search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டணி"

    • மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
    • இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.

    ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:- 

    நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.

    கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.

    கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.

    வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
    • தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன.

    இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

    கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் சுமுகமாக தொகுதி பங்கீடு செய்து முடித்து விட்டார். அதன் பின்னர் நேற்று தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதல் பிரசார பொதுகூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மாலை 4.45 மணிக்கு திருச்சிக்கு வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்பு அவர் காரில் சிறுகனூருக்கு செல்கிறார். பிரசார பொதுக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அவர் கார் மூலமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 25, 26, 27,29, 30,31,ஏப்ரல் 2, 3, 5, 7,6,9, 10, 12, 13 ,15 ,16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    இறுதியாக அடுத்த மாதம் 17-ந்தேதி தென்சென்னையில் மத்திய சென்னை வேட்பாளரை ஆதரித்து இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
    • 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.

    மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா கூட்டணியை 2024 பாராளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் தி.மு.கவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

    இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அ.தி.மு.க-வை இந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

    தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.க.வை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும்.

    இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
    • தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.

    அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

    மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.

    பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.

    இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.

    இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.

    பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.

    ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.

    பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

    சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
    • கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ந்தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் செல்வாக்கு பெற்ற இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த விஜயதரணி.

    இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்தே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மாவட்டத்தின் முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் முகாமிட்டு முக்கிய தலைவர்களின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், ஜவகர்பால் மஞ்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதில் முனைப்பு காட்டி வரு கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த தொகுதியில் மகளிர் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.

    எனவே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான சர்மிளா ஏஞ்சல் உள்ளிட்ட பலரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் உள்ளதால் விளவங்கோடு தொகுதியில் வெற்றி உறுதி என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதியை பெறுவதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. பாரதிய ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயசீலனே மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
    • திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகள் என்று உடன்பாடு காண்பதில் இன்று வரை இழுபறி நிலை நீடிக்கிறது.

    இதில் காங்கிரசுக்கு புதுச்சேரி ஒதுக்கப்பட்டுவிட்டது. கடந்த முறை போல் திருச்சி, விருதுநகர், ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் முதலில் கேட்டு இருந்தது.

    ஆனால் திருச்சி, விருதுநகர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது என்று கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் திருச்சி அல்லது விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. முடிவு செய்தது. ஆனால் இதற்கு காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவில்லை.

    ஆனாலும் தி.மு.க. புதிதாக 2 தொகுதிகளை ஒதுக்குவதாக கூறியது. அந்த புதிய தொகுதியில் சம்பந்தப்பட்ட எம்.பி.யை போட்டியிட சொல்லுங்கள் என்று கூறியிருந்தனர்.

    இதற்கு அந்த முக்கிய பிரமுகர் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் டெல்லியில் மேலிட தலைவர்களிடம் முறையிட்டுள்ளார். இந்த விஷயம் இப்போது ராகுல் காந்தி வரை சென்றுவிட்டது.

    இந்த நிலையில் இன்று மும்பை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை சந்திக்கும் போது திருச்சி, விருதுநகர் தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை பேசி முடிவு செய்வார் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் அறிவாலயத்தில் நாளை காலை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று முடிவு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகும் என தெரிகிறது.

    • கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பத்திரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

    நாளை (15-ந்தேதி)க்குள் அத்தனை தகவல்களையும் வலைதளத்தில் ஏற்றுவது சிரமம் என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது. இது இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மீதான நம்பகத்தன்மையின்மையை காட்டுகிறது. 140 கோடி மக்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் 44 ஆயிரம் பக்கங்கள் கொண்ட தகவல்களை வலைதளத்தில் 2 நாட்களில் பதிவேற்றம் செய்ய முடியாது என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.

    அவ்வாறு பதிவேற்றம் செய்ய முடியாவிட்டால் அந்த தகவல்களின் மாதிரி புள்ளி விவரங்களை தமிழக காங்கிரசிடம் கொடுத்தால் அதை பதிவேற்றுவதற்கு தேவையான உதவிகளை எங்களால் தர இயலும். தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம்.

    கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும்.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து முதலமைச்சர் உடனே கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் கவர்னர் அந்த கடிதத்துக்கு பதில் கொடுக்கவில்லை. அந்த தீர்ப்பின்படி பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர முழு அதிகாரம் உள்ளது.

    சுப்ரீம் கார்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் திருக்கோவிலூர் தொகுதி காலி இடமாக இருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலையெல்லாம் பாசிச ஆட்சி நடத்துவது பற்றிதான். எனவே பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.


    பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை பற்றி குறிப்பிடாதது ஏன்?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை. எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை பிரதமர் மோடி பட்டியலிட வேண்டும்.

    டி.டி.வி.தினகரன் வழக்குகளுக்கு பயந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். அவர் சந்தர்ப்பவாதியாக மாறி விட்டார். அவ்வாறு மாறவில்லை என்றால் ஜெயிலுக்கு போக நேரிடும்

    இவ்வாறு அவர் கூறினார்.அப்போது அருகில் காங்கிரஸ் மூத்த நிர்வாகி கோபண்ணா உடன் இருந்தார்.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராம நாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.
    • கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


    கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

    அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
    • பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும்

    சென்னை:

    நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து உள்ளார்.

    நாட்டின் நலன் கருதி கை குலுக்க வேண்டிய இடத்தில்கை குலுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.


    அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரத்தின் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வை கண்டித்தும் பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் எடுத்து வைத்து ஆதரவு திரட்ட இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார வேலைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறார்கள்.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவரது பிரசாரம் வலு சேர்க்கும்" என்றும் தெரிவித்தார்.

    • கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது
    • தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த வீடியோவில், எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கமல் கூறியுள்ளார்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.
    • கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 தொகுதிகள் தமிழ்நாட்டிலும் ஒரு தொகுதி புதுவையிலும் உள்ளது.

    தமிழ்நாட்டில் கடந்த முறை கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் தேனியில் மட்டும் தோல்வி அடைந்தது.

    கடந்த முறை வெற்றி பெற்ற 8 தொகுதிகளும் வேண்டும், தேனிக்கு பதில் வேறு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

    ஆனால் 4 தொகுதிகளை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அதற்கு முக்கிய காரணம் திருச்சி அல்லது விருதுநகர் வேண்டும் என்பதில் ம.தி.மு.க. பிடிவாதமாக உள்ளது.

    வைகோ 2 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டுமே கொடுத்து இருப்பதால் விரும்பும் தொகுதியையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று தி.மு.க. விரும்புகிறது.

    அவ்வாறு திருச்சி அல்லது விருதுநகரை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கினால் மயிலாடுதுறையை காங்கிரசுக்கு வழங்கப்படும்.

    அதேபோல் கிருஷ்ணகிரி தொகுதிக்கு பதிலாக கடலூர் அல்லது அரக்கோணத்தை எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.

    கரூருக்கு பதிலாக ஈரோடு வழங்கப்படும் என்று தெரிகிறது. ஈரோடு தொகுதி கடந்த தேர்தலில் ம.தி.மு.க. வென்ற தொகுதி. ஆனால் இந்த முறை அந்த தொகுதியை ம.தி.மு.க. கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சிக்கலில் இருந்த ஆரணியை கை வைக்கவில்லை. மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த முறை திருவள்ளூர் தனித்தொகுதி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    இந்த முறை தேனிக்கு பதிலாக தென்காசி தனித்தொகுதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் ஏற்கனவே தலித்துக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    காங்கிரஸ் தரப்பில் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்று வற்புறுத்தப்படுகிறது.

    கம்யூனிஸ்டு மற்றும் ம.தி.மு.க. தொகுதிகள் இன்றைக்குள் முடிவாகி விடும் என்று கூறப்படுகிறது.

    காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து நாளை பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×