search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RB Udhayakumar"

    • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
    • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

    தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

    முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது.
    • கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்?

    மதுரை:

    தி.மு.க. ஆட்சியில் அரங்கேறி வரும் கள்ளச்சாராய உயிரிழப்பு மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழக்கு நிகழ்ச்சி சமயநல்லூரில் இன்று நடைபெற்றது.

    இதற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் முன்னிலை வகிததார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    இன்றைக்கு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் உள்ள அவலங்களை பற்றி சட்டசபையில் பேச முயன்றால் தூக்கி எறிகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் கள்ளச்சாராயம், போதை பொருள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை 38 வருவாய் மாவட்டங்களில் பட்டி தொட்டி எங்கும் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தொண்டர்கள் பொதுமக்களுக்கு நேரில் வழங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். உயர்த்திய மின் கட்டணத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், அதனை நியாயப்படுத்துகிறார்கள். 8 ஆண்டுகள் மின்சார கட்டணத்தை உயர்த்தாத அரசு அ.தி.மு.க. அரசு. மரக்காணம் பகுதியில் 2023 ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான அன்று, இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது என்றார். அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

    கண்டிக்க தவறிய அதிகாரிகளை இடமாற்றம் செய்து விட்டேன் என கூறும் ஸ்டாலின், ஆடதெரியாதவன் தெரு கோணல் என்பது போல தனக்கு ஆட தெரியவில்லை என ஸ்டாலினால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. நாங்கள் அதே அதிகாரிகளை வைத்து தான் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகராக வைத்திருந்தோம்.

    நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, தரக்குறைவாக பேச விரும்பவில்லை, நடந்ததை குறிப்பிட விரும்புகிறேன். 33 ஆண்டு காலம் அம்மாவுடன் இருந்தவர்கள் தென் தமிழகத்தில் இன்றைக்கு ஆடி மாதத்தில் அம்மா வழியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்?

    உங்களை சேர்ந்தவர்களுக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்து இருந்தால் அனைவரும் உங்கள் பின்னால் வந்திருப்பார்கள். உங்களுக்கு இருக்கும் பணத்திற்கு, சொத்தை வைத்து ஏதாவது செய்து இருந்தால் அந்த பகுதியே சொர்க்க பூமியாக இருந்திருக்கும். அரசியலில் ஓரம் கட்டப்பட்டதற்கு அம்மா காரணம் அல்ல, அம்மாவின் நிழலாக இருக்கும் ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்றவர்தான் காரணம். அவர்கள், இவர்கள் இருந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பது கற்பனை கதை. தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    3 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது கடும் இரட்டை சுமையை கொடுத்துள்ளது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் அளவில் உள்ளது. காளிமுத்து கூறியது போல கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். 52 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சியில் 50 ஆண்டுகள் கடும் உழைப்பில் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள். யாரது உள்ளடி வேலையில் மூன்றாவது முறையாக சாதனை படைக்க இருந்த எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார்.

    பொதுச் செயலாளராக பொறுப்பேற்று எத்தனையோ வழக்குகள் நீதிமன்றங்களுக்கு சென்றபோது, தொண்டர்கள் எடப்பாடியுடன் நின்ற காரணத்தினால் அ.தி.மு.க.வை முழுமையோடு எடப்பாடி வழி நடத்துகிறார். 2 கோடி தொண்டர்கள் சுதந்திர சுவாச காற்றை சுவாசிக்கின்றனர்.

    33 ஆண்டுகள் அம்மாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை முழுமையாக செயல்படுத்தியவர்கள் தனக்குத்தானே பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி கொள்கிறார். ஆனால் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கு அவர்களது மக்கள் படுகின்ற கஷ்டத்திற்கு தீர்வு காண ஏதாவது முயற்சி செய்தாரா? கல்வியிலே, பொருளாதாரத்திலே பின்தங்கி செத்து செத்து பிழைக்கின்றனர்.

