search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    • எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.
    • பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    10 ஆண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது.

    'மீண்டும் மோடி' என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், 'வேண்டாம் மோடி' என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் இன்று எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

    பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. சில மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் அவையும் நல்ல படியாக நடைபெறும் எனத் தெரிகிறது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நேற்றைய தினத்துடன் மிகச்சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தேர்தலில் அருமை நண்பர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் நம் அணியில் இணைந்துள்ளது. அவரையும் வரவேற்று உள்ளோம்.

    இந்த அணிக்காகத் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் செய்ய இருப்பதாக நண்பர் கமல் அறிவித்துள்ளார். 2025 மாநிலங்களவையில் அவரது கட்சியின் குரல் ஒலிக்க இருக்கிறது.

    நாங்கள் கொடுத்தோம், பெற்றார்கள் என்பதாக இல்லாமல், 'அனைவரும் ஒத்த சிந்தனையுடன் அமர்ந்து பேசித் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டோம்' என்பதுதான் உண்மையாகும். அனைத்துத் தலைவர்களும், ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் இதனை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

    எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள். இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

    2019 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம். ஒன்றுபட்ட இலக்கும், ஒற்றுமைச் சிந்தனையும் கொண்டவர்களாக நம் கூட்டணி இயக்கத் தலைவர்களும், முன்னணியினரும், தொண்டர்களும் இருப்பதால்தான் இத்தகைய தொடர் வெற்றியை நாம் பெற்றோம்.

    தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம். இதனைத்தான் 'இந்தியா' கூட்டணியின் தொடக்கக் கூட்டத்தில் நான் வலியுறுத்திச் சொன்னேன். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும், அந்தக் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் மற்ற வேறுபாடுகளை மறந்து ஒன்று சேரவும் வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதுதான் இன்று மாபெரும் கூட்டணியாக மலர்ந்து உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான இக்கூட்டணியின் வெற்றிக்கு கழக உடன்பிறப்புகள் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும், 'வேட்பாளர் மு.க. ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.

    அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன் பிறப்புகளும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும். மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும்.

    பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவைப் பாழ்படுத்தியதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். அதனை மேலும் ஆழமாக மனதில் விதையுங்கள். மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ள ஏற்றத்தை மக்களுக்கு நினைவூட்டுங்கள். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
    • புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மேல்-சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன், பதவியேற்ற பின் முதல் முறையாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தார். அவருக்கு பா.ஜனதாவினர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவை மிகவும் வளர்ந்த நாடாக மாற்றியுள்ளார். என் மண், என் மக்கள் தமிழக யாத்திரையில் பிரதமர் கலந்து கொண்டு நிறைவு செய்து வைத்தார். பா.ஜ.க.வின் இந்த யாத்திரை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பா.ஜனதா முக்கிய கட்சியாகவும் வளர்ந்து கொண்டு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தோல்வியுற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு உள்ளது. குரங்கு கையில் பூமாலை கொடுத்ததுபோல தி.மு.க.வினர் ஆட்சி செய்து வருகின்றனர்.

    தி.மு.க.வின் முக்கிய நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்திற்கு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, 2ஜி ஊழல் வழக்கில் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், பொதுமக்களுக்கு சாலை அமைப்பதற்கு பதிலாக தனக்கு சொந்தமான தங்கும் விடுதிக்கு சாலை அமைத்துள்ளார். தி.மு.க.வைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்றது வருகிறது.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சி மக்களை ஏமாற்றுகின்ற, லஞ்சம் வாங்குகின்ற மக்கள் பணத்தை சுரண்டுகின்ற ஒரு தோல்வியுற்ற ஆட்சியாக இருக்கிறது.

    ஊட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் லஞ்சம் வாங்குவதாக மற்றொரு கவுன்சிலர் குற்றம் சாட்டினார். ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வியாபாரிகளுக்கு விருப்பமில்லாமல் ஊட்டி மார்க்கெட் கடைகள் இடிக்கப்படுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களாக தி.மு.க. வினர் உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் கட்சி தனியாக போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரிடம் மண்ணை கவ்வினார். எனவே கமல்ஹாசன் பா.ஜ.க.விற்கு ஒரு பொருட்டே இல்லை.

    நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். மகளிர் தினத்தன்று மகளிருக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கியாஸ் விலையை பிரதமர் நரேந்திர மோடி குறைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் மேம்பாட்டிற்கு மட்டும் 3½ கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பிடங்கள் இலவசமாக கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. 11 கோடி பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 400 ரூபாய் வீதம் கியாஸ் மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தியாவை மிகச்சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதில் ஊட்டி நகரும் இணையும். ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாகன நிறுத்துமிடம் இல்லை. இதையெல்லாம் சரி செய்யும் விதத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் பணியாற்றுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், ஊட்டி நகர தலைவர் பிரவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலை இருந்தது.

