search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகப்பெருமான்"

    • அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    சென்னிமலை:

    நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    நவராத்திரியின் 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக மாலை 4.30 மணிக்கு அசுரனை வதம் செய்வ தற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

    அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.

    சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர்.

    அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.

    அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்து மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    • மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான் புறப்பட்டார்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் முக்கிய விழாவான புட்டு திருவிழா நாளை (27-ந்தேதி) நடைபெற உள்ளது.

    மதுரையில் நடைபெறும் திருவிழாக்களில் புட்டுத்திருவிழாவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணம், புட்டுத்திருவிழா ஆகிய 2 திருவிழாக்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமி, தெய்வானையுடன் மதுரைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி நாளை நடைபெற உள்ள புட்டுத்திரு விழாவில் பாண்டிய மன்ன னாக பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இன்று காலையில் மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக சுப்பிர மணியசுவாமி, தெய்வா னைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி-தெய்வானை பல்லக்கில் புறப்பட்டனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண்களில் எழுந்தருளி மதுரைக்கு செல்வர்.

    புட்டுத்திருவிழாவில் பங்கேற்கும் சுப்பிரமணிய சுவாமி வருகிற 31-ந்தேதி வரை மதுரை ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 31-ந்தேதி மாலை பூப்பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மீண்டும் திருப்பரங்குன்றத்தை வந்தடைவார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது.
    • காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை" என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை" என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

    கோவில் அமைவிடம் :

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள் :

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அவ்வையை சுட்ட பழம் :

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை :

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம் :

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம் :

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    ×