search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை தொகுதி"

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.

    இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.

    இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.

    • மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.
    • 2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று காலை சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி இருக்க கூடிய ஒரு நபர் நரேந்திர மோடி மட்டுமே. பிரதமருக்கு என்று பொறுப்பு இருக்கிறது. பலம் இருக்கிறது.

    அந்த பொறுப்பில் இருந்து நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். இத்தனை பிரதமர்கள் இருந்தாலும் மோடிக்கு என்று தனித்தன்மை இருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிக பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறும். தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பு செய்துள்ளோம்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவரையும் மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு என்று எண்ணற்ற மாபெரும் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளது. வருடா வருடம் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு வங்கி கணக்கு உள்ளது.

    கடந்த 10 ஆண்டில் 4 கோடி ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்படும்.

    பிரதமர் மோடி மக்களுக்காக வேலை செய்துள்ளார். மக்களின் வாழ்வை உயர்த்தி உள்ளார். நாடு நன்றாக இருப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    சிலர் பிரதமர் வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தலைவரின் பெயரை மட்டும் சொல்லுங்கள்.

    நாளையுடன் பிரசாரம் முடிய போகிறது. ஆனால் பிரதமர் வேட்பாளர் யார் என்றே தெரியாமல் இந்தியா கூட்டணி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காக்க என்னோடு வாருங்கள் என்று அழைக்கிறார். உங்களிடம் இருந்தும், உங்கள் குடும்பத்திடம் இருந்தும் மக்களை காக்க தான் நாங்கள் வீதியில் வந்து நின்று கொண்டிருக்கிறோம்.

    தமிழகத்தில் 21 இடங்களில் தான் தி.மு.க போட்டியிடுகிறது. 21 இடத்தில் நிற்கும் தி.மு.க. 543 பாராளுமன்ற தொகுதி உள்ள நாட்டில் எதனை போய் காப்பாற்ற போகிறார்கள்.

    மோடிக்கு நிகர் யாரும் இல்லை. மோடிக்கு நிகர் மோடி மட்டுமே.

    ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்படி உலகம் 3-வது உலக போரை நோக்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகத்தில் எங்கு எந்த பிரச்சனை நடந்தாலும், அதனுடைய தாக்கம் இந்தியாவில் இருக்கிறது. இந்திய பொருளாதாரம் என்பது உலகம் முழுவதும் பின்னி பிணைந்துள்ளது.

    2014-ல் மோடி இந்தியாவிற்கு தேவைப்பட்டார். 2024-ல் மோடி உலகத்திற்கு தேவைப்படுகிறார். உலக தலைவனை இந்தியாவில் இருந்து நாம் அனுப்ப உள்ளோம். உலக பிரச்சனைக்கு தீர்வாக இந்தியா இருக்கும். நமது வளர்ச்சியும் வரலாற்று சிறப்பு மிக்க வளர்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
    • நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    கோவை:

    கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-

    நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.

    இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.


    இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.
    • இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    கோவை:

    கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இரவு 10 மணிக்கு மேல் மைக் பயன்படுத்தாமல் மக்களை சந்திக்கலாம்.

    * 10 மணிக்கு மேல் மக்களை வேட்பாளர்கள் சந்திக்கக்கூடாது என எங்கும் சொல்லவில்லை.

    * மக்களின் அன்பினால் தாமதம் ஆவது, தேர்தல் பிரசாரத்தில் சகஜம் தான்.

    * பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது.

    * காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.

    * பாரதிய ஜனதா பிரசாரத்திற்கு ஆர்வமாக வந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.

    * அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோடி 3வது முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    * இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    * தேர்தல் விதிகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் விதிகளை மீறவில்லை என்று அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.

    கோவை:

    கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

    * கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    * கோவைக்கு 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றப்படும்.

    * சரவணம்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சரவணம்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோவையில் IIM கொண்டுவர வலியுறுத்துவோம்.

    * கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

    * 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம்.
    • பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் வழியெங்கும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அண்ணாமலையை'ஆட்டுக்குட்டி' என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வது வழக்கம். கோவையில் தி.மு.க. வெற்றிப்பெற்ற பிறகு 'மட்டன் பிரியாணி' போடப்படும் என எதிர்க்கட்சியினர் அண்ணாமலையை குறிப்பிட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. மீம்ஸ்களில் அண்ணாமலையுடன் ஆட்டுக்குட்டி படத்தை இணைத்து டிரோல் செய்வது வழக்கம். இதுகுறித்து அண்ணாமலை முன்பு ரியாக்ட் செய்தார். நாளடைவில் இந்த மீம்ஸ் பற்றி அவர் கண்டுக்கொள்வதில்லை.

    இந்நிலையில் பல்லடம் பிரசாரத்தில் அண்ணாமலை ஈடுபட்டிருந்த போது அவருக்கு விவசாயி ஒருவர் அன்பு பரிசாக ஆட்டுக்குட்டி ஒன்றை வழங்கினார். அதனை ஆசையோடு வாங்கிய அண்ணாமலை, குட்டி ஆடு என்பதால் அதனை தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என தெரிவித்தார். இந்த காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. அதனை பா.ஜ.க.வினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.

    சூலூர்:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய அரசின் திட்டங்களை இங்கு கொண்டு வர எந்தவித முனைப்பும் காட்டவில்லை. கோவையின் வளர்ச்சியில் அவருக்கு அக்கறை இல்லை.

    பிரதமர் மோடி 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி நடத்தி வந்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் 400 எம்.பிக்களை பெற்று மிக வலிமையுடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக அரியணை ஏறுவார்.

    இந்த முறை பிரதமர் மோடியின் ஆட்சியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தங்களுக்கு தேவையானதை பெற்று கொள்ள இங்கு போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.

    தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படப்போவது நிச்சயம். இது வருகிற 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. மாற்றத்தை விரும்பும் கோவை மக்கள் மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள். எனக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என நம்புகிறோம்.

    இந்த பகுதியில் அரசு வேலை செய்கிறதோ இல்லையோ மக்கள் தங்கள் வேலைகளை செய்து தாங்களாகவே முன்னேறி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

    மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் விசைத்தறி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். மீண்டும் பவர்டெக்ஸ் திட்டத்தை கொண்டு வருவோம்.

    கோவையில் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இங்கு நிலவக்கூடிய குடிநீர் பிரச்சனைக்கு மாநில அரசு எந்த தீர்வும் காணவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கோவையின் நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் - அண்ணாமலை
    • தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம் - டி.ஆர்.பி.ராஜா

    கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் இதுதான் என அன்பான வேண்டுகோள் என்று தெரிவித்தார்.

    மேலும், தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் சின்னத்திற்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை.

    பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா நாளை தேனியில் ரோடு ஷோ நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. ‛ ரோடு ஷோ' வை முதல்வர் ஸ்டாலின் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்கு ஏன் பயம்?

    29 பைசா மோடி என உதயநிதி பேசினால், அவரை பீர், சாராயம், டாஸ்மாக், ட்ரக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம்.. சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது என அண்ணாமலை மறைமுகமாக சீண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளக்கிணறு பகுதியில் அவருக்கு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அண்ணாமலையும் வேனில் இருந்து இறங்கிபொதுமக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி நடனம் ஆடினார். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

    இதுபற்றி அண்ணாமலை கூறுகையில் வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரிய கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    நேற்று அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.

    அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்த கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா ஆகியோர் திடீரென அண்ணாமலையின் காலில் விழுந்தனர்.

    இதை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் அண்ணாமலை திக்குமுக்காடி போனார். பின்னர் அவர்களை ஆசிர்வதித்து விட்டு எழுந்திருக்கும் படி கூறினார்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, தங்களுக்கு இப்போது தான் திருமணம் முடிந்ததாகவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது உங்களை பார்த்ததும், உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக காலில் விழுந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலை புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் என்பவரின் தாயாரை பா.ஜ.கவினர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவரின் காலில் விழுந்து அண்ணாமலை ஆசி பெற்றுக்கொண்டார்.

    • நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.
    • கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.

    இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.

    பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.

    முக்கிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனையும் மேற்கொள்கிறார். நேற்று தொகுதிக்குட்பட்ட பல்லடம், சூலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், இன்று பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களுடன் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    ×