search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.
    • பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறி இருக்கிறது. இதுவரை தமிழக மாணவர்கள் வங்கிகளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி இருக்கிறார்கள். கடனை ரத்து செய்ய இந்த 3 ஆண்டுகளில் இதுகுறித்து எந்த அறிக்கையையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.

    ஆனால் தற்போது நிதி நிலை அறிக்கையில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கல்விக் கடன் வங்கியின் மூலம் கிடைக்கச் செய்வோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி என்ன ஆனது?

    கேஸ் மானியமாக 100 ரூபாய் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் உள்ளன. எப்போது தருவார்கள். ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். இதுவரை ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை தி.மு.க. ஆட்சியில் 13 பேர் தற்கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்தை வாங்கி அனுப்புவோம் என்று கூறினார்கள். ஆனால் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் கையெழுத்து வாங்கியவை எல்லாம் குப்பை தொட்டியில் போடப்பட்டன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தவில்லை. மகளிர் பேறுகால உதவித் தொகை 24 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். இதுவரை வழங்கவில்லை.

    இன்றைக்கு பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பை போல மு.க.ஸ்டாலின் ஜூன் 4-ந்தேதிக்கு கொடி ஏற்ற தயாராகுங்கள் என்று கூறியிருக்கிறார். அதே போல அண்ணாமலையும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். ஆனால் இன்றைக்கு மக்கள் தெளிந்த நீரோடை போல் இருக்கிறார்கள். இந்த இருவரின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை மக்கள் பரிசாக தர இருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலைக்கு கனவாகவே இருக்கும்.

    இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

    • திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
    • இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?

    தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில் அ.தி.மு.க. ஆட்சி காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஏழை எளிய மாணவர்கள் பயனுற்று வந்தனர்.

    இந்த நிலையில், தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்புற வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை இந்த விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுள்ளது."

    "இன்னும் சில நாட்களில் புதிய கல்வியாண்டு தொடங்கும் நிலையில், இந்த ஆண்டிற்கான லேப்டாப்களை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் விடியா திமுக அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது."

    "மு.க. ஸ்டாலின்அவர்களே- லேப்டாப் வழங்கவேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது உங்கள் விடியா திமுக அரசு நிறைவேற்ற முன்வருமா? அல்லது, அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில் இந்த ஆண்டும் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப்போகிறீர்களா?," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை.
    • அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும். இந்த முல்லை பெரியாறில் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

    ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கேரளா அரசு புதிய அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

    ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு மனுவை கேரளா அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்து 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறின் உரிமை காக்க வேண்டிய தமிழக அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது. இது தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தற்போது முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர். அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா?.

    முல்லை பெரியாறு உரிமை பிரச்சனையில் தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம்.

    ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

    சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவை இல்லை. அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை அவரது தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, வீரசாவர்கர் ஆகியோரின் சாதனையை சொல்லி ஏன் பாராட்டவில்லை.

    மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவை அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் புகழ்ந்து பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை.
    • அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி.

    மதுரை:

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349-வது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் ராஜன் சொல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அ.தி.மு.க. செயல்படும் என்று தி.மு.க.வி.னர் கூறுவதில் உண்மையில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க.வை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய ராஜதந்திரியாக பணியாற்றி வருகிறார்.


    மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல, அ.தி.மு.க.வை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை காக்க பணியாற்றி வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. ஆகியவைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.

    அ.தி.மு.க. தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. பாராளுமன்ற தேர்தலுக்காக அல்ல, அ.தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் தகுதி அறிந்து, திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி. மழைக்காலங்களில் பேரிடர் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் தி.மு.க. அரசு கொடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபம் ஈட்டியுள்ளது.
    • மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது.

    2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.

