search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தாண்டு கொண்டாட்டம்"

    • ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி வருகிறது.

    இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மிக முக்கியமானதாக மது விருந்து இடம் பிடித்தது.

    இதற்காக முன்கூட்டியே தெலுங்கானா மாநில மதுபானங்கள் துறையினர் கடைகளுக்கு தேவையான பீர் மற்றும் ஹாட் வகைகளை அனுப்பி வைத்தனர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மது பாட்டில்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

    மேலும் மதுபான கடைகள் 31-ந் தேதி நள்ளிரவு வரை திறக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிக மதுக்கடைகளும் திறந்தனர்.

    ஐதராபாத்தில் டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாகவே மது விற்பனை களைகட்ட தொடங்கியது. இதே போல தெலுங்கானா மாநிலத்தின் கிராமப்புறங்களிலும் அதிக அளவில் மது விற்பனையானது. குடிமகன்கள் போட்டி போட்டு மது வாங்கிச் சென்று உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடினர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தில் 5.5 லட்சம் பெட்டி ஹாட் வகைகள் மற்றும் 7 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. மொத்தமாக ரூ.758 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.

    எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மது விற்பனை அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.
    • பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

    அதில் பிரியாணி சாப்பிட்டால் மாபெரும் பரிசு காத்திருக்கிறது என தெரிவித்தனர்.

    அதன்படி பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் ஒன்றை வழங்கினர்.

    இதன் அடிப்படையில் ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.

    இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கடந்த 31-ந்தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல் நிர்வாகிகள் அதிர்ஷ்டசாலியை தேர்வு செய்தனர்.

    அதில் திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் கார் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து ராகுலுக்கு காரை பரிசாக வழங்கினர். பிரியாணி சாப்பிட்டதற்கு கார் பரிசா! என்ற ஆச்சரித்துடன் அவரும் பெற்று சென்றார்.

    பிரியாணிக்கு கார் வழங்கும் புதுமை திட்டத்தால் தங்கள் ஓட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக ஓட்டல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன
    • ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன.

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் சிலர் தேவாலயங்கள், கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுத்தும் மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மதியம் வரை சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 29 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் ஆகும். இதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகளும், கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன.

    ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் ஆகும். நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் இதுவரை இல்லாத வகையில் புத்தாண்டை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    2024 புத்தாண்டு தினம் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் புத்தாண்டு கலைகட்டியுள்ளது. மியூசிக் நிகழ்ச்சி அமைத்து கொண்டாடியுள்ளனர். இதுவரை இதுபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்தது இல்லை என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத்துறை சார்பில் மியூசிக் நிகழ்ச்சி ஸ்ரீநகரின் காந்தா கர் (மணிக்கூண்டு) பகுதியில் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கூண்டு பகுதியில் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீநகரின் மணிக்கூண்டு பகுதியில் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முகமது யாசீன் என்பவர் "புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்க்க நான் இங்கே வந்தேன். இதுபோன்ற கொண்டாட்டத்தை இதற்கு முன்னதாக நான் பார்த்ததே இல்லை. அதுவும் லால் சவுக் பகுதியில் இதுபோன்று பார்த்தது கிடையாது. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்" என்றார்.

    ஜம்மு-காஷ்மீரில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், லால் சவுக் பகுதியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. காஷ்மீர் அமைதியாக இருக்க வேண்டும். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள். இதெல்லாம் அங்குள்ள மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை சார்ந்துதான் உள்ளது. லால் சவுக் பகுதிகள் மணப்பெண் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சுற்றுலா பயணிகள் கூட ஸ்ரீநகர் மணிக்கூண்டு பகுதியில் இதுபோன்று நிகழ்ச்சி நடைபெறுகிறதா... என ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அங்குள்ள மக்களின் அமைதிக்காகவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    • வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது.
    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெல்லித்தோப்பு டி.ஆர்.நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி. தம்பதியின் மகள்கள் மோகனா (வயது 17), லேகா (15). இவர்கள் புதுவையில் உள்ள அரசு பள்ளியில் 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    புத்தாண்டு கொண்டாட மகள்களை அழைத்துக்கொண்டு நேற்று பகல் 12 மணியளவில் மீனாட்சி புதுவை கடற்கரைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே மோகனா, லேகா ஆகியோரது பள்ளி நண்பர்களான கதிர்காமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் நவீன் (15), நடேசன் நகரை சேர்ந்த கேட்டரிங் மாணவர் கிஷோர் (17) ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் 4 பேரும் டூப்ளக்ஸ் சிலை அருகே கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர்.

    அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி மோகனா, லேகா, நவீன், கிஷோர் ஆகிய 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்ததும் கரையில் இருந்து மீனாட்சி அதிர்ச்சியடைந்த கூக்குரலிட்டு கதறினார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மீனவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து கடலில் இறங்கி சகோதரிகள் உள்பட 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார், கடலோர காவல்படை, தீயணைப்புத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகில் கடலுக்குள் சென்று மாயமான 4 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணியை கைவிட்டனர்.

    இன்று காலை மீண்டும் கடலில் இழுத்து செல்லப்பட்டு மாயமான 4 மாணவ-மாணவிகளையும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வீராம்பட்டினம் கடற்கரையில் லேகாவின் உடல் மட்டும் கரை ஒதுங்கி இறந்தது. இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மற்ற 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.
    • கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் அனைத்து மாநிலங்களிலும் நேற்று இரவு களை கட்டியது. கேரள மாநிலத்திலும் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலா கலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    கேரளாவில் கோவளம் மற்றும் கோழிக்கோடு கடற்கரைகளில் நள்ளிரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் ஆடிப்பாடி புத்தாண்டை வரவேற்றனர். இதேபோன்று ஏராளமான ஓட்டல்கள், ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டின.

    கண்ணூரில் உள்ள பையம்பலம் கடற்கரையிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த கடற்கரையில் இநதிய மாணவர் கூட்டமைப்பு சார்பில் கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமதுகானின் 30 அடி உயர உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது.

    மிகவும் பிரம்மாண்டமாக இருந்த அந்த உருவ பொம்மையை, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தீவைத்து எரித்தனர். கேரளாவில் கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதனால் கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கவர்னரின் பிரம்மாண்ட உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன.
    • வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும்.

    புதுச்சேரி:

    புத்தாண்டையொட்டி புதுவையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    புதுவையில் உள்ள மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஜின், ஓட்கா என 800-க்கும் மேற்பட்ட மது வகைகள் கிடைக்கும். புத்தாண்டையொட்டி சிறப்பு சலுகையுடன் மது வகைகள் விற்கப்பட்டன. அவற்றை வாங்க ஏராளமான சுற்றுலா பயணிகள் மது கடைகளில் கூடினர்.

    புதுவையில் புத்தாண்டையொட்டி மது விற்பனையை கடந்த காலங்களில் இரவு 12 மணி வரை மட்டுமே அனுமதி அளித்தனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பு அளித்து கலால் துறை சிறப்பு அனுமதி அளித்தது. வழக்கமாக இரவு 11 மணிக்குள் விற்பனையை முடித்து மதுக்கடைகளை மூட வேண்டும். இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டதால் மது கடைகளில் ஆண்கள், பெண்கள் என கூட்டம் அலைமோதியது.

    • கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.
    • சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து செல்கிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து புதுவைக்கு மக்கள் குவிகின்றனர்.

    புதுவையில் உள்ள தனியார் ஓட்டல்கள், கடற்கரைகள், திறந்த வெளி அரங்குகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்குகிறது.

    இதற்கு உள்ளாட்சித்துறை பல கட்டுப்பாடுகளை விதித்து, கேளிக்கை வரி வசூலும் செய்கிறது. ஓட்டல்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அனுமதியில்லை.

    ஆனால் கடற்கரைகள், திறந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகளை அனுமதிக்கின்றனர்.

    கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் பலரும் புகார் தெரிவித்து சென்றனர்.

    இதனால் இந்த ஆண்டு உள்ளாட்சித்துறை அறிவித்தபடி மது, உணவு வகைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு திறந்தவெளி அரங்குகளில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சிகளில் காற்றில் பறக்க விடப்பட்டது. 500 பேர் மட்டுமே கூடும் இடத்தில் ஆயிரக்கணக்கானவர்களை அனுமதித்தனர்.

    சில இடங்களில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கோ, கழிப்பறை வசதிகளோ செய்யவில்லை.

    மது வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவோர் அறிவித்த மது வகைகளை வழங்காமல் நிறுத்தி விட்டனர். சிறிய பாட்டில் பீர் வகைகளை மட்டும் வழங்கினர். அதையும் சுற்றுலா பயணிகள் போட்டி போட்டு வாங்க வேண்டிய நிலை இருந்தது.

    மதுவை விட உணவு வகைகளை பெற சுற்றுலா பயணிகள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

    இரவு 10 மணிக்கு மேல் மெனுவில் அறிவித்தபடி உணவு வகைகளையும் வழங்கவில்லை. இதனால் சில இடங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோடு சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு சில இடத்தில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி தங்களுக்கு வழங்கப்பட்ட டேக்கை குறைந்த விலைக்கு பிறரிடம் சுற்றுலா பயணிகள் விற்று விட்டு சென்றனர்.

    வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்த புகாரும் தெரிவிக்க மாட்டார்கள். நமக்கேன் வம்பு? என சென்று விடுவார்கள் என்பதால்தான் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இதேநிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிய தொடங்கி விடும்.

    • ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது.
    • நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு முடிந்து 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது. இதை யொட்டி கோவில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.

    பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அள வில் காணப்பட்டனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசைக்கும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன்வழியாக சென்று பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து புத்தாண்டில் தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இந்த கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தி.நக ரில் உள்ள திருப்பதி தேவஸ் தான கோவிலில் தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டிருந்தனர். பெருமாளை தரிசித்து செல்வசெழிப்பான வாழ்க்கையை தருமாறு மனமுருகி பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.

    கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் முன்பு உள்ள திருமலைபிள்ளை சாலையில் தடுப்புகள் அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதன் வழியாக சென்று பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை யொட்டி சாமி தரிசனத்துக்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு தங்க நாணய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகா... முருகா... என்று உச்சரித்தப்படியே மன முருகி வழிபட்டனர்.

    இதன் பின்னர் சந்தன காப்பு அலங்காரத்திலும் முருகன் காட்சி அளித்தார். அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் தங்க நாணய அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகனுக்கு பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    புத்தாண்டையொட்டி இன்று இரவு 9 மணிக்கு நடையை சாத்தாமல், பக்தர்கள் இருக்கும் வரையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக நிழல் தரும் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவிலிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் நள்ளிரவில் இருந்தே திரண்டனர். பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 31-ந்தேதியான நேற்று கந்தகோட்டம் முருகன் கோவில் திறக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி நேற்று மாலையில் கோவிலில் 108 காங்காபிஷேகம் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடிவுடையம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாடி சிவன் கோவில், திருமுல்லை வாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்தார்கள்.

    பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிரம்மமுகூர்த்த நேர மான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது.

    பூப்பந்தல் அமைத்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. திருவேற்காடு தேவி கருமா ரியம்மன் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னையை அடுத்த ரங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், மடிப்பாக்கம் பாதாள விநாயகர் கோவில், கீழ்க்கட்டளை சக்திமுருகன் கோவில், லட்சுமிநாராயணா கோவில் ஆகிய ஆலயங்களில் இன்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கீழ்க்கட்டளை லட்சுமி நாராயணா கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு புதிய 5 ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

    புரசவைாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம்.
    • சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    நாகப்பட்டினம்:

    உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    முன்னதாக 2023-ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடந்தது.

    பின், 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், பேராலய பங்கு தந்தை டேவிட் தனராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. இரவு சரியாக 12 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார்.

    அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 2023-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பேராலயம் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்காணோர் திரண்டதால் நகரமே களைகட்டியது.

    • புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.

    இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில் வீட்டுக்குள் நின்றபடியே அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    வெள்ளை நிற உடையில் காணப்பட்ட ரஜினிகாந்த் இரு கைகளையும் மேலே கூப்பி, தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். "பறக்கும் முத்தம்" கொடுத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தலைவா... தலைவா... என்று கோஷமிட்டபடியே ரஜினிக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி கைகளை அசைத்த படியே சில நிமிடங்கள் நின்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றார். இதன் பிறகு ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு இருந்து கலைந்து சென்றனர்.

    • வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
    • மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கோவை:

    2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    2024-ம் ஆண்டு பிறந்ததையொட்டி கோவையில் மக்கள் முக்கிய பகுதிகளில் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடல்களை இசைக்க விட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதலே கோவை வாலாங்குளத்தில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிய தொடங்கினர்.

    அங்கு பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இன்னிசை கச்சேரிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், லேசர்ஷோவும் நடத்தப்பட்டது. வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் சின்னத்திரை நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிமிக்கிரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் செண்டை மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட், பூ போன்ற அலங்கார உடை, பிரமாண்ட பாண்டா கரடி உள்ளிட்ட வேடங்களில் பொதுமக்களை குஷிபடுத்தினர்.

    குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. பல்வேறு நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கோவை வாலாங்குளக்கரையில், கண்ணை கவரக்கூடிய லேசர் ஷோ மற்றும் டிரோன் ஷோ நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண, வண்ண வடிவத்தில் ஜொலித்த இந்த நிகழ்ச்சி அங்கு திரண்டு இருந்த மக்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது. குறிப்பாக புத்தாண்டு பிறந்ததும் 15 நிமிடங்களுக்கு 250 டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது அங்கு குழுமியிருந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    மக்கள் அதனை பார்த்து ரசித்து, தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அத்துடன் 300 வகையான வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு, வாலாங்குளம் குளக்கரையே மின்னொளியிலும், லேசர் ஷோவிலும், வண்ண பட்டாசுகள் வெடித்தும் அந்த பகுதியே வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருந்தது.

    புத்தாண்டு பிறந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவிலான மக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால், வாலாங்குளத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×