search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 179048"

    • பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்.
    • திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சிநிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.

    திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.

    • ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும்.
    • அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார்.

    இதற்கிடையே தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    கட்சி தொடங்கிய பிறகு நடைபெற்ற முதல் மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், அது போன்று கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இவரது கருத்தையொட்டியே திருமாவளவனும் சில நாட்களுக்கு முன்பு கருத்துக்களை கூறி இருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அப்போது இருந்த ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கோஷத்தை வலுவாகவே எழுப்பினார். இது தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே விரிசலை ஏற்படுத்துவது போன்ற சூழலையும் உருவாக்கியது.

    இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் என்கிற புதிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தனது பழைய தலைவரான திருமாவளவனை அவர் சந்தித்து பேசினார். இது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதவ் அர்ஜுனா மூலமாக தமிழக அரசியலில் விஜய் கூட்டணி கணக்கை தொடங்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் அரசியல் ஆர்வலர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    ஆதவ் அர்ஜுனா மூலமாக மற்ற கட்சிகளும் விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிக்கும். அடுத்தடுத்த நகர்வுகள் வரும் காலங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பாக அ.தி.மு.க.-தமிழக வெற்றி கழகம் இடையே எதிர்காலத்தில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்திருப்பது கூட்டணி ஆட்சி கோஷத்துக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் உள்ளது.

    ஆனால் ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்து பேசியதன் பின்னணியில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என்று திருமாவளவன் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறி இன்னொரு கட்சியில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் எனது வாழ்த்தும் தேவை என்கிற எண்ணத்தில் அவர் தேடி வந்திருக்கும் இந்த அணுகுமுறையை தமிழக அரசியலில் கற்றுக் கொள்ள வேண்டும்.

    கருத்தியல் ரீதியாக களத்தில் எதிர் எதிர் துருவங்களாக செயல்படக் கூடிய நிலை இருந்த போதும் இது போன்ற நட்புறவை பேணுவது நாகரீகமான அணுகு முறையாகும். ஆதவ் அர்ஜுனா என்னை சந்தித்ததில் எந்த அரசியல் கணக்கும் இல்லை. இதற்கு எந்தவித முடிச்சும் போட்டு பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.

    தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.

    தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியானது.

    இந்நிலையில், திருமாவளவன் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

    அப்போது ஆதவ் அர்ஜூனா கூறுகையில், " தவெக கட்சி தலைவரும் சரி, அண்ணன் திருமாவளவனும் சரி ஒரே கருத்து, ஒரே கொள்கையில்தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிர்துருவம் அல்ல. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் எப்போதுமே இருக்கும். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம்.

    அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அதை செயல்களில் காட்டுவோம்" என்றார்.

    தொடர்ந்து பேசிய திருமாவளவன், " தமிழக அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை ஒரு பகையாக கருதுகின்ற ஒரு பாரம்பரியம் தான் அரசியல் களக்கில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

    ஆனால், ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறக் கூடிய ஒரு சூழல் இருந்த நிலையிலும்கூட, அதை ஒரு பகையாக கருதவில்லை.

    வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக நிறுத்தவில்லை. தான் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படுகிற இந்த சூழலில் உங்களுடைய வாழ்த்தும் எங்களுக்கு தேவை என்று என்னை தேடி ஆதவ் வந்திருக்கிறார் என்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிகமாக நான் பார்க்கிறேன்.

    கருத்தியல் ரீதியாக எவ்வளவு முரண்கள் இருந்தாலும் களத்தில் நாம் எதிர் எதிர் துருவத்தில் நின்று செயல்படக்கூடிய நிலையில் இருந்தாலும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது ஒரு நாகரிகமாக அணுகுமுறை.

    அந்த வகையில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

    • அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.
    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது.

    சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பு சட்ட மரபுகளுக்கே எதிரானதாக இருக்கிறது. ஆகவே தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதனை அறிமுகப்படுத்துகிறபோது கடுமையாக எதிர்ப்புகளை முன்வைத்தோம்.

    அதன் அடிப்படையில் பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்த தலைவர்களை முறையாக பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் கருத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. பலமுறை அவர்களை அந்த கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி இருக்கிறார்கள்.

    மீண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு அரசு பா.ஜ.க. அரசு என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் இந்த விவகாரத்தில் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

    இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அ.தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும்நிலையில் கூட இதுதொடர்பாக பேசுவதில்லை.

    சென்னை ஈ.சி.ஆர். சாலையில் காரில் சென்ற பெண்களை, வேறொரு காரில் சென்றவர்கள் துரத்திச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அவ்வாறு குற்றச்செயல்களை ஈடுபட்டவர்கள் வண்டியில் கட்சி கொடி கட்டி இருப்பதால் அதற்கு கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டக்கூடாது. அவர்கள் மீதான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறினார்.

    • பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.
    • பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது என்றார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள்.

    பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.

    பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள்.

    பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர்.

    அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது பிரபாகரனை ஆதரித்ததுண்டா?

    விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை ஆதரிப்பது ஏன்?

    பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார்.

    இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.

    • 1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது.
    • நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    மொழிப்போர் தியாகிகளை நடராசன், தாளமுத்துவுக்கு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர், நடராசன், தாளமுத்து இருவருக்கும் உருவச் சிலைகள் எழுப்பப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    1937 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு பள்ளிகளில் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்ற ஆணையைப் பிறப்பித்தது. அதை எதிர்த்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தலைமையில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது.

    அந்தப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட மாவீரன் நடராசன் 1939 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சிறையிலேயே உயிர்நீத்தார்.

    அவரைத் தொடர்ந்து 1939 மார்ச் மாதம் 11 ஆம் நாள் தாளமுத்துவும் சிறையிலேயே உயிரிழந்தார். நடராசனின் இறுதி ஊர்வலமும், தாளமுத்துவின் இறுதி ஊர்வலமும் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்றது.

    தாளமுத்துவை அடக்கம் செய்துவிட்டு மூலக் கொத்தளம் இடுகாட்டில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் " விடுதலைப் பெற்ற தமிழ்நாட்டில் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

    இதுவரையிலும் செயல் வடிவம் பெறாமலிருந்த பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பைத்தான் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முன் வைத்தோம்.

    தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்தவர்களைப் பெருமைப்படுத்திவரும் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோளை ஏற்று மொழிப்போர் ஈகியர் நடராசன், தாளமுத்து ஆகியோருக்குச் சிலை எழுப்பிச் சிறப்பு சேர்ப்பது பாராட்டுக்குரியது.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தவாறு அந்தச் சிலைகளைத் தந்தை பெரியார் சிலையோடு சேர்த்து நிறுவ வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    1965 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் போலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இராசேந்திரனின் நினைவு நாள் இன்று( 27.01.2025).

    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் நுழைவு வாயிலில் அவருக்குச் சிலை எழுப்பியுள்ளார்.

    அந்தச் சிலையின் பீடத்தை மேம்படுத்தி அழகுபடுத்த வேண்டுமென்றும், அவரை அடக்கம் செய்த பரங்கிப்பேட்டையில் இராசேந்திரனுக்கு நினைவு மண்டபம் ஒன்றை எழுப்பி அவரது ஈகத்தைப் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.
    • சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.

    சென்னை:

    சென்னை மூலக்கொத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கை ஏமாற்றத்தை தருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்குப்பதிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

    * வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கும் என நம்புகிறோம்.

    * சிபிசிஐடி அறிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. வேங்கைவயலில் போராட்டம் நடத்திய கிராமத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் அச்சுறுத்தி கைது செய்துள்ளனர்.

    * சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்க கூடாது.

    * சம்பவம் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் அனைத்தும் பழையது தான், புதியது அல்ல.

    * தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணை கேட்கிறோம்.

    * தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அவதூறு பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே விடுதலை சிறுத்தைகள் பார்க்கிறது, கண்டிக்கிறது என்றார். 

    • காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
    • வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.

    எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

    வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன.

    அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை.

    தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

    உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம்.

    அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம்.
    • கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி பானை சின்னத்தையும் சமீபத்தில் ஒதுக்கியது. இதையடுத்து விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    சென்னை அசோக் நகர் கட்சி தலைமை அலுவலகத்தில் 24-ந் தேதி மாலை 4 மணிக்கு இந்த விழா நடை பெறுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் வரை தேர்தலை புறக்கணித்து மக்கள் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தது.

    1999-ம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் விடுதலை சிறுத்தை கட்சி இறங்கியது. தமிழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி ஒரு பிரதான அரசியல் கட்சிகளுக்கு இணையாக பணியாற்றி வருகிறது.

    1990-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி கட்சியின் தலைவர் பொறுப்பை திருமாவளவன் ஏற்றுக் கொண்டார். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தை கட்சி வெளி மாநிலங்களிலும் பரவி வருகிறது.

    மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தலித் மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறோம். கர்நாடகாவில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப் பட உள்ளது.

    தென் இந்தியாவில் தலித் தலைமையிலான ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று இருப்பது இதுவே முதல் முறையாகும். திருமாவளவனின் தலைமையை ஏற்று அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பும் பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகத் தமிழர் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
    • தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிய பொங்கல் விழா வெறும் கொண்டாட்டத்திற்கான பண்டிகையாக மட்டும் இல்லாமல்; தமிழ்ச்சமூகத்தின் உயரிய மாண்புகளை மென்மேலும் செழுமைப் படுத்துவதற்கான "பண்பாட்டுக் கூடலாகவும்" விளங்குகிற ஒன்றாகும்.

    தமிழினத்தின் மாண்புகளில் உயரியது " யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் சிந்தனை முதிர்ச்சியாகும். அத்தகைய பக்குவம் , முதிர்ச்சி மென்மேலும் பல்கிப் பெருக வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் , பால் போன்ற அடையாளங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வது, வெறுப்பு அரசியலை விதைப்பது, ஆதாயநோக்கில் அதனைப் பரப்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது தமிழினத்தின் மாண்புகளுக்குப் பெருமை சேர்க்கும்.

    அத்தகைய பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.

    தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம்.

    தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
    • விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

    இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

    அன்புச் சகோதரர் திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார். 



    • வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல.
    • காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று.

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கருத்தியல் விமர்சனங்களை வைப்பது அரசியலில் வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஒரு எல்லையை மீறுவது அரசியல் நாகரீகம் அல்ல. பெரியார் தமிழ்நாட்டு மக்களின் பெருமதிப்பிற்குரிய ஒரு அடையாளம். இன்னும் சொல்லப்போனால் சமூக நீதிக்கான ஒரு தேசிய அடையாளம். இன்றைக்கு விளிம்பு நிலை மக்களால் போற்றக்கூடியவர். அவர் மீது வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்கிற வகையில் விமர்சனங்களை வைப்பது ஏற்புடையது அல்ல. இந்த போக்கை சீமான் தவிர்ப்பது அவருடைய எதிர்காலத்திற்கும் அவருடைய அரசியலுக்கும் நல்லது.

    சனாதன சக்திகள் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் என்கிற பிம்பத்தை உடைப்பதற்கு நொறுக்குவதற்கு பகிரங்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அல்லது துணை போகின்ற வகையில் சீமானின் வாதம் அமைகிறது. அதுவும் ஆதாரமில்லாத விமர்சனங்களாக இருக்கின்றன. இந்த போக்கை அவர் கைவிடவேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

    இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்று அறிவித்துள்ளது அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தையும் ஒதுக்கி உள்ளது. இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை உரிதாக்குகிறோம்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் காங்கிரஸ் திமுக-விற்கு அந்த வாய்ப்பை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்புறவு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு சான்று. திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தீவிரமாக பணியாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

    ×