search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maruthamalai murugan temple"

    • தங்க தேரோட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோவிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து கோவில் இணை ஆணையர் ஹர்ஷினி கூறுகையில், கோவிலில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மலைக்கோவிலில் தங்கரதம் வலம் வரும் இடத்தில் கருங்கல் தளம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இப்பணிகள் நடைபெறுவதால் தங்க தேரோட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கருங்கல் பதிக்கும் பணிகள் முடிவடைந்த உடன் மீண்டும் தங்க தேரோட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    கோவை அருகே மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள். இந்த கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாகவும், சாலை வழியாகவும் செல்லலாம். ஆனால் செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. இந்த நிலையில் மருதமலையில் தற்போது 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

    இதற்கிடையே மருதமலை அருகே வனப்பகுதிக்குள் சென்ற ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த குமார் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதையடுத்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அத்துடன் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அத்துடன் ஒற்றை யானையும் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் இங்கு முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியாகதான் இடம்பெயர்ந்து செல்கிறது.

    எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மாலை 5 மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கார்களில் சென்றாலும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    அதுபோன்று படிக்கட்டு பகுதியிலும் காட்டு யானைகள் நடமாடி வருவதால், மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்லக்கூடாது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம். அத்துடன் பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
    • ரூ.89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட உள்ளது.

    கோவை:

    மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22-வது வார்டு, 8-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை மிகவும் அதிகம் காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

    மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித் துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில் அந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப் படாதது மக்கள் மத்தி யில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    குடிநீர் பிரச்சனை தொடர்பாக மக்கள் தினமும் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது. பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-கோவை மாநகராட்சி கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான். சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10,12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே 7 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் 7 நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம்.அதிகாரிகளும் தற்போது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறோம்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.
    • ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது.

    கோவை மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு யானை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன.

    இந்த வனவிலங்குகள், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையிலும், படிக்கட்டுகளிலும் இரவு நேரங்களில் வன உயிரினங்கள் நடமாடுவது வழக்கம்.

    கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடாமல் இருந்தனர். அந்த சமயங்களில் கோவில் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமானது.

    ஊரடங்குக்கு முன்பு வரை கோவில் இரவு 9 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு விலக்கப்பட்ட பின் மீண்டும் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது காட்டு யானைகள் நடமாட்டத்தை காரணம் காட்டி கோவில் நடை திறப்பு நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.

    கோவில் நடை மூடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அடிவாரத்தில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் இரவு 7.30 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி அதிகாலை 3.45 மணியளவில் கோவிலுக்கு அருகே சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை பார்த்ததும் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் யானை மற்றும் சிறுத்தை நடமாடுவதை கருத்தில் கொண்டு கோவிலுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக பிளக்ஸ் பேனரும் மலையடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு பக்தர்கள் 7 மணிக்கு பிறகு அனுமதிக்கப்படுவது கிடையாது. கோவில் நடை இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது.

    இதுபற்றி வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு தெரியவில்லை. பலர் மாலையில் கோவிலுக்கு வந்து பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, வனத்துறை அறிவுறுத்தலின் பேரில் தான் கோவில் நடை திறப்பு நேரம் குறைக்கப்பட்டது. படிக்கட்டுகள் வழியே பக்தர்களை அனுமதிக்காமல் இரவில் வாகனங்களில் மட்டும் அனுமதிப்பதற்கு மேலும் ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டு வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்றனர்.

    முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.
    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

    அர்த்தஜாம பூஜை :

    மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் இருக்கிறது. இரண்டு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என மூன்று வித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படும். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர்.

    பாம்பாட்டி சித்தர் :

    மலைப்பாறைகளுக்கு மத்தியில் உள்ள குகையில் பாம்பாட்டி சித்தர் சன்னிதி உள்ளது. வலது கையில் மகுடி, இடது கையில் தடியும் வைத்து இவர் அருள்பாலிக்கிறார். இவருக்கு அருகில் சிவலிங்கம், நாகர் திருமேனி கள் உள்ளன. முருகப்ெபருமானுக்கு பூஜை முடிந்ததும், பாம்பாட்டி சித்தருக்கும் பூஜை செய்யப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் தற்போதும் இங்கு முருகனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். தினமும் இவரது சன்னிதியில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்து விடுகிறார்கள். மறுநாள் இந்த பால் குறைந்திருக்குமாம். சித்தர், இந்த பாலை முருகனுக்கு அபிஷேகித்து பூஜை செய்வதாக நம்பப்படுகிறது.

    பாம்பு முருகன்:

    பாம்பாட்டி சித்தர் சன்னிதியில் உள்ள பாறையில் நாக வடிவம் ஒன்று காணப்படுகிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்ததாக தல புராணம் சொல்கிறது. இந்த நாகத்தை முருகப்பெருமானாகவே பாவித்து பக்தர்கள் அனைவரும் வழிபாடு செய்கிறார்கள். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று வடிவங்கள் உள்ளன. இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும்.

