search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
    • இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அந்த மாநிலத்தின் பாரம்பரியமாக உள்ளது. இதற்காக மாநிலத்தின் பெரும்பாலான கோவில் வளாகங்களிலேயே பிரத்யேகமாக யானைகள் வளா்க்கப்படுகிறது.

    இதற்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்தபடி இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு கோவில் விழாக்கள் உள்பட எந்த சடங்குகளிலும் இனி யானை உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என மாநிலத்தில் முதல் முறையாக திருச்சூா் மாவட்டம் இரிஞ்சாடப் பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா் கோவில் நிா்வாகம் முடிவெடுத்தது.

    அதன்படி அந்த கோவில் விழாக்களில் கடந்த ஆண்டு முதல் இயந்திர யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 2-ஆவது கோவிலாக கொச்சி திருக்கயில் மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.

    கோவில் நிா்வாகத்தின் அந்த முடிவை பாராட்டும் விதமாக, கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து பரிசளித்துள்ளனா். 'மகாதேவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர யானை, இனி கோவில் விழாக்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாதேவன் இயந்திர யானை, கோவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து நடிகை பிரியாமணி, 'தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நமது கலாசார நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்தலாம்' என்றாா்.

    இது குறித்து மாகதேவர் கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'மனிதா்கள் போல் தங்கள் குடும்பத்துடன் இணைந்து சுதந்திரமாக வாழவே எல்லா விலங்குகளையும் கடவுள் படைத்தாா். அந்த வகையில், கோவில் விழாக்களில் இயந்திர யானையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சிதான்' என்றனா்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை
    • இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை

    தேர்தல் பத்திரத்தைச் சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது

    அப்போது, "எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண்கள் ஏன் இல்லை. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ வங்கியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவர்கள் பெயர், பத்திர எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.

    குறிப்பாக ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள அடையாள எண்ணை வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். வெளியிட்ட பின் 'எந்த தகவலும் விடுபடவில்லை' என்பதை பிரமாணப் பத்திரமாக எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற கொண்டிருந்த போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசுத் தலைவருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டார்.

    அதற்குக் கடுமையாக பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், "நீங்கள் ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர். என்னுடைய சுய அதிகாரத்திற்கு எதிராக நீங்கள் தேவை இல்லாமல் இப்போது கடிதம் எழுதியுள்ளீர்கள். இவை அனைத்தும் விளம்பரம் தொடர்பான விஷயங்கள். நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. என்னை எதுவும் காட்டமாகச் சொல்ல வைக்காதீர்கள்" என எச்சரித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதியிருந்தார்.

    அக்கடிதத்தில், "இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.
    • இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடந்த ஆண்டு இறுதியில் அமைத்தது.

    இதில், இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா கமிட்டியின் தலைவராகவும், முன்னாள் ஆக்கி வீரர் எம்.எம். சோமயா, முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை மஞ்ஜூஷா கன்வார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இந்த கமிட்டியில் இருந்தனர்.

    வீரர்கள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பதற்கான பதிவை சமர்ப்பிப்பது, போட்டிகளை நடத்துவதற்கான ஒருங்கிணைப்பு, வங்கி கணக்கு விவரங்களை கையாள்வது, இதன் இணையதளத்தை நிர்வகிப்பது உள்ளிட்ட பணிகளை எல்லாம் இடைக்கால கமிட்டி மேற்கொண்டு வந்தன. 

    இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று கூட்டமைப்பின் தற்காலிகக் குழுவை கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

    தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கம் நீதிமன்றத்தால் நீக்கப்பட்ட பிறகு, மற்றொரு குழு கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அடுத்த மாதம் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான அணிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனைகளை தற்காலிக குழு மேற்பார்வையிட்டு நடத்தி முடித்தது.

    அந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த விளையாட்டின் நிர்வாகம் மீண்டும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இந்நிலையில், ரஷிய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஷிய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புதின்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்
    • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்

    இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர். எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை ஒப்படைப்பதாகவும், மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்

    அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத்தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

    அந்த கடிதத்தில், "ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண்ணும் கண்ணியத்துடன் வாழ விரும்புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாக கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்," என்று எழுதியிருந்தார்.

    இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, தில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார். பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர்.

    மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

    இந்நிலையில், இதை விமர்சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கொடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கொடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
    • இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது

    இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

    இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.

    இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

    இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மோடி, ஜூன் மாதம் பொறுப்பேற்க போகும் புதிய அரசாங்கத்தின் முதல் 100 நாட்கள் மற்றும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தை உருவாக்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். புதிய அரசு அமைந்தவுடன், அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து, சம்பந்தப்பட்ட செயலர்களுடன் அமைச்சர்கள் கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மேலும், தேர்தல் நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாய் ஈடுபட்டாலும், அரசுப் பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

    • டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று காலை டிராக்டர் மீது ஜீப் நேருக்கு நேர் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலை 31-ல் பஸ்ராஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே இன்று அதிகாலை 5.15 மணியளவில் விபத்து நடந்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மூவரும் சிறந்த சிகிச்சைக்காக பாகல்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜீப்பில் பயணித்தவர்கள் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    மேலும், டிராக்டரில் அதிக பாரம் ஏற்றப்பட்டதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

    இறந்தவர்கள் கவுதம் குமார் (10), பிரகாஷ் சிங் (60), மோனு குமார் (11), அமன் குமார் (19), பூந்தி குமார் (22), அன்ஷு குமார் (22), வில்லோ குமார் (5) மற்றும் பல்து தாக்கூர் (5) என்றும்,

    காயமடைந்தவர்கள் சச்சித் தாக்கூர், தர்மேந்திர குமார் மற்றும் குந்தன் குமார் என்றும் தெரியவந்துள்ளது.

    விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×