search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
    • 21-ந்தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை பெருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதன் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அடுத்த மாதம் 20ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் (21ந்தேதி) தேரோட்டம் நடக்கிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை), மறுநாள் (20-ந்தேதி) மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார். 21-ந்தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் சுந்தர்ராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மறுநாள் 22-ந்தேதி மதுரை மூன்றுமாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள்.

    மறுநாள் (23-ந்தேதி) காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.

    24-ந்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    மறுநாள் (26-ந்தேதி) அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27-ந்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.

    • மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் சித்தேரி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ரத உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது.

    மார்ச் 9ஆம் தேதி தொடங்கிய விழா வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெறுகிறது இந்நிலையில் இன்று பங்குனி ஐந்தாம் நாள் ரத உற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட பூங்காவனத்தம்மன் தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இந்நிகழ்வை காண போளூர், கேளூர், துறிஞ்சிகுப்பம், சந்தவாசல், தேப்பனந்தல் அணைப்பேட்டை விளக்கனந்தல், கஸ்தம்பாடி, சமத்துவபுரம், கட்டிப்பூண்டி, ஆத்துவம்பாடி பால்வார்த்து வென்றான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



    • அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.
    • சிவபெருமான், `கல்யாண சுந்தரரா’க காட்சியளித்தார்.

    மீன ராசியில் சூரியன் இருக்கும் பொழுது, உத்திரம் நட்சத்திரம் வரும் வேளையில் `பங்குனி உத்திரம்' கொண்டாடப்படுகிறது. இதனை `பங்குனி உத்திரம் விரதம்' என்றும் சொல்வார்கள். அன்னை பார்வதி தேவி பரம சிவனை மணந்து கொண்ட அருமையான நாள்.

    ராமபிரான், சீதா தேவியை மணந்த தினம், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது என்று பல வகையான சிறப்புகள் வாய்ந்தது இந்த நாள். அன்றைய தினம் தெய்வீக திருமணங்களை நடத்துவதற்கு பொருள் உதவி செய்வது, அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை, மிக மிக விசேஷமானதாகும்.

    ராமாயண கல்யாணம்

    அயோத்தி வந்த விஸ்வாமித்திரர், தசரத மகாராஜாவிடம், `வனத்தில் முனிவர்களை யாகம் செய்ய விடாமல் தடுக்கும் தீய சக்திகளை அழிக்க, ராம- லட்சுமணரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும்' என்று கேட்கிறார். தசரதரின் ஒப்புதலின் பேரில் ராமனும், லட்சுமணனும் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றனர். அங்கு யாகத்திற்கு இடையூறாக இருந்த தாடகை என்னும் அரக்கியை அழித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில், அகலிகையின் சாபம் ராமனால் நீங்கியது.

    பின்னர் அவர்கள் ஜனகர் ஆட்சி செய்து வந்த மிதிலாபுரி நோக்கி சென்றனர். நிலத்தை உழுத போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்து கிடைத்த ஜனருக்கு கிடைத்த குழந்தைதான், சீதாதேவி. வளர்ந்து நின்ற சீதா தேவியை, 'தன்னிடம் இருக்கும் சிவ தனுசை வளைத்து நாண் ஏற்றும் ஆண் மகனுக்கே திருமணம் செய்து கொடுப்பேன்' என்று ஜனகர் அறிவித்திருந்தார்.

    அதன்படி மிதிலாபுரி வந்த ராம பிரான், சிவ தனுசை தன் புஜபலத்தால் வளைத்தது மட்டுமல்ல, அந்த வில்லை உடைக்கவும் செய்தார். அப்போது ஜனகர், அங்கிருந்த தன்னுடைய புரோகிதரான சதாநந்தரை நோக்கி, "இவர்களுக்கு விவாகம் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்" என்றார்.

    மேலும் "என் மற்றொரு மகள் ஊர்மிளையை லட்சுமணனுக்கும், என் சகோதரர் குசத்வஜருடைய குமாரிகளாகிய இருவரில் சுருதா கீர்த்தியை சத்ருக்ணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இன்று மகம் நட்சத்திரம். அடுத்த மூன்றாவது நாள் உத்திரம் நட்சத்திரம். அன்றைய தினம் இந்த நான்கு திருமணங்களும் நடைபெற வேண்டும்" என்று கூறினார். அப்படி அந்த நால்வரின் திருமணம் நடைபெற்ற தினமே `பங்குனி உத்திரம்' ஆகும்.

    சாஸ்திரங்களில் 8 விவாகங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அவை பிராம்மம், தைவ்வம், ஆர்ஷம், பிராஜாபத்தியம், ஆசுரம், காந்தர்வம், ராட்சஸம், பைசாசம் ஆகியவை ஆகும்.

    இந்த விஷயத்தை இப்போது மிக கவனத்துடன் பார்க்க வேண்டும். எட்டு விவாகங்களில் தற்போது, கன்னிகா தானம் மற்றும் காந்தருவம் (காதல் திருமணம்) மட்டும்தான் வழக்கத்தில் உள்ளது. இதிலும் எந்த இடத்திலும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நட்சத்திர பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த மகரிஷியும் கூறவில்லை.

    தற்போது கலியுகத்தில் நாம் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது கூட, பொதுவாக ருது ஆகாத பெண்களுக்கு மட்டும்தான் நட்சத்திர தோஷங்களும் (ஆயில்யம், மூலம்) ஆண், பெண் நட்சத்திரப் பொருத்தமும் பார்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ராசி நிச்சயம், லக்ன நிச்சயம், பெரியோர் நிச்சயம், குரு நிச்சயம், தெய்வ நிச்சயம் என்று ஐந்தையும் வரிசையாக கவனிக்க வேண்டும்.

    லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோரின் திருமண விஷயத்தில், குரு நிச்சயம் தான் செயல்பட்டது. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், சதானந்தர் ஆகியோர் தசரதர் மற்றும் ஜனக மன்னர்களுக்கு ஆலோசனை சொல்லி, அதன்படி பரதன், சத்ருக்ணன், லட்சுமணன் ஆகியோரின் திருமணங்கள் முடிந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இருபெரும் முனிவர்கள் சொன்னதை ஜனகரும், தசரத மகாராஜாவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் 'குரு நிச்சயம்' என சொல்லப்படுவது.

     சிவன்- பார்வதி திருமணம்

    முருகப்பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய காரணத்தால், பார்வதி மானுடப் பெண்ணாக பிறக்கிறார். கடும் தவத்தின் பயனாக சிவபெருமானை மணாளனாக அடைகிறார். திருமண நாளின் போது, சிவபெருமான் தன்னுடைய உடல் முழுவதும் விபூதி (சாம்பல்) தரித்து, யானைத் தோலில் ஆடை அணிந்து வருகை தந்தார்.

    அப்போது பார்வதி தேவியின் விருப்பத்திற்கு இணங்க, சிவபெருமான் அலங்காரம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதையடுத்து பார்வதி தேவி தன் கையால் சிவபெருமானுக்கு திலகம் விட்டு, வண்ண வண்ண நிறங்களை உடலில் பூசி சிவனை அலங்கரித்தார். சிவபெருமான், `கல்யாண சுந்தரரா'க காட்சியளித்தார். இன்றும் கூட வட தேசங்களில் ஹோலி பண்டிகையின் போது, வண்ண நிறங்களை மற்றவரின் மீது பூசும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

     முருகப்பெருமான் கல்யாணம்

    முருகப்பெருமான் தேவர்களின் வேண்டுகோள்படி, சூரபத்மனை வதம் செய்தார். முருகப்பெருமானின் அரிய செயலுக்காகவும், தேவர்களின் துயரை அவர் துடைத்தெரிந்த காரணத்தாலும், தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி எனப்படும் பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை போன்ற இடங்களில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

     ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார், துளசி வனத்தில் ஒரு பெண் குழந்தையை கண்டெடுத்தார். அந்த பிள்ளைக்கு `கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவளே பின்னாளில் `ஆண்டாள்' என்றானார். ஆண்டாளுக்கு பங்குனி உத்திரம் அன்றுதான் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் பெருமாள் கோவில்களில், ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதைக் காணலாம்.

    கடுமையான தவத்தில் இருந்த சிவபெருமானை நோக்கி, காம பாணம் செலுத்தி அவரது தியானத்தைக் கலைத்தான் மன்மதன். இதனால் அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார், சிவபெருமான். பின்னர் ரதி தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மன்மதனை உயிப்பித்துக் கொடுத்தார். அந்த நாளும் பங்குனி உத்திர திருநாள்தான். இது தவிர பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் பிறந்ததும், ஐயப்பன் அவதரித்ததும் இந்த நன்னாளில்தான்.

    இந்த நாளில் புண்ணிய நதிகளில் அல்லது குளங்களில் நீராடி, ஆலயங்களில் நடைபெறும் தெய்வீக திருக்கல்யாணங்களை காண்பது மிக மிக விசேஷம். பலர் விரதம் இருந்து பழனி, சுவாமிமலை போன்ற தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்திராணி இந்த விரதத்தை கடைப்பிடித்து இந்திரனை திருமணம் செய்து கொண்டாள் என்கிறது புராணம். சரஸ்வதியும் இந்த வரத்தை கடைப்பிடித்துதான், பிரம்மாவை மணம் புரிந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

    இந்த பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து தெய்வீக திருக்கல்யாணத்தை காண்பவர்கள் (ஆண், பெண்) அனைவருக்கும், இதுநாள் வரை திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். மேலும் இந்த நாளில் இறைவனின் திருக்கல்யாண வைபவத்தை காண்பவர்கள், திருமணம் ஆகி பிரிந்து இருந்தால் அவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்பு உண்டாகும்.

    • ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.
    • புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது.

    இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்திற்கு தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு. சிறப்புமிக்க அந்த நாட்களை நாம் கொஞ்சமும் வீணாக்கி விடக்கூடாது என்பது தான் இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.

    இந்த மாதத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் இப்படி: "ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ முடைய)து என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் திருகுர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. ஆகவே, உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.

    ஆனால், (அக்காலத்தில் உங்களில்) யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப்போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகின்றானே தவிர சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

    மேலும், தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள் மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்து வதற்காகவும் (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்". (திருக்குர்ஆன் 2:185)

    இந்த மாதம் சாதாரணமான மாதம் அல்ல. அது புனிதமான குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்று கூறுகிறது. அது இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேத புத்தகம். குர்ஆன் என்பது ஓதிப்பார்ப்பதற்கு மட்டும் அல்ல, அது ஓதப்பட்டு அதில் உள்ளபடி அமல் செய்ய வேண்டும் என்பது தான் அதன் குறிக்கோள் ஆகும்.

    அதே போன்று தான் இந்தப் புனித ரமலான் மாதத்தின் முப்பது நோன்புகளும் முறையாக நோற்கப்பட்டு குறையின்றி பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும். ரமலான் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் பல வழிகளில் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

    நோன்பிற்கு அதிகமான சிறப்பும், மகத்தான பன்மடங்கு கூலியும் உண்டு, நோன்பை மதித்து, கண்ணியப்படுத்தும் விதத்தில் அல்லாஹ் அதனை தனக்குரியது என கூறியுள்ளான். நபிகள் நாயகம் அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் நபிமொழி வழியாக கூறினார்கள்.

    `ஆதமுடைய மகனின் செயல்கள் அனைத்திற்கும் நன்மை பன்மடங்காக வழங்கப்படும். ஒரு நன்மை பத்தாக, அதிலிருந்து எழுநூறாகக்கூட பெருகும். ஆனால் நோன்பைத் தவிர, ஏனெனில் அது எனக்குரியது, அதற்கு நானே கூலி வழங்குவேன், ஏனெனில் அவனது ஆசை மற்றும் உணவை எனக்காகவே அவன் விட்டிருக்கின்றான்'.

    'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன; ஒன்று அவன் நோன்பு திறக்கும் போது, மற்றது தனது இறைவனை அவன் சந்திக்கும் போது'. இப்படியெல்லாம் பல்வேறு சிறப்புகள் ரமலான் நோன்புக்கு உண்டு. அவற்றின் சிறப்புகளை நாம் தான் புரிந்து கொண்டு சரிவர செயல்பட வேண்டும்.

    நோன்பைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது: 'நீங்கள் நோன்பை முழுமையாக நிறைவேற்றுங்கள்' என்று கூறுகின்றான். நோன்பு என்பது சும்மா பசித்திருப்பதல்ல, அது ஒரு இறைவணக்கம். எனவே அதை நாம் மிக கவனமுடன் மிகச்சரியாக கடைப்பிடிக்க வேண்டும்.

    'நோன்பு ஒரு கேடயமாகும். தவறான பேச்சு பேச வேண்டாம். யாராவது உம்மிடம் சண்டைக்கு வந்தால் `நான் நோன்பாளி' என்று அவரிடம் கூறிவிடவும்' (நூல்: புகாரி)

    நோன்பின் மூலம் பசித்திருப்பதால் ஏழ்மையின் வழி உணரப்பட்டு, ஏழை, வறியவர், அநாதை, என்று தேவையுள்ளவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதை நோன்பு கற்றுக்கொடுக்கிறது.

    இப்படியாக இந்த நோன்புக்குள் எண்ணற்ற நன்மைகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக கடைசி பத்து நாட்கள் மிகவும் முக்கியமானவை. அதனால் தான் "ஆயிரம் மாதங்களுக்கு நிகரான நன்மைகளை வழங்கும் 'லைலத்துல் கத்ர்' எனும் புனித இரவு இந்த இறுதி பத்து நாட்களில் தான் அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் தேடிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம் சொன்னார்கள்.

    இதனால் தான் இஃதிகாப் (தனித்திருத்தல்) என்ற அமலை இஸ்லாம் அறிமுகம் செய்திருக்கிறது என்பது இங்கு இணைத்துப் பார்க்கத்தக்கது.

    சமுதாய சமநிலைத் திட்டங்களைக் கற்றுத்தரும் புனித ரமலான் நோன்பைப் புரிந்து முழு உலகிலும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக.

    • வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்.
    • இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார்.

    இறைமகன் இயேசு கிறிஸ்துவின் விண்ணுலகப் பயணத்திற்கு பிறகு அவருடைய சீடர்கள் மறை பரப்புப் பணியைச் செய்தனர். அவர்களோடு திருத்தூதுவர்கள் பலரும் இணைந்து இத்திருப்பணியைத் திறம்படச் செய்து வந்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தூய பவுல் அடிகளார். இவருடைய தீவிர நற்செய்திப் பணியின் காரணமாக பல திருச்சபைகள் உருவாயின. செயலற்றுப் போயிருந்த பல திருச்சபைகளை உயிர்ப்போடும், இறையியற் தெளிவோடும் செயல்பட வைத்தார்.

    தூய பவுல், ஆண்டவரின் திருவாக்காக கூறுகிறார்: 'என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'. (2 கொரி.12:9)

    தன் பலவீனத்தில் இறைபலத்தை உணர்ந்த தூய பவுல், யூத சமயத்தின் மீதிருந்த பக்தி வைராக்கியத்தினால் யூத சமயத்தின் தலைவர்களின் அனுமதியுடன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக தமஸ்கு சாலையில் பயணம் செய்தவர், கிறிஸ்துவின் தூதுவராக அழைக்கப்படுகிறார்.

    தான் உருவாக்கிய பல திருச்சபைகளுக்கு கடிதங்களை எழுதி அவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தார். நற்செய்தி பணிக்காக பல்வேறு துன்பங்களையும், இழப்புகளையும், தண்டனைகளையும், சிறைக்கூட அனுபவங்களையும் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் ஏற்றுக்கொண்டார். தன் பலவீனங்களைக் குறித்தும் அவர் மேன்மை பாராட்டினார். 'என் வலுவின்மையே எனக்குப் பெருமை' (2 கொரி.12:5) என்கிறார்.

    உடலில் தைத்த முள்

    கடவுளின் வழிநடத்துதலை நேரடியாகவும், மறைமுகமாகவும், இறைத்தூதர்கள் மூலமாகவும் பல்வேறு வெளிப்பாடுகளை பெற்ற தூய பவுல் அடிகளார் தன் உடலில் இருக்கின்ற ஒரு மாபெரும் பலவீனத்தைக் குறித்து பெருமையோடு கூறுகிறார். தூய பவுல் அடிகளார் எவ்விதத்திலும் பெருமை அடையாதபடி துன்பப்படுத்தும் ஒரு நோயை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

    அதனால் தான் 'உடலில் தைத்த முள்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. சிலர் `கிட்டப்பார்வை குறைபாடு' என்றும், வேறு சிலர் `மலேரியா காய்ச்சல்' என்றும், இன்னும் சிலர் `காக்காய் வலிப்பு' என்றும் கூறுவர். (கலா 4:13-15).

