search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chengam"

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    செங்கம் அருகே மாதா கோவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அல்லியேந்தல் கிராமத்தில் உள்ள தூய லூர்து மாதா கோவில் திருவிழா நடந்தது. நேற்று இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் வழிபட்டனர்.

    வண்ணாரப்பேட்டை தெருவில் வந்தபோது தேரின் உச்சி பகுதி மின் கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

    தேரை இழுத்து வந்த அதே ஊரை சேர்ந்த அன்பரசு (50), ஜெபராஜ் (40), ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பிலோமின் ராஜ் (45) என்பவர் தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயம் அடைந்தார். தேரில் தீப்பொறிகள் பறந்தன.

    இதனைக்கண்ட பொதுமக்கள் சிதறி ஓடினர். அங்கு கூச்சல், அலறல் சத்தம் ஏற்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிலோமின் ராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அல்லியேந்தல் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    பாய்ச்சல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள், முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலப்பாளையம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது, முன்னாள் மாணவர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் ஒருதரப்பினருக்கு ஆதரவாக பேசி சக மாணவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியதோடு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

    ஒருகட்டத்தில் கற்களை எடுத்து சரமாரியாக வீசினார். இதனால் அவ்வழியாக வந்த பொதுமக்கள்,பெண்கள் பள்ளி மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி.குத்தாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர். பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    செங்கத்தில் பலத்த சூறை காற்றுடன் கொட்டித்தீத்த மழையால் வீட்டின் மேற்கூரை மீது முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலியானான்.
    செங்கம்:

    செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 45) இவரது மனைவி கார்த்திகா (37) தம்பதியின் மகன் தனுஷ் (15) 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை செங்கம் பகுதியில் பலத்த சூறை காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. அப்போது தனுஷ் வீட்டின் அருகே இருந்த மரம் முறிந்து அவரது வீட்டின் மேற்கூரை மீது விழுந்தது.

    அந்த மரக்கிளையை அப்புறப்படுத்துவதற்காக தனுஷ் வீட்டின் மேற்கூரை மீது ஏரி மரக்கிளையை பிடித்து தூக்கினார். அப்போது எதிர்பாராமல் மேலே சென்ற மின் கம்பி மீது மரக்கிளை உரசி தனுஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசபட்ட தனுஷ் பலத்த காயமடைந்தார்.

    அவரை மீட்ட உறவினர்கள் செங்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தனுஷ் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணியிலும் சேற்று கனமழை பெய்தது. இதில் மார்க்கெட்டில் இருந்த 3 கடைகள் சேதமடைந்து இன்று காலை இடிந்து விழுந்தது. விடியற்காலை நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்:-

    நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் கட்டிடம் கட்டி 37 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் பெரும்பாலான கடைகளில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த கடைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.

    செங்கம் அருகே 3-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை குழந்தையை எரித்து கொலை செய்தார். இது குறிது போலீசார் அவரை கைது செய்தனர்.
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் விவசாயி (31). இவரது மனைவி வேண்டா (28). இவர்களுக்கு, திவ்யா (10), அர்ச்சனா (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    மீண்டும் கர்ப்பமடைந்த வேண்டாவுக்கு கடந்த 24-ந் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தம்பதியினர் விரக்தியில் இருந்தனர். வேண்டாவுக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி டாக்டர்கள் ஒப்புதல் இல்லாமல் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிவக்குமார் மற்றும் வேண்டா ஆகியோர் வெளியேறினர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நர்சுகள், சிவக்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, சுகாதார துறையின் கவனத்துக்கு டாக்டர்கள் கொண்டு சென்றனர்.

    செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனா சங்கர் தலைமையிலான குழுவினர் பாச்சல் கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை சிவக்குமார் எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

    3-வதும் பெண் குழந்தையாக பிறந்ததால், வறுமையின் காரணமாக பெண் குழந்தையை வளர்ப்பது கடினம் என நினைத்து பச்சிளங் குழந்தையை சிவக்குமார் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

    இதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த டாக்டர் சிந்தனா சங்கர், பாச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே குழந்தை திருமணம் மற்றும் கருக்கலைப்பு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    தற்போது, பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை எரித்துக் கொன்றதை தகவலறிந்த கலெக்டர் கந்தசாமி பாச்சல் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார்.

    3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் கொன்று எரித்ததாக கூறுவது வேதனையானது. வறுமையின் காரணமாக வளர்க்க முடியாவிட்டால் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்திருக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசு கொலை அதிகளவில் நடக்கிறது. அதே போல் பாலினவன்முறை, மைனர் திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன. இதற்கு விழிப்புணர்வு இல்லாததே காரணம்.

    இது தொடர்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.#tamilnews
    ×