search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமாவளவன்"

    • பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.
    • ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதியிலும் விடுதலை சிறுத்தை வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளது.

    25 ஆண்டுகளாக அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சி இதை ஒரு மாபெரும் திருப்புமுனையாக கருதுகிறது.

    அதனைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்த மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.

    ஆகஸ்ட் 17-ந்தேதி திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து இதன் மூலம் ஆலோசிக்கப்பட்டது. எப்போதும் போல் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    செப்டம்பர் 17-ந்தேதி மது போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை கள்ளக்குறிச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக இந்த மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தை தீர்மானித்துள்ளது.

    இந்த மாநாடு பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய மாநாடாக ஒருங்கிணைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பெண்களை திரட்டி இந்த மாநாட்டில் பங்கு பெற வைக்க விடுதலை சிறுத்தை இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதே போல கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தீவிரமாக உள்ளார்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை சந்திக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

    எல்லா மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க தொண்டர்கள் இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இப்போதே அதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதற்காக சட்டசபை தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை விடுதலை சிறுத்தை கட்சியில் 44 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே செயல்பட்டனர்.

    இந்த ஆண்டு அதனை 90 ஆக மாற்றி பிற அரசியல் கட்சிகளுக்கு இணையாக மாவட்ட செயலாளர்களை நியமித்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.

    வருகின்ற சட்டசபை தேர்தலை வலுவாக சந்திக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் திருமாவளவன் சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அதன் மூலம் தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் விடுதலை சிறுத்தையை காலூன்ற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முன்னெடுக்கிறார்.

    இதற்கான பணியினை செப்டம்பர் மாத மது ஒழிப்பு மாநாடு முடிந்தவுடன் தொடங்கவும் டிசம்பர் இறுதி வரை மேற்கொள்ளவும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜனவரி மாதம் முதல் "அதிகாரத்தை நோக்கி மக்களோடு திருமா" என்ற சுலோகத்தை மையமாக வைத்து கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. ஜனவரியில் இருந்து திருமாவளவன் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.

    வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கவும் போட்டியிடவும் அவர் இப்போதே அடித்தளம் அமைக்கிறார்.

    கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களை பெற்று அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் விடுதலை சிறுத்தை கட்சி தலித் அல்லாதவர்களுக்கும் பொதுவான ஒரு கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன- திருமாவளவன்

    • மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை.
    • உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,

    2013ல், உச்ச நீதிமன்றம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது: சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாயும், மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். கடந்த 2005ம் ஆண்டு டெல்லியில் ஆசிட் வீச்சுக்கு ஆளான லட்சுமி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆசிட் தாக்குதல்கள் பெரும்பாலும் பெண்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன. காதலை நிராகரித்த, திருமணத்தை மறுத்த, வரதட்சணை வாங்க முடியாத பெண்கள் இந்தக் கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆசிட் வீச்சு வன்முறை பல நாடுகளில் நிகழும் அதே வேளையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், கம்போடியா, உகாண்டா மற்றும் இந்தியாவில் இது அடிக்கடி நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய சட்ட ஆணையம், 2008ல் சமர்ப்பித்த 226வது அறிக்கையில், ஆசிட் வீச்சு வன்முறையை விரிவாகக் குறிப்பிட்டு, அதைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த சட்டம் அடங்கும். ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மற்றும் அமில விற்பனையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. ஆனால், மத்திய அரசு இதுவரை அத்தகைய சிறப்புச் சட்டத்தை இயற்றவில்லை. டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டி, தனது அறிக்கையில் சட்ட ஆணையத்தின் கருத்துக்களை முன்னிலைப்படுத்தி, இந்தப் பிரச்னைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு பாலியல் வன்முறையைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றியது மற்றும் ஆசிட் தாக்குதலைச் சமாளிக்க ஐபிசியில் பிரிவுகள் 326A மற்றும் 3268 ஐச் செருகியது, ஆனால் அமிலத் தாக்குதலைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றத் தவறிவிட்டது.

    இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள பிரிவுகள் 3264 மற்றும் 3268 ஆகியவை இந்தக் குற்றத்தை நிவர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்பதால், ஆசிட் வீச்சுகள் உயிருக்கு ஆபத்தானது என்று உச்சநீதிமன்றம் 2008 தீர்ப்பில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து போலீசார் பிரிவு 307 ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிட் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. ஆசிட் விற்பனையை விஷப் பொருள்கள் சட்டம், 1919ன் கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஆணையிட்டது. இதற்கு அவர்கள் சொந்த விதிகளை உருவாக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படியும், தி வர்மா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆசிட் வீச்சுகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம்.
    • கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் எழுப்பிய கருத்துகளின் உரையில் கூறியிருப்பதாவது,

    1. முதலில், நீட் முறைகேடு குறித்த விவாதத்தின் அவசியத்தை வலியுறுத்த விரும்புகிறேன். NEET-UG 2024 முடிவுகளின் பகுப்பாய்வு, அதிக மதிப்பெண்கள் பெற்ற பல மாணவர்கள் ராஜஸ்தானில் அமைந்துள்ள குறிப்பிட்ட மையங்களில் குவிந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. மறுதேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியம். 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அதிக சதவீத விண்ணப்பதாரர்களைக் கொண்ட 50 நீட்-யுஜி தேர்வு மையங்களில், 37 மையங்கள் ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் மட்டும் அமைந்துள்ளன. 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 30,204 மாணவர்களில், 2,037 பேர் சிகாரைச் சேர்ந்தவர்கள். இந்த அரசு நீட் தேர்வை மறைக்க முயல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் மிக முக்கியமானது.

    2. ஒவ்வொரு உறுப்பினரும் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விவாத மேடையாக பாராளுமன்றம் செயல்படுகிறது. எனவே, சபையில் ஒவ்வொரு உறுப்பினரையும் சமமாக நடத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு 2 முதல் 3 நிமிடங்கள் ஒதுக்குவது நெறிமுறைக்கு புறம்பானது. ஒவ்வொரு உறுப்பினரும் அமர்வு நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் பேசும் நேரத்தையும் நான் வலியுறுத்துகிறேன்.

    3. தற்போது, ஒரு மணி நேர கேள்வி நேரத்தில் வாய்வழி பதில்களுக்காக ஒரு நாளைக்கு 20 கேள்விகள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன, பொதுவாக 5 முதல் 6 கேள்விகள் மட்டுமே விவாதிக்கப்படும். எனவே, கேள்வி நேரத்தை குறைந்தது இரண்டு மணி நேரமாவது நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    4. எல்லை நிர்ணய நடவடிக்கையால், மீனவர் சமூகம் உட்பட பல சமூகங்களுக்கு மக்களவையில் பிரதிநிதித்துவம் இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அவர்களின் படகுகள் கைது செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்படுகின்றன. தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர். மத்திய அரசு அவர்களை இந்திய மீனவர்களாக அங்கீகரிக்காதது வருத்தமளிக்கிறது. இந்த அமர்வில் இந்த விவகாரம் குறித்து சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    5. பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 2023-ம் ஆண்டு இந்தியா மீதான மத சுதந்திர அறிக்கை, சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், கொலைகள், தாக்குதல்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில், உத்தரப் பிரதேச அரசு, கடை உரிமையாளர்கள் தங்கள் அடையாளங்களை பெயர்ப் பலகைகளில் காட்ட வேண்டும் என்று மதப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினரின் நிலை குறித்து சபையில் விவாதம் அவசியம்.

    6. இறுதியாக, எஸ்சி மற்றும் எஸ்டிகளின் நிலை குறித்த விவாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன. NITI ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட SDG அறிக்கை, நாட்டில் சமத்துவமின்மையைக் குறைப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மோசமான தோல்வியைக் குறிக்கிறது. எனவே, இந்த முக்கியமான பிரச்சினையில் விவாதம் அவசியம்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், 'ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசியுள்ள அவர்," கூலி வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உலவுகிற சில அற்பர்கள், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது.

    ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை.

    நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.

    எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.. போராட்டங்களை நடத்தலாம்.. இதனை நான் ஒரு வேண்டுகோளாக உங்களுக்கு வைத்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இது நம்முடைய கட்சியின் தனித்துவத்தை எந்த விதத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

    அரியலூர்:

    அரியலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரெயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    அரியலூர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கட்சி நிர்வாகிகள் என கூறக்கூடாது. அவர்கள் கட்சி, ஜாதி ரீதியாக செயல்படுவதில்லை ஒரு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங்கை என்ன காரணத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டறிவது தான் முக்கியமாகும். எனவே தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இக்கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனில் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில்லை.

    இப்போதும் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது.
    • தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு நடந்து கொள்ளக் கூடாது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆணையின்படி வருகிற 31-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனத்தில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தினம் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு நேற்று ஆணையிட்டது. ஆனால் 'காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் போதுமான மழை பெய்யவில்லையென்றும்; 28 சதவீத அளவில் குறைவாக மழை பெய்து இருக்கிறதென்றும்; அதனால் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் கூறியுள்ள கர்நாடக அரசு, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை வாரியத்திடம் மேல் முறையீடு செய்யப் போகிறோம்' என்றும் கூறி உள்ளது. இது தொடர்பாக கடந்த 14-ந் தேதி அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது.


    கர்நாடகாவில் உள்ள ஹாரங்கி அணையில் 73 சதவீத தண்ணீரும் , ஹேமாவதி அணையில் 55 சதவீத தண்ணீரும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் 54 சதவீத தண்ணீரும், கபினியில் 96 சதவீதம் தண்ணீரும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கட்டின் முழு கொள்ளளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவ்வாறு இருந்தும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என கர்நாடகா அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இந்தப் போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும்.

    காவிரிப் பிரச்சனையை பொருத்தமட்டில் கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் ஒரே நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலோ இதிலும் அரசியல் தான் செய்யப்படுகிறது. இந்த நிலையை மாற்றி கர்நாடகாவைப் போல தமிழ்நாட்டிலும் காவிரி பிரச்சனையில் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    "கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதி களடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி முடி வெடுக்க வேண்டும்" என்று முதலமைச்சரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் இன்று சந்தித்தார். அப்போது அவர்,

    பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளன் கூறுகையில்,

    * தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை கெடுத்து பிரச்சனைகளை உருவாக்க சில கட்சிகள், அமைப்புகள் சதி செய்கின்றன.

    * தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்க சில அரசியல் கட்சிகள் சதி செய்கின்றன.

    * பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையிலும் அரசியல் சதி இருப்பதாக விசிக கட்சி சந்தேகிக்கிறது.

    * ஆம்ஸ்ட்ராங் பலியான சில நிமிடங்களிலேயே பாஜவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என பேட்டி தருகிறார்.

    * எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் விசாரிக்க கூடாது என கூறியது ஏன்?

    * ஆருத்ரா கோல்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் பாஜகவில் பொறுப்பில் உள்ளார்கள் என ஒரு வருடத்திற்கு மேல் பேசப்பட்டு வருகிறது.

    * ஆருத்ரா மோசடியில் தொடர்புடையவர்கள் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க பாஜக வலிந்து கூறுகிறது.

    * கலைஞர் குறித்து கொச்சையாக விமர்சித்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்கின்றனர்.

    * நீட் தேர்வு முறைகேடு உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மறைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

    * புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தம் மேற்கொள்ள ஆணையம் அமைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
    • உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் பேசிய அவர்,

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலை கோழைத்தனமானது, கடும் கண்டனத்திற்குரியது.

    * ஆம்ஸ்ட்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

    * 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

    * ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசிக்க கூடியவர் ஆம்ஸ்ட்ராங்.

    * அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங்

    * உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும்.

    * இதுபோன்ற படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.

    * இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும்.

    * சாமானிய தலித் முதல் தலைவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
    • இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சமூக விரோத கும்பலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

    * ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.

    * சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்று இருந்துவிடாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள், கொலை செய்ய தூண்டியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    * இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    * பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    * பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.
    • அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களைச் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

    அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைவழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழகத்தில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார். சென்னை-பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

    அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    அன்புச் சகோதரர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரையும் உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளை மீட்பதற்கும் இந்திய வெளியுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 25 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளில் மீன் பிடிப்பவர்கள் ஆவர். இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும். இனியும் தாமதிக்காமல் மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
    • மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.

    கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    ×