    ஆனால் உண்மை அடிப்படையில் `உடலில்' என்பதை `உடலின் நிமித்தம்' என்று வாசிப்பது தான் மிகவும் பொருத்தமானது. அப்படியானால் இங்கே `முள்' எனக் குறிப்பிடுவது ஒரு கடுமை மிக்க ஆவிக்குரிய சோதனையைக் குறிக்கும். அவரின் பலவீனம் அவருடைய மறை பரப்பு பணியைப் பெரிதும் தடைசெய்யும் இன்னல்களை, வலிகளைக் கொடுத்த போதும் அச்சம் கொள்ளவும், நம்பிக்கை இழக்கும்படியான சோதனைக்குட்பட்டார் என்பது உண்மை.

    அத்தகைய சோதனை ஏற்பட கடவுளின் அனுமதி இருந்தாலும் `அதை எனைக்குட்டும் சாத்தானின் தூதன்' எனக்கூறுகிறார். 'குட்டும்' எனும் போது தொடர்ந்து இடைவிடாமல் நிகழும் தன்மையை குறிப்பிடுகிறார். பவுல் அடிகளார், 'அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்' (2 கொரி 12:8) என்கிறார்.

    ஆனால் ஆண்டவர், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்கிறார். ஆண்டவர் இயேசு கெத்சமனே தோட்டத்தில் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் என்று மூன்று முறை ஜெபித்தார். நேர்ந்த இன்னல் நீக்கப்படவில்லை. ஆனால் அதை தாங்குவதற்கு வலிமை அளிக்கும் விதமாக அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

    அதேபோல் பவுல் அடியாருக்கும் ஆண்டவர் 'என் வல்லமை பூரணமாக விளங்கும்' என்ற பதிலையேத் தருகிறார். ஒருமுறை மட்டும் தான் இத்திருவாக்கு அருளப்படினும் அதன் நிறைபலனைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார். பவுலடியார் தன் பலவீனத்தைக் குறித்துப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறார். தன் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார். ஏனெனில் தான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாக உணர்ந்தார்.

    பிரியமானவர்களே, நீங்களும் உங்கள் பலவீனத்தைக் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் பலவீனத்தால் உங்கள் வாழ்வு பொருளிழந்து, அருளிழந்து, மகிழ்விழந்து போனதாக நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கலாம்.

    `கடவுளே இந்த பலவீனம் மட்டும் என் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன். என் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர்ந்து இருக்கும். என் வாழ்வில் இருக்கின்ற இந்த பலவீனம் என் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. என் வாழ்வின் முன்னேற்றத்தைக் குலைத்து என் வாழ்வின் நிலை உயரமுடியாமல் செய்துவிட்டது' என்று மனதிற்குள்ளாக நீங்கள் கலங்கிக்கொண்டிருக்கலாம்

    ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் இந்த பலவீனம் தான் கடவுளின் கிருபையை, வலிமையை, அன்பின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. உங்கள் பலவீனத்தில் தான் கடவுளின் நிறைவான இறையாற்றலை உங்களில் அனுபவிக்க வாய்ப்புத் தருகின்றது. உங்கள் பலவீனம் தான் இறைவனோடு உங்களுக்கு இருக்கின்ற உறவை, ஐக்கியத்தை வலுப்பெறச்செய்கின்றது. ஆதலால் உங்களுடைய பலவீனத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நம் வலுவின்மையில் தான் கடவுளின் வல்லமை நிறைவாய் வெளிப்படும்!

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரம்மோற்சவத்தில் ஒருநாள், மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார்.
    • இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

    ஸ்ரீரங்கம் அருகே உள்ள `அகண்ட காவிரி' என்ற ஊரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷ்ணு பக்தை வாழ்ந்தாள். அவளுக்கு, ஒரே ஒரு மகன். அவனுக்கு, தான் வழிபடும் இறைவனான `அரங்கன்' என்ற பெயரையே வைத்தாள். அந்த பிள்ளை வளர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். நண்பகல் வேளையில் தன் பிள்ளை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு `கஞ்சி' (தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழையசோறு), கொடுத்து விட்டு திரும்புவது அந்த தாயின் வழக்கம்.

    குறிப்பிட்ட இடத்தில் ஒரு அகண்ட மரத்தின் அடியில் அமர்ந்து `அரங்கா..' என்று அழைத்ததும், அந்த பிள்ளை ஓடோடி வந்து தன் தாய் கொண்டு வந்த அமிர்தம் போன்ற அந்த கஞ்சியை பருகி விட்டு, தாயின் மடியில் படுத்து சற்று ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் மாடுகளை மேய்க்கச் செல்வான். அன்றும் அப்படித்தான் மகனுக்காக பழைய சோறு எடுத்து வந்திருந்தாள், அந்த விஷ்ணு பக்தை.

    `அரங்கா..' என்ற ஒன்றை குரலுக்கே ஓடோடி வரும் மகன், அன்று ஐந்து.. ஆறு முறை அழைத்தும் வரவில்லை. `மகனுக்கு என்ன ஆனதோ..' என்று அந்தத் தாய் பரிதவித்த நேரத்தில்.. `அம்மா..' என்று அழைத்தபடி வந்தான் அந்தச் சிறுவன்.

    "ஒரு கன்று வழி தவறி தூரமாக போய்விட்டது. அதை பிடித்து தாயிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு வர நேரமாகிவிட்டது" என்று, தன் தாயின் முகம் தாங்கி நின்ற கேள்விக்கு, முந்திக் கொண்டு அவனாகவே பதிலை தந்தான்.

