என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு"

    வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள "சாவு வீடு" நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

    ஆண்டன் அஜித் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் "சாவு வீடு".

    புதுமையான களத்தில் வித்தியாசமான கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

    சாவு வீடு எனும் தலைப்பே வித்தியாசமான சுவாரஸ்யத்தை ஏற்படுத்த, வீட்டுச் சுவற்றில் வித்தியாசமாக மாட்டி வைக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் சாவுப்புகைப்படங்கள் நிறைந்திருக்கும், வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக், பார்த்தவுடன் ஆவலைத் தூண்டுகிறது.

    இப்படத்தினை பற்றி அறிமுக இயக்குநர் ஆண்டன் அஜித் கூறுகையில்," ஒரு சாவு வீடு, அங்கு எதிர்பாராமல் நடக்கும் ஒரு அதிரடி திருப்பம், அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, கலகலப்பான நகைச்சுவையுடன் மாறுபட்ட கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

    கதையை எழுதுவதற்கு முன்பே தலைப்பை எழுதிவிட்டேன். கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்கள் கண்டிப்பாக அதை உணர்வார்கள். ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா ஆகியோர் முக்கிய காதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் நவம்பர் இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.


    • ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.
    • ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சங்கர் பேட்டையை சேர்ந்தவர் ராம பிரம்மம். இவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தனது பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார்.

    இவரது வீட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் தனது வீடு, நிலத்தை வாங்க விரும்புபவர்கள் ரூ.500 மதிப்புள்ள கூப்பனை வாங்கினால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நெடுஞ்சாலை ஓரத்தில் பேனர் வைத்தார். ஏராளமானவர்கள் போட்டி போட்டு ரூ.500 பரிசு சீட்டு வாங்கிச் சென்றனர்.

    சங்கர் பள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சங்கர் இவரது பெயரிலும் இவரது மனைவி பிரசாந்தி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் தனது 10 மாத குழந்தை ஹன்சிகா பெயரில் 4 சீட்டு வாங்கினார்.

    நேற்று அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தப்பட்டது. குலுக்களில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகா அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ.500 பரிசு சீட்டுக்கு ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு வென்ற ஹன்சிகாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ரூ. 16 லட்சம் வீட்டை பெற்றதால் சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்
    • வன காவலர் பிரவீன் சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சாதிக். இவரது வீட்டின் மின்மீட்டரில் பாம்பு ஒன்று புகுந்ததை பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் வேட்டை தடுப்பு வன காவலர் பிரவீன் அங்கு விரைந்து வந்தார்.அவர் மின்வாரிய ஊழியர் சதீஷ்குமார் துணையுடன் மின்மீட்டரில் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளம் கொண்ட விஷ பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் அவர் அந்த விஷபாம்பை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு போய் விட்டார்.

    • பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
    • செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப்பிரிவு பொன்னையராஜபுரம், உப்பிலிபாளையம் 272 அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு பகுதி நிலை 2 மற்றும் நிலை 3, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டங்களும் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்ற சுயநிதி திட்டங்களான கணபதி சுயநிதி திட்டங்கள் பகுதி I, II, III மற்றும் சிங்காநல்லூர் சுயநிதி திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், மற்றும் மனைகளுக்கு 5.10.2022 மற்றும் 21.10.2022 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    இக்குலுக்கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.

    • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    • மேலும் பல திருட்டு வழக்குகளின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38), தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த மாதம் 7-ந் தேதி சங்கரநாராயணன், பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்தார். அவரது மனைவி பிருந்தா, தனது குழந்தையுடன் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இதனை அறிந்த யாரோ சிலர் வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 62¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.90 ஆயிரத்தை கொள்ளை யடித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நட மாடி யது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் துைண சூப்பிரண்டு நவீன்குமார் மேற்பார்வையில் போலீசார், அந்த நபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர் ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் பகுதி யைச் சேர்ந்த சாந்தகுமார் (29), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவ குமார் (25) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

    கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். அதன்படி 2 பேரும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் கைதான சாந்தகுமார், சிவகுமார் பற்றி தீவிரமாக விசாரித்த போது, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் திருட்டு வழக்கு களில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
    • அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

    இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.

    சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது.
    • வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும்.

    வடக்கு பாகத்தின் பலன்கள் பெண்கள் மற்றும் செல்வத்திற்கு உரியது. வடக்கு பாகம் பொதுவாக பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் இன்பமாக இருப்பார்கள் மேலும் செல்வம் பெருகும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்யம் வழியாக வெளியேறினால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் வடக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும். வாயவியம் மூளை நன்றாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். அது தவறாக இருந்தால் அவர் ஆண்டியாவர். வாயவியத்தில் கழிப்பறைகள் அமைக்கலாம். வாயவியம் பாகத்தில் கிணறு இருந்தால் வழக்குகளாலும் நோயாலும் துன்பம் வரும். கனமான பொருட்கள் இந்த மூலையில் வைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் வாயவியம் மூலை வழியாக வெளியில் செல்லக் கூடாது.

    • பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது.
    • 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    பல்லடம் :

    பல்லடத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது விட்டு, விட்டு பெய்தவண்ணம் உள்ளது. நேற்று அதிகாலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. தொடர்மழையால் பல்லடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கிருந்த மக்கள் இரவு முழுவதும் மழைநீரை வெளியேற்றியபடி இருந்தனர். நகராட்சி ஊழியர்கள், மழைநீர் தேங்கியுள்ள அண்ணாநகரில் மோட்டார் வைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். இதே போல பல்லடம் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழைநீர் பாதித்த இடங்களை, பல்லடம் தாசில்தார் நந்தகோபால், நகராட்சி ஆணையாளர் விநாயகம்,உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினர். பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

    • கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் வெள்ளகோவில் பகுதிகளில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகர், குமாரவலசு, கல்லாங்காடு வலசு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வங்கி, சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றன.

    கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீர் வடியாமல் இருப்பதால், மழை நீரில் பாம்பு போன்ற விஷ சந்துக்கள் உள்ளன. நேற்று காலை உப்புபாளையம் ரோடு, சக்தி நகர் விஜயகுமார் என்பவர் வீட்டின் முன்பு 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதை அறிந்த விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்து சென்றனர்.

    • சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
    • தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அனுப்பர்பாளையம் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததுடன், சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சி 25-வது வார்டு மூகாம்பிகை காலனி பகுதியில் போதிய அளவில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தண்ணீரில் நீந்தியபடியும், நடந்து செல்பவர்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் முறையாக வடிகால் அமைத்து, மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அம்பேத்கர் நகர் சமுதாயக்கூடம் அருகே உள்ள சரஸ் (வயது 44) வீட்டின் ஒருபகுதி நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் சரசும், அவருடைய மகன்கள் மனோஜ், தனசேகர் ஆகியோர் உள்புறமாக தூங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வீடு இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த திருமுருகன் பூண்டி நகராட்சித் தலைவர் குமார் இடிந்து கிடக்கும் வீட்டை சீரமைக்க தனது சொந்த செலவில் ரூ. 5000 மதிப்பில் ஹாலோ பிளாக் கல் வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.

    • வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர்.
    • அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பை சேர்ந்தவர் செல்வேந்திரன் கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த செல்வேந்திரன் அங்கு பூனையை போன்ற விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தார். அது மரநாய் என தெரிய வந்ததும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர். பிடிபட்ட மரநாய் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக இருந்தது என்று வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
    • நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை பூளவாடி கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வகையில் நூலக வார விழாவையொட்டி, பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பூளவாடி மனித வளம்-2030 என்ற தலைப்பில் சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் வீடுதோறும், சிறு நூலகம் அமைப்பதற்கான பணிகளை துவக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும், இத்திட்டத்துக்கு மாணவர்கள் சிறு தொகை சேமிக்க, நூலக வாசகர் வட்டம் சார்பில் இலவசமாக உண்டியல் வழங்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தில் இணைய 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். முடிவில் கிளை நூலகர் லட்சுமணசாமி நன்றி தெரிவித்தார்.

    ×