என் மலர்
நீங்கள் தேடியது "MLA"
- போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர்.
செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற போலீசார் மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை போலீசார் தேடி வந்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே அவருக்கு போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார்.
- முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி
- ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.
உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கிருக்கிறார்? ஜெகதீப் தன்கரின் உடல்நிலை எப்படி உள்ளது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மாதம் ரூ.42,000 எம்எல்ஏ ஓய்வூதியத்தை பெற ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலரிடம் விண்ணப்பித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலகம் இதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகவும், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் பொருந்தும் என்று சட்டப்பேரவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1993 -1998 வரை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜகதீப் தன்கரின் ஓய்வூதியம் 2019-ல் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டபோது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
- மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸின், பர்வான் தொகுதி எம்எல்ஏ ஜீபன் கிருஷ்ணா சாஹா அமலாக்கத்துறையால் இன்று கைது செய்தனர்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜீபன் கிருஷ்ணா தனது மொபைல் போன்களை வீட்டின் பின்னால் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு, சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்புக்கு வந்திருந்த CRPF வீரர்கள் உதவியுடன் அவரை துரைத்திச் சென்று கைது செய்தனர். பின்னர், சாக்கடையில் இருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டன. எம்எல்ஏவை அதிகாரிகள் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு ஒத்துழைக்காததற்காக சாஹா பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 ஆம் ஆண்டு இதே வழக்கில் ஜீபன் கிருஷ்ணா சாஹாவை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்கத்தில் குரூப் 'சி' மற்றும் 'டி' ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த ஊழலில் முன்னாள் மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, அவரது நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்ட பல முக்கிய நபர்களை அமலாக்கத் துறை ஏற்கனவே கைது செய்துள்ளது.
- தனது கணவர் கொலை வழக்கில் நீதி பெற்றுத் தந்ததற்தாக முதல் மந்திரிக்கு நன்றி என்றார் பூஜா பால்.
- கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு பூஜா பால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச சட்டசபையில் சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வான பூஜா பால் பேசுகையில், தனது கணவர் கொலை வழக்கில் நீதியை பெற்றுத் தந்ததாக முதல் மந்திரி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், முதல் மந்திரியைப் பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பாலை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு அவரை கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பூஜா பால், சமாஜ்வாதி கட்சியினரின் பெண்களுக்கு எதிரான நிலையை இது காட்டுகிறது என கடுமையாகச் சாடினார்.
- கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
- விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது. அதன்படி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார். சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.தி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழுமுன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆதராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
- அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி கடந்த 21ம் தேதி காலமானார்.
இந்நிலையில், அமுல் கந்தசாமி மறைவைத் தொடர்ந்து வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
- 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
- 60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
60 வயதான அமுல் கந்தசாமி உடல்நல குறைவு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் அவர் உயிரிழந்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளரை 13,171 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமுல் கந்தசாமி வெற்றி பெற்றிருந்தார்.
- ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பான வழக்கில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஜெய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கேஷ் பாகர் மற்றும் மனீஷ் யாதவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஜெய்ப்பூரின் முக்கிய சாலையான ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2014 ஆகஸ்ட் 13 அன்று, இந்த குழு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சவுத்ரி உட்பட, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையை சுமார் 20 நிமிடங்கள் முழுமையாக மறித்ததால், கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவியல் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டத்தின்படி, எம்எலஏக்களின் பதவி, தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும். இதனால், இந்தத் தீர்ப்பு இரு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதிக்காது.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு 3 மாதங்களாகியும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய ஆட்சியை அமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாராக இருப்பதாக பாஜக தலைவரும், எம்.எல்.ஏ.வுமான தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்துள்ளார். 9 எம்.எல்.ஏ.க்களுடன் தொக்கோம் ராதேஷியாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார்.
அதன்பின் தொக்கோம் ராதேஷியாம் சிங் கூறியதாவது:-
மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.-க்கள் தயாாக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.
நாங்கள் சொன்னதை ஆளுநகர் கேட்டுக்கொண்டு, மக்கள் நலனுக்கான நடவடிக்கை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். சபாநாயகர் தி. சத்யபிரதா 44 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகவும் கூட்டாகவும் சந்தித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதை எதிர்க்கும் யாரும் இல்லை.
ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு தொக்கோம் ராதேஷியாம் சிங் தெரிவித்தார்.
எந்தவொரு சமாதான முன்னெடுப்பிலும் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என மெய்தி பிரிவினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேவேளையில் குகி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்.
- இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது.
ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், தற்போது உள்ள நிதியினை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை; அதிலும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தி தர வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது. ஜிஎஸ்டியால் தொகுதி மேம்பாட்டு நிதி பாதிக்கப்படுகிறது என்பதால் அதை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
- இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.
இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆக உயரும்.
- முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாக உயரும்
முதலமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுமார் 24% வரை உயர்த்தும் 3 மசோதாக்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் இந்த மசோக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சுமார் 24 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ரூ.55,000-த்தில் இருந்து ரூ.70,000 ஆகவும், தொகுதிப் படி ரூ.90,000-த்தில் இருந்து ரூ.1.20 லட்சமாகவும், அலுவலகப் படி ரூ.30,000-த்தில் இருந்து ரூ.90,000 ஆகவும் தினப்படி ரூ.1,800-த்தில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
முதலமைச்சரின் மாத சம்பளம் ரூ.95,000-த்தில் இருந்து ரூ.1.15 லட்சமாகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.80,000-த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.78,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
சபாநாயகரின் சம்பளம் ரூ.80,000த்தில் இருந்து ரூ.95,000 ஆகவும் துணை சபாநாயகரின் சம்பளம் ரூ.75,000-த்தில் இருந்து ரூ.92,000 ஆகவும் உயர்த்தப்படும்.
முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பேற்பவர்களின் அடிப்படை ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.36,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது செலவு பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் திருத்தப்படும்.
அதே சமயம் எம்.எல்.ஏ.க்களுக்கான தண்ணீர் மற்றும் மின்சார மானியம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