    பின்னர் தாய் அளித்த கஞ்சியை சுவைத்து அருந்தியவன், "இன்று நேரமாகி விட்டது.. ஓய்வெடுக்க நேரமில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான். மகன் சென்றதும் அந்த மரத்தின் நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று படுத்தாள், அந்தப் பெண்.

    அப்போது `அம்மா.. அம்மா..' என்று சத்தம் கேட்டு விழித்தாள். அருகில் தன் மகன் நின்றிருந்தான். "என்னப்பா.. அதற்குள் வந்து விட்டாய்?" என்று கேட்டாள், அந்த தாய்.

    அதற்கு அந்தச் சிறுவன்.. "என்னம்மா சொல்கிறீர்கள்? நான் இப்போதுதான் வருகிறேன். சாப்பாடு தாருங்கள்" என்று கேட்டான். "என்னப்பா சொல்கிறாய்.. இப்போதுதானே சாப்பிட்டு விட்டு போனாய்..." என்று அதிர்ச்சியாக கேட்டாள் தாய்.

    `தன் மகன் இப்போதுதான் வருகிறான் என்றால்.. இதற்கு முன்பு இங்கே வந்து சாப்பிட்டு விட்டு போனது யார்?' என்ற கேள்வி தாய்க்கு எழுந்தது. அந்த கேள்வி மகனையும் தொற்றிக் கொண்டது.

    மறுநாள் அந்த போலிச் சிறுவனை பிடிக்க இருவரும் ஒரு திட்டமிட்டனர். அதன்படி மதியம் சாப்பாடு கொண்டு வந்து, `அரங்கா.. ' என்று இரண்டு மூன்று முறை அழைக்க அந்தச் சிறுவன் வரவில்லை. உண்மையான மகன் ஒரு மரத்தின் பின்பாக மறைந்திருந்து, போலிச்சிறுவனை பிடிக்க காத்திருந்தான்.

    அப்போது முன்தினம் அமுது உண்டச் சிறுவன் வந்து, தாயிடம் கஞ்சியை வாங்கிப் பருகினான். அதைப் பார்த்த உண்மையான மகன், ஓடோடிச் சென்று, "அம்மா.. நான்தான் உங்கள் மகன்" என்றான்.

    அதற்கு மற்றொரு சிறுவனோ, "அம்மா நான்தான் உங்கள் மகன்" என்று கூறினான். இருவரும் மாறி மாறி அவ்வாறு சொன்னதும் அந்தத் தாய், "ரங்கநாதா.. இது என்ன விளையாட்டு?" என்று அரற்ற, "விளையாடத்தான் வந்தேன் அம்மா" என்று கூறிய அமுதுண்ட சிறுவன், திருவரங்கம் அரங்கநாதராய் காட்சி தந்தார். தாய்க்கும், பிள்ளைக்கும் ஆசி வழங்கி மறைந்தார்.

    இந்த விஷயம் அறிந்த ராமானுஜர், அந்த தாய் வாழ்ந்த ஊருக்கு `ஜீயர்புரம்' என்று பெயரிட்டார். அதோடு அங்கே ஒரு மண்டபமும் கட்ட ஏற்பாடு செய்தார். பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒருநாள், அந்த மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கே அந்த தாய்க்கு இறைவன் காட்சி தரும் நிகழ்வும், இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.

    • 22-ந்தேதி பிரதோஷம்.
    • 24-ந்தேதி ஹோலிப்பணடிகை, பவுர்ணமி.

    19-ந்தேதி (செவ்வாய்)

    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகன சேவை.

    * கழுகுமலை முருகப்பெருமான் காலை காமதேனு வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி.

    * காரைக்குடி முத்துமாரி அம்மனுக்கு பொங்கல் வைத்து, அக்னி சட்டி எடுத்தல்.

    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * பழனி முருகப்பெருமான் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்சப சேவை.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.

    * மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்)

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

    * ராமகிரி கல்யாண நரசிங்கப்பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி)

    * பிரதோஷம்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.

    * திருப்புல்லாணி ஜெகந்நாதப்பெருமாள் திருக்கல்யாணம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (சனி)

    * பழனி முருகப்பெருமான் கோவிலில் வெள்ளி ரத உற்சவம்.

    * காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல்.

    * பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * பவுர்ணமி.

    * ஹோலி பண்டிகை.

    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்.

    25-ந்தேதி (திங்கள்)

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் குதிரை வாகன புறப்பாடு.

    * திருவல்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்.

    * மதுரை பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.

    * திருச்சி தாயுமானவர் தீர்த்தம்.

    * மேல்நோக்கு நாள்.

    • நோன்பு பாவங்களில் இருந்து காக்கும் ஒரு கேடயம் ஆகும்.
    • நோன்பு மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம்.

    நோன்பு ஒரு கேடயம்

    நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி)

    நோன்பு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயம். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதை, பொய்யான பேச்சுக்களை பேசுவதை, பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் கேடயம்.

    முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாது காப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும்,பேராசைகளை அழிக்கும் கேடயம் நோன்பாகும். விபச்சாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயம் நோன்பு.

    அபூ உபைதா (ரலி) அவர்கள் கூறுவது: "நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை ... என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்" (நூல்: நஸயீ, இப்னு மாஜா)

    "உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் (ரலி), நூல்:புகாரி)

    "ரமலானில் போதையுடன் இருந்த ஒருவரிடம் 'உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே!' என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, அவரை அடித்தார்கள்". (நூல்: புகாரி)

    நோன்பு என்பது ஒரு கேடயம். கேடயம் போர் வீரர்களையும், அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் நன்றாக பாதுகாப்பது போன்று, நோன்பும் நோன்பாளிகளை பாவமான காரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. நோன்பாளிகளும் அந்த கேடயத்தை அணிந்து, பாவமான காரியங்களில் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்கிறார்கள்.

