

கன்னியாகுமரி:
தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பை சேர்ந்தவர் செல்வேந்திரன் கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த செல்வேந்திரன் அங்கு பூனையை போன்ற விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தார். அது மரநாய் என தெரிய வந்ததும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர். பிடிபட்ட மரநாய் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக இருந்தது என்று வன ஊழியர்கள் தெரிவித்தனர்.