search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fund allocated"

    • மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ. 1,200 வழங்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் வட்டாரம் தோட்டக்கலைத்துறைக்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, 2022--23 நிதியாண்டில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் தோட்டக்கலைத்துறை வாயிலாக பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்க 2022 -23 ம் நிதியாண்டில் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தக்காளி, கத்திரி, மிளகாய், பாகல், பீர்க்கன், சுரைக்காய் மற்றும் தர்பூசணி புதிதாக பயிரிடும் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.வெங்காயம் பயிரிட, வெங்காய விதைகள் மற்றும் இடுபொருட்கள், ஒரு விவசாயிக்கு, 2 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.கொய்யா, பப்பாளி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து நாற்றுக்கள் வழங்கப்படும். ஒரு விவசாயி 4 ஹெக்டர் வரை மானியம் பெறலாம்.

    தோட்டங்களில் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரம் அளவில் கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் 300 மைக்ரான் அளவில் தார்ப்பாய் அமைத்து நீரை சேமித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம். இது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. தேனீப்பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்காக, ஒரு யூனிட்டிற்கு ரூ.24 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.பவர் ஸ்பிரேயர் வாங்க 2,500 ரூபாயும், 8 எச்.பி., க்கு மேல் குதிரைத்திறன் கொண்ட பவர் டில்லர் மானியத்தில் பெற ஒன்றுக்கு 60,000 வழங்கப்படுகிறது.விவசாயிகள் 600 சதுர அடி அளவில் சிப்பம் கட்டும் அறை தோட்டங்களில் அமைத்து கொள்ள ரூ. 2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

    சின்ன வெங்காயம் இருப்பு வைத்து விலை கிடைக்கும் போது விற்பனை செய்யும் வகையில் ஒரு யூனிட் வெங்காய பட்டறை அமைக்க பின்னேற்பு மானியமாக ரூ.87,500 மானியம் வழங்கப்படுகிறது.நீர் அதிகம் ஆவியாகாமல் தடுக்கவும், களைகளை கட்டுப்படுத்தவும் நிலப்போர்வை பயன்படுகிறது. தக்காளி, மிளகாய், கத்திரி, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

    விவசாயிகள் விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் நகரும் காய்கறி வண்டிகள் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஏழை வியாபாரிகளும் பயன்பெறலாம்.இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அல்லது ஏற்கனவே செய்து வரும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியமும், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு, ரூ. 1,200 ரூபாயும் வழங்கப்படுகிறது.

    திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமை சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ் புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-, 2 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மைவாடி, துங்காவி, தாந்தோணி, மெட்ராத்தி, காரத்தொழுவு, ஜோத்தம்பட்டி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், பாப்பான்குளம், கண்ணாடிப்புதூர், கடத்தூர், வேடபட்டி, கணியூர் விவசாயிகள் விமல்குமார் 99438 38146, சங்கராமநல்லூர், கொழுமம், கொமரலிங்கம், சோழமாதேவி விவசாயிகள் நித்யராஜ், 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.கூடுதல் விபரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர், சுரேஷ்குமார் 97905 82010, தோட்டக்கலை அலுவலர் காவ்ய தீப்தினி 99524 47266 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×