    நோன்பு எனும் கேடயத்தை உடைக்காமல் இருக்கும் வரைக்கும் நோன்பாளிகள் முழுமையான நோன்பாளிகளாகவே இருக்கிறார்கள். ஏதேனும் பாவச்செயல்களில் ஈடுபடும் போது, அந்த கவசத்தை உடைத்து, நோன்பையும் முறித்து விடுகிறார்கள். அதன் நன்மைகளையும் இழந்து விடுகிறார்கள்.

    "ஒரு மனிதர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நோன்பு எதனால் முறிந்துவிடுகிறது' என்று கேட்டார்?. 'பொய், புறம் பேசுவதினால்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்". "யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிட வில்லையோ, அவர் தமது பானத்தையும், உணவையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருப்பதும் ஆகும். இத்தகைய நோன்பே கேடயமாக இருந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது. நாமும் நமது நோன்பை சிறந்ததாக அமைத்துக்கொள்வோம்.

    • இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பு.
    • சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர்.

    பெருமாளுக்கும், நீர் நிலைகளுக்கும் ஆதிகாலம் தொட்டே தொடர்பு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டவன் அந்த ஆதிபிரான். இவனே லட்சுமணனுடன் இணைந்து மதுராந்தகம் ஏரி உடையாமல் இரவெல்லாம் காத்து நின்றான் என்கிறது தல புராணம். இறைவன் தன் சக்தியால் ஒரு கண நேரத்தில் ஏரி உடையாமல் காத்துவிட முடியும். ஆனால் ராமர் மனித உரு கொண்டு பிறந்ததால் வில்லேந்தியே மதுராந்தகம் ஏரியைக் காத்ததாகக் கூறப்படுகிறது.

    மதுராந்தகம் ஏரி முற்காலத்தில் அதனைச் சுற்றி உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு பாசனத்திற்கு மட்டுமல்லாமல் குடிநீராகவும் பயன்பட்டு வந்தது. மழை நீரை தேக்கிவைக்கும் இந்த ஏரியில், அதிகப்படியான நீரின் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த லயோனல் பிளேஸ், ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இங்குள்ள இந்த ராமர் கோயிலுக்கு வந்த அவரிடம், அப்போது இருந்த அர்ச்சகர் கோவிலை செப்பனிட்டு, தாயாருக்கு தனி சன்னிதி அமைத்து திருப்பணி செய்துதர கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு மாவட்ட ஆட்சியரும் பெருமாளிடம் ஓர் கோரிக்கை வைத்தார். தெய்வ பலத்தால் வரும் ஆண்டு ஏரி உடைப்பெடுக்காமல் இருந்தால், திருப்பணியை ஏற்று நடத்துவதாக ராமருக்கு கோரிக்கை வைத்தாராம் மாவட்ட ஆட்சியர்.

    பருவ மழை வந்தது. வழக்கம்போல் ஏரி நிரம்பித் தளும்பியது. கவலையுடன் கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ஆங்கிலேயே மாவட்ட ஆட்சியரின் கண்களுக்கு இரு இளைஞர்கள் தென்பட்டனர். அவர்கள் கைகளில் நாண் பூட்டிய வில்லில் அம்பு பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாம். மின்னல் ஒளியில் இதனைக் கண்ட மாவட்ட ஆட்சியர், அம்பில் இருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டாராம். அதற்குப் பின்னர் ஏரிக்கரை உடையவில்லை என்பது வரலாறு.

    தான் கூறியபடியே தாயாருக்குத் தனி சன்னிதி கட்டிக்கொடுத்தாராம் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் குறித்த கல்வெட்டு தாயார் சன்னிதியில் உள்ளது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏரி காத்த ராமர் என புகழப்பட்டார் மூலவர் ராமர்.

    இரண்டு தேர் ஒரே பிரம்மோற்சவத்தில் இரண்டு நாள் தேர்த்திருவிழா நடைபெறுவது இத்தலத்தின் சிறப்புப் பெருமை. ஆனி பிரம்மோற்சவத்தில், ராமர், புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட தேரிலும், மறுநாள் கருணாகரப் பெருமாள் மற்றோரு தேரிலும் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.

    தரிசனம் தரும் பலன் தம்பதியர் ஒற்றுமையை எடுத்துக்காட்டுவது போல ராமரும் சீதையும் கை கோத்து நின்று நற்பலன்களைத் தருவதாக ஐதீகம். கல்விச் செல்வத்தை வாரி வழங்கும் வகையில் ராமானுஜர் திருவுருவக் காட்சி. இங்குள்ள கண்ணன் பிள்ளைப் பேறு வழங்கும் வள்ளல் என்பது ஐதீகம்.

    சீதையுடன் கை கோத்த நிலையில் காட்சி தருகிறார் மூலவர் ராமர். விபண்டக மகரிஷிக்குக் காட்சி தரும்போது இந்த அன்புக் கோலத்தைக் காட்டி அருளினாராம் ராமர். இதனையொட்டி விபண்டக மகரிஷி கை கூப்பிய நிலையில் இங்கு காட்சி அளிக்கிறார்.

    தனி சன்னிதியில் ஜனகரின் மகள் ஜனகவல்லித் தாயார் திருக்கோலம் கொண்டுள்ளார். வெண்ணிற உடையில் உடையவர் ராமானுஜருக்குப் பெரும்பாலும் திருத்தலங்களில் காவி உடை அணிவிக்கப் பட்டிருக்கும். ஆனால் அதிசயமாக இத்தலத்தில் வெண்ணிற உடையில் காட்சியளிக்கிறார் உடையவர். குடும்ப வாழ்கையில் இருக்கும்பொழுதுதான் இத்திருத்தலத்தில் தீட்சை பெற்றார் என்பதால் இத்திருக்கோலம்.

    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்னவாகனத்தில் திருவீதிஉலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, பங்குனி 6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி விடியற்காலை 4.02 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 11.55 மணிவரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணிமுதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாகப் பெருமாள் அனுமன் வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் விழா தொடக்கம். ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்னவாகனத்தில் திருவீதிஉலா. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-வரவு

    கடகம்-அமைதி

    சிம்மம்-உதவி

    கன்னி-நன்மை

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- விருத்தி

    மகரம்-சுகம்

    கும்பம்-உதவி

    மீனம்-நன்மை

    • முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர்.
    • எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

    முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான்.

    அவன் தன் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த குரு, சைதன்யாவை அழைத்து, "நீ இனி இல்லம் செல்லலாம். உன்னோடு இறைவன் துணை இருப்பார்" என்று ஆசி வழங்கினார்.

    அதைக்கேட்ட சைதன்யா, "குருவே.. எனக்கு எல்லாம் போதித்தீர்கள். ஆனால் நான் கடவுளை காணவில்லையே. கண்ணில் தெரியாத ஒருவர் எனக்கு எப்படி துணையிருப்பார்" என்று வினவினான்.

    உடனே குரு, "சைதன்யா.. உன் கேள்விக்கு பதிலளிக்கிறேன். அதற்கு முன்பாக நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இந்த வழியாக காட்டிற்குள் புகுந்து சென்றால் அந்த பக்கம் சுனந்தநகர் என்ற ஊர் இருக்கும். அங்கே என்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரை சந்தித்து நலம் விசாரித்து வா" என்று அனுப்பினார். வழியில் உணவுக்காக தன் மனைவியிடம் சொல்லி சில பதார்த்தங்களையும் செய்து கொடுத்து அனுப்பினார்.

    காட்டின் வழியாக சைதன்யா சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் சில செடிகளை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதை முகர்ந்து பார்த்து பறித்து, தான் வைத்திருந்த பையில் சேகரித்தார். அவர் கண் தெரியாதவர் என்பதை உணர்ந்து கொண்ட சைதன்யா, அந்த நபரிடம் சென்று "ஐயா.. இங்கே என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.

    அதற்கு அவர், "நான் ஒரு வைத்தியன். பாம்புக் கடிக்கான மூலிகையை தேடி வந்தேன். கண் பார்வை இல்லாததால், முகர்ந்து பார்த்து அதை சேகரிக்கிறேன். நீ காட்டிற்குள் வந்திருக்கிறாய்.. உனக்கு இந்த மூலிகை தேவைப்படலாம். வைத்துக் கொள்" என்று கூறி மூலிகையில் சிறிதளவைக் கொடுத்தார்.

    அதைப் பெற்றுக்கொண்ட சைதன்யா, "ஐயா.. இங்கே. தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்க, அருகில் ஒரு கிணறு இருப்பதாக அவர் சொன்னார். அங்கு சென்று நீர் அருந்தி விட்டு பயணத்தை தொடங்கிய சைதன்யா, ஓரிடத்தில் ஓய்வெடுத்தான்.

    சில பதார்த்தங்களை சாப்பிட்டு விட்டு, மரத்தடியில் தூங்கினான். அப்போது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன், அங்கே ஒரு முயல் வேகமாக ஓடுவதைப் பார்த்தான். அப்போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழப்போவதையும் சைதன்யா பார்த்தான். உடனே அங்கிருந்து அகன்றான். அவன் தூங்கிய இடத்திலேயே அந்த பெரிய கிளை விழுந்தது.

    பின்னர் பயணத்தை தொடங்கியவன், இரவில் ஊரை அடைந்தான். இரவு என்பதால் ஒரு சத்திரத்தின் வாசலில் தங்கினான். அங்கே பசியோடு இருந்த ஒருவருக்கு தான் மீதம் வைத்திருந்த பதார்த்தங்களை வழங்கினான்.

    பின்னர் சிறிது கண்ணயர்ந்த சைதன்யாவுக்கு ஒரு சத்தம் கேட்டது. விழித்து பார்த்த போது, அருகில் ஒருவர் வாயில் நுரைதள்ள விழுந்து கிடந்தார். அவரை விஷப்பாம்பு தீண்டி இருந்தது. உடனே தன்னிடம் இருந்த மூலிகையை சாறு எடுத்து அந்த நபருக்கு கொடுக்க, சில நிமிடங்களில் அவர் இயல்புக்கு திரும்பினார்.

    அவரைக் காப்பாற்றிவிட்டு, குருவின் சகோதரர் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு, மீண்டும் குருகுலம் திரும்பினான். தான் இங்கிருந்து புறப்பட்டது முதல், வருவது வரை நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் தன் குருவிடம் சொன்னான். இப்போது குரு, "ஒரு வழியாக கடவுளை பார்த்துவிட்டாய் அல்லவா?" என்று கேட்டார். சைதன்யாவோ, "நான் எப்போது கடவுளைக் கண்டேன் குருவே.." என்றான்.

    "ஒருவரை பிழைக்க வைப்பாய் என்பதை அறியாமல், உனக்கு பாம்புக்கடிக்கான மூலிகைகளைத் தந்தாரே, அவர்தான் கடவுள். உன் தாகம் தீர்க்க, காடாக இருந்தாலும் அங்கே கிணறு வெட்டி வைத்திருந்த முகம் தெரியாதவரும் கடவுள்தான். உன்னைக் காப்பாற்ற சத்தம் எழுப்பிய முயலும் கடவுள்தான். பசியோடு இருந்தவருக்கு உணவளித்தாயே அப்போது நீ அவருக்கு கடவுள். பாம்பு தீண்டி இறக்க இருந்தவரை, காப்பாற்றியபோது அவருக்கும் நீ கடவுள். இவ்வளவு உருவங்களின் இறைவனைப் பார்த்த பிறகுமா, 'கடவுளைக்காணவில்லை' என்கிறாய்" என்று கேட்டார், குரு. சைதன்யாவுக்கு எல்லாம் புரிந்தது. எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

    • கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன.
    • பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம்.

    'பொழியும் அடியார்கள் கோடிகுறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே' என்கிற அருணகிரிநாதரின் வரிகளை, தனது ஒவ்வொரு சொற்பொழிவிலும் கூறி இன்புறுவார் கிருபானந்த வாரியார்.

    நாம் ஒருவரிடம் பணம் வேண்டியோ அல்லது பொருள் வேண்டியோ ஒரு முறை செல்லலாம். இரண்டு முறைசெல்லலாம். அடிக்கடி சென்றால் அவர் வெறுப்படைந்து விடுவார். இது இயற்கையான ஒன்று. ஆனால் நமது குறைகளை ஒருவரிடம் கோடி முறை சென்று சொன்னாலும் கோபப்படாமல் நமக்கு வேண்டியதைக் கொடுப்பவர்தான், இறைவன்' என்பது இதன் பொருள். அப்படி ஒரு கோவில் அமைந்த இடம்தான், சோமநாதன் மடம். இன்று இவ்வூர் 12 புத்தூர்' என்று வழங்கப்படுகிறது.

    வடமொழி வல்லுனர்களான திண்டிமக்கவிகள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் 12 புத்தூர் இருக்கிறது. இவ்வூரே அருணகிரி நாதரின் பிறப்புத் தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த ஊரில் சோமநாத ஜீயர் என்கிற சிறந்த சிவனடியார், மடம் ஒன்றை அமைத்து, வாழ்ந்து வந்தார்.

    அருணாசலேஸ்வரரை தனது ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு, நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அடியார்களுக்கு அருந்தொண்டாற்றி வந்த இவர், அரிய தவ ராஜனாக விளங்கினார். இவரது பெருமைகளை, தனது திருப்புகழிலே புகழ்ந்துள்ளார் அருணகிரி நாதர். சோமநாத ஜீயர், அருணகிரிநாதரின் சம காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது மடத்தில் முருகப்பெருமானை விசேஷமான முறையில் பூஜை புரிந்து வந்ததை, தனது திருப்புகழிலே பாடிப்பரவியுள்ளார் அருணகிரியார். இங்கே கிடைத்த கல்வெட்டுகளின் மூலமே சோமநாத ஜீயரின் விபரங்கள் நமக்கு தெளிவாகின்றன. கி.பி. 1348-ம் ஆண்டு வீரபொக்கண்ண உடையார் மகன் கம்பண்ண உடையார் என்பவர், வித்யாபதீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மடத்தின் பொறுப்பையும், காணி ஆட்சியையும், மனையையும் சோமநாத ஜீயருக்குக் கொடுத்து கவுரவித்துள்ளார்.

    கி.பி. 1355-ம் ஆண்டு ஹரிஹர உடையார் காலத்தில், வித்யாபதீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள், நித்திய பூஜை, திருவிழாக்கள் போன்றவை நடத்திட முழு சுதந்திரமும், நிலங்களும், சோமநாத ஜீயருக்கு கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கையும், மகேசன் செல்வாக்கையும் ஒருங்கே பெற்ற இந்த சோமநாதஜீயர், இவ்வூர் மக்களால் 'ஐயன்' என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளார். இதன் பொருட்டு, பின் னாளில் இவ்வூர் 'ஐயன்புத்தூர்' என்று வழங்கப்பட்டு, தற்போது 12 புத்தூர் என்றாகி இருக்கிறது.

    ஆலய அமைப்பு

    கிழக்குப் பார்த்த திருக்கோவில் இது. ஒரு காலத்தில் தென்முக ராஜகோபுரம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. முதலில் பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். பின், சில படிகள் கொண்ட முக மண்டபம். இங்கே பிறை நிலவுடன் கூடிய காளையின் புடைப்பு சிற்பத்தைக் காணலாம். அதைக் கடந்தால் மகாமண்டபம். அதன் வலப்புறம் சோமநாத ஜீயர் மற்றும் அருண கிரிநாதருக்கு சிற்பங்கள் உள்ளன. மகா மண்டபத்தை அடுத்து, அந்தராளம் மற்றும் மூலஸ்தானம். கருவறைக்குள் வித்யாபதீஸ்வரர் அருளாட்சி செய்கிறார்.

    ஆலய பிரகாரத்தில் கணபதி, அடுத்ததாக வள்ளி -தெய்வானையுடன் முருகப்பெருமான் தனித்தனிச் சன்னிதியில் உள்ளனர். கோமுகம் அருகே சண்டி கேஸ்வரர் உள்ளார். தென்முகம் பார்த்த நிலையில் அட்சரவல்லி அம்மன் சன்னிதி உள்ளது. சிறிய வடிவில் நின்ற கோலத்தில் அன்னை அருள்கிறார்.

    இவ்வாலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது. சகல கலைகளிலும் சிறப்புற்று விளங்க, இத்தல இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடலாம். எழுத்துத்துறையில் சிறந்து விளங்க, இத்தல அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யலாம். இத்தல முருகனுக்கு, தேனும், தினை மாவும் படைத்து வணங்கினால், சிக்கல்கள் விலகும். பகை மறையும்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் ஆரணியில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் உள்ள தாமரைபாக்கத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 12 புத்தூர் திருத்தலம்.

    ×