    இந்நிலையில், இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.

    அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர்.

    தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.

    இதற்கிடையில், காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.

    காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகளில் உறுதியாக உள்ளது.
    • மதிமுக ஒரு மக்களவை இடமும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்கிறது.

    திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

    மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தைகளை கட்சி கடந்த முறை திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் நின்றன. தற்போது மூன்று தொகுதிகள் கேட்கிறது. இரண்டு தனித்தொகுதி மற்றும் ஒரு பொதுத்தொகுதி கேட்கிறது. ஆனால் திமுக சார்பில் இரண்டு தனித்தொகுதியை வழங்க தயாராக இருக்கிறது.

    ஆனால் மூன்று தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது விசிக. இதனால் இன்னும் உடன்பாடு எட்டப்படாமல் இருக்கிறது. பொதுத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கூட போட்டியிட தயார் என விசிக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மதிமுக ஒரு தொகுதியுடன் ஒரு மாநிலங்களவை இடங்களையும் சேர்த்து கேட்கிறது. மேலும் பம்பரம் சின்னத்தில்தான் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையாமல் உள்ளது. பம்பரம் சின்னம் தொடர்பாக மதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    திமுக விருப்ப மனு பெற்று வருகிற 10-ந்தேதியில் இருந்து நேர்காணல் நடத்த இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இன்னும் முடிவடையாததால் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள திமுக குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே முன்னதாக ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விசக உடன் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி உடனும் இன்னும் ஒரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அதற்குள்ளாக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

    தி.மு.க.-விடம் 3 தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க. தரப்பு 2 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருகிறது. கடந்த முறை ஒதுக்கப்பட்ட அளவில்தான் கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு கடந்த முறையை விட குறைவான தொகுதிகளை தி.மு.க. ஒதுக்க முன் வருவதால் அக்கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • திமுக கடந்த முறை போன்று தற்போதும் இரண்டு இடங்கள் வழங்க தயாராக இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் 3 இடங்கள் கேட்டு, அதில் உறுதியாக உள்ளது.

    மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 3 தொகுதிகள் கேட்கிறது. அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கடந்த 2019 தேர்தலை போன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மூன்று தொகுதிகள் கேட்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் உள்ளது.

    தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்ய விரும்புகிறார். இதன்காரணமாக திமுக நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பேச்சுவார்த்தையில் இழுபறிதான் நீடிக்க வாய்ப்புள்ளது.

    3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் திமுக கூட்டணியில்தான் இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
    • பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூடடம் கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் கலந்து ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் என அறிவித்து, அதனை செய்தும் காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பிரதமர் மோடி பல்லடத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பா.ஜ.க காரர்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்-மந்திரி அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பது தான் என்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகும், பா.ஜ.க முதல்-மந்திரி ராஜினாமா செய்தாரா?

    பாராளுமன்றத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதுவரை பிரதமர் மோடி கேள்வி நேரத்திற்கு வந்ததில்லை. மாறாக அவர் மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருக்கிறார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற பிரதமரை நான் இதுவரை பார்த்தில்லை.

    இதுவரை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னை போல, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை பிரதமர் மோடி எதிர்கொள்வாரா?

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று தற்போது உள்ள மத்திய அரசை மாற்றினால் கண்டிப்பாக மோடி சிறைக்கு செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி.
    • எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது.

    சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு பிரச்சனையில் சுமுகமான முறையில் தீர்வை காண்போம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவுகள் இருக்கும்.

    அ.தி.மு.க. தங்களின் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து முதலில் ஒரு கூட்டணியை உருவாக்கட்டும். தங்களின் நட்பு கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

    அதனை எங்கள் மீது உள்ள கரிசனம் என்று புரிந்து கொண்டாலும், அது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் அணுகு முறையில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகத்தெளிவாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அது வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும் தி.மு.க. கூட்டணியில், இந்தியா கூட்டணியில் பயணிப்போம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படி அரவணைக்கிறார்களோ! அப்படி ஒவ்வொரு கட்சிகளையும், அவர்களின் தேவையை உணர்ந்து அரவணைக்க வேண்டிய பொறுப்பில் தி.மு.க. இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.

    ஒரு கூட்டணியின் அங்கமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியின் நலன்களை பற்றி கவலைப்படாமல் ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது. எங்கள் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு கூட்டணி வெற்றியும் முக்கியம். அந்த வயைில் ஒரு பரஸ்பர புரிதலோடுதான் எங்கள் முயற்சிகளும், பேச்சுவார்த்தையும் இருக்கும்.

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.
    • தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பட்ஜெட் மற்றும் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தமிழகம் மற்றும் தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் சிலர் பேசி வருகின்றனர். வீடு இல்லாதவர்களை கண்டறிந்து, 8 லட்சம் பேர் அடையாளப் படுத்தப்பட்டு, அவர்களில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பேருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்டுள்ள கனவு இல்லம் மூலமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.

    இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று அண்ணாமலை கூறுகிறார். யாரோ பெத்த பிள்ளைக்கு பெயர் வைப்பது உங்கள் பழக்கம், கருணாநிதியின் கனவு இல்லம் திட்டம் என்பது தமிழக அரசின் நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது.

    மத்திய அரசு பழைய திட்டங்களுக்கு புதிய பெயர்களை வைத்துள்ளது. வரலாறு திருத்தப்படுகிறது. வரலாற்றை மாற்றி அழிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியை நாம் மகான் என்கிறோம். ஆனால் அவர்கள் வேறு கதை சொல்கின்றனர். பொய் சொல்லி, பிரிவு ஏற்படுத்தி, நம்மை ஏமாற்ற நினைக்கின்றனர். இங்குள்ள மக்கள் யாரும் ஏமாறமாட்டார்கள்.

    எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று பிரதமர் மோடி நினைக்கின்றார். தி.மு.க.வை மோடி மட்டு மல்ல, உங்க அப்பன் வந்தாலும் அழிக்க முடியாது. மக்களுக்கான அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது தி.மு.க.

    கல்வி கடன், விவசாய கடன், மகளிர் கடன் ஆகியவற்றை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யவில்லை. தமிழக அரசு கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலமாக பா.ஜ.க. பெரும் ஊழல் செய்துள்ளது.

    90 சதவீத நிறுவனங்கள் பா.ஜ.க.விற்கு தேர்தல் நிதி கொடுத்துள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரித்த ஜூரம் நிறுவனம் மட்டும் 300 கோடி ரூபாய் பா.ஜ.க.விற்கு நிதி அளித்து உள்ளது.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள்.
    • மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    அம்மமாபேட்டை:

    திருப்பூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சுப்புராயன்.

    இவர் கடந்த முறை திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற ஆனந்தனை எதிர்த்து கதிர்அருவாள் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.

    மீண்டும் தி.மு.க. கூட்டணியில் திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதாக பரபரப்பான தகவல்கள் பரவி வரும் நிலையில் அதே இடத்தில் சுப்புராயன் நிற்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்று அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிக்கு ஓரிரு வரை மட்டுமே வந்துள்ளதாகவும், மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வந்ததில்லை எனவும் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருக்கின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அந்தியூர், பவானி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, ஒலகடம், பூதப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் "கண்டா வர சொல்லுங்க" எங்கள் தொகுதி எம்.பி.யை எங்கேயும் காணவில்லை இப்படிக்கு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மக்கள் என போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    • தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
    • இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரம் தொகுதியிலும், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் தி.மு.க.வுடன் நடத்திய 2 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் உடன்பாடுக்கு வரவில்லை. இந்த கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதிகள் கேட்கின்றன.

    காங்கிரஸ் கட்சி 12 இடங்கள் கேட்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்கள் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 3 இடங்கள் கேட்கின்றன.

    ம.தி.மு.க. 2 இடம் வேண்டும் என்கிறது. இந்த கூட்டணிக்கு புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் 2 இடம் வேண்டும் என்கிறது. இதனால் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறது.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளின் பிடிவாதம் தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தரப்பில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வருகிற 9-ந்தேதிக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் வகையில் ஒத்துழைக்க கேட்டு கொண்டு உள்ளது.

    அதன் பேரில் இந்த வார இறுதியில் இருந்து மீண்டும் தி.மு.க.வுடன் தோழமை கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று தெரிகிறது.

    • அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.
    • தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும் அந்த கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எதுவும் இன்னும் நேரடியாக நடைபெறவில்லை.

    அதே நேரத்தில் ரகசியமாக மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்து உள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி அந்த தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கோவை தொகுதியை கமல்ஹாசனுக்கு விட்டுக் கொடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் பொள்ளாச்சி தொகுதியில் களமிறங்க அந்த கட்சி முடிவு செய்து உள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தி.மு.க. மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


    இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு தொகுதியையும் கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியுடன் உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பாராளுமன்ற தேர்தல், சட்டன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு டார்ச்லைட் சின்னத்தில் களம் இறங்கி உள்ளது. வருகிற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடுத்த முறை தேர்தல் ஆணையத்தில் டார்ச்லைட் சின்னத்தை கேட்க வேண்டும் என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு இருக்க வேண்டும்.

    இதற்காகவே கமல்ஹாசன் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டுப் பெற்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்சென்னை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்டுப்பெற்று களம் இறங்க மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. அது எந்த தொகுதி என்பது விரைவில் முடிவாகும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ×