search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Religious Charities Department"

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    ×