் ஒன்று கம்பீரத்துடன் வந்து சேர்ந்தது. அதையே வாகனம் ஆக்கி அதன் மேல் அமர்ந்து பாதுஷாவின் அரண்மனை நோக்கிச்சென்றார்.

    குமரகுருபரரின் மகிமை அறிந்த சுல்தான், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்க, 'காசியில் கேதாரி காட் பகுதியில் ஒரு இடம் வேண்டும்' என்று கேட்டார், குமரகுருபரர். அதன்படியே சுல்தான் வழங்கிய இடத்தில் ஒரு மடத்தை நிறுவினார்.

    அதன் அருகில் புதைந்து கிடந்த ஒரு பழமையான சிவலிங்கத்தை மீட்டு கேதாரீஸ்வரர் என்ற கோவிலை அமைத்தார். இவர் 'கந்தர் கலிவெண்பா', 'மீனாட்சி பிள்ளைத்தமிழ்', 'மதுரை கலம் பகம்', 'நீதி நெறி விளக்கம்' போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.
    • விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார்.

    வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பவுர்ணமி அன்று முருகப்பெருமான் அவதாரம் செய்தார். 'முருகன்' என்றாலே 'அழகன்' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக, அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவைப்பட்டது.

    தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அதில் இருந்து ஆறு நெருப்புப் பொறிகள் வெளிப்பட்டது. அது மூன்று உலகத்தையும் தகித்தது. அதை ஒருவராலும் நெருங்க முடியவில்லை.

    அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த ஆறு நெருப்புப் பொறிகளையும் தன் கையில் ஏந்தினார். அக்னி பகவானின் கையைக் கூட அந்த நெருப்புப் பொறிகள் தகிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வெப்பமாய் இருந்த அந்த நெருப்புப் பொறிகளை அக்னி பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு வந்து சேர்த்து குளிர்வித்தார்.

    அந்த ஆறு நெருப்புப் பொறிகளும், ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் அல்லவா? அதற்காக ஆறு கார்த்திகை பெண்கள், சரவணன் பொய்கையில் தோன்றிய அந்த குழந்தைகளை கையில் எடுத்தனர். ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது.

    ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால் என்று அற்புதமான ஒளி பொருந்திய தோற்றத்துடன் முருகப்பெருமான் காட்சி அளித்தார்.

    முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத் திருநாளை உலகமே கொண்டாடியது. ஆறு முகத்துடன் காட்சி அளித்ததால் அவருக்கு 'ஆறுமுகன்' என்று திருப்பெயர் உண்டானது. வைகாசி விசாகம் அன்று பிறந்ததால் 'விசாகன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது.

    முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். குழந்தை பேறு உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். சகல தோஷமும் விலகும்.

    வைகாசி விசாக தினத்தில் விரதம் இருப்பது மிகுந்த புண்ணிய பலன்களை தரும். அன்றைய தினம் அதிகாலையில் குளித்துவிட்டு, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத்தோடு குரு பகவானையும் மனதில் நினைத்து தியானித்து விரதத்தைத் தொடங்கலாம்.

    வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்யலாம். வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து வேல் விருத்தம், சண்முக கவசம், கந்தகுரு கவசம், கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லி முருகனை வணங்க வேண்டும்.

    வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்து வரலாம். அன்றைய தினம் முழுமையான உணவருந்தாமல் இருப்பது நல்ல பலனைத் தரும்.

    முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள், வேகவைத்த உணவுகளை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். திணை மாவு, தேன், பழங்கள் போன்வற்றையும் சாப்பிடலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    • அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    சென்னிமலை:

    நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    நவராத்திரியின் 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக மாலை 4.30 மணிக்கு அசுரனை வதம் செய்வ தற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

    அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.

    சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர்.

    அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.

    அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்து மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டார்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா நாளை (27-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் புட்டுத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், புட்டுத்திருவிழா ஆகிய 2 திருவிழாக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி நாளை நடைபெற உள்ள புட்டுத்திரு விழாவில் பாண்டிய மன்ன னாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இன்று காலையில் மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக சுப்பிர மணியசுவாமி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை பல்லக்கில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண்களில் எழுந்தருளி மதுரைக்கு செல்வர்.

    புட்டுத்திருவிழாவில் பங்கேற்கும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 31-ந்தேதி வரை மதுரை ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 31-ந்தேதி மாலை பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மீண்டும் திருப்பரங்குன்றத்தை வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
    • காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள் :

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அவ்வையை சுட்ட பழம் :

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை :

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம் :

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம் :

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    ×