    பஞ்ச விருட்ச விநாயகர் :

    பொதுவாக அரச மரத்தின் அடியில் தான் விநாயகப்பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்திருக்கும் மரத்தின் அடியில் விநாயகப் பெருமான் இருந்து அருள் பாலிக்கிறார். ஐந்து மரங்கள் இணைந்த ஒரே மரத்தின் அடியில் இருப்பதால் இவரை, ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். இவருக்கு அருகில் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்தபடி, கையில் வேலுடன் காட்சி தருகிறார்.

    மருதாச்சல மூர்த்தி :

    மருத மரங்கள் நிறைந்ததும், நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்டதுமான மலையில் அருள்பவர் என்பதால், இத்தல முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு. மருத மரமே இத்தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் ‘மருது சுனை’. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது. மலையில் உள்ள ஒரு மருத மரத்தின் அடியில் இருந்து இந்த தீர்த்தம் உற்பத்தியாகி வருவதாக சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே சுவாமியின் அபிஷே கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

    சோமாஸ்கந்த தலம் :

    சிவன், அம்பாளுக்கு நடுவில் முருகன் இருக்கும் அமைப்பை, ‘சோமாஸ்கந்த அமைப்பு’ என்பார்கள். இங்கும் சிவன், அம்பாளுக்கு நடுவில் தான் முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகத்தலம் என்றாலும் சுவாமிக்கு வலப்புறம் பட்டீஸ்வரர் (சிவன்) சன்னிதியும், இடப்புறத்தில் மரகதாம்பிகை (அம்பாள்) சன்னிதியும் உள்ளன.

    தம்பிக்கு உகந்த விநாயகர் :

    மருதமலை கோவிலுக்குச் செல்லும் வழியில் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி இருக்கிறது. இங்கு விநாயகர், சுயம்புவாக இருக்கிறார். யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு, உடல் இல்லை. இவர், மலையிலுள்ள முருகன் சன்னிதியை நோக்கி, தும்பிக்கையை நீட்டி காட்சி தருவது சிறப்பம்சம். அருகில் மற்றொரு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுயம்பு விநாயகருக்கு பூஜை செய்த பின்பே, பிரதான விநாயகருக்கு பூஜை நடக்கிறது. முருகனுக்கு உகந்த நாட்களான கிருத்திகை, சஷ்டி, விசாகம் மற்றும் அமாவாசை நாட்களில் இவருக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. எனவே இவரை, ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள். மருதமலை சுப்பிரமணியரை தரிசிக்கச் செல்பவர்கள் இவரை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டுமென்பது ஐதீகம்.

    குதிரையில் வந்த முருகன் :

    முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், ஒரு சில ஊர்களிலுள்ள கோவில்களில் அவரை விழாக் காலங்களில் குதிரையில் எழுந்தருளச் செய்வர். இதற்கு காரணம் என்ன தெரியுமா? முற்காலத்தில் இக்கோவிலில் திருடர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பினர். அப்போது, முருகன் குதிரை மீதேறிச் சென்று அவர்களை மறித்து, பொருட்களை மீண்டும் கோவிலில் சேர்க்கச் செய்தார். அதோடு திருடர்களை பாறையாகவும் மாற்றி விட்டார். முருகன் குதிரையில் வேகமாகச் சென்றபோது, குதிரை மிதித்த இடத்தில் பள்ளம் உண்டானது. மலைப்பாதையில் உள்ள ஒரு பாறையில் இந்த தடம் இருக்கிறது. இக்கல்லை ‘குதிரைக்குளம்பு கல்’ என்கிறார்கள். இம்மண்டபத்தில் முருகன், குதிரை மீது வந்த சிற்பம் இருக்கிறது.

    ஆதி முருகன் :

    புராதனமான சிவன் கோவில்களில் சிவன், சுயம்பு லிங்கமாக இருப்பார். ஆனால், இத்தலத்தில் முருகன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இவருடன் வள்ளி, தெய்வானையும் சுயம்பு வடிவில் இருப்பது விசேஷம். முருகனுக்கு பின்புறத்தில் ஒரு பிளவு இருக்கிறது. வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் காட்சி தருகின்றனர். இந்த முருகனே இத்தலத்தின் ஆதி மூர்த்தி ஆவார். இவரது சன்னிதி ‘ஆதி மூலஸ்தானம்’ எனப்படுகிறது. இவருக்கு முதல் பூஜை செய்யப்பட்ட பின்பே, பிரதான முருகனுக்கு பூஜை நடக்கிறது. கிருத்திகையில் பக்தர்கள் இவருக்கு அதிகளவில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். 
    ×