search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல்"

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.

    அரியலூர்:

    உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.
    • லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பொங்காலை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றதாகும். ஒரே இடத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் வருவதுண்டு. சிறப்பு வாய்ந்த இந்த பொங்காலை விழா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கால் திருவிழா இந்த ஆண்டு நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. காலை 8 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தோட்டம் பாட்டு வழங்கும் நிகழச்சி நடத்தப்படுகிறது.

    லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் வழிபாடு 25-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். மதியம் 2 மணிக்கு கோவிலின் முன்பு பல கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட தொடங்குவார்கள்.

    இரவு 7.30 மணிக்கு குத்தியோட்ட சிறுவர்களுக்கு சூரல் குத்து, இரவு 11 மணிக்கு மணக்காடு சாஸ்தா கோவிலுக்கு சாமி ஊர்வலம் கொண்டு செல்லப்படுகிறது. மறுநாள் (26-ந்தேதி) காலை 8 மணிக்கு அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படுவார். அன்று இரவு காப்பு அகற்றப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் திரளானோர் பங்கேற்பார்கள் என்பதால், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    • தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர்:

    பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பியதால் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    இதன் பின்னர் குறைந்தது 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்து விட்டு திருப்பூருக்கு திரும்புவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 13-ந்தேதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்பட்டன. இந்நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பின்னர் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் திறந்து செயல்பட தொடங்கின. இதனால் பனியன் நிறுவன தொழிலாளர்கள் திருப்பூருக்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை.
    • கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் உருமி இசைக்கேற்ப ஆடும் வகையில் மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. கோவிலுக்கு சொந்தமானது என்பதை குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்று குறிகள் காணப்படுகிறது.

    மாட்டுப்பொங்கலன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளை கையில் வைத்து சலங்கை மாடுகளுடன் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு வந்து உருமி இசைக்கேற்ப ஆடுகின்றனர்.

    பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்கு கொண்டு சென்று ஊரின் பொதுவான இடத்திலோ அல்லது கோவிலில் வைத்து பால், பழம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்களை தொடர்ந்து பாடும் போது சலங்கை மாடுகள் தானாகவே சென்று பால், பழம், பொங்கல்களை சாப்பிடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் குடிமங்கலம் அருகே பண்ணைகிணரில் கிராமமக்கள் பொது இடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
    • மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

    தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.

    மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.

    தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

    • மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
    • காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று காணும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரைக்கு காணும் பொங்கலையொட்டி இன்று காலை 11 மணியில் இருந்தே பொதுமக்கள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்தனர். பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.


    அவர்கள் கடற்கரை மணலில் ஒன்றாக அமர்ந்து பொழுதை போக்கினார்கள். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள். தொடர்ந்து பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதன் காரணமாக மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

    மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜன் மேற்பார்வையில் மெரினா கடற்கரை முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்களும் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி 3 போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணித்தனர்.


    மெரினாவில் இன்று கடலில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீசார் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குதிரைப்படையினருடன், கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாகவும் ரோந்து சென்றுபோலீசார் கண்காணித்தனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் அங்கிருந்து அருகில் உள்ள தீவுத்திடலுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியையும் கண்டுகளித்தனர். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டனர். தனியார் அரங்குகளையும் சுற்றிப்பார்த்தனர். மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர். அங்குள்ள உணவகங்களில் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் உண்டனர்.

    மாமல்லபுரத்தில் இன்று காலையிலேயே சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. உள்நாட்டு பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், கடற்கரை கோவில், ஐந்து ரதம், புலிக்குகை பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அனைத்து வாகனங்களையும் கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரம் நகருக்குள் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் 3 கி.மீ தூரம் நடந்து சென்றே புராதன சின்னங்களை பார்க்க வேண்டியது இருப்பதால், அனுமதி பெற்ற உள்ளூர் ஆட்டோக்கள் சிலவற்றை நகருக்குள் இயக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். மாமல்லபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர், போதை ஆசாமிகளை கண்காணிக்க சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவிடந்தை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 37 ஆயிரம் பேர் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துள்ளனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர். சிங்கம், புலி, வெள்ளைப்புலி, யானை, காண்டாமிருகம், மனித குரங்கு, ஒட்டகச்ச்சிவிங்கி, குதிரைகள், பறவைகள், பாம்புகள் ஆகியவற்றை பார்த்தனர். உயிரியல் பூங்காவில் புதிதாக வந்துள்ள உயிரினங்களான இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவிலிருத்து கொண்டு வரப்பட்ட இமாலயன் கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி ஆகியவற்றையும் கண்டுகளித்தனர்.

    காணும் பொங்கலையொட்டி சென்னை பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக உறவினர்கள், நண்பர்களுடன் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். பழவேற்காட்டில் டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோயில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை கண்டு கழித்தனர். குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் சமைத்து கொண்டு வந்த உணவுகளை கடற்கரையில் அமர்ந்து உண்டனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பழவேற்காடு கடலில் குளிப்பதற்கும், படகு சவாரிக்கும் தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் தட்சிணா மூர்த்தி கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது.

    இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயம், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் வழங்கப்பட்டது.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப் பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    போட்டியில 650 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் தட்சிணா மூர்த்தி மேற்பார்வையில் வருவாய்துறையினர். பொதுப்பணித்துறையினர், கால்நடை மருத்து வக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். இதே போல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமான மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    முன்னதாக, பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கூடியிருந்தனர்.

    இந்த நிலையில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காளை முட்டியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் மஞ்சு விரட்டில் 75 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வலையபட்டியை சேர்ந்த 12 வயது சிறுவன் மற்றும் அடையாளம் தெரியாத வாலிபர் காளை முட்டியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.
    • காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பவானி:

    பவானி அருகில் உள்ள காளிங்கராயன்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைகட்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை கட்டில் இருந்து பவானி ஆற்றின் இருந்து வெளியேறும் உபரிநீர் காலிங்கராயன் வாய்க்கால் வழியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    காலிங்கராயன் என்ற சிற்றரசரின் மூலம் கட்டப்பட்ட இந்த வாய்க்கால் பல ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் தைத்திருநாள் முடிந்த பிறகு பொதுமக்களால் கொண்டாடப்படும் கரிநாள் மற்றும் காணும் பொங்கல் அன்று பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் அணைக்கட்டு பகுதிக்கு வந்து பொழுதுபோக்கி காலை முதல் மாலை வரை கொண்டாடுவது வழக்கம்.

    இந்த அணைக்கட்டு பகுதியில் அவிநாசி அத்திக்கடவு திட்ட பணிகள் துவக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பு நலனுக்காக பொதுமக்கள் யாரும் அணைகட்டு பகுதிக்குள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது அனுமதி கிடைக்கும் என காத்திருந்த பொது மக்களுக்கு 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் பாதுகாப்பு நலன் கருதி காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சித்தோடு போலீசார் தெரிவித்துள்ளனர். காணும் பொங்கலை கொண்டாட காத்திருந்த பொது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    • மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
    • திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த மஞ்சு விரட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.

    இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் பரம்பரை முறைப்படி நடைபெறும் இந்த மஞ்சு விரட்டு நடைபெறும் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை சிராவயலில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், தொடர்ந்து வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் வந்தனர். அங்கு கோவில் காளைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் கோவில் காளைகளும், அதனைத் தொடர்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.


    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில், 8 மருத்துவ குழுவினர் மற்றும் காவல் துறையைச் சார்ந்தோர் 1,000 நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

    • ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 3 தினங்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, லேம்ஸ்ராக் அணை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலைசிகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மலர்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.

    தங்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் ஆடி, பாடி, விளையாடியும் விடுமுறையை கொண்டாடினர்.


    ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ×