

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் அவர் 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 3-ந்தேதி புனிதவெள்ளி, ஏப்ரல் 5-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். அதன்படி தவக்காலம் கடந்த மாதம் 18-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.
தவகாலத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்றதும் கீழை நாடுகளின் "லூர்து நகர்"என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் வெள்ளிக்கிழமைகள் தோறும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று இரவு சிலுவைபாதை ஊர்வலம் நடைபெற்றது. ஏசுநாதரின் பாடுகளை பற்றிய ஜெபங்களை கிறிஸ்தவர்கள் சிலுவையை கையில் ஏந்தி ஜெபித்துக்கொண்டு சென்றனர்.
இதில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.