search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Damage"

    • ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    • கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தென் மாவட்டங்களில் இன்று முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் தண்ணீர் பாய்ந்து ஓடியது. இன்று காலை முதலே வானம் மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காலை 8.30 மணி முதல் சாரலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. இதனால் பணிக்கும், அலுவலகங்களுக்கும் புறப்பட்டு சென்றவர்கள் அவதி அடைந்தனர். ஏரலிலும் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    உடன்குடி மற்றும் சுற்றுப்புறபகுதியான பரமன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மாதவன்குறிச்சி, கொட்டங்காடு, செட்டியாபத்து. லட்சுமிபுரம், மருதூர்கரை, பிச்சிவிளை, வட்டன்விளை, சீர்காட்சி ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஆகியோர் பயணம் செய்ய கடும் சிரமப்பட்டனர். இதனால் முக்கியமான பஜார் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேபோல் மெஞ்ஞானபுரம், செம்மறிகுளம், வள்ளியம்மாள்புரம், நங்கைமொழி, மாநாடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.


    மெஞ்ஞானபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள விஜிகுமரன்நகர் பகுதியில் தேங்கிய தண்ணீரை 3 மின் மோட்டார் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதே போல் ஷாலோம் நகரில வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இந்த தண்ணீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை பஞ்சாயத்து தலைவர் கிருபா ராஜபிரபு செய்து வருகிறார். கடந்த மாதம் பெய்த கனமழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து 25 நாட்கள் ஆகியும் சில இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் சுமார் 100-க்கு மேற்பட்டோர் நிவாரன முகாம்களிலும், சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று திடீரென பெய்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளில் மேலும் கூடுதலாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

    • பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக் கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    'மிச்சாங்' புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த பலத்தமழையால் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மி டிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி மற்றும் ஆவடி ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 850 ரேஷன் கடைகளில், 4 லட்சத்து 94 ஆயிரத்து 156 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    இதில், அரிசி கார்டுதாரர்களான 4 லட்சத்து 65 ஆயிரத்து 118 பேருக்கு, ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்கினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 226 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காதோர், வயதானோரின் கைரேகை பதிவாகாததால், பொருட்கள் வாங்க முடியாதவர்களுக்கு, நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நிவாரணத்தொகை கிடைக்காதவர்கள் நிவாரணத் தொகை கேட்டு மனுவாக அளித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காக்களில் மொத்தம் 86 ஆயிரத்து 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் அனைத்தும் அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் இறுதிக்கட்ட விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஒருவர் கூறும்போது, தகுதி உள்ள மனுக்களின் விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வெள்ள நிவாரணத்தொகை ரூ. 6 ஆயிரம் வரவு வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதி கனமழையின் காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் எனவும், லேசான பாதிப்பு உள்ள வட்டங்களுக்கும் மற்றும் குமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு காரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதனையடுத்து மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் கணக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் சுமார் 4 நாட்களில் முற்றிலுமாக முடிக்கப் பட்டது.

    அதன்பின்னர் 3 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீடுகளை இழந்தவர்கள், பயிர்கள் சேதம், கால்நடைகள் இறப்பு உள்ளிட்டவைகளும் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 815 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணமும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 542 ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் பாதிப்புள்ள பகுதிகளில் 508 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 53 ரேஷன் கார்டுகள் உள்ளன. குறைந்த பாதிப்புள்ள பகுதிகளில் 449 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 614 ரேஷன் கார்டுகளும் உள்ளன. இவர்களுக்கு வீடு வீடாக டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி ரேஷன் கடை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    நேற்று முன்தினம் தொடங்கி இன்று 3-வது நாளாக டோக்கன்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்ற னர். அந்த டோக்கன்களில் நிவாரண தொகை பெறுவ தற்கு நாளை முதல் அதாவது 29-ந்தேதி முதல் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் ரேஷன் கடைகளில் சென்று ரொக்கமாக நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றுடன் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடையும் நிலையில் நாளை (வெள்ளிக் கிழமை) காலை முதல் பொதுமக்கள் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பணத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டுறவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதன்படி ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக வந்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தது 800 முதல் 1200 ரேஷன் கார்டுகள் வரை இருக்கும் என்பதால் ரூ.1000 வழங்கும் கடைகளுக்கு ரூ.10 லட்சம் வரை தேவைப்படும்.

    எனவே கடைகளில் பணம் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் இன்று மாலை அனைத்து கூட்டுறவு வங்கி செயலாளர்களுடன், கூட்டுறவு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    அதன்முடிவில் எவ்வாறு நிவாரண தொகையை வழங்குவது, கூட்ட நெரிசலை சமாளிப்பது எப்படி என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை ரேஷன் கடைகளில் இந்த தொகை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.
    • காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 1½ லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றது.

    இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் பல்வேறு குளங்க ளில் உடைப்பும் ஏற்பட்டது.

    தூத்துக்குடி, கோரம் பள்ளம் உடைந்ததால் மாநகரில் உள்ள ஆயிரக் கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதே போல் இரு மாவட்டங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி அளித்தது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 515 பாசன குளங்களில் 720-க்கும் மேற்பட்ட இடங்களில் மதகுகள் உடைந்து சேதம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கியது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர்.

    மீட்பு பணிகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டனர்.

    எம்.சி. அடி கொள்ளளவு கொண்ட கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தால் 4 டி.எம்.சி. தண்ணீர் பாயந்தோடியது. வழக்கமாக குளத்தில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படும் நிலை யில் 46 ஆயிரம் கன தண்ணீர் அங்கிருந்து சென்றது.

    இதனைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட நீர்வளத்துறை என்ஜினீயர்கள் இந்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இரண்டு மாவட்டங்களிலும் உடைப்பு ஏற்பட்ட 720 பகுதிகளில் மதகுகளை சீரமைக்கும் பணிகளில் தலைமை பொறியாளர்கள் பிரிவில் உள்ள 3 மூத்த அதிகாரிகள் தலைமையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எந்திரங்களை கொண்டு சீரமைப்பு பணிகளை இரவு- பகலாக நடத்தி வருகிறார்கள். பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் அனைத்து பணிகளையும் நாளைக்குள் (வெள்ளிக் கிழமை) முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சராசரி மழை அளவு 650 மில்லி மீட்டர். ஆனால் டிசம்பர் 15-ந்தேதிக்குள் ஆண்டு மழையில் 75 சதவீதம் பெய்துள்ளது.

    டிசம்பர் 17-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகளவு கனமழை பெய்தது.

    இந்த மாவட்டத்தில் சராசரியாக 36 சென்டி மீட்டர் பதிவானது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் 1½ லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    தாமிரபரணியில் காட்டாற்று வெள்ளம் கீழ்நோக்கி பாய்வதற்கு பதிலாக பக்கவாட்டாகவும், இருபுறமும் கரைபுரண்டு ஓடியது. கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வழக்கமாக ஆற்றில் மழை நீர் வடிந்து செல்வதை தடுத்து ஸ்ரீவைகுண்டத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தமுள்ள 3 ஆயிரம் குளங்களில் 3-ல் ஒரு பங்கு குளங்கள் மட்டுமே 17-ந்தேதிக்கு முன்பு நிரம்பி இருந்தது. ஆனால் பெரு வெள்ளத்திற்கு பின்னரே அனைத்து குளங்களும் முழுமையாக நிரம்பின.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் அதிக நீர் இருப்ப தால் குளங்களின் உடைப்புகளை சீரமைத்த பிறகு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.
    • அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பை இப்போதுதான் முழுமையாக அறிந்து கொள்ளும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.

    இந்நிலையில் ஆறுமுகநேரி அருகே வெள்ளத்தின் நடுவே உயிருக்கு போராடிய பலரை 12 மணி நேரம் போராடி படகு மூலம் அவர்களை மீட்ட நிகழ்வு 'திக்திக்' திகில் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்துள்ளது.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    அந்த 'திடீர்' மழை கடந்த 17-ந்தேதி தொடங்கி மறுநாள் விடியும் வேளை. காயல்பட்டினத்தின் கடற்கரை பகுதியான சிங்கித்துறை மீனவர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் ஆக்ரோசமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

    தங்களின் உயிரையும் முடிந்த வரையிலான உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள மக்கள் போராடிக் கொண்டிருந்தனர். தொலைத்தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முந்தைய கடைசி தருணம் அது.