    2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ₹2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ₹7,650 என அதானி நிறுவனம் விற்றுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் பலனடைந்த கோடீஸ்வரர்களில் முதன்மையானவராக அதானி விளங்கி வருகிறார். அதானி குழுமம் தரம் குறைந்த நிலக்கரியை மிக உயர்ந்த விலைக்கு விற்று பெருத்த லாபத்தை ஈட்டியதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து மலிவான விலைக்கு வாங்கிய, தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு விலைக்கு மோசடியாக விற்று அதானி குழுமம் 3,000 கோடி ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டியது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்துகிற மின்உற்பத்தி நிறுவனங்களால் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் இந்தியர்களை பலி வாங்குவதாக ஒரு ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பிரதமரின் நெருங்கிய நண்பர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்தை மீறி இந்தியர்களை சுரண்டுவதன் மூலம் தங்களை வளப்படுத்திக் கொண்டதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

    குறைந்த கலோரி கொண்ட நிலக்கரியை 2014 ஆம் ஆண்டு முதல் 22 முறை கப்பல் மூலம் 1.5 மில்லியன் டன் அனுப்பியிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறைந்த கலோரி அளவை கொண்டிருப்பதால் நிலக்கரியின் தரம் குறைந்திருக்கிறது. இத்தகைய நிலக்கரி விற்கப்பட்டதன் மூலம் அதானி குழுமம் கோடிக்கணக்கான ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

    எனவே, தரம் குறைந்த நிலக்கரியை விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டிய அதானி குழுமத்தின் மிகப்பெரிய மெகா ஊழல் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு இதுகுறித்து விசாரித்து உண்மையை மக்கள் மன்றத்தில் வைக்கும் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஊழலுக்கு எதிரான தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் மோடி, அதானி கூட்டணி நிகழ்த்திய நிலக்கரி ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்குகிற நேரத்தில் மோடியின் புனிதர் வேடம் அம்பலமாகியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலக்கரியை 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.
    • இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது.

    2014 ஆண்டு அதிமுக ஆட்சியில் தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு அதானி நிறுவனம் விற்றது அம்பலமாகியுள்ளது.

    2014ல் அதிமுக ஆட்சியின்போது நிலக்கரியின் விலை, தரத்தை உயர்த்தி காட்டுவதற்கு, பல்வேறு நாடுகள் வழியாக வருவதுபோல் அதானி நிறுவனம் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் ஒரு டன் நிலக்கரியை ₹2,300க்கு வாங்கி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு டன் ₹7,650 என அதானி நிறுவனம் விற்றுள்ளது.

    இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6000 கோடி அதிகமாக சம்பாதித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதானி நிறுவனத்தின் நிலக்கரி ஊழல் தொடர்பாக தனியார் செய்தித்தாள் கட்டுரையைப் பகிர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பாஜக ஆட்சியின் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பல வருடங்களாக நடந்து வரும் இந்த ஊழலின் மூலம் மோடியின் நண்பர் அதானி தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு அதிக விலையில் விற்று ஊழல் செய்திருக்கிறார். அதிக விலையில் நிலக்கரியை விற்றதால் பல ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார்

    அதானி ஊழலில் ED, CBI, IT அமைப்பு அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?

    ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்து இந்த ஊழல் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.
    • எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    கோவை:

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை.

    * எங்களுடன் கலந்தாலோசித்தே எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார்.

    * ஈபிஎஸ் தலைமையில் அதிமுக பெரும் வெற்றி பெறும், எனவே ஓபிஎஸ், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை.

    * அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள்.

    * வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் தலைமையில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும். அப்போது கோவை மாவட்டத்திற்கு விடுபட்ட திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம் என்று கூறினார்.

    • எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.
    • துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு காட்சிகள் மாறின.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் அவர் இணைந்தார். அப்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துப்போகாத நிலையில் 2-வது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்ற வந்த போது அவரது ஆட்கள் தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த பொருட்களை தஸ்தாவேஜுகளை அள்ளிச் சென்றனர். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

    அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். இதனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை அ.தி.மு.க.வில் எக்காலத்திலும் சேர்க்க மாட்டோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மதுரையில் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்களே அது உண்மையா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க திட்டம். திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என்று நீங்கள் கேட்ட இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன், பிரிவுக்காக முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்.

    அதைத் தொடர்ந்து அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க. அம்மா அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன் வைத்த போது எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட போது அதிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் எதிர்த்து வாக்களித்த ஒரு நிலையை சட்டமன்றத்தில் பார்த்தோம். அது அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் அந்தஸ்திலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஆட்சியிலே முதலமைச்சர் அந்தஸ்தில் துணை முதலமைச்சர் பதவியும் சி.எம்.டி.ஏ. வீட்டு வசதி வாரிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

    ஆனால் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சியினுடைய வளர்ச்சி நடவடிககை வரலாறு காணாத வகையிலே பின் தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.



