என் மலர்tooltip icon

    வழிபாடு

    குறைகள் தீர குமரனை வழிபடுவோம்
    X

    குறைகள் தீர குமரனை வழிபடுவோம்

    • ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.
    • ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது.

    கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக் குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 பேறும் நமக்கு வந்து சேரும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு வகையான பிரச்சனைகளை அழிக்க வல்லவன். பன்னிரெண்டு கரங்களைப் பெற்றிருப்பதால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்ற வள்ளல்.

    முருகனை 'கந்தா' என்றும், 'கடம்பா' என்றும், 'கார்த்திகேயா' என்றும், சரவணா, சண்முகா, வேலாயுதா, வெற்றிவேலா, சிவபாலா, வள்ளி மணாளா, மயில்வாகனா என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அந்த ஆறு முகப்பெருமான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளிலும் குடிகொண்டிருக்கிறார்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்தத் தீப்பொறிகள் கங்கையில் பறந்தபோது கங்கையே வற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் தவழ விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.

    கந்தப்பெருமான் கங்கையில் தோன்றியதால் அவருக்கு 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று. வாய்ப்பு இருப்பவர்கள் படைவீடு அனைத்திற்கும் ஒரு முறைசென்று வந்தால் பயமின்றி வாழலாம். பணவரவும் கூடும். முதலில் திருப்பரங்குன்றம். இது தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு, நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம்.

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடமான, திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறு பாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்ட முருகப்பெருமான், சேவலை தனது கொடியாக்கிக் கொண்டார்.

    மூன்றாவது படைவீடாக உள்ளது பழநி. ஞானப் பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச் சுற்றினார். ஆனால் முன்னதாகவே 'அன்னையும், பிதாவும் தான் அகிலம்' என்று சொல்லி, சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து பழத்தை வாங்கிக் கொண்டார், ஆனைமுகன். எனவே கோபத்தோடு முருகப்பெருமான் மலையேறி நின்ற இடம்தான் பழநி. பழத்தை வேண்டி பறந்துவந்த இடம் 'பழநி'யாயிற்று என்பர்.

    நான்காம் படைவீடுசுவாமி மலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் சொன்ன இடம். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள், அதற்கு கீழும் தான் இருக்கவேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் பிரணவத்தின் பொருளை உபதேசிப்பது போல் இந்த ஆலயத்தில் சிற்பங்கள் உள்ளன. இதனால் முருகனுக்கு 'சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது. 'சினம் இருந்தால் பணம் வராது' என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவர்கள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆறாவது படைவீடு பழமுதிர் சோலை. அவ்வைப் பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம். 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று தமிழ்ப் புலமை பெற்ற அவ்வையிடம் முருகப்பெருமான் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புவர்கள் இங்கு சென்றுவந்தால் வெற்றியை வேகமாகப் பெறமுடியும்.

    Next Story
    ×