    அந்தக் கண்ணீரைத் துடைப்பதற்கு என்ன நடடிக்கை எடுத்தார். இந்த சாதிய பின்புல சமுதாயத்தை பயன்படுத்தி தன்னை முன்னிறுத்துகிறாரே தவிர நம் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்திருந்தால் இந்த நாடே அவர்கள் பின்னால் நின்றிருக்கும்.

    அ.தி.மு.க.வில் மூத்த முன்னோடிகளின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாவதற்கு யார் காரணம்? ஆடி மாதத்தில் தென்காசியில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா சென்று இருக்கிறார். அவர்களுக்கு இருக்கக்கூடிய சொத்து, பணத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருக்க முடியும். ஆனால் எதுவும் செய்யவில்லை.

    காலமும், அதிகாரமும் கையில் இருந்தும் ஏழை, எளிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நீங்கள் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறீர்களா? அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாகவும், கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.

    எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரியும் அவர்கள் கையில் எந்த அளவிற்கு அதிகாரம் இருந்தது என்று. அவர்களால் பலன் அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சசிகலாவிடம் யாராக இருந்தாலும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பகல் கனவு காண்பவர்களுக்கு நிச்சயமாக பகல் கனவாக தான் போகும். உச்சநீதி மன்ற தீர்ப்பு, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புகளை மதிக்க வேண்டும்.

    கடந்த தேர்தலில் அரசியலில் விட்டு ஒதுங்கி கொள்கிறேன் எனக் கூறியவர் தற்போது மீண்டும் அரசியல் குதிக்கிறேன் என சொல்கிறார்? இதில் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஜானகி அம்மாள் எடுத்த முடிவை முன்மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட்டால் இரண்டு கோடி தொண்டர்களும் பலன் அடைவார்கள் என எடப்பாடி கூறியதை அவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்பது போல மீண்டும் அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது.
    • அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும்.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை.

    டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா? இல்லையா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

    அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

    அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

    அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார் அண்ணாமலை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

    பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும். இது சத்தியம்.

    அண்ணாமலை அல்ல, எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். நாவடக்கம் இல்லாத அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்தும் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.
    • அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    52 ஆண்டுகள் மிகப்பெரிய வரலாறு கொண்ட மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கம், முதல் ஆளாக நின்று மக்கள் தொண்டாற்றிய இயக்கம் என்றால் அது அ.தி.மு.க. தான்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சாதகமாக நடைபெறாது என்று புறக்கணித்த காரணத்தை கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிக்கையில் கூறியுள்ளார். நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 21 சதவீதம் வாக்குகளை பெற்று தனது செல்வாக்கை நிலைநிறுத்தி காட்டியுள்ளார்.

    விக்கிரவாண்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறாது என்ற அடிப்படையில் அதற்கு ஈரோடு கிழக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

    இந்த இடைத்தேர்தலால் எந்த மாற்றம் ஏற்படாது, ஆனால் ஒரு பிரதான எதிர்க்கட்சி ஏன் புறக்கணிக்கிறது என்று மக்கள் விவாதிக்கிறபோது இப்போது தி.மு.க. தேர்தலை அணுகுகிற படைபலம், பணபலம், அதிகார பலம் என்பதை தெளிவாக சொல்லி உள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் ஜெயலலிதா இளையான் குடி, கம்பம், தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஐந்து தொகுதி இடைத்தேர்தலிலும், அதே ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அம்மா மாபெரும் வெற்றி பெற்று, தி.மு.க.வை எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையை உருவாக்கினார்.

    அன்றைக்கு கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். அந்த அளவுக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கக்கூடிய அந்த வரலாற்று வாய்ப்பை தமிழக மக்கள் தந்தார்கள்.