    தேர்தலில் அவரது சொந்த மாவட்டத்தில் தேனியில் அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைக்கு இரட்டை இலை எத்தனை தொகுதியிலே அங்கு வெற்றி பெற்றிருக்கிறது? அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி தவிர 4 தொகுதியில் 3 தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.

    தேனி எம்.பி. தொகுதி வெற்றி பெற்றதே? என்று நீங்கள் கேட்கலாம். தேனி எம்.பி. தொகுதி அப்போது வெற்றி பெற்றது வேறு விவகாரம். அந்த விவகாரத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

    அந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும் சொந்தமல்ல. அது அ.தி.மு.க.வுக்கான சொந்தம். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் செய்த குழப்பங்கள் ஏராளம். அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக வணங்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களுடன் வந்து அடித்து நொறுக்கி தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த தஸ்தாவேஜுகளை தூக்கிச் சென்றதை நாடே அறியும்.

    அந்த சமயத்தில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து 2-வது முறையாக நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு அ.தி.மு.க.வை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்.

    அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகால வரலாற்றில் இத்தனை வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தது கிடையாது. அதற்கு காரணம் ஓ.பி.எஸ்., அவர் சுயலாபத்துக்காக பதவி சுகத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு நான் சொல்கிறேன். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பதாக வருகின்ற செய்திகளில் துளியும் உண்மை இல்லை. இதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக அ.தி.மு.க. சார்பாக நான் சொல்கிறேன்.

    இரட்டை இலைக்கு எதிராக ஒற்றை சீட்டுக்காக தற்போது இரட்டை இலையை தோற்கடிப்பேன் என சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.சை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.


    இதுபோல் ஓ.பி.எஸ். தொடர்ந்து கட்சிக்கு எதிராக பல பாவங்களை செய்து வருகிறார். எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.

    ஓ.பி.எஸ்.க்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சியில் உரிய முக்கியத்துவம் பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார். இதனால் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையில் பின்தங்கியது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற சூழல் வந்தவுடன் பிரிவுக்கு முதல் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ்.தான். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக வரும் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    • தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் கமல் கட்சிவெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கியவர் கமல்ஹாசன். தி.மு.க.,

    அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கமல்ஹாசன் கூறி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெற்றது.

    இதைத் தொடர்ந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் சில கட்சிகளோடு கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் கள மிறங்கியது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அங்கு அதிக வாக்குகளை வாங்கிய அவர் பா.ஜ.க. வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தேர்தலிலும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் அமைந்திருந்தது.

    இது தொடர்பாக அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கமல்ஹாசன் ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இப்படி தேர்தல் களத்தில் மிகவும் ஆவேசமாக காணப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி அரசியல் பக்கம் அவர் செல்லமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கமல்ஹாசனோ நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றார். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு கூட்டணியில் இடம் கிடைத்தது.


    ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்க வில்லை. ஒரு மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் வரும் நாட்களில் மேல் சபை எம்.பி.யாக டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சில இடங்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. கூட்டணியிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ளது. இப்படி கூட்டணி அரசியலால் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள் நீதி மய்யம் கட்சி திசை மாறி பயணிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே இந்த இரண்டு கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் மேற்கொள்ள வேண்டியகட்டாயத்தில் உள்ளன.

    ஏனென்றால் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகிற நாட்களில் இந்த கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த திட்டமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பி.யாக அவர் பதவி வகிக்கும் பட்சத்தில் நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

    இதனால் தி.மு.க. சார்பில் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. மாற்றத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன் கட்சியை வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கூட்டணி அரசியலுக்குள் முடங்கிப் போய் இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாற்றத்தை நோக்கி பயணித்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் சென்றதன் மூலம் இனி அவரது பழைய பயணம் தடைபடும் என்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி சொல்வதையே கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் எத்தனை இடங்களை கேட்டு பெறுவார் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி உள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
    • எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்கு பிறகு சூடு பிடித்தது.

    அவர் கூறும் போது, தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.

    சொன்னால் நம்புங்க..

    இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    ×