search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coal scam"

    • ரூ.2.5 லட்சம் கோடி அதானி குழுமம் வருவாய் ஈட்டி வருகிறது
    • பொதுமக்கள் பாக்கெட்டிலிருந்து பணம் கையாடப்பட்டு வருகிறது

    குஜராத் மாநிலத்தை மையமாக கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனம், அதானி குழுமம். அதானி குழுமத்தின் நிறுவனர் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த கவுதம் அதானி (61).

    உலகெங்கும் துறைமுகங்களின் செயலாக்கம் மற்றும் மேம்படுத்துதல் உட்பட பல முக்கிய வர்த்தகங்களில் ஈடுபட்டு, பெரும் வருவாய் ஈட்டும் இந்நிறுவனம், கடந்த வருடம் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.

    இந்நிலையில் அதானி குழுமம், 2019லிருந்து 2021 வரை உள்ள காலகட்டத்தில் மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு அதிக விலைக்கு இறக்குமதி செய்து மறைமுக மோசடியில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே இந்தியாவில் பயனர்களுக்கான மின்சார கட்டணம் உயர்ந்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதற்கிடையே பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள 25 கட்சிகளை கொண்ட எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒரு அங்கமான மகாராஷ்டிரா மாநிலத்தின் தேசிய காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன் கவுதம் அதானியை சந்தித்து பேசியிருந்தார்.

    இச்சந்திப்பு குறித்து இந்திய தேசிய கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் புது டெல்லியில், "அதானி சந்திப்பு பற்றி ஏன் நீங்கள் சரத் பவாரிடம் கேட்கவில்லை?" என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர் கூறியதாவது:

    நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை பாதுகாக்கவும் இல்லை. ஆனால், நரேந்திர மோடிதான் இந்திய பிரதமர். அவர்தான் அதானியை பாதுகாத்து வருகிறார். எனவே நாங்கள் அவரைத்தான் கேள்வி கேட்க வேண்டும். இம்முறை மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு சுவிட்சை அழுத்தினால் உடனடியாக அதானி பாக்கெட்டுக்கு பணம் போகிறது. உலகம் முழுவதும் அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன; அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் எதுவும் நடைபெறவில்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது.


    70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகளின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #CoalScam #Punishment #HCGupta
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையில் மேற்படி 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் 6 பேருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. எனினும் 70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. #CoalScam #Punishment #HCGupta 
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 5 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ. கோர்ட் அறிவித்தது. #CoalScam #Delhicourt #HCGupta
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல் அன்ட் பவர் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முறைகேடாக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கில், குற்றச்சதி நடந்துள்ளதை இன்று உறுதிப்படுத்திய சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல் அன்ட் பவர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வுபெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை இன்று குற்றவாளிகளாக அறிவித்துள்ளார்.

    இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக டிசம்பர் மூன்றாம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் இன்று சிறையில் அடைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். #CoalScam #Delhicourt #HCGupta  
    பிரதமர் மோடியின் ஆதரவு நிறுவனங்கள் ரூ.29 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. #Coalscam #Congress #PMModi

    புதுடெல்லி:

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சி ரபேல் போர்விமான கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆதரவு நிறுவனங்கள் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக இப்போது புதிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

    இந்த குற்றச்சாட்டை முன்னாள் மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ் கூறி உள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்தும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரிகளை இறக்குமதி செய்துள்ளன.

    ஆனால், இதில் போலி பில்களை மத்திய வருவாய் துறைக்கு வழங்கி ஊழலில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

    இது சம்பந்தமாக மத்திய நிதித்துறையின் பிரிவான வருவாய் புலனாய்வுதுறை அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு மிக நெருங்கிய நிறுவனமான அதானி குரூப் நிறுவனங்கள், அனில் அம்பானி நிறுவனங்கள், எஸ்ஸார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில், சுமார் 70 சதவீத நிலக்கரி அதானி நிறுவனங்களுக்கு வந்துள்ளன.


    பிரதமர் மோடி, தான் ஊழல் அற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நடத்தி வருவதாக கூறி இருக்கிறார்.

    ஆனால், நிலக்கரி ஊழல், போர் விமான ஊழல், குஜராத் பெட்ரோலிய கார்ப்பரேசன் ஊழல் என தொடர்ந்து நடந்துள்ளன.

    இது சம்பந்தமாக பல்வேறு ஆதாரங்கள் இருந்தும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இவ்வாறு ஜெயராம் ரமேஷ் கூறினார்.

    ஆனால், நிலக்கரி முறைகேடு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் நடந்துள்ளது. 2006-ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 அல்லது 6 ஆண்டுகள் வரை இறக்குமதி நடந்துள்ளது. இதில்தான் ஊழல் நடந்ததாக ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தானே இந்த ஊழல் நடந்துள்ளது? என்று ஜெயராம் ரமேசிடம் கேட்டதற்கு, “எந்த ஆட்சி காலம் என்றாலும் ஊழல் ஊழல்தான். இந்த முறைகேடு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி எவ்வாறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    ஏற்கனவே வருவாய் புலனாய்வு பிரிவு இது பற்றி விசாரணை தொடங்கி உள்ளது. சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

    இந்த முறைகேடு தொடர்பாக அதானி நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அதானி நிறுவனம் எந்தவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட வில்லை.


    ஆனால், இந்த விவகாரம் தற்போது கோர்ட்டில் உள்ளது. எனவே, நாங்கள் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

    அதானி குரூப் நிறுவன ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று வருவாய் புலனாய்வு பிரிவு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை எதிர்த்து அதானி நிறுவனம் மும்மை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இதையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவினர் அதானி குரூப்பின் ஆவணங்களை ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதானி நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் நிலக்கரிகளை இறக்குமதி செய்து இருக்கிறது. அதில் தான் முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. அதில், நிலக்கரி ஊழலும் முக்கியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Coalscam #Congress #PMModi

    மராட்டியத்தில் நிலக்கரி ஊழல் வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.
    மும்பை:

    மராட்டியத்தை சேர்ந்த தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக தனது நிலக்கரி சுரங்கத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் விரிவுபடுத்தியது. அந்த நிறுவனம் நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு பணமோசடி செய்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.101 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளனர்.

    இதன்படி சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில் உள்ள ரூ.80 கோடி மதிப்பிலான தொழிற்சாலை மற்றும் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ரூ.21 கோடி நிலம் ஆகியவை முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.


    ×