    மக்களை சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தடையாக தி.மு.க. அரசு தேர்தல் ஆணையத்தினுடைய கட்டுப்பாடுகளை மீறி, வரம்பு மீறி செயல்படுவார்கள் என்கிற செய்தியை மக்களுக்கு சொல்லுகிற முடிவை அறிவித்த உடனே எங்கள் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வும் புறக்கணித்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதியை வெல்லுவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசி இருப்பது அவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தான் பேசி உள்ளார். அது பகல் கனவு, அது நிச்சயமாக ஒரு நாளும் நடக்காது. மக்கள் தி.மு.க.வுக்கு அது போன்ற ஆதரவு நிலையை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

    அ.தி.மு.க.வுக்கு கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலை காட்டிலும் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு சதவீதம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் 20 சதவீதம் மேற்பட்ட வாக்கு வங்கி அ.தி.மு.க. பெற்றுள்ளது. அதேபோல் பா.ஜ.க. 11 சதவீதம், நாம் தமிழர் 8 சதவீதம் என்று தி.மு.க.விற்கு எதிராக 39 சதவீதம் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்கிற கட்சிகளை வரவேற்பதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மக்கள் உரிமையை மீட்க, தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, தேர்தல் வியூகம் அமைத்து எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவார், தமிழ்நாட்டு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.

    52 ஆண்டுகளாக சேவை செய்து வரும் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல சக்திகள் இன்றைக்கு முயற்சிகள் எடுத்தாலும் கூட, அந்த முயற்சிகளை எல்லாம் முறியடித்து மன உறுதியோடு இன்றைக்கு அம்மாவின் வழியிலே மீட்டெடுத்து ஒரு ஜனநாயக இயக்கமாக, சுதந்திர இயக்கமாக கடைக்கோடி ஏழை, எளிய சாமானிய தொண்டர்களின் இயக்கமாக எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகின்றார்.

    எங்களை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை களத்தில் நிறுத்தி நாங்கள் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது.
    • தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு கையாலாகாத அரசாக மக்களுடைய வாழ்வாதார ஜீவாதார உரிமைகளை விட்டுக் கொடுக்கின்ற ஒரு அரசாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய அணை கட்டும் பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஆகவே முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவோம் என்ற கேரளா அரசு தொடர்ந்து இன்றைக்கு தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    நடவடிக்கை எடுக்கக்கூடிய வேளையிலே தி.மு.க. அரசு மவுனம் சாதித்துக் கொண்டிருப்பது நமது மக்களுடைய வாழ்வாதார மக்கள் ஜீவாதாரம் பறிபோகக் கூடிய ஒரு நிலையை இன்றைக்கு இந்த தி.மு.க. அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. நம்முடைய மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையாக இருக்கக்கூடிய இந்த அணையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுகிற அரசுக்கு உள்ளது.

    ஏற்கனவே கேரளா அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதில் நமக்கு ரணமாக இருக்கிற மனதிலே வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதாக உள்ளது. தென்மேற்கு பருவமழையில் நமக்கு உபரி நீர் கேரளாவில் இருந்து கிடைக்கிற போதெல்லாம் அதில் பிரச்சனைகளை இந்த கேரளா அரசு உருவாக்கி வருகிறது. தற்போது 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று ஜனவரி மாதமே கேரளா அரசு தெரிவித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய இந்த தி.மு.க. அரசு மவுனம் காப்பது என்பது நம்முடைய ஜீவாதார உரிமை காவு கொடுக்கின்ற சூழலை பார்க்கின்றோம்.

    ஆகவே சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு இன்றைக்கு மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை கேரளா அரசு ஏற்படுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாக எட்டு கட்ட ஆய்வுக்கு பிறகு முல்லை பெரியாறு அணை வலிமையாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகள் இது மிகவும் பாதுகாப்பானது என்பதை தெள்ளத்தெளிவாக நிபுணர்கள் குழுவோடு தெரிவித்துள்ள்ளார்கள்.

    தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றத்திலே நமக்கு தீர்ப்பை பெற்றுக்கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து இதே மதுரையில் ஒட்டுமொத்த விவசாயிகள் பங்கேற்று மாநாடு நடத்திக் காட்டினார்கள். இன்றைக்கு தமிழன் உரிமை எங்கே போனது என்று கேட்கிற ஒரு சூழ்நிலையில் தி.மு.க. அரசு மவுனம் சாதிப்பது நமக்கு வேதனையாக இருக்கிறது. கேரளா அரசின் செயலுக்கு இப்போதுதான் கடிதம் எழுதியிருக்கிறார்.

