என் மலர்
நீங்கள் தேடியது "வைகோ"
- தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.
திருச்சி:
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களை கொண்டு மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளர். இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை.
தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.
- வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
- வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து விலகிய மல்லை சத்யா திராவிட வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். தற்போது மாவட்டம் வாரியாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டு வருகிற 20-ந்தேதி நீலாங்கரையில் கட்சியின் தலைமை அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் மல்லை சத்யா தி.மு.க. கூட்டணியில் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருந்தாலும் கூட அதில் சேர்ந்து களப்பணி ஆற்றவே அவர் விரும்புவதாக தெரிகிறது. வருகிற 28-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளார். எழும்பூரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திராவிட வெற்றிக்கழகம் தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கான முடிவை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை.
கோவை:
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.
11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.
கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.
அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.
ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உ யர்மட்டக்குழு உறுப்பினர்மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது
- கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 - 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே!
இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். இதுவரை பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
புவிசார் பதற்றங்கள், வர்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டு 2027 ஏப்ரல் மாதம் தான் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமெரிக்க வரி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதற்கான விடை இல்லை.
வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும் 6 துறைகள் என கூறப்பட்டிருப்பது புதிது அல்ல. முந்தைய நிதிநிலை அறிக்கைகளிலும் இடம்பெற்றவையே. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7 இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்?
பாஜக அரசின் 12 ஆண்டு காலத்தில் பணவீக்க விகிதம் நிலையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
மாநிலங்களுக்கு 16 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பகிர்வு 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறை தொடர்கிறது.
உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தொழில்துறை சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வாகன உற்பத்தி தொழில் துறைக்கான வரி உயர்வு என்பது வாகன உற்பத்தி கேந்திரமான தமிழ்நாட்டிற்கு இழப்பாகும்.
நாட்டின் ஜவுளித் துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் ,கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை. வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. மேலும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 10 ஆயிரம் கோடி என்பது சொற்ப தொகையே.
சென்னை - பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை.
கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
- ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது.
- ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார்.
பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார். ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை; ஒலிவாங்கி நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஆளுநர் அலுவலகம் உண்மைக்கு மாறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மேலும், ஆளுநர் மாளிகையின் அறிக்கை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கை போலவே இருக்கிறது. மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துக்களை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டுவர தி.மு.க. நடவடிக்கை எடுக்கும் என்றும், இதற்காக, நாடு முழுவதும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. செயலாற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
- கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.
அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
- நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார்.
- கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.
மதுரை:
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
அப்போது வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விஜய் அரசியலில் சாதித்து விடலாம் என மணல் கோட்டை கட்டுகிறார். ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எத்தனை தொகுதியில் போட்டி என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.
துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தனது 82 வயதில் நடைபயணத்தை அறிவித்தார். இதற்கு டாக்டர்கள் மறுத்தபோதிலும் அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் போது அவர் சிரமப்பட்டார். ஆனாலும் அவரின் சுயநலத்திற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. வைகோவின் தியாகத்தை கொச்சைபடுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல என்றார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். மாட்டுத் தாவணியில் அவருக்கு கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண் டார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார். அதனை தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
- அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
- ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
மதுரை:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து இன்று 7-வது நாள் சமத்துவ நடைபயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருங்காலக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும்.
மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆணவம், அகம்பாவமிக்க வார்த்தைகளை தமிழ்நாட்டு மண்ணிற்கு வந்து சொல்லிவிட்டு போகின்ற துணிச்சல் வந்துள்ளது. வியர்வை ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திராவிட கோட்டை வெறும் எக்கு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் சதையால் பாதுகாக்கப்பட்டன.
'ஜன நாயகன்' திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல விஜயின் படத்துக்கும் நடந்திருக்கக்கூடும். திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை.
நாங்கள் இதுவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு சொல் கூட, தப்பி தவறி பேசியது கூட கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நேற்று வரை வைக்கவில்லை இனியும் வைக்க மாட்டோம் என்றார்.
- மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
- வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.
திருச்சி:
சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-
பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.
108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.
அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.
அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
- கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும்.
* போதையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
* போதைப்பொருளை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓரளவு பலன் கிடைத்துள்ளது.
* போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் ஒழிக்க முடியும்.
* நாட்டின் எல்லைகள் வழியாக போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.
* திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான போதைமாத்திரைகள் பிடிப்பட்டுள்ளது.
* போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* போதையை புகழ்வது போன்ற காட்சிகளை எடுப்பதை ஏற்க முடியாது.
* இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும்.
* பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும்.
* பிள்ளைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும், பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.
* சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள்.
* கிறிஸ்துமஸ் விழாவின் போது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
* ஊரே ஒற்றுமையாக இருந்த காலம் போய், மத மோதல்களை உருவாக்க சிலர் திட்டம் தீட்டுகிறார்கள்.
* மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
* வைகோவின் நோக்கம் பெரிது என்றாலும், அவரது உடல் நிலை எங்களுக்கு பெரிது என்றார்.
- கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
- கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
திருச்சியல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் விழாவில் பேசியதாவது:-
* 2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.
* தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ.
* வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது.
* வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.
* தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார்.
* 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர்.
* கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
* கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ.
* திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும்.
* இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது.
* சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார்.
* முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார்.
* நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
* இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும்.
* இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார்.
- இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார்.
- தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார்.
திருச்சி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில் தி.மு.க. கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.
அதேபோல் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ள நிலையில் பொங்கலுக்கு பிறகு முக்கிய கட்சிகள் இணைந்து பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் பணியும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். போதைப்பொருளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் அடிமையாவதை தடுக்கவும், அதேபோன்று தற்போது சாதிய மோதல்கள், மத மோதல்களை தமிழகத்தில் உருவாக்க சிலர் பார்க்கிறார்கள்.
அதை தடுப்பதற்கு மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சகோதரர்களாக ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி 2026 ஆண்டிலும் தொடரவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நடைபயணம் செல்வதாகவும் வைகோ அறிவித்து இருந்தார்.
மேலும் இந்த பயணம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்றும் அவர் கூறினார். முன்னதாக திருச்சியில் இன்று நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்குமாறு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, வைகோ நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை.வைகோ அழைப்பிதழ் வழங்கினார்.
அதன்படி வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா இன்று திருச்சி தென்னூர் உழவர்சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர், கோவி செழியன், கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமான நிலையத்தில் இருந்து நடைபயண தொடக்க விழா நடைபெற்ற தென்னூர் உழவர்சந்தை வரை ரோடு-ஷோ சென்று மக்களை சந்தித்தார். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு இருந்தன. அங்கு காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் கைகுலுக்கியும், செல்பியும் எடுத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
9 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் பயணித்தும், நடந்து சென்றும் ரோடு-ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று 200 மீட்டர் தூரத்திற்கு ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழா நடைபெறும் மேடைக்கு வந்தார்.
இதையடுத்து நடைபெற்ற வைகோவின் சமத்துவ நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை தாங்கினார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வரவேற்றார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கவுன்சிலர் சுரேஷ், சிவா, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதையடுத்து நடைபயணத்தை தொடங்கிய வைகோ, அங்கிருந்து அண்ணா நகர் கோர்ட்டு ரோடு, மேஜர் சரவணன் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், அரிஸ்டோ மேம்பாலம், கிராப்பட்டி மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் வழியாக பஞ்சப்பூர் சென்று முதல் நாள் பயணத்தை முடித்து அங்குள்ள தனியார் அரங்கில் தங்குகிறார்.
இந்த நடைபயணம் வருகிற 12-ந்தேதி மதுரையில் நிறைவு பெறுகிறது. தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறார். இந்த நடைபயணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழகம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான ம.தி.மு.க.வினர் வாகனங்களில் வந்து தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.