    அப்போது அங்குள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் இருந்து அவசர போன் அழைப்பு வந்துள்ளது. அதில், 'ஆறுமுகநேரிக்கும் ஆத்தூருக்கும் இடையில் உள்ள தண்ணீர்பந்தல் என்கிற குக்கிராமத்தில் அனைத்து வீடுகளும் மூழ்கிய நிலையில் அங்குள்ள மக்கள் மொட்டை மாடியில் நின்று உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு படகு தேவைப்படுகிறது. அதற்கு உடனே ஏற்பாடு செய்யவும்.

    அங்கிருந்து படகையும் படகை செலுத்துபவர்களையும் ஆறுமுகநேரிக்கு ஏற்றி செல்ல மினி லாரி வந்து கொண்டு இருக்கிறது' என்று அந்த அதிகாரி பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.

    இந்த தகவலை அறிந்ததும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவரான யாசர் அராபத் (39) தனது தந்தை சீனிக்கனி உள்ளிட்ட 15 பேரை திரட்டி படகுடன் தயார் நிலையில் இருந்துள்ளார். ஆனால் படகையும் ஆட்களையும் ஏற்றி செல்ல வேண்டிய வாகனம் வழியில் ஆங்காங்கே வெள்ளத்தால் ஏற்பட்ட இடையூறுகளை தாண்டி சிங்கித்துறைக்கு வருவதற்கு மாலை நேரம் ஆகிவிட்டது. இதன்பின் உடனடியாக படகும் மீட்பு குழுவான அந்த மீனவ நண்பர்களும் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இவர்களின் வரவை எதிர்பார்த்தபடி ஆறுமுகநேரி போலீஸ் செக்போஸ்ட் அருகே அரசு அதிகாரிகள் தவிப்பு நிலையில் இருந்துள்ளனர். ஆனால் இதற்குள் இருட்டிவிட்டது. பேய் மழையும் தனது வீரியத்தை சற்றும் குறைத்துக் கொள்ளவில்லை.

    இதனால் மீட்பு பணியின் முயற்சியை மறுநாள் விடிந்த பிறகு தான் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கேயே காத்திருந்து சூரிய வெளிச்சம் பரவ தொடங்கியதும் பார்த்தபோது தான் தெரிந்தது நிலைமையின் விபரீதம்.

    சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிலான வயல் பகுதிகள் முழுவதும் சுனாமி அலைபாயும் கடல் போல வெள்ளத்தால் மிரட்டி கொண்டிருந்தது.

    இந்த சவாலை சந்திக்க சிங்கித்துறை மீனவர் குழுவினர் தயாராகினர். தங்களின் படகை சாலையில் இருந்து வயல்வெளி வெள்ளத்திற்குள் இறக்கி தங்கள் இலக்கை நோக்கி லாவகமாக பயணிக்க தொடங்கினர்.

    ஆனால் அந்த பயணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான ஆபத்தை உணர்த்தி எச்சரிக்கை செய்தது. வெள்ள நீரின் ஓட்டம் அதி வேகமாகவும் பள்ளம் எது, மேடு எது, புதர் காடு எது? என்றெல்லாம் தெரியாத வகையில் அங்கு படகை செலுத்துவது 'கரணம் தப்பினால் மரணம்' என்கிற கதை தான். கூடுதலாக மற்றொரு ஆபத்தையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது.


    அதாவது படகை இயக்கும் முக்கிய பாகமான காற்றாடி போன்ற விசையில் புதர்களும் துணி போன்ற பொருட்களும் சிக்கிக் கொண்டால் படகின் இயக்கம் தடைப்பட்டு நீரில் அவர்கள் அடித்து செல்ல நேரிடும். இப்படியான நெருக்கடி சூழலில் தான் அவர்களின் சாகச பயணம் தொடர்ந்தது. சுமார் 40 நிமிட நேரத்தையும் 4 கிலோமீட்டர் தூரத்தையும் கடந்த பிறகு கண்ணில் பட்டனர் தண்ணீர் பந்தல் கிராமத்தின் அப்பாவி மக்கள்.

    நான்கு தெருக்களில் உள்ள வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்ட நிலையில் ஒரு சில வீடுகளின் மொட்டை மாடிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் கொட்டும் மழையில் தங்களின் கண்ணீரை கரைத்த படி நின்று கொண்டிருந்தனர்.

    இப்படியான சூழ்நிலையிலும் ஓரளவு தப்பிய தங்களின் வளர்ப்பு பிராணிகளான ஆடுகள், மாடுகள், நாய்கள் ஆகியவற்றையும் தங்களோடு மாடியில் ஏற்றி வைத்திருந்தது காண்போரை நெகிழச் செய்த காட்சியாக இருந்துள்ளது.

    மீட்பு குழுவினரை கண்ட அவர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்டவர்களாக அழுகையும் ஆனந்தமும் கலந்து கூக்குரல் இட்டுள்ளனர். மீட்பு குழுவினரிடம், ' சாப்பாடு கொண்டு வந்தீங்களா? குடிக்க தண்ணீர் இருக்கா?' என்று தங்களின் 3 நாள் பசியையும் தாகத்தையும் உணர்வால் வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களிடம் மீட்பு குழுவினர் உங்களை மீட்க தான் வந்துள்ளோம்.

    உங்களுக்கான உணவு ஏற்பாட்டுடன் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர் என்று கூறி அவர்களை ஒரு முறைக்கு 30 பேர் என்கிற விதத்தில் மொத்தம் 240 பேரை மீட்டு ஆறுமுகநேரி யில் கொண்டு கரை சேர்த்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உடனடி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டது.

    தங்களின் மீட்பு பணியை நிறைவேற்றிவிட்ட நிலை யில் தாங்களும் படகுடன் கரையேற தயாரான நிலையில் தான் அந்த மீட்பு குழுவினருக்கு மீண்டும் ஒரு சவால், தகவலாக வந்தது. சாகுபுரம் உப்பள பகுதியில் உப்பு தொழிலாளர்கள் சிலர் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்கள் தவித்து கொண்டிருப்பதாக தெரியவந்தது. அவர்களை மீட்பதற்காக தனியார் தொழிற்சாலையின் மீட்பு குழுவினர் எவ்வளவோ போராடியும் அதற்கு பலன் கிடைக்காமல் பரிதவிப்பே தொடர்ந்துள்ளது.

    இந்நிலையில்தான் சிங்கித்துறை மீனவ குழுவினரின் இரண்டாம் அத்தியாய சாகச பயணம் அத்திசையை நோக்கி தொடங்கியது.

    ஆனால் இப்போது அவர்கள் அடுத்தடுத்து முன்பை விட பெரும் சோதனைகள் பலவற்றை சந்திக்க வேண்டியதாயிற்று. நடுவழியில் சேறு போன்ற ஒரு பகுதியில் படகு சிக்கியது. அங்கிருந்து நீந்தி சென்று வேறு ஒரு இடத்தில் கயிறை கட்டி படகு மீட்கப்பட்டுள்ளது. பிறகு தொடர்ந்த பயணத்தில் பழுது காரணமாக படகு நீரின் வேகப் போக்கில் தள்ளாட தொடங்கியுள்ளது. சுதாரித்துக் கொண்ட மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு நங்கூரமிட்டு படகை நிலைநிறுத்தி பழுதை சரி செய்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும் என்கிற தருணத்தில் தான் சற்று தூரத்தில் இருந்து சிலரின் கூக்குரல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நோக்கி படகு பாய்ந்து சென்றது. அங்கே அவர்கள் கண்ட காட்சி ' பகீர் ' ரகம். பெருங்கடல் கொந்தளிப்பின் நடுவில் ஒரு மேஜையில் நெருக்கடியாக 10, 15 பேர் நிற்பதை போல இருந்துள்ளனர். வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் இங்கு உப்பள பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் அன்று இரவு காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து வந்துள்ளது.

    ஆபத்தை உணர்ந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து சுமார் 10 அடி உயரத்தில் குறுக்கே நீளமாக இருந்த ராட்சத இரும்பு குழாய் ஒன்றில் 'தக்கி முக்கி' ஏறியுள்ளனர். ஆனாலும் வெள்ளம் அவர்களை விட்டு விடுவதாக இல்லை. அந்த குழாய்க்கும் மேலாக பாயத்தொடங்கியது. மரண பீதியில் அவர்கள் ஒருவரையொருவர் அடுத்தடுத்து சங்கிலி போல் கைகளை கோர்த்துக்கொண்டு உயிர் போராட்டத்தில் நின்று தவித்துள்ளனர். ஒருவர் சறுக்கினாலும் ' கூண்டோடு கைலாசம்' என்கிற நிலைதான்.


    அந்த நேரத்தில்தான் மற்றொரு ஆபத்தும் அவர்களை நோக்கி வந்துள்ளது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட செடி கொடிகள் அடங்கிய புதர்கள் அவர்கள் நின்றிருந்த குழாயில் வந்து சிக்கியுள்ளன. இப்படியே அடுத்தடுத்து சில மரக்கிளைகளும் துணிகளும் வந்து அங்கு சிக்க அவற்றையே தங்கள் கால்களால் அழுத்தி அழுத்தி உருட்டி திரட்டி ஒரு 'பிளாட்பாரம்' போல் அமைத்துள்ளனர். அதன் மீது முழங்கால் அளவு தண்ணீரில் கடைசி கட்ட நம்பிக்கையில் இருந்த போது தான் அவர்களுக்கான மறுவாழ்வு அங்கே மீட்பு குழுவினரின் படகு வடிவில் வந்துள்ளது. அவர்கள் மீது மோதி விடாமல் ஜாக்கிரதையாக படகை நங்கூரமிட்டு மீட்பு குழுவினர், தத்தளித்த ஒவ்வொருவரையும் பக்குவமாக படகில் ஏற்றினர். 3 நாட்களாக உயிர் தவிப்பில் கிடந்த அந்த 13 பேரில் ஒருவர் படகில் மயங்கி சரிந்தார். மற்றவர்களும் கண்ணீர் விட்டு கதறியபடி படகில் தொய்ந்து கிடந்தனர்.

    படகு மீண்டும் விரைந்தது கரை நோக்கி. இப்போதும் அவர்களின் பயணம் கரடு முரடானதாகவே இருந்தது. ஆனால் அந்த சிரமம் மீட்பு குழுவினருக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவர்கள் நெஞ்சம் ஒருவித பரவசத்தில் நிறைந்திருந்தது. மறுகரையில், 'என்ன ஆனதோ, ஏது ஆனதோ?' என்று கையை பிசைந்தபடி நின்றிருந்த காவல்துறை உள்ளிட்ட அரசுதுறை அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் வெற்றிகரமாக படகு மீண்டு வருவதையும் தத்தளித்தவர்கள் மீட்கப்பட்டு வருவதையும் கண்டனர். துரிதமாக செயல்பட்டு அந்த உப்பள தொழிலாளர்களுக்கு உரிய அவசர உதவிகளை செய்து தேற்றினர்.

    சிங்கித்துறை யாசர் அராபத் தலைமையிலான கலீல் ரகுமான், மைதீன், நபீல்முஸ்தபா, அர்னால்டு, அந்தோனி, சலீம் கான், சபூர்தீன், சம்சு மரைக்காயர், மூஸா, வாசிம் அக்ரம், முத்து, செய்யது அபுசாலி, ஷேக் முகைதீன், அஜீஸ் ஆகியோரை கட்டி தழுவி பாராட்டுதலை தெரிவித்தனர்.

    இந்த சாகச பயணத்தை மேற்கொண்டு கிராம மக்கள் 240 பேரையும் ஜீவமரண போராட்டத்தில் இருந்த 13 தொழிலாளர்களையும் வியூகம் வகுத்து மீட்க செயல்பட்ட மீனவர் யாசர் அராபத் இது பற்றி கூறிய போது, 'எங்களின் கடல் பயணத்தில் புயல், பெரு மழை, படகின் பழுது போன்ற பல சங்கடங்களை சந்தித்து பழகி உள்ளோம்.

    அப்படிப்பட்ட எங்களுக்கே பீதியை ஏற்படுத்தும் வகையில் இந்த மழை வெள்ளத்திலான எங்களின் பயணம் அமைந்தது. ஆனாலும் பல உயிர்களை காப்பாற்ற செல்கிறோம் என்கிற எண்ணமே எங்களுக்கு துணிச்சலை தந்தது. அனைவரையும் உயிரோடு மீட்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு அளித்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

    உயிரை பணயம் வைத்து செயல்பட்ட இந்த மீட்பு குழுவினரின் அறிய இந்த செயல்பாடு வெளி உலகத்திற்கு இதுவரை தெரியவில்லை. தொடர்ச்சியாக இப்பகுதியில் மின்சாரமும் தொலை தொடர்பும் துண்டிக்கப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம். தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் இப்படியான சாகச செயலில் ஈடுபட்ட சிங்கித்துறையை சேர்ந்த இந்த மீனவ மீட்பு குழுவினரை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று காயல்பட்டினத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெஸ்முதீன் தெரிவித்துள்ளார்.

    • மிச்சாங் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
    • வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    சென்னை:

    சமீபத்தில் சென்னை யில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வேளச்சேரி பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தகவலறிந்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு வேளச்சேரி மேற்கு பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி உடனடியாக சென்று வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மிட்டதுடன் நிவாரண உதவிகளையும் செய்தார்.

    வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன் ஒவ்வொரு நாளும் இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று பொது மக்களுக்கு உதவி செய்து வந்தார். இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட வேளச்சேரி மேற்கு பகுதி கழக செயலாளர் எம்.ஏ. மூர்த்தி ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு நிவா ரண பொருட்கள் வழங்கப்பட்டது.

    அரிசி பெட்ஷீட் மற்றும் நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சரோஜா, மாவட்ட செயலாளர் அசோக், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெ.ஜெயவர்தன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் எஸ்.பி.முல்லை செல்வம், சா.சங்கர் வட்டச் செயலாளர் கே.ஆர்.மணி, ஏ.எம்.ராஜா, ஸ்ரீதர், குட்டி உள்பட ஏராளமான பகுதி வட்ட நிர்வாகிகள், மகளிரணி, வடிவேலு, ஜிம்பாபு, ஆறு, மணி, லட்சுமி அம்மாள், ஸ்ரீதர், ஜெயபால் மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
    • தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்?

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை பேயாட்டம் ஆடி விட்டு சென்றுள்ள பெரு வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சின்னாபின்னமாக்கி இருக்கிறது.

    ஏரல் திருவமுதி நாடார்விளை, காமராஜ நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் பெரு வெள்ளம் ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கும் பாதிப்பால் உருக்குலைந்து போய் காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.

    கஷ்டப்பட்டு உழைத்து கட்டிய வீடுகள், வீட்டில் வளர்க்கப்பட்ட கால் நடைகள், வீட்டில் வாங்கி போட்டிருந்த கட்டில், மெத்தை, டி.வி., பாத்திரங்கள் என ஒட்டு மொத்த உடைமைகளையும் வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போயிருக்கிறது.

    இதனால் உடுத்திய உடையோடு மட்டுமே காணப்படும் கிராம மக்கள் அடுத்த வேளை உணவுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏதாவது வழியில் வெள்ள நிவாரண பொருட்கள், தண்ணீர் கிடைத்தாலும் அது வயிற்றுப் பசியை போக்க போதுமானதாக இல்லை என்றே கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    இதுவரை சம்பாதித்து வைத்திருந்த ஒட்டு மொத்த பொருட்களையும் இழந்து விட்டு வாழ வழி தெரியாமலும், வெள்ள பாதிப்பில் இருந்து மீள வழி தெரியாமலும் ஏரல் சுற்று வட்டார பகுதி மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

    இனி என்ன செய்யப் போகிறோம்? என்பது தெரியாமல் தவிக்கும் மக்கள் தங்களது எதிர்காலம் என்ன? என்பது தெரியாமலும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டுக்கு மேல் ஆகி விடுமே... அதுவரை என்ன செய்யப் போகிறோம்? என்றும் அப்பகுதி மக்கள் புலம்பியபடியே உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளும் இதே போன்று பாதிப்புகளை சந்தித்துள்ளன. நெல்லை மாவட்டத்திலும் பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இது போன்று பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக கண்டறிந்து தேசிய பேரிடர் என அறிவிக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.

    தங்களது ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ஏரல் போன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து கூடுதல் நிவாரண உதவிகளை மத்திய-மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
    • மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).

    இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

    வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.

    ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

    இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.

    இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

    இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

    ×