search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கடந்த 6-ந் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
    • தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

    அந்த வகையில் கடந்த 27-ந்தேதி திருச்செந்தூர் அருகே மேலாத்தூர் சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி எம்.பி, அந்த சிறுமியின் அருகே சென்று கண் பார்வை கோளாறு குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் 7-ம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியவர், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும், அதற்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தார்.

    உடனே கனிமொழி எம்.பி., அவ்வளவு தானே சரி செய்துவிடலாம் என நம்பிக்கை பொங்க அந்தச் சிறுமியிடம் பேசி ஊக்கமும் உற்சாகமும் அளித்தார். அதைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் சிறுமி ரேவதி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு கடந்த 6-ந் தேதி அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறுமி ரேவதி 7-ந்தேதி வீடு திரும்பிய நிலையில், ஏரல் தாசில்தார் கோபாலகிருஷணன் சொக்கப்பழங்கரை கிராமத்திற்கு சென்று ரேவதியிடம் நலம் விசாரித்தார். மேலும், கனிமொழி எம்.பி.யும் சிறுமி ரேவதியிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

    இதற்கு பதில் அளித்த அந்த சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவியதற்கு நன்றி கூறியதுடன், தான் வளர்ந்த பிறகு மருத்துவராக பணியாற்றுவேன் எனக் கூறினார். இதனிடையே தங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் இருந்த ரேவதியின் பெற்றோர், சொன்னதை செய்த கனிமொழியால் நெகிழ்ந்துவிட்டனர்.

    இதற்கிடையே பரியேறும் பெருமாள் படத்தில் 'எங்கும் புகழ்' பாடலுக்கு பாடிய ஸ்ரீ வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரது வீடு கனமழையால் சேதமாகி அங்கிருந்த நாஸ்வரம், தவில் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த கனிமொழி எம்.பி. அவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இழப்புகளை பற்றி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு புதிதாக இசைக்கருவிகள் வழங்கப்படும் எனவும் அவர்களிடம் உறுதி அளித்தார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து பேரிழப்பை ஏற்படுத்தியது.

    2 வாரம் கடந்த போது கூட இன்னும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகளில் வெள்ளம் வடிந்த பாடில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை 5 நாட்களுக்கு பெய்யும். தமிழகத்தில் இன்று (5-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    மேலும் 7-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் மழை-வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் ஊடகத்துறை மாநில தலைவர் கோபண்ணா, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், அய்யநாதன், காந்தராஜ், விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் உரையாற்றினார்கள்.

    மாவட்ட செயலாளர்கள் வேலுமணி, சாரநாத், சேத்துபட்டு இளங்கோ, சைதை ஜேக்கப், இளையா, கரிகால்வளவன், அப்புன், சவுந்தர், உஷாராணி, இளங்கோவன், ஞானமுதல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் வரவேற்பு நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தை மேலிட பொறுப்பாளர்கள் நீலவானத்து நிலவன், எழில் கரோலின், தமிழினியன், அப்துர் ரகுமான், முபாரக், செல்வராஜ், செல்லத்துரை, கதிர்நிலவன், இரா.செல்வம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வாக்கு திருட்டு சதியை முறியடிப்போம், மீண்டும் வாக்குச் சீட்டு முறையை மீட்டெடுப்போம் என கோஷமிட்டனர்.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    • தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் உடன்குடி அருகே உள்ள சடைய நேரிகுளம் உடைந்து பல ஊர்களில் தண்ணீர் புகுந்தது. சுமார் 15 அடி உயரத்திற்கு தாழ்வான பகுதியில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.

    பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுமார் 15 நாட்களாக தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையம் இன்று வரை தற்காலிகமாக பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோவில் கலையரங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதே போல பரமன்குறிச்சியில் உள்ள கே. கே.ஆர்.நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி தேங்கியுள்ள வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. அந்தப் பள்ளி வேறு ஒரு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு இன்று வரை செயல்படுகிறது.

    மேலும் தோட்டத்தில் உள்ள தேங்காய்களை அப்புறப்படுத்துவதற்கு கூட விவசாயிகள் மிதக்கும் படகை தயார் செய்து தேங்காய்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே போல பனை மர விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாயம் பயிரிட்ட விவசாயிகள் தங்களது தோட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

    அதிலும் வட்டன்விளையில் உள்ள மக்கள் ஊரை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 4-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் ரூ.6000 நிவாரண நிதிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்படுவதை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
    • தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

    • தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிறப்பு கடன் திட்டம்.
    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி ரூபாய் கடன் உதவி.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் கடந்த 21-ந்தேதி ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு:-

    1. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுது பார்த்தல் ரூ.385 கோடி. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரை வழங்குவது எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

    2. பயிர்ச்சேத நிவாரணம் ரூ.250 கோடி

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும். 3. சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம். இந்த பெருமழையின் காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்து உள்ளனர்.

    அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய இந்த கடன் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரையில் வெளியிடப்படும். 4. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 லட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம். 5. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன்

    6. நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு

    7. சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.

    8. கால்நடைகள் வாங்குவதற்கு கடன் பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 இலட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசிதியாக ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

    9. உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை ரூ.3000

    10. பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் நிரம்பியதால் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவுகளாக காட்சி அளித்தன.

    லட்சக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் தவித்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    தமிழக அரசு சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.1000 என வழங்கப்பட்டது.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.


    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.


    பயனாளிகள் கலந்து கொள்ள வழங்கப்பட்ட டோக்கன்.


    தூத்துக்குடி வெள்ளப்பெருக்கின்போது பாத்திமா நகரை சேர்ந்த ராபின்சிங் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு ஏற்கனவே விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராபின்சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியை விஜய் வழங்கினார்.

    இதேபோல் வீடுகளை இழந்த வள்ளி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், இசக்கி என்பவருக்கு ரூ.50 ஆயிரம், சங்கரன் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வீடுகள் சேதம் அடைந்த 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கினார்.

    மேலும் 5 கிலோ அரிசி, சர்க்கரை, ரவை, கோதுமை, சேமியா, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் வேட்டி, சட்டை, துண்டு ஆகியவற்றை 1,500 பேருக்கு விஜய் வழங்கினார். தொடர்ந்து 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது.

    • மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பிரதான அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏராளமான குடியிருப்புகள் மூழ்கியது. கடுமையான சேதத்தை விளைவித்த இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது அவ்வப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. ஏற்கனவே அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்மழையால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை 10,100 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து சற்று குறைந்தது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றும் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறில் 6.8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3425 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 5,890 கனஅடியும் இன்று காலை நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றும் காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெள்ளம் ஏற்பட இல்லை என்றாலும், முன்எச்சரிக்கையாக மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அந்த பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அந்த மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.

    மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டங்களில் மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை என்றாலும், மழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ×