search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு"

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளேன்.

    தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    அப்போது, பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி, மிச்சாங் புயல் தாக்கியதை அடுத்து, தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னைதொலைபேசியில் அழைத்தார்.

    வளக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்ட பாரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவி வழங்கிட கோரினேன்.

    பிரதமர் இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசின் ஆதரவையும், வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்ய நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
    • தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மதுரை:

    பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூகநீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது வேதனைக்குரியது.

    தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி விட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

    தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது.
    • தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் அடைந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த வகையில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, வாழ வல்லான் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் ஆய்வு செய்தார். கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.

    இதற்கிடையே உடைப்பு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது குளம் உடைப்பு ஏற்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை பெய்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அடிப்படை வசதிகளான மின் கம்பம் சீரமைப்பு, சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    மழை, வெள்ளத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் சீரமைப்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ரூ.12 கோடியில் கோரம்பள்ளம் குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தில்போது வாகனங்கள் பழுதடைந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம்கள் அமைத்து பாதிக்கபட்ட வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம் அமைத்து சீரமைப்பு பணிகள் நடத்தப்படும் என்றார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    இந்திய உணவுக்கழகத்துக்கு சொந்தமான குடோன் தூத்துக்குடியில் அமைந்து உள்ளது. இங்கு பொது வினியோகத்துக்கான அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படுகின்றன.

    ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அரிசி கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த குடோனில் சுமார் 24 ஆயிரம் டன் அரிசியும், 2 ஆயிரம் டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளநீர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள இந்திய உணவுக்கழக குடோனையும் சூழ்ந்து உள்ளே புகுந்தது.

    இதனால் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. அதேபோன்று கோதுமை மூட்டைகளும் நனைந்து முளைக்க ஆரம்பித்து உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் டன் வரை ரேஷன் அரிசியும், 500 டன் வரை கோதுமையும் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு இந்திய உணவுக்கழக ஊழியர் சங்க செயலாளர் கதிர்வேல் கூறுகையில், 'தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக இந்திய உணவுக்கழக குடோனுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குடோனில் வைக்கப்பட்டு இருந்த அரிசி மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம் அடைந்து உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் டன் வரை சேதம் அடைந்து இருக்கலாம். இதனால் சேதம் அடைந்த அரிசி மூட்டைகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஆனால் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதற்கு இந்திய உணவுக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

    • பெருவெள்ளத்தில் ஆற்றங்கரையோர சாலைகள், கோவில்கள், அரசு அலுவலகங்களும் மூழ்கி பேரிழப்பை ஏற்படுத்தியது.
    • முதுமக்கள் தாழி தகவல் மையத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ந்தேதி முதல் 3 நாட்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்து வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி கோரத்தாண்டவம் ஆடியது. ஏராளமானவர்களின் வீடுகள், உடைமைகளை சேதப்படுத்தி நிர்க்கதியாக்கியது.

    வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரையும் பறித்து தீராத ரணத்தை ஏற்படுத்தியது. பெருவெள்ளத்தில் ஆற்றங்கரையோர சாலைகள், கோவில்கள், அரசு அலுவலகங்களும் மூழ்கி பேரிழப்பை ஏற்படுத்தியது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் சார்பில் ரூ.5 கோடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. அங்கு முதல்கட்டமாக அகழாய்வு நடைபெற்ற இடத்தில் கண்ணாடி இழை பதித்து மாதிரி சைட் மியூசியம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

    தாமிரபரணி ஆற்றங்கரையில் மேடான பரும்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் பெருவெள்ளத்தின் கோரப்பிடியில் தப்பவில்லை. அங்குள்ள அகழாய்வு குழிகளை மூழ்கடித்த பெருவெள்ளம் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால தொல்பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியது.

    முதுமக்கள் தாழி தகவல் மையத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அருங்காட்சியகத்தை சுற்றி அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரையும் சேதப்படுத்தியது. தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் அருங்காட்சியகத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அகழாய்வு குழியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர்.

    இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், "சேதமடைந்த தொல்லியல் பொருட்களை முறையாக பாதுகாக்க வேண்டும். சைட் மியூசியத்தை விரைவில் சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்க வேண்டும். எதிர்காலத்தில் பேரிடரால் சேதமடையாத வகையில் அருங்காட்சியகத்தை நவீன முறையில் அமைக்க வேண்டும்" என்றார்.

    • வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது.
    • சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேதம் அடைந்தது. இந்த வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    எனவே வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை கணக்கீடு செய்து அவைகளுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு சேதமடைந்த வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    அதன்படி நெல்லை மாவட்டம் முழுவதும் இதுவரை 780 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த 780 வீடுகளில் முற்றிலும் சேதம் அடைந்த வீடுகள், பக்கவாட்டு சுவர்கள் இடிந்த வீடுகள் என பல தரப்பிலான சேதங்களும் அடங்கும். இவ்வாறு சேதமடைந்த வீடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது.

    முற்றிலுமாக சேதம் அடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு ரூ.8ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
    • தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்?

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை பேயாட்டம் ஆடி விட்டு சென்றுள்ள பெரு வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது.

    ஏரல் திருவமுதி நாடார்விளை, காமராஜ நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் பெரு வெள்ளம் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் பாதிப்பால் உருக்குலைந்து போய் காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.

    கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீடுகள், வீட்டில் வளர்க்கப்பட்ட கால் நடைகள், வீட்டில் வாங்கி போட்டிருந்த கட்டில், மெத்தை, டி.வி., பாத்திரங்கள் என ஒட்டு மொத்த உடைமைகளையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது.

    இதனால் உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏதாவது வழியில் வெள்ள நிவாரண பொருட்கள், தண்ணீர் கிடைத்தாலும் அது வயிற்றுப் பசியை போக்க போதுமானதாக இல்லை என்றே கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    இதுவரை சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பொருட்களையும் இழந்து விட்டு வாழ வழி தெரியாமலும், வெள்ள பாதிப்பில் இருந்து மீள வழி தெரியாமலும் ஏரல் சுற்று வட்டார பகுதி மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    இனி என்ன செய்யப் போகிறோம்? என்பது தெரியாமல் தவிக்கும் மக்கள் தங்களது எதிர்காலம் என்ன? என்பது தெரியாமலும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்? என்றும் அப்பகுதி மக்கள் புலம்பியபடியே உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளும் இதே போன்று பாதிப்புகளை சந்தித்துள்ளன. நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது போன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக கண்டறிந்து தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

    தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏரல் போன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து கூடுதல் நிவாரண உதவிகளை மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
    • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

    இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடக்கின்றன. தூத்துக்குடியில் மின்சார துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றுபவர் சுதா ராஜ்குமார். இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளன. கணவரும் வெளியூரில் இருக்கிறார். கடந்த 17-ந்தேதி பெரும்வெள்ளத்தில் சுதாவின் வீடும் தப்பவில்லை. அவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளார்.

    இதற்கிடையில் உயர் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு அழைத்ததும் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துணை மின் நிலையத்துக்கு பணிக்கு சென்றார். அன்று முதல் தொடர்ந்து அங்கேயே பணியில் ஈடுபட்டுள்ளார்.

    ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முகாமிட்டுள்ள மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி சுதாவின் பணியை பாராட்டி உள்ளார்.

    தற்போதைய நிலவரம் குறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 95 சதவீதம் மின் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் இன்னும் சில கிராமங்களில் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. தண்ணீர் வடிய வடிய இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் நகர பகுதியில் இன்று மாலைக்குள் நிலைமை சீராகி விடும் என்று எதிர்பார்க்கிறோம். 2,500-க்கும் மேற்பட்ட பணியார்கள் அர்ப்பணிப்புடன் களத்தில் நின்று பணியாற்றுகிறார்கள். ஒவ்வொருவரின் பணியும் பாராட்டுக்குரியது என்றார்.

    உதவி பொறியாளர் சுதா ராஜ்குமார் கூறியதாவது:-

    அண்ணாநகர் 7-வது தெருவில் பக்கிள் ஓடை அருகில் குடியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணி அளவில் வீட்டுக்குள் வெள்ளம் வரத்தொடங்கியது. காலை 7 மணி அளவில் அதிக அளவில் வெள்ளம் சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் குழந்தைகளை கொண்டு விட்டேன். எல்லா இடங்களிலும் நிலைமை மோசமானதால் பணிக்கு அழைத்தார்கள். வீட்டில் இருந்து நடந்தே மின் நிலையத்துக்கு சென்றேன்.

    உயர் அதிகாரிகள் அனைவருமே களத்தில் இருந்து பணியாற்றுகிறார்கள் என்றார்.

    ×