search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி ஜனநாயக மரபுகளை சிதைக்கிறார்- ஆ.ராசா குற்றச்சாட்டு
    X

    பிரதமர் மோடி ஜனநாயக மரபுகளை சிதைக்கிறார்- ஆ.ராசா குற்றச்சாட்டு

    • தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
    • பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூடடம் கோவை ராஜவீதி தேர்முட்டி திடலில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் கலந்து ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க ஆட்சியில் கோவை மாவட்டத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் கொடுத்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் என அறிவித்து, அதனை செய்தும் காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பிரதமர் மோடி பல்லடத்திற்கு வந்துள்ளார். ஆனால் இதுவரை கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை. ஏனென்றால், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பா.ஜ.க காரர்.

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு மணிப்பூர் மாநிலத்தின் முதல்-மந்திரி அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எங்கள் மாநிலத்தில் நடப்பது தான் என்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகும், பா.ஜ.க முதல்-மந்திரி ராஜினாமா செய்தாரா?

    பாராளுமன்றத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் ஒதுக்கப்படும். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதுவரை பிரதமர் மோடி கேள்வி நேரத்திற்கு வந்ததில்லை. மாறாக அவர் மற்ற நாடுகளுக்கு டூர் சென்று கொண்டிருக்கிறார். இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற பிரதமரை நான் இதுவரை பார்த்தில்லை.

    இதுவரை பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது வைத்த குற்றச்சாட்டிற்கு விளக்க அளிக்க முடியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நேர்மையாக பதில் அளித்து அந்த வழக்கில் இருந்து வெளிவந்த என்னை போல, நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை பிரதமர் மோடி எதிர்கொள்வாரா?

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று தற்போது உள்ள மத்திய அரசை மாற்றினால் கண்டிப்பாக மோடி சிறைக்கு செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×