search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைகள்"

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • கார்த்திகை திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.
    • சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    சுவாமிமலை:

    அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படி, தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரைபடி, சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் சரவணவேல் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் தேரோடும் வீதிகளை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, சாலைகளில் இருந்த சிறிய பள்ளங்களை சிமெண்ட் கான்கீரிட் கொண்டு சீரமைத்தனர்.

    மேலும், இரும்பு தகடுகள் அமைத்தும் சரி செய்தனர்.

    இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி, துணைத்தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

    • பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசாக உள்ளது.
    • போர்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரப்பள்ளி ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்த வழக்கறிஞர் அம்சேந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் ஒன்றியம் மகே ந்திரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் சாலை, தோப்புமேடு முதல் காளியம்மன் கோவில் வரை உள்ள சாலை, காக்கா முக்கூட்டு சாலை குருமாங்கோட்டகம் சாலை,மகேந்திரப்பள்ளி ஊராட்சி,காட்டூர் ஊராட்சி மக்கள் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுவதுமாக மோசமான நிலையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.
    • ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரத்தில் நான்கு வழி சாலையிலேயே ரெயில்வே மேம்பாலம் புதிதாக அமைக்கப்படுகிறது.

    ஆயிரக்கணக்கான வாகனங்கள்

    இதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையானது நெல்லை- தென்காசி பகுதிக்கு செல்லும் பிரதான சாலையாக அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.

    இந்நிலையில் முறையாக சர்வீஸ் சாலைகள் எதுவும் அமைக்காமல் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே தோண்டப்பட்ட சாலையின் கழிவுகளை கொட்டி சர்வீஸ் சாலை அமைத்துள்ளதால் அவை சேரும் சகதியுமாகவும் குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கின்றன.

    இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    இந்த சர்வீஸ் சாலைகளானது வெயில் காலங்களில் புழுதி பறக்கும் சாலையாகவும், மழை காலங்களில் வயல்வெளிகளில் தொழி அடித்திருப்பது போன்று சேரும் சகதியுமாகவும் காட்சியளிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவசரத்திற்கு சாலையில் சென்றால் தவறி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    எனவே மெதுவாக பணிகள் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணி மற்றும் நான்கு வழி சாலை பணிகளில் அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு முறையாக பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறையாக சர்வீஸ் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்
    • ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.

    ஊட்டி நகராட்சி 7-வது வார்டில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊட்டி நகரசபை ஆணை யாளர் ஏகராஜ், ஊட்டி நகரசபை தலைவி வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், நகரசபை கவுன்சிலர்கள் முஸ்தபா, விசாலாட்சி விஜயகுமார், அபுதாகீர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி, துணை அமைப்பாளர் விஜயகுமார், அரசு அதிகாரி கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

    • சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ரோஜா பூங்கா. இதனை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அரசு ரோஜா பூங்கா நுழைவாயில் பகுதியில் இன்டர்லாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கற்கள் முழுவதும் பெயர்ந்த நிலையில் காணப்படுகிறது.

    எனவே பழுதடைந்த இடத்தை கடக்கும்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலா வாகனங்கள் மட்டுமின்றி உள்ளுர் வாகனஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே ரோஜா பூங்கா நுழைவாயில் இன்டர்லாக் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    • ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன.
    • தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.இதைத்தொடர்ந்து லாரிகளில் விவசாயிகள் மண் எடுத்துச் செல்கின்றனர். தினசரி ஏராளமான டாரஸ் லாரிகளில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு தளி கிராம சாலை வழியாக செல்கின்றன. தளி வழியாகத்தான் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன.

    லாரிகளால் இந்த குழாய்கள் உடைந்து சேதம் ஆகின்றன. மேலும் சாலைகளும் விரிசலாகி பழுதாகின்றன. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ,அணையில் இருந்து இடதுபுறம் மொடக்குப்பட்டி சாலை வழியாக செல்லலாம். வலதுபுறம் ஜல்லிப்பட்டி வழியாகவும் உடுமலைக்கு செல்லலாம். தளி கிராம சாலைகள் வழியாக சென்றால் குழாய் உடைத்து சாலை பழுது ஏற்படுகிறது.எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
    • ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை.

    சென்னையில் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்தையே தடுமாற வைத்துள்ளது.

    தொழில் நகரமான அம்பத்தூரில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள் நிறைந்துள்ள போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி.

    இந்த பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க சாலைகளின் ஒரு பக்கம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கத்தில் தனியார் கியாஸ் நிறுவனத்துக்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    ஒரே நேரத்தில் நடைபெறும் இந்த பணிகளால் சாலைகள் குறுகி குண்டும் குழியுமாகிவிட்டன. சாலைகள் இருந்த இடமே தெரியாமல் செம்மண் பகுதியாக காட்சி அளிக்கிறது.

    கள்ளிக்குப்பம், கடப்பா சாலை, மதனங்குப்பம் சாலை, கருக்கு சாலை, பட்டரைவாக்கம் சாலை, கொரட்டூர் சாலை, தொழிற்பேட்டை - திருவேற்காடு சாலை ஆகிய சாலைகள் படுமோசமாக காட்சி அளிக்கின்றன.

    லேசான தூறல் விழுந்தாலே இந்த பகுதி சேறும் சகதியுமாகி விடுகிறது. இந்த வழியாக பள்ளிகளுக்கு நடந்தும், சைக்கிள்களிலும் செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்கள் மழை நேரங்களில் பள்ளம் தெரியாமல் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாகிவிட்டது.

    கலெக்டர் நகர் சந்திப்பு, இளங்கோ நகர் சந்திப்பு, மங்கல் ஏரி பார்க் சந்திப்பு ஆகிய பகுதிகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக கிடக்கின்றன. இந்த பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பே மெட்ரோ வாட்டர் பணிகள் முடிந்தும் பள்ளங்களை மூடி தார் சாலைகள் அமைக்கவில்லை. சில இடங்களில் நிரப்புவதற்கு மண்கூட இல்லை.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "ஓடை தோண்டும்போது ஒரு லாரி மண்ணை ரூ.2 ஆயிரம் விலைக்கு விற்று விடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள் உடந்தையாக இருக்கிறார்கள். குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகும், கால்வாய் கரைகள் கட்டப்பட்ட பிறகும் மூடுவதற்கு போதுமான மண் கிடைப்பதில்லை. இதனால் அரை குறையாக மூடி போடுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது" என்றார்கள். சில இடங்களில் பணிகள் முடிந்தும் சாலையை சீர மைக்கவில்லை. இவ்வளவு முக்கியமான பகுதியில் சாலைகளை மாதக்கணக்கில் இப்படி போட்டிருப்பது சரி தானா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    குறிப்பிட்ட அளவு தூரத்துக்கு பணிகள் முடிந்ததும் அந்த பகுதியில் சாலைகளை சீரமைத்து விட்டு அடுத்தக்கட்டமாக தொடரலாமே என்கிறார்கள் பொது மக்கள்.

    திரு.வி.க.நகரில் இருந்து மூலக்கடை வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. கூவத்தில் கொண்டு இணைக்க பிருந்தா தியேட்டர் அருகே பணிகள் நடக்கிறது. மாதக்கணக்கில் நடக்கும் இந்த பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கி உள்ளது.

    5 நிமிடங்களில் திரு.வி.க. நகருக்கு செல்லக்கூடியவர்கள் சந்து பொந்துகளில் நுழைந்து நெரிசலில் சிக்கி படாதபாடு பட்டு சுமார் ஒரு மணி நேரமாகிறது. நெரிசல் மிகுந்த சாலையால், மாலை நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    கோடம்பாக்கம் ஆற்காடு சாலை மெட்ரோ ரெயில் பணிகளால் ஏற்கனவே மேடு பள்ளங்களாக கிடக்கிறது. இதற்கிடையில் உட்புற பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்டதால் பாத சாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சுமார் 3 வருடங்களாக சிரமப்பட்டு வருவதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

    மெயின் ரோடு மட்டுமில்லாமல் உட்புற சாலைகளையும் குண்டும் குழியுமாக்கி பணிகளை முடிக்காமல் போட்டு இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தெருச்சாலைகள் வழியாக மெயின் ரோட்டுக்கு வர சிரமப்படுகிறார்கள். மெயின் ரோட்டிலும் மெட்ரோ பணிகள் நடப்பதால் போக்குவரத்து சுற்றி சுற்றி விடப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த சிறு மழையில் கூட காந்தி ரோடு, முரளி கிருஷ்ணாநகர் மெயின் ரோடு முழுவதும் சகதி மற்றும் குளம்போல் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

    சில சாலைகளின் நடு பகுதியிலேயே தோண்டி கழிவுநீர் குழாய்கள் பதிக்கும் வேலைகள் நடப்பதால் அந்த பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் கூட செல்வது சிரமமாக இருப்பதாக கூறினார்கள்.

    வளசரவாக்கம் பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதும் பெரும்பாலும் அனைத்து ரோடுகளிலும் மெட்ரோ வாட்டர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்காக ஓடைகள் தோண்டப்பட்டன. சில பகுதிகளில் பணிகள் முடிந்தும் முறையாக மூடப்படாததால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

    பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலைகளின் நடுவே ராட்சத தூண்கள் அமைக்கப்படுவதால் போரூரில் இருந்து கோடம்பாக்கம், வடபழனி செல்லும் கனரக வாகனங்கள் அம்பேத்கர் சிலை, கே.கே.நநகர், வளசர வாக்கம் பகுதிகளில் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    அதேநேரம் வளசர வாக்கம், மேட்டுக்குப்பம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் உட்புற சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ள இரு சக்கர வாகனங்கள், கார்கள் அந்த பகுதிகளில் நடந்து வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

    பரங்கிமலை - மேடவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக சாலையின் நடுவே தூண்கள் அமைக்கப்படுவதால் இரு பக்கமும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்காக குறுகிய பாதைகள் உள்ளன.

    இந்த பாதைகளை தார் போட்டு சீரமைத்து கொடுக்காததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேடவாக்கம் கூட்டு ரோடு அருகில் சாலை இருந்த அடையாளமே இல்லாமல் செம்மண் பாதையாக குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்துக்களில் சிக்குகிறார்கள்.

    சோழிங்கநல்லூர், சிறுசேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலர் இந்த வழிகளில் இரவு நேரத்தில் வருவது வழக்கம். ஒரு பக்கம் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் சாலைகளை அமைத்து கொடுப்பது நல்லது.

    • அடிக்கல் நாட்டு விழாவுக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார்.
    • நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. உடையாம்புளி காமராஜர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரி வண்ணமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் சுபாஷ் சந்திர போஸ், ஓடை மறிச்சான் ஊராட்சி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் இசக்கிமுத்து, தி.மு.க. நிர்வாகிகள் சந்தன சுப்பிரமணியன், சந்தனமுத்து, இசக்கிமுத்து, மாசாணம் , முத்துக்குட்டி, அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் ஒன்றிய கிழக்கு பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகளை சாத்தூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய ஊராட்சி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நல்லம நாயக்கன்பட்டி ஊராட்சி பானாங்குளம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு மற்றும் ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள வரகுண ராமபுரம் பெருமாள் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நிதியிலிருந்து புதிதாக போடப்பட்ட வாறுகாலுடன் கூடிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மேலும் வரகுண ராம புரம் சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்குள்ள பணி செய்யும் செவிலியரிடம் கிராம மக்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் எவ்வாறு சென்று சேர்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ராஜபாளை யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லாங்குழி போல் மாறிய சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்துனர்.
    • இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கூடலூர்

    கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் வந்து செல்கின்றன.

    இந்த நிலையில் கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மோசமான பள்ளங்களை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் சீரமைத்த இடங்களில் சாலை மீண்டும் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்லாங்குழி போல் உள்ள சாலையில் பயணம் செய்வதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை சாலை காணப்படுகிறது.

    மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

    • புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது.
    • எம்.எஸ்.எம். ஆனந்தனை ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியில் ஊராட்சி பொது நிதியிலிருந்து புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, நமக்கு நாமே திட்டத்தில் பச்சாங்காட்டு பாளையம் ராஜேஷ் நகரில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, மீனாம்பாறையில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை புதிய கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.81 லட்சம் மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் பணிகளை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், துணைத் தலைவர் கார்த்திகா மகேஸ்வரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், வடக்கு ஒன்றிய இளைஞரணி கோவிந்தராஜ் மற்றும் கரைப்புதூர் ராமமூர்த்தி, விஸ்வநாதன், ஹரி, மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிமுக., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து குன்னாங்கல் பாளையத்தில் புதிதாக சாயத் தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஏற்கனவே, முதல்வர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    ஆனால் சாய ஆலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனை குன்னாங்கல்பாளையம் ஊர் மக்கள் சந்தித்து சாய ஆலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர். மேலும் புதிய சாய ஆலை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டி மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசுவதாகவும், அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், மற்றும் சாய ஆலை நிர்வாகத்தினரை வைத்து ஒரு அமைதி கூட்டம் நடத்தி அதில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

    ×