    ஜனவரி மாதமே அணை கட்ட கேரளா அரசு பரிந்துரை கடிதம் கொடுத்து சுற்றுச்சூழல் மையம் அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் நிபுணர் குழு உத்தரவு பிறப்பித்த பிறகு கடிதம் எழுதுகிறார். இது தொடர்பாக எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற நிலையை தி.மு.க. அரசு தொடருமானால் எடப்பாடியாரை நேரில் அழைத்து வந்து அவருடைய தலைமையில் எங்கள் ஐந்து மாவட்ட விவசாயிகளுடைய வாழ்வாதார ஜீவாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதா வழியில் எந்த அறப்போராட்டத்திற்கும் அ.தி.மு.க. தயங்காது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்தவும், தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கமும், அரசியல் சூழ்ச்சியும் இருக்கிறது. இந்துத்துவா என்பது தனி விவாதமானது. அவர்கள் விவாதத்திற்கு அழைக்கிறார்கள். அதற்கு எடப்பாடியார் விரிவாக ஏற்கனவே கூறியிருக்கிறார். உங்களுடைய கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது.

    அ.தி.மு.க.வை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைப்பது போல் நீங்கள் பேசுவதை மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி சேவை செய்து வருகிறார். அதில் அண்ணாமலைக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம், அச்சம் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை.
    • அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம்.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அன்னதானத் தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் குடிநீர் பிரச்சனைக்கும், விவசாயத்திற்கும் தேவையானது முல்லைப்பெரியாறு ஆகும். இந்த முல்லை பெரியாறில் ஜெயலலிதா தொடர் சட்டப் போராட்டம் நடத்தி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம். அணை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுதந்தார். அது மட்டுமல்ல எட்டு முறை அணையை ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

    ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கேரளா அரசு புதிய அணைக்கட்ட முயற்சிக்கிறது. தி.மு.க. அரசு முல்லைப் பெரியாறு உரிமைக்காக எதையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு தொடர்ந்து மெத்தன போக்கை காட்டி வருகிறது.

    ஜனவரி மாதம் புதிய அணைக்கட்ட மத்திய அரசுக்கு மனுவை கேரளா அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலனை செய்து 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறின் உரிமை காக்க வேண்டிய தமிழக அரசு உரிமையை காவு கொடுத்து விட்டது. இது தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    தற்போது முல்லைப் பெரியாறில் உரிமையை நிலைநாட்ட கேரள அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் மென்மை போக்கை கடைபிடிக்கிறார் முதலமைச்சர். அங்கு இருக்கும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகிறார். எதற்காக இதை செய்கிறார் முதலமைச்சர்? வாக்கு வங்கிக்காகவா? கூட்டணி தர்மத்திற்காகவா? தன் குடும்ப சொத்தை பாதுகாக்கவா?.

    முல்லை பெரியாறு உரிமை பிரச்சனையில் தொடர்ந்து மென்மை போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை அல்லது தேனியில் விவசாயிகள் உரிமையை காக்க மாபெரும் போராட்டம் நடத்த அஞ்ச மாட்டோம்.

    ஜெயலலிதா இந்துத்துவா கொள்கையை கடைப்பிடித்தார். அவர் இல்லாததால் அதை நாங்கள் கடைபிடிக்கிறோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அ.தி.மு.க. இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்ற அம்மாவின் வார்த்தைக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி தீவிர களப்பணியாற்றி வருகிறார்.

    சிலருக்கு புகழ்வதும், இகழ்வதும் கைவந்த கலை. அண்ணாமலையின் பாராட்டு அ.தி.மு.க.விற்கு தேவை இல்லை. அண்ணாமலை அ.தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கொண்டு அம்மாவை பற்றி பேசினால் ஏற்றுக் கொள்வோம். அண்ணாமலை அவரது தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, வீரசாவர்கர் ஆகியோரின் சாதனையை சொல்லி ஏன் பாராட்டவில்லை.

    மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஜெயலலிதாவை அண்ணாமலை அரசியல் உள்நோக்கத்துடன் புகழ்ந்து பேசியதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது.
    • கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் அ.தி.மு.க. சார்பில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை நமக்கு ஜீவாதார உரிமை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை. அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016-ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார். அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.

    இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம், பெரியாறு அணையை இடிப்போம் என 2 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுச்செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

    ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையில் கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும், தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா?

    அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

    கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.
    • துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார்.

    மதுரை:

    அ.தி.மு.க.வில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு காட்சிகள் மாறின.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் அவர் இணைந்தார். அப்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    அதன் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் ஒத்துப்போகாத நிலையில் 2-வது முறையாக கடந்த 2022-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்ற வந்த போது அவரது ஆட்கள் தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த பொருட்களை தஸ்தாவேஜுகளை அள்ளிச் சென்றனர். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

    அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. அவரை அ.தி.மு.க.வில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக உள்ளார். இதனால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிட்டார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேருவதற்கு மீண்டும் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரை அ.தி.மு.க.வில் எக்காலத்திலும் சேர்க்க மாட்டோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

    மதுரையில் ஆர்.பி. உதயகுமார் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய போவதாக சிலர் வதந்தியை பரப்புகிறார்களே அது உண்மையா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க திட்டம். திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள் என்று நீங்கள் கேட்ட இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அது மட்டுமல்ல எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் செய்திகள் ஊடகங்களில் வெளி வருகிறது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலை வந்தவுடன், பிரிவுக்காக முதன் முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம்தான்.

    அதைத் தொடர்ந்து அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க. அம்மா அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன் வைத்த போது எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட போது அதிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் எதிர்த்து வாக்களித்த ஒரு நிலையை சட்டமன்றத்தில் பார்த்தோம். அது அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சி ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பான பொதுச்செயலாளர் அந்தஸ்திலான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    ஆட்சியிலே முதலமைச்சர் அந்தஸ்தில் துணை முதலமைச்சர் பதவியும் சி.எம்.டி.ஏ. வீட்டு வசதி வாரிய பொறுப்பும் வழங்கப்பட்டது.

    ஆனால் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மவுனம் சாதிப்பார். இதனால் கட்சியினுடைய வளர்ச்சி நடவடிககை வரலாறு காணாத வகையிலே பின் தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.



    தேர்தலில் அவரது சொந்த மாவட்டத்தில் தேனியில் அம்மாவின் மறைவுக்கு பிறகு இன்றைக்கு இரட்டை இலை எத்தனை தொகுதியிலே அங்கு வெற்றி பெற்றிருக்கிறது? அவர் போட்டியிட்ட சட்டமன்ற தொகுதி தவிர 4 தொகுதியில் 3 தொகுதி தொடர்ந்து தோல்வியை தழுவி இருக்கிறது.

    தேனி எம்.பி. தொகுதி வெற்றி பெற்றதே? என்று நீங்கள் கேட்கலாம். தேனி எம்.பி. தொகுதி அப்போது வெற்றி பெற்றது வேறு விவகாரம். அந்த விவகாரத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை.

    அந்த வெற்றி என்பது அவருக்கு மட்டும் சொந்தமல்ல. அது அ.தி.மு.க.வுக்கான சொந்தம். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் செய்த குழப்பங்கள் ஏராளம். அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக வணங்கும் தலைமைக் கழகத்தை குண்டர்களுடன் வந்து அடித்து நொறுக்கி தலைமைக் கழக கதவை காலால் எட்டி உதைத்து அங்கிருந்த தஸ்தாவேஜுகளை தூக்கிச் சென்றதை நாடே அறியும்.

    அந்த சமயத்தில் அவர் அ.தி.மு.க.வில் இருந்து 2-வது முறையாக நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    அதன் பிறகு அ.தி.மு.க.வை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்.

    அ.தி.மு.க.வின் 52 ஆண்டுகால வரலாற்றில் இத்தனை வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்தது கிடையாது. அதற்கு காரணம் ஓ.பி.எஸ்., அவர் சுயலாபத்துக்காக பதவி சுகத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு நான் சொல்கிறேன். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பதாக வருகின்ற செய்திகளில் துளியும் உண்மை இல்லை. இதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக அ.தி.மு.க. சார்பாக நான் சொல்கிறேன்.

    இரட்டை இலைக்கு எதிராக ஒற்றை சீட்டுக்காக தற்போது இரட்டை இலையை தோற்கடிப்பேன் என சுயேட்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ்.சை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.


    இதுபோல் ஓ.பி.எஸ். தொடர்ந்து கட்சிக்கு எதிராக பல பாவங்களை செய்து வருகிறார். எடப்பாடியார் ஒருபோதும் முதலமைச்சர் பதவி கொடுங்கள் எனவும், பொதுச்செயலாளர் பதவி கொடுங்கள் எனவும் யாரிடத்திலும் போய் நிற்கவில்லை.

    ஓ.பி.எஸ்.க்கு ஆட்சியிலும், கட்சியிலும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கட்சியில் உரிய முக்கியத்துவம் பிரதிநித்துவம் கொடுக்கும் வகையில் துணை முதலமைச்சர் பதவி கொடுத்த போதே கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்து மவுனம் சாதித்தார். இதனால் கட்சியின் வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையில் பின்தங்கியது.

    ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முதலாக அ.தி.மு.க.வில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற சூழல் வந்தவுடன் பிரிவுக்கு முதல் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ்.தான். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். இணைவதாக வரும் தகவலுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை.

    இவ்வாறு உதயகுமார் கூறினார்.

    • இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.
    • அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படும் என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று பரபரப்பாக பேட்டி அளித்திருந்தார்.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து

    உள்ளார். மதுரையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.பி.உதயகுமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு 2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகரமாக எடப்பாடியார் நடத்தி வருகிறார்.

    இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்.

    எடப்பாடி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள்தான் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். தொடர்ந்து பொதுக்குழு மூலம் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஆனால் தொண்டர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் இருந்த பொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நீதிமன்றத்தின் மூலம் கட்சியை, தலைமை கழகத்தை மீட்டெடுத்து, இன்றைக்கு 40 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எடப்பாடியார் கையெழுத்து இட்டுள்ளார். நிச்சயம் 40 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன?

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சமயநல்லூரில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே கொலைகார நகரமாக மாறிவிட்டது. நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல்துறைக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.

    புகாரை விசாரிக்காமல் மெத்தனமாக இருந்து விட்டு தற்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல உயிர் பறிபோன பிறகு கொலையாளியை பிடிக்க தனிப்படை என்று அரசு கூறி வருகிறது.

    அது மட்டுமல்ல மணல் கடத்தலை தட்டி கேட்ட வி.ஏ.ஓ. படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக தான் கூறியதால் எனக்கு பாதுப்பு வேண்டும் என்று ஆடு மேய்க்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்ததால் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழக மக்களே அச்சத்தில் உறைந்து உள்ளனர். மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

    இந்த அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்கள். கும்பகர்ணன் கூட ஆறு மாதம் தூங்குவான், ஆறு மாதம் விழித்து விடுவான். ஆனால் இந்த அரசு விழிக்காமல் காவல்துறையே கோமா நிலையில் உள்ளது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் கால்நடைபடிப்பிற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்காக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் 557 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

    கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள். நீட் தேர்வு எழுத முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிறபோது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவீதம் தான் உள்ளது.

    ஒரு கையெழுத்து போதும் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலின், ஒரு கோடி கையெழுத்தை பெற்றார். அது சென்ற இடம் ரகசியம், மர்மம் என்ன? நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதலமைச்சர் துணை புரிவாரா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் குமாரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

    அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று உள்ளார்.

    மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர். ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

    சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார். தற்போது சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார். அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக்கூடாது, சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து300 வாக்குச்சாவடி உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பி.ஜே.பி.க்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.

    தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும் தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×