search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம்"

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • தீ விபத்தில் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

    பின்னர், விபத்து குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக மிகுந்த கவலை அடைகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். சிறிய காயம் அடைந்தோரும் தலா ரூ.20 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

    தீ விபத்தில் சேதடைந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் அரசு கொள்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

    மேலும், தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. குடியிருப்பு பகுதியில் இந்த தொழிற்சாலை எப்படி இயங்கியது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விரைவில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • கனமழை, வெள்ளத்தால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • மின் ஊழியர் உயிரிழந்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    தூத்துக்குடி வெள்ளத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆத்திக்கண்ணு என்ற மின் ஊழியர் மின்கம்பத்தை பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், தூத்துக்குடி பகுதி-1 கிராமம், அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஆத்திக்கண்ணு என்பவர் நேற்று, கனமழையினால் சேதமடைந்த கிருஷ்ணராஜபுரம், ஐந்தாவது தெருவில் உள்ள மின்கம்பத்தினை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



     


    • மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
    • வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னை யில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளேன்.

    தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    அப்போது, பிரதமர் மோடியிடம் வெள்ள பாதிப்புகளை எடுத்துரைத்து உடனடியாக நிதியை விடுவிக்க கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி, மிச்சாங் புயல் தாக்கியதை அடுத்து, தென் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் குறித்து விசாரிக்க என்னைதொலைபேசியில் அழைத்தார்.

    வளக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மாநில அரசு மேற்கொண்ட பாரிய மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அவருக்கு விளக்கி, மத்திய அரசிடம் இருந்து உடனடி நிதி உதவி வழங்கிட கோரினேன்.

    பிரதமர் இந்த இரட்டை பேரிடர்களை சமாளிக்க மத்திய அரசின் ஆதரவையும், வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்ய நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.
    • உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    அறந்தாங்கி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரூர் ஊராட்சி இளம்பாவயல் கிராம பகுதியில் 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

    இதில் பழனிகுமார் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டின் சுவர்கள் வலுவிழந்து காணப்பட்டது. இதனை அறியாத பழனிக்குமார் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழத்தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். சிறிது நேரத்தில் வீட்டின் அனைத்து சுவர்களும் மளமளவென இடிந்து விழுந்து வீடு தரைமட்டமானது.

    உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்ததால் பழனிகுமாரின் குடும்பத்தினர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    விவசாய கூலி வேலை பார்க்கும் பழனிக்குமார் வீட்டை இழந்ததால் இருக்க வீடு இன்றி தனது குடும்பத்துடன் அக்கம் பக்க உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். உடனடியாக அரசு கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணெய் கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டி போட்ட மிச்சாங் புயல், எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாக சிதைத்துள்ளது என்றே கூறலாம். தாளங்குப்பம், நெட்டுக் குப்பம், எண்ணூர் குப்பம், காட்டுக்குப்பம், சின்னக் குப்பம், முகத்துவாரம் குப்பம், சடையங் குப்பம், சிலிகர் பாதை கிராமம் ஆகிய 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

    இந்த கிராமங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மீனவர்களும் தங்களது படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இனி என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துப்போய் உள்ளனர். மீனவர்கள் பயன்படுத்தி வந்த 797 படகுகளும், வலைகளும் எண்ணை கழிவு மற்றும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இதன் மூலம் ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 797 பைபர் படகுகள் மீன்பிடி வலைகள் சேதமாகி இருப்பதன் மூலம் ரூ.4 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீன்பிடி படகுகளை சீரமைத்து பயன்படுத்துவதற்கு பெரும் தொகை செலவாகும் என்பதால் அரசின் நிவாரண உதவிக்காக மீனவர்கள் காத்திருக்கிறார்கள். எண்ணை கழிவுகளில் மூழ்கிய வலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருப்பதாகவும், எனவே மீன்பிடி வலைகளை புதிதாகவே வாங்க வேண்டி உள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தமிழக அரசின் மீன்வளத்துறை சார்பில் சேதமான படகுகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், வலைகளுக்கு ரூ.5 ஆயிரம் என 15 ஆயிரம் வரையில் நிவாரணம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேத மதிப்புகளை கணக்கிட்டு மீனவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படும் என்றும், இது தொடர்பாக தமிழக அரசு உரிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே எண்ணை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்த போதிலும் நேற்று முதலே அப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இன்று 2-வது நாளாக படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணை கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்களின் மூலமாக நேற்று தொடங்க இருந்த பணிகள் நடைபெற வில்லை. இன்று அந்த பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடற்கரையோரமாக குவிந்து கிடக்கும் காய்ந்த எண்ணை கழிவுகளும் பொக்லைன் எந்திரம் மூலமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்து எண்ணைக் கழிவுகள் முழுவதையும் அகற்றி இயல்பு நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் வரை ஆகும் என்று மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அதற்கு முன்னரே எண்ணை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி ரமேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 15-ந்தேதி திரளானோர் விவசாய கருவிகளுடன் பேரணியாக சென்று பொன்னேரி சார் ஆட்சியர், வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    ×