search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திர மாநிலம்"

    • மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.
    • ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.

    மாநிலத்தில் காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது அண்ணனுக்காக தானும் ஒரு காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டதாக சர்மிளா உருக்கமாக பேசினார்.

    ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் மைடுகூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் சர்மிளா பேசியதாவது:-

    கடந்த காலங்களில் என்னுடைய தந்தை ராஜசேகர ரெட்டியின் கனவை ஜெகன்மோகன் ரெட்டி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். நானும் ஜெய் ஜெகன் கோஷத்தை எழுப்பினேன். அவர் ஜெயிலில் இருந்த போது அவருக்கு ஆதரவாக 3200 கிலோமீட்டர் பாதயாத்திரை சென்றேன்.

    ஆனால் முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு ஜெகன்மோகன் வாக்குறுதிகளை மறந்து விட்டார். அவர் வாக்களித்தபடி முழு மதுவிலக்கு அமல்படுத்தவில்லை. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து என்ன ஆனது. மாநிலத்தின் தலைநகரம் எங்கே என்பது தெரியவில்லை.

    இதனால் மக்கள் பிரச்சனைக்காக நானும் ஜெகன்மோகன் ரெட்டியை கேள்வி கேட்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா.
    • வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    திருப்பதி:

    மகளிர் தினத்தில் சாதனை படைத்த பெண்களை நினைவு கூர்ந்து வருகிறோம். வீடு கட்டும் கனவை தள்ளிப்போட்டு தனது கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி மலை கிராம பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு இந்நாளில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் அரக்கு அருகே உள்ள அஞ்சோடா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்மா. இவருக்கு தோட்ட கோடி புட் மலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராவ் என்பவருடன் திருமணம் நடந்தது.

    அந்த கிராமத்தில் 10 குடும்பத்தினர் மட்டுமே வசித்து வந்தனர். இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. சிறிய வழிப் பாதையில் பொதுமக்கள் சென்று வந்தனர்.

    கர்ப்பிணிகள் மற்றும் யாருக்காவது உடல் நலம் சரியில்லை என்றால் அவர்களை டோலிகட்டி தூக்கி சென்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

    திருமணத்திற்கு பிறகு கிராம செவிலியராக பணியில் சேர்ந்த ஜெம்மா சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைத்திருந்தார்.

    அப்போது தான் அவருக்கு தனக்கு வீடு கட்டுவதை விட கிராமத்திற்கு சாலை வசதி தான் முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருடைய சம்பளத்தில் மாதம் ரூ.4000 சேமிக்க தொடங்கினார்.

    4 வருடங்களாக பணத்தை தொடர்ந்து சேமித்தார். இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அவரது கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணியை தொடங்கினார்.

    வெளியூரில் இருந்து திருமணமாகி வந்த இளம்பெண்ணின் உறுதி அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.

    இதைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அவருக்கு ஆதரவாக களமிறங்கினார்கள். அவர்கள் சாலை அமைக்கும் பணியில் தங்களது உடல் உழைப்பை அளித்தனர்.

    பழங்குடியின பெண்ணின் இந்த முயற்சி அந்தப் பகுதியில் பரவியது. அவருக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்ய முன்வந்தனர்.

    இந்த திட்டத்திற்கு நன்கொடைகள் வரத் தொடங்கியது. அந்த பணத்தை வைத்துக் கொண்டு ஜெம்மா ஒரு மண் சாலையை ஏற்படுத்தினார்.

    இந்த சாலையில் தற்போது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ போன்றவை எளிதாக மலை கிராமத்திற்கு செல்ல முடிகிறது. இளம் பெண் ஜெம்மா முயற்சியில் உருவான சாலையால் மலை கிராம மக்களுக்கு தற்போது டோலி கட்டி தூக்கி செல்லும் கடினமான பயணம் போன்ற அவலத்தை நீங்கி உள்ளது.

    இந்த சாதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகளிர் தினமான இன்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

    ஜம்மாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சாலையை தரமான தார் சாலையாக அமைத்து அதில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
    • சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது.

    12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.

    ஐதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தர் தனது குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

    அவரது வாயில் கடினமான பொருள் சிக்கியது. பின்னர் வாயில் சிக்கிய பொருளை எடுத்துப் பார்த்தார். அப்போது எலும்பு துண்டு இருந்தது.

    புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்தார். கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.
    • மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், என் டி ஆர் மாவட்டம் கொண்டபள்ளியை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவர் கணவரை பிரிந்து விஜயவாடா சிங்கி நகரில் வசித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த சத்தியநாராயணா என்ற வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சத்தியநாராயணாவின் மனைவிக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும் படி சத்யநாராயணாவிடம் அவரது மனைவி அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.

    சத்தியநாராயணா மனைவியின் பேச்சைக் கேட்காமல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்தார்.

    இதனால் கணவரை கையும் களவுமாக பிடிக்க தனது மகன்களுடன் சத்யநாராயணாவின் நடமாட்டத்தை கண்காணித்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சத்தியநாராயணா வீட்டிலிருந்து கள்ளக்காதலி வீட்டிற்குச் சென்றார்.

    கணவரை தனது மகன்களுடன் பின்தொடர்ந்து சென்ற அவரது மனைவி கள்ளக்காதலி வீட்டில் உல்லாசமாக இருந்ததை கையும் களவுமாக பிடித்தார்.

    இதையடுத்து மகன்களுடன் சேர்ந்து கணவர் மற்றும் கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கினார். இதில் சத்யநாராயணா அவரது கள்ளக்காதலி படுகாயம் அடைந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இப்ராஹிம் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்யநாராயணா மற்றும் அவரது கள்ளக்காதலியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கணவரின் நடமாட்டத்தை கண்காணித்து கள்ளக்காதலியையும், கணவரையும் மனைவி சரமரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் இது மிகச்சிறந்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.
    • ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திரத்தில் முதியோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான மாத ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தபட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் 66.34 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்திருக்கிறார். ஆந்திர மாநில மக்களுக்கு சமூக நீதியும், சமூகப் பாதுகாப்பும் வழங்குவதில் இந்தத் திட்டம் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

    ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு தேசம் ஆட்சியின் போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் வெறும் ரூ.1000 மட்டுமே. பயனாளிகளின் எண்ணிக்கையும் 39 லட்சமாக மட்டுமே இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மாத ஓய்வூதியம் 3 மடங்கு அளவுக்கும், பயனாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காகவும் உயர்த்த பட்டிருக்கிறது. ஓய்வூதியத் திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.4800 கோடியிலிருந்து ரூ.23,000 கோடியாக, அதாவது நான்கரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு வழங்குவதில் இது மிகச்சிறந்த நடவடிக்கை என்பதில் ஐயமில்லை.

    தமிழ்நாட்டில் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.1000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தி.மு.க. அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும், மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியம் ரூ.1200 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆந்திர அரசுடன் ஒப்பிடும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

    ஆந்திரத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையில் 66 சதவீதத்தினருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் குறைந்தது 1.35 கோடி பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஓய்வூதியத்திற்காக விண்ணப்பித்துக் காத்திருக்கும் 75 லட்சம் பேருக்கும் ஓய்வூதியம் வழங்கி, பயனாளிகளின் எண்ணிக்கையை 1.05 கோடியாக உயர்த்த வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தின் அளவை மாதம் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பிரிவினருக்கான ஓய்வூதியத்தை மாதம் ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
    • ஆந்திராவின் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது.

    வங்க கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்து வரும் நிலையில், ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டனர்.

    6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக இருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 170 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.
    • ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    திருப்பதி:

    ராகுல் காந்தி தேசிய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது ஆந்திராவில் நடைபயணம் செய்து வருகிறார்.

    கர்னூல் மாவட்டம் அதோனிக்கு நேற்று வந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் அங்குள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது பொதுமக்கள் அவரை வரவேற்றனர்.

    அப்போது ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டில் ஒற்றுமை நிலவ வேண்டியே இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினையின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். போலவரம் அணை பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆந்திராவில் 3 தலைநகர்கள் திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அமராவதி ஒன்றே ஆந்திராவின் தலைநகராகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று 3-வது நாளாக ஆந்திராவில் ராகுல்காந்தி நடைபயணம் சென்றார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    • ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்.
    • உதகை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஊட்டி

    ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க ஊட்டிக்கு வந்தார். 3 பேரும் ஒரு தனியாா்ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

